ஹே....ராம் தேவ்...உனது கோபத்தின் விலை என்ன?


மத்யமரின் கைப்புள்ள அன்னா அசாரே ஊழலுக்கு எதிராகப் போராடியதை அடுத்து பாபா ராம்தேவ் கருப்புப்பணத்தை மீட்க சத்தியாகிரகப் போராட்டம் என்று சொல்லப்படுகிற உண்ணாவிரத்தை டில்லி ராமலீலா மைதானத்தில் துவங்கினார். கருப்புப் பணத்தை மீட்க வழக்கம் போல வல்லுநர் குழு அமைக்கப்படும் என்ற உத்திரவாதத்தை எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டால் உண்ணாவிரத்தை கைவிடுவேன் என்ற ராம்தேவின் கோரிக்கையை ஏற்று அப்படியான ஒரு கடித்தத்தை மத்திய அரசு கொடுத்த பின்னரும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்த ராம்தாவ் கூட்டத்தை அதிகாலை ஒரு மணிக்கு கலைத்து விரட்டியிருக்கிறது. டில்லி போலீஸ் இப்போது டில்லியில் கலவர அபாயம் காரணமாக 144 தடை உத்தரவு. ராம்தேவ் 15 நாட்களுக்கு டில்லிக்குள் நுழையத் தடை. அவரைக் கொண்டு போய் ஹரித்துவாரில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் விட அங்கேயே தனது இந்துப் பரிவாரங்களோடு உண்ணாவிரதம் இருக்கிறார் ராம்தேவ். பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் நாடு முழுக்க பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது போன்று இப்போது இந்து பரிவாரங்கள் டில்லிச் சம்பவங்களை இந்திய வரலாற்றில் கருப்பு நாள் என்றும், அந்நிய பெண்ணான சோனியாவுக்கு இந்தியாவின் மீது அன்பு இல்லை என்றும் அறைகூவல் விடுகிறார்கள்.

ஒரு சாராசரியான யோகா ஆசாமியால் கூட சுமார் பதினைந்து நாட்கள் வரை உண்ணாவிரதம் இருக்க முடியும். ராம் தேவால் ஒரு மாதம் கூட இருக்க முடியும் என்னும் நிலையில் அன்னா அசாரே போன்ற காங்கிரசின் கைப்புள்ளைகளை சமாளிக்க பிஜேபி கண்டு பிடித்த யோகா குருதான் இந்த ராம்தேவ். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த ராம்தேவ் என்பவரை இந்தியச் சமூகங்கள் அறிந்திருக்க வில்லை. இந்த திடீர் சாமியாரை சீனுக்கு கொண்டு வந்து பாப்புலராக்கியது அன்புமணி ராம்தாஸ்தான். அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதுதான் ராம்தேவை ஒரு இந்திய சமூகங்களில் ரோல் மாடலாகவும், தனது உடல் தூய்மை குடும்ப பாரம்பரீய கோட்பாட்டு அறிப்புகளுக்கான வடிகாலாகவும் வரித்துக் கொண்டார். அதிலிருந்தே ராம்தேவ் இந்தியா முழுக்க பிரபலமானார். ராம்தேவின் உண்ணாவிரத்தை ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங்தள், பிஜேபி போன்ற இந்துத்துவக் குழுக்களும் தூய்மைவாத பார்ப்பன அமைப்பான பிரம்மகுமாரிகள்,இராமகிருஷ்ணா மடம் போன்ற பார்ப்பன இந்துமத அமைப்புகளும் ஆதரிக்கின்றன, இது போக கரசேவை என்னும் பெயரில் காவி ரௌடிப் படையை அயோத்தி நோக்கித் திரட்டி பாபர் மசூதியை இடிக்க கூட்டம் சேர்த்த சாத்வி ரிதம்பரா என்னும் கிரிமினல் குற்றவாளியான பெண் சாமியார் உள்ளிட்ட சில கரசேவை கிரிமனல்களும் ராம்தேவோடு மேடையைப் பாகிர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்படி இந்துத்துவ அமைப்புகளோடு இந்து முன்னணி, ஆதி பராசக்தி சக்தி பீடம், அம்ம பகவான் பக்தி சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆதரிக்கின்றன என்பதிலிருந்தே இது பிஜேபியின் திட்டமிடப்பட்ட உண்ணாவிரதம் என்பதை ஊகிக்க முடிகிறது. ஊழலை ஒழித்து கருப்புப் பணத்தை மீட்டு தேசிய சொத்தாக அதை அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான இவர்களின் கோரிக்கை.


சுவிஸ் வங்கி உண்மை நிலை என்ன?


சுவிஸ் வங்கியில் மட்டுமேதான் இந்திய பெருமுதலைகளின் கருப்புப் பணம் இருக்கிறதென்றும். அதை மத்திய அரசால் மீட்டு விட முடியும் என்றும் இவர்கள் மக்களை நம்ப வைக்கிறார்கள். சரி அது என்ன சுவிஸ் வங்கி ? நம்மூரில் உள்ள இந்தியன் வங்கி, மெர்க்கண்டைல் வங்கி மாதிரியா என்றால் இல்லை. உலகெங்கிலும் உள்ள பெரும் பண்ணைகள் தேவைக்கதிகமான பணங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த போது, சுவிட்சர்லாந்து அரசோ ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கருப்புப் பணத்தை தங்கள் நாட்டு வங்கிகளில் முதலிடுபவர்கள் எங்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதோடு அவர்கள் குறித்த ரகசியங்களும் பேணப்படும் என்று அதற்கான சட்ட உத்திரவாதத்தையும் வழங்கி தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் முதலிட உலகெங்கிலும் உள்ள கருப்புப் பண முதலைகளை அழைத்தது. உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் தங்களின் கருப்புப் பணங்களைக் கொண்டு போய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கினார்கள். சுவிஸ் நாட்டிலுள்ள வங்கிகளில் மட்டுமல்ல உலெகெங்கிலும் உள்ள குட்டிக் குட்டி தீவுகளில் கூட இம்மாதிரி வங்கிகள் இருக்கிறது. நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய செயின்ட் கிட்ஸ் வழக்குக் கூட இம்மாதிரியான ஒன்றுதான் செயின்ட் கிட்ஸ் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்று. செயிண்ட் கிட்ஸ் மாதிரி செயின்ட் நேவீஸ், கிறிஸ்டோபர், லூசியா, டிரினிடாட் என பல பெயர்களால் இத் தீவுகள் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ரஷ்ய, இந்திய முதலாளிகள் கருப்புப் பணத்துக்கு பாதுகாப்பு கருதி இத்தீவுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்கு துவங்குவதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்து வங்கிகளே கருப்புப் பணத்துக்கு பாதுகாப்பு என நினைத்து அங்கு கொண்டு போய் பத்திரமாகப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அந்த வகையில் சுவிஸ் நாட்டில் உள்ள முக்கியமான வங்கியான் யூ,பி,எஸ் வங்கியில் மட்டும் சுமார் 72 லட்சம் கோடி அளவிலான தொகை இந்திய விஐபி க்களால் வைக்கப்பட்டுள்ளது என அந்த வங்கியே அமெரிக்காவுக்கு வழங்கிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்க அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியின் ஒரு கோஷமாக மாற்றப்பட்டது.பின்னர் காங்கிரஸ் வென்று நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி பொறுப்பேற்ற பின்னர் கண் துடைப்புக்காக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விபரங்களை சுவிட்சர்லாந்து அரசிடம் கேட்ட போது, சுவிஸ் அரசு. ‘‘இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம்” என்று நெத்தியடியாகக் கூறியது சுவிஸ் அரசு.




இந்துக்களுக்காக அழுகிறவர்கள் இவர்களா?


சரி ஏழு கடல் தாண்டி ஏழெட்டு மலைதாண்டி சுவிஸ் நாட்டில் இருக்கும் பணத்தை மீட்பது இருக்கட்டும் உள்ளூரில் ஆஸ்ரமங்கள், மடாலயங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் சுவிஸ் வங்கியில் முடங்கியிருக்கும் கருப்புப் பணத்திற்கு நிகரான பணத்தை காங்கிரசோ, பிஜேபியோ மீட்டு விடலாமே? அதைச் செய்ய பிளைட் ஏறிப் போக வேண்டிய அவசியமே இல்லையே? சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணம் குறித்துப் பேசும் ராம்தேவுக்குச் சொந்தமான அறக்கட்டளையின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடிக்கு மேல் என்கிறார்கள். சாய்பாபாவில் தொடங்கி வேதாந்தி உள்ளிட்ட பெரும்பலான இந்துச் சாமியார்களின் ஆஸ்ரமங்கள் உள்ளூரின் சுவிஸ் வங்கிகளாகவே செயல்படுகின்றன, கருப்புப் பணத்தை முடக்குவதற்காகவே இவர்கள் அறக்கட்டளை என்ற போர்வையில் சாமியார்களாக உலாவருகிறார்கள். பெரும் நிலப்பிரபுக்களாகவும் இந்திய பெரு முதலாளிகளாகவும் இருக்கும் பிஜேபி, காங்கிரஸ் பிரமுகர்களின் பெருமளவு கள்ளப் பணங்கள் இந்த அறக்கட்டைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படி பெரும் பண முதலைகளின் கருப்புப் பண முதலைகள்தான் இன்றைய இந்தியாவின் போராட்ட நாயகர்கள். முன்னர் இவர்கள் மிலேச்ச கிறிஸ்தவர்களாலும், வந்தேறி முஸ்லீம்களாலும் இந்தியாவுக்கு ஆபத்து என்று இந்துக்களை ஒன்று திரட்டினார்கள். மசூதியை இடித்தார்கள். குஜராத்தில் இனப்படுகொலை புரிந்தார்கள். இன்று இவர்களே ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

ஆனால் இவர்களின் காதுகளுக்கு கோடிக்கணக்கான பெரும்பான்மை இந்து மக்களின் ஓலங்கள் கேட்பதில்லை. குஜராத்திலும், ஒரிசாவிலும்,மத்திய பிரதேசத்திலும் எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்,தலித்துக்களின் பிணங்களை வைத்து பெரும்பான்மை நெருப்பை எரிய விட்ட கும்பலால் அதை ஒரு கட்டத்திற்கு மேல் நீடித்துச் செல்ல முடியவில்லை. தனியார், தாராளமயக் கொள்கையின் விளைவாய் விளை நிலங்களை இழந்த பெரும்பான்மை இந்து ஏழை மக்களின் ஓலமும், பன்னாட்டு நிறுவனங்களுக்காய் பருத்தி விளைவித்து பின்னர் விவசாயம் செய்த போது விளை பொருளுக்கு விலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆயிராமாயிரம் ஏழை இந்துக்களின் ஓலங்கள் இந்த காவிச் சாமியர்களுக்கோ, இந்துப் பாசிசக் கும்பலுக்கோ கேட்பதில்லை. நாடெங்கிலும் துறைமுகங்கள், அணு உலைகள், சுரங்கங்கள், மேலாண்மை பொருளாதார மண்டலங்கள், கனிமக் கொள்ளை என்னும் பெயரில் மக்களிடமிருந்து அக்கிரமான முறையில் பறிக்கப்பட்ட நிலங்கள் பற்றியோ, ஆக்ரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடைபாதை இந்து வியாபாரிகள், வீடற்ற இந்து ஏழைகள் கோடிக்கணக்கில் தூக்கி வீசப்பட்டது குறித்தோ ராம்தேவ் உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலுக்கு அக்கறை இல்லை.சமீபத்தில் அமெரிக்காவில் பிடிபட்ட தீவீரவாதி ஹெட்லியில் வாக்குமூலத்தையும் நாம் நினைவுபடுத்துவது நல்லது. அவர் இந்தியாவில் உள்ள இந்துச் சாமியார்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறார். அதில் சிவசேனாவைச் சாந்த ஒரு இரண்டாம் மட்டத் தலைவருடன் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக அறிமுகமாகிறார் தீவிரவாதி ஹெட்லி. இந்தியாவில் மக்கள் விளைநிலங்கள் உள்ளிட்ட வளங்களை பன்னாட்டு நிறுவங்களுக்கு தன்னால் விலைபேசித் தர முடியும், முதலீடுகளைப் பெற்றுத்தர முடியும் என்று ஹெட்லிக்கு உறுதியளிக்கிறார் அந்த சிவசேனா பிரமுகர். ஹெட்லியின் நோக்கம் பால்தாக்கரேயைக் கொல்வது அல்லது இங்குள்ள இந்துத் தலைவர்களைக் கொல்வது அதற்காகத்தான் அவர் பன்னாட்டு ஏஜெண்ட் என்று சிவசேனா தலைவருடன் பழகுகிறார். ஆனால் இந்த தேசப்பற்றாளார்களான சிவசேனா கும்பலோ இந்து மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பேசியும் அடியாள் பலத்தை பயன்படுத்தி பிடுங்கி பன்னாட்டு நிறுவங்களுக்குக் கொடுக்கவும் பேரம் பேசுகிறார். இதுதான் இந்த கும்பலின் தேச பக்தி. இந்து மக்களிடம் இவர்கள் காட்டும் அன்பும் இதுதான்.

தனியார் தாராளமயக் கொள்ளைக்காக திறந்து விடப்பட்டுள்ள தாராளச் சந்தையின் ஒரு அங்கமாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் அரசியல் தரகர்களின் கூட்டுக் கொள்ளையுமே ஊழல். ஒட்டு மொத்த நாடும் பன்னாட்டு நிறுவனங்களின் நவீன மறுகாலனியாக மாற்றப்படும் சூழலில் அதன் ஒரு அங்கமாக மட்டுமே ஊழலை நாம் காண முடியும். அந்த ஊழலில் காங்கிரசும், பிஜேபியும் கூட்டுக்களவாணிகள் என்பதை மறைத்து விட்டு சாமியார்களை வைத்து ஊழல்தான் இந்தியாவின் தனித்த பிரச்சனை, ஊழலை ஒழித்து விட்டால் நாடும் மக்களும் முன்னேறி விடுவார்கள் என்றும் ஊதிப் பெருக்குகிறார்கள். தொண்ணூறுகளில் இந்துக் கும்பல் முன் வைத்த ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மதம் என்ற கோஷத்தை இன்று இந்தியாவில் முன் வைக்க முடியாது.

ஏனென்றால் பெரும் கோடீஸ்வர மேல் வர்க்கம், பணக்கார வர்க்கம், மேல் மத்திய தரவர்க்கம், கீழ் மத்தியதரவர்க்கம், மத்தியதரவர்க்கம், என்று மக்கள் பிளவுண்டிருக்கிறார்கள். பட்டினியின் விளிம்பில் பெரும்பலான இந்து மக்கள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கோடீஸ்வரக் கும்பலோ நாடு தங்களால் முன்னேறுகிறது என்ற மாயையை கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த முரணை அரசியல் தளத்தில் எதிர்கொள்ள முடியாத இந்து மதக் கும்பல் இப்போது ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மதம் என்ற கோஷத்தை முன் வைத்தால் ஆமாடா நானும் இந்து நீயும் இந்து அப்படியென்றால் நான் மட்டும் ஏனப்பா சோத்துக்கில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று கேட்கும் நிலையில் விழுந்து விட்ட இந்து ஒற்றுமையை தூக்கி நிறுத்த இவர்கள் கண்டு பிடித்ததுதான் ஊழலுக்கு எதிரான இயக்கம். இதையே மீண்டும் நாட்டைச் சூழும் காவிமேகமாக கட்டி எழுப்பும் வல்லமை பார்ப்பனர்களுக்கும் அதன் ஊடகங்களுக்கும் உண்டு. நாம் ஏமாந்தால் நொடியில் இந்தச் சமியார்கள் ஒரு கெரோசின் பாட்டிலையும், சூலாயுதத்தையும் கையில் கொடுத்து சிறுபான்மை மக்கள்தான் இந்த ஊழலுக்குக் காரணம் அவர்களைக் கொல்லுங்கள் என்று சொல்வார்கள்.

டில்லிச் சம்பங்களை இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என்கிறார் அத்வானி. தன் வாழ்நாளின் மோச்மான நாள் என்கிறார் ராம்தேவ். இந்திய ஜனநாயகத்தின் மோசமான படுகொலை என்கிறார் அன்னா அசாரே.... பாபா ராம்தேவ் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட மென்மையான தடியடியே ஜனநாயகப்படுகொலை என்றால் பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் அழித்தொழித்தது, டில்லியில் வீதி வீதியாக சீக்கிய மக்களைக் கொலை செய்தது, ஸ்ரீக்காகுளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது, தண்டகாரண்யாவில் பழங்குடி மக்கள் மீது போர் தொடுப்பது. காடுகளிலும் நிலங்களிலும் கடலோரங்களிருந்தும் மக்களை வெளியேற்றுவது இதெல்லாம் என்ன ராம்? இந்திய ஜனநாயகத்தின் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டியவைகளா?

டி.அருள் எழிலன்.

பரளிப்புதூர் தலித்துக்கள் மீதான் தாக்குதல்- உண்மையறியும் குழு அறிக்கை.



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் என்னும் கிராமம் மதுரை மாவட்டம் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் திண்டுக்கல் மாவட்ட கிராமம். இங்கு தலித் பிரிவினைச் சேர்ந்த பறையர்கள் 84 வீடுகளும் முத்தரையர் சமூகத்தினர் 600 வீடுகளும் உள்ளனர். இங்கு முத்தரையர் சமுதத்தினரே பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர். இங்கு சாதி தொடர்பான பெரும்மோதல்களும், வெளிப்படையான பிரச்சனைகளும் இதுவரையிலும் நடந்திராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு புகைச்சல்கள் எழுந்து அடங்கி வந்துள்ளன. இக்கிராமம் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலைவழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. அவ்வாறு செல்லும் சாலையில் முதலில் தலித் குடியிருப்பும், அதிலிருந்து பிரிந்து செல்லும் சாலை வழியாக அரைகிலோ மீட்டர் தூரத்தில் முத்தரையர் வசிக்கும் குடியிருப்பும் அடுத்ததாக அமைந்துள்ளது.

இங்கு கடந்த 2011 பிப்ரவரி 6ம் நாள் தலித் பகுதியில் நடந்த திருமண நிகழ்சிக்காக தலித் மக்கள் சார்ந்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கொடியும், தி மு க கொடியும் அம்மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள காலனி நீர் தேக்கத்தொட்டி மீது அம்மக்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடிகள் நீர்த்தேக்கத் தொட்டி மீதே மூன்று நாட்கள் வரையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் முத்தரையர் சிங்கச்சின்னம் பொறித்த முத்தரையர் சாதிச்சங்க கொடியினை கொணர்ந்து தலித் மக்கள் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டி மீது கட்டினர். ஊரின் முகப்பிலேயே தலித் தரப்பு அடையாளம் ஒன்று தான் எல்லோரையும் வரவேற்பது போல் அமைந்திருக்கிறது என்ற சாதிசார்ந்த பொறாமையினால் அது கட்டப்பட்டது என்பதே தலித்மக்களின் குற்றச்சாட்டு. சாதி சமுகத்தின் அத்தகைய உளவியல் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இச்சிக்கலான நிலையை புரிந்து கொண்ட தலித் பகுதி அடங்கியுள்ள பகுதியின் ஒரேயொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பஞ்சு என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சமூகத்தினை சேர்ந்த நல்லியப்பன் என்பவரிடம் நிலைமையை சொன்னார்.



"உங்கள் கொடியை கழற்றிவிடுங்கள், எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்க கூறுகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.இதற்கு மறுநாள் மாலை பஞ்சு தலித்தரப்பு கொடியை அவிழ்க்க சென்ற போது முத்தரையர் சாதிசங்கக்கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்பு கொடியோடு அச்செருப்பையும் அகற்ற முயற்சித்தார். அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக்கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப்புதூரை சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள் 15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலைகளில் வந்திறங்கினர். அதனாலேயே அந்த செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர் தரப்பு கூறியிருந்ததாக தெரிகிறது.தலித்துகள் செருப்பைகட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் தனித்துவ அடையாளத்தை முடக்குவதற்ககான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது" என்று அதனை தலித்தரப்பு மறுக்கிறது. நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு பத்துக்கும் குறைந்த காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது தாங்கள் சற்றும் எதிர்ப்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். பெட்ரோல்,கம்பு, கடப்பாரை, ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300 பேர் பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளை தாக்கினர். ஓட்டு வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்பைக்குகளும்,சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும் பாத்திரங்கள் டிவி பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப்பட்டது. திருமாவளவன் படம் வரையைப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அரைமணிநேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது. ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில் இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.

தாக்குதல் நடந்து இரண்டு நாளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.காவல்துறையின் நடவடிக்கை திருப்திதரக்கூடியதாக இல்லை. உரிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படவில்லை. SC/ST (ACT)1989 - ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினைச் சேர்ந்த நைனார் என்பவரையும் அய்யாவு என்பவரையும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போதுவரையிலும் பரளிப்புதூர் தலித்மக்களுக்கு தெரியாது. இது நியாயமற்ற கைது. உண்மை அறியும் குழு நேரடியாக பார்வையிட்டதன் அடிப்படையில் சேதங்களின் அளவானது. தலித் காலனியில் 98 சதவிகித வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடமும்,கோயிலும் மட்டுமே விடப்பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள வீடுகளில் ஓடுகள் சேதம் என்ற அளவில் 25 சதவிகிதமும், பொருட்கள் சேதம் தீவைப்பு எனும்- அளவில் 75 சதவிகித வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட மோட்டார்பைக்குகள், 10 - க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், வைக்கோல்படப்பு,பாத்திரங்கள்,டிவிகள் ஆகியவை சேதப்பட்டுள்ளன. குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகி வீட்டுக்குள் இருந்த அழகுமீனா என்ற பெண்ணும் கூட வீட்டிலிருந்து ஓட முடியாமல் ஓடியிருக்கிறார்.கர்ப்பம் இருந்த மாரிதேவி என்ற பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியுள்ளது. பெண்கள் அச்சத்தினால் வீடு ஒன்றில் மறைந்த பின்பும் கடப்பாறையை கொண்டு வீட்டை இடித்து மிரட்டியுள்ளனர். பழநி என்பவரின் டீக்கடையோடு கூடிய சிறு மளிகைகடையும் தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோழிகள், ஒரு டஜன் ஆடுகள் எரிக்கப்பட்டன. காயம் என்றளவில் நைனா என்பவரும் செல்லம்மாள் என்பவரும் சிறுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்த மின்மாற்றியை (ட்ரான்ஸ்பர்ம் ) தாக்கி மின்சாரத்தை நிறுத்திவிட்டே தாக்குதலை தொடங்கியுள்ளனர்.தாக்குதலை முடித்துவிட்டு நத்தம் சென்ற அக்கும்பல் செல்லும் சாலையிலிருந்த தலித் குடியிருப்புகளை எல்லாம் தாக்கிக்கொண்டே சென்றுள்ளனர். குறிப்பாக வத்திப்பட்டி என்றும் கிராமத்திலிருந்த திருமாவளவன் படம் போட்ட பேனரும், மூன்று குடிசைகளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பரளிபுதுரை நோக்கி போலீசார் திசை திரும்பியிருந்த நேரத்தில் நேராக நத்தம் சென்ற கும்பல் இரவு 1 மணியளவில் அங்கிருந்த ரவுண்டானாவில் முத்தரையர் பெரும்பிடுகு சிலையை சட்டவிரோதமாக நிறுவ முயற்சித்தது. போலீசார் தடுத்து கும்பலை விரட்டிய காரணத்தால் அம்முயற்சி நின்று போனது.
இப்பிரச்சனை தொடர்பாக பரளிபுதூர் தலித் குடியிருப்பினை பார்வையிட்டு ஊரில் இருந்த பெண்கள், ஊரை விட்டு வெளியேறியிருந்த ஆண்களை சந்தித்த நம் உண்மையறியும் குழு முத்தரையர் குடியிருப்பில் யாரும் இல்லாததால் ஊரில் கடைக்கோடியிருந்த சில வீடுகளின் சில பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஊராட்சி மன்றத்தலைவரும் இல்லாததால் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொது அதுவும் அணைத்து வைக்கப்பட்டுயிருந்தது. இது தவிர காவல்துறை டி எஸ் பி ராஜராமனை சந்தித்து தகவல் திரட்ட முடிந்தது.

மேற்கண்ட யாவரின் வாதங்களாவன.



தலித்மக்கள்:-

எங்களுக்குள் பெரிய மோதல்கள் இருந்தது இல்லை. எங்களின் இரண்டு பகுதியிலும் தி.மு.க கட்சி சமமாக காலூன்றி இருந்தது. அண்மைக்காலமாக தலித் இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கி கொடிகட்டுதல், திருமாவளவன் படம் போட்ட சுவரொட்டி ஒட்டுதல், பாடல்களை ஒலிப்பரப்புதல் என்று செயற்பட்டு வருகின்றனர். இது தவிர வெளிப்படையான அரசியில் முரண்கள் இல்லை. ஆனால் கடந்த கிராமபஞ்சயத்து தேர்தலின் பொது தொடர்ந்து பொது பஞ்சயத்தாக இருந்து வரும் பரளிபுதுரை ரீசெர்வ் பஞ்சயத்தாக மாற்றவேண்டுமென்று தலித் தரப்பில் சிறு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றபடி 6 மாதத்திற்கொரு முறை சிறு சிறு மோதல்கள் எழுந்து உடனே சரியாகிவிடும் நிலைமையே இருந்து வந்தது.தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு காரணமான கொடிகட்டுதல் சார்ந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே முத்தரையர்கள் பிரச்னை செய்து வந்தனர். எங்கள் பகுதியிலிருக்கும் தண்ணீர் தொட்டி மீது கொடியை கட்டும் போதே முத்தரையர் பகுதியிலிருந்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர். கருப்பணன், அபர்ணா-வேன் உரிமையாளர் பாலமுருகன், கண்ணன், கணேசன், சின்னழகு, தேங்காய்வெட்டு - முருகன் ஆகியோர் கட்டக்கூடாது என்று தடுத்தனர். நீங்கள் கட்டினால் நாங்களும் கட்டுவோம் என்றனர். ஆதே போல கட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்கு ஒன்றை தேடுவதற்காக செருப்பையும் அவர்களே கட்டியிருக்க வேண்டும்.அவ்வாறு கட்டிவிட்டு மறியல் செய்தனர். மறியல் செய்து விட்டு பரளிபுதூர் காலனிக்கு முன்பாகவே நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மற்றொரு தலித் குடியிருப்பான அம்பேத்கர் நகரில் 3 வீடுகளை தாக்கினர். அடுத்துதான் பரளிபுதூர் காலனிக்கு ஒரு கும்பல்வந்து பெரும்சத்தம் போட்டு கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான சத்தம் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்கிருந்த மாமரத்தில் நின்றுகொண்டு நெடுஞ்சலையிருந்த மற்றவர்களை போன்போட்டு அழைத்தனர். அப்போது சில போலிஸ்காரர்கள் இருந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றது. பிறகுதான் பெரும்கும்பல் தாக்குதலில் இறங்கியது.15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த முத்துரையர்கள் வலசை , வெள்ளியன்குன்றம் புதூர், கடவூர், புதுகோட்டை, விளாம்பட்டி,புதூர், லிங்கவாடி, பெருமாபட்டி, ஆணையூர், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களாவர்.எங்கள் மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரை திசை திருப்பிவிட்டு நத்தம் ரவுண்டானாவில் முத்துரையர் சிலை வைப்பதே அவர்களின் நோக்கம் என்பது தலித் மக்களில் ஒருதரப்பார் குற்றச்சாட்டு.இத்தாக்குதலில் உள்ளூர்மக்கள் மட்டுமல்லாது முத்தரையர் சமூக பிரமுகர்களும் பங்கொண்டு உதவினர் என்பது தலித் மக்களின் கூற்று. வத்திப்பட்டி அம்சா - ஸ்டியோ உரிமையாளர் அம்சராசாவின் சுமோ, வத்திப்பட்டி - அழகு என்ற குட்டையன் தந்த பெட்ரோல், தேமுதிக ஒன்றிய பொறுப்பாளர் பாபு, சரந்தாங்கி ஊராட்சித்தலைவர் முத்தையன், காசம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர்,அரசாங்கத்தின் உதவி இல்லை. எங்கள் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தந்த அரிசியில் சமைத்து வருகிறோம். அதிகாரிகளில் தவிர கலக்டர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அரசியல் அமைப்புகளும் வரவில்லை.



முத்தரையர் தரப்பு:-


நாங்கள் தாயாய் பிள்ளையாய் தான் பழகினோம். எங்கள் சாதி பெண்கள் இருவரை தலித் தரப்பு திருமணமே கூட செய்திருக்கிறது. இப்போது வெளியூர்காரர்கள் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள். (ஊரில் ஒரு ஆணை கூட பார்க்க முடியாத நிலையில் இரு பெண்கள் மட்டும் தயக்கத்துடன் பதிவு செய்தது.)



காவல்துறை:-
டி எஸ் பி அவர்களை குழு சந்தித்து, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்ட போது. இரு தரப்பும் நடந்துகொண்டது சகிக்க முடியாதது என்றும் இரு தரப்பின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தாக்குதல் நடந்தது தெள்ள தெளிவாக இருக்கும் போது ஏன் வெறும் சாதியை சொல்லி திட்டிய பிரிவில் வழக்கு தொடுத்துள்ளீர்கள் என கேட்ட போது, அவசரத்தில் நடந்ததாகவும் சார்ஜ் சீட்டில் சரி செய்வதாகவும் சொன்னார். எப் ஐ ஆர் இல் திருத்தலாமே, என சொன்னதற்கு இனி சாத்தியமில்லை என்றார். அவரை பொறுத்தவரை இரு தரப்பும் தவறு என்ற மனநிலையில் மொத்த பிரச்சனையையும் கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.



உண்மையறியும் குழுவின் பார்வை:-



சமூகத்தளத்தில் தனித்தனி சாதிகளின் அடையாள உருவாக்கம் வலுப்பெற்று வரும் சமகாலச் சூழலில் முத்தரையர்களும் அத்தகு முயற்சிகளில் இறங்கி முத்தரையர் பெரும்பிடுகு சிலை போன்றவற்றை சாதித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தீண்டாத சாதியாக அடங்கி வாழ்ந்த சமூகத்தினரின் அரசியல் எழுச்சி முத்தரையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கிவைக்கவும் , தங்கள் சாதி அடையாளத்தை உறுதியாக்கிக்கொள்ளவும் முத்தரையர்களை உந்தியது. இது நாள் வரையில் சிறு சிறு கோபங்களாக இருந்த இப்போக்கு இப்போது இத்தாக்குதல் மூலம் முழுவடிவம் பெற்றுளளது. இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதாம் பரளிப்புதூருக்கு அருகிலுள்ள வத்திப்பட்டி என்னும் ஊரில் முத்தரையர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட தலித் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி உள்ளார். இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் இத்தாக்குதலில் மும்முரமாய் இருந்துள்ளனர். பரளிப்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பமும், பெயர்பலகையும் தாக்கப்பட்டமை தலித்துகளின் அரசியல் அடையாளம் மீதான கோபத்தையே காட்டுகிறது.தலித்குடியிருப்பு மீதான இத்தாக்குதல் மற்றுமொரு கொடியங்குளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து இருந்து வருவதோடு, மிகச் சாதரணமாகி சமூக ஒப்புதலை பெற்றும் விட்டன. தாக்குதல் நடந்த பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு தலித் கட்சிகளும் முன் வரவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவம் நடந்து 3 நாள் ஆகியும் வராத நிலையில் எந்த சலுகையும் வாங்க மாட்டோம் என்று தலித் பெண்கள் எதிர்த்த போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் , அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுருத்திதாக இளைஞர்கள் பதிவு செய்தனர்.பரளிபுதுரில் முத்துரையர்களே பெரும்பான்மை. தலித்துகள் சிறுபான்மையினர். பரளிபுதூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையும் முத்தரையர் கிராமங்களே. குறிப்பாக பரளிபுதூர் பஞ்சாயத்து என்பதே புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி,பொடுகம்பட்டி,அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதேயாகும். அங்கு ஊராட்சிதலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முத்தரையர்களே. மொத்தமுள்ள 9 வார்டுகளில் ஓரயொரு வார்டு மட்டுமே தலித் உறுப்பினரைகொண்டது.இங்கு பெரும் மோதல்கள் நடைபெறவில்லை என்பது உண்மையே.முத்தரையர்கள் மட்டுமே நிலம் உள்ளவர்கள். ஆனால் அவை பெரும் நிலக்கிலாரிய பண்பு கொண்டவை அல்ல. தலித்துகளில் பலரும் அவர்களிடம் வேலை செய்து வருபவர்களே . ஆனால் பல்வேறு மாற்றங்களின் வழியாக தலித்துகள் விவசாயக் கூலி வேலைக்கு செல்வது குறைந்து வருகிறது. தலித்துகளில் படிப்போர் எண்ணிக்கையும் முத்தரையர்களை ஒப்பிடும் போது கூடி வருகிறது.
கடந்த சில வருடங்களில் பரளிப்புதூர் தலித்துகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கியுள்ளனர். அது முதல் பொதுவான விழாக்கள் தொடங்கி குடும்ப விழாக்கள் வரையிலும் அக்கட்சி அடையாளம் தாங்கியே தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திருமாவளவனின் படம் தாங்கிய சுவரொட்டியும் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஆகியனவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த முத்தரையர் சாதி பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்திருந்தாலும் அவரின் குடும்பத்தோடு உறவு இல்லையே தவிர தாக்குதல் ஏதும் முத்தரையர் தரப்பில் நடத்தப்பட வில்லை. அதே போல மற்றொரு திருமணமும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளின் தனித்த அரசியல் முயற்சிகள் முத்தரையர்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போதுதான் அக்கிரமத்தை ரிசெர்வ் பஞ்சயதாக மாற்ற வேண்டும் என்ற பேச்சும் தலித்துகள் மத்தியில் எழுந்து அடங்கியிருக்கிறது. இக்கிராமம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்கள் தோறும் தலித்துகளிடையே தனித்த அரசியல் முயற்சிகள் எழுந்துள்ளன.

பரிந்துரைகள்:

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு:

1 . இரண்டு தரப்பும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும் ஆதிக்க சாதியினர் மீதான குற்றத்தை காப்பாற்றுவதாகவும் இருக்கும். உண்மையை திசை திருப்பும் அணுகுமுறையாகவும் இருக்கும்.

2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 3(10)(x) என்ற பிரிவின் கீழ் சாதியை சொல்லி திட்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனவே பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

sc/st வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்

3(1)(ii) - காயம் ஏற்படுத்தல்

3(1)(iii ) - ஆடைகளை களைதல்

3(1) (ix ) - அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தல்

3(1) (x) - சாதிபெயரை சொல்லி திட்டுதல்

3(1) (xi ) - பெண்களை மானபங்கப்படுத்துதல்

3(1)( xiv) - பொது வழிகளை பயன்படுத்த தடை விதித்தல்

3(1) ( xv) - குடியிருப்பிலிருந்து அகற்றுதல்

3(2) ( iii) - சொத்துக்களை தீயிட்டு அழித்தல்

3(2) (iv) - குடியிருப்பில் தீவைத்தல்

3(2)( v) - 10 வருடத்திற்கு குறையாத தண்டனை

ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு :

1 . பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண சேதங்களை மதிப்பிட்டு அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரவல்ல நிவாரணமாக அவை அமைய வேண்டும்.

2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம்(1989) இன் கீழ் மாவட்ட ஆட்சியரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சேதங்களை பார்வையிட்டு நிவாரணத்தை மதிப்பிட வேண்டும்.

4 . தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து மீண்டும் குடியமர்த்துவதொடு அச்சமற்ற முறையில் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க வகை செய்ய வேண்டும். மேலும் தலித் மக்களை கைது செய்வதற்கு தோதாக வழக்கை பதிவு செய்துவிட்டு காத்திருப்பதையும் காவல் துறை கைவிட வேண்டும்.

தமிழக அரசுக்கு :

1 . அரசு சார்பாக தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் முத்தரையர் தரப்பு ஆக்கிரமிதுக்கொண்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன . தலித்துகளுக்கு நில உரிமை, அரசு சொத்துக்களில் உரிய பங்களித்தல் { குளம், கோவில் , கிராம சொத்து ஏலம் } .

2 . தலித்துகள் தாங்கள் விரும்பும் அரசியல் அடையாளத்தை மேற்கொள்வதற்கான சுதந்திர உரிமையை காப்பாற்றுதல்.

3 . சேதங்களை மதிப்பிடவும் சிக்கலை ஆராய்ந்து நிவாரணம் வழங்கவும் தனியான கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும்.

4 . ஊரை விட்டு வெளியேறி அல்லல்படும் தலித் இளைஞர்களை உடனடியாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் குற்றம் சாட்டப்பட்ட முத்தரையர்களை தவிர மற்ற முத்தரையர் ஆண்கள் ஊர் திரும்பும் வகையில் காவல் துறை செயல்பட உத்தரவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கவும், வலியுருத்துகிறோம்.


உண்மை அறியும் குழுவினர்

1.பகத்சிங் வழக்குரைஞர்

 2 . விஜயபாரதி வழக்குரைஞர்

 3 . ஸ்டாலின் ராஜாங்கம் பேராசிரியர்

4 . முரளி ஆய்வாளர்

5 . கண்ணம்மா ஆசிரியர்

6 . திவ்யா சட்ட மாணவர்

7. விஜயலட்சுமி சட்ட மாணவர்

8 . விஜயன் சட்ட மாணவர்

9. கிருஷ்ணா சட்ட மாணவர்

10. பகவன் தாஸ் சட்ட மாணவர்

11. பெரியசாமி சட்ட மாணவர்

12. பாண்டியன் சமூக ஆர்வலர்

13. தங்கப்பாண்டியன் சமூக ஆர்வலர்


புகைப்படங்கள் உதவி : திரு.பாரிச்செழியன்

பௌத்தம் - பெரும்பான்மை வாதம் எங்கும் எப்போதும் பாசிசமே - டி.அருள் எழிலன்.


சென்னை எழும்பூரில் இருக்கிற பௌத்த மகா போதி சங்கத்திற்குச் சென்றிருந்தேன். மடத்தில் நிலவிய ஒழுக்கமும், தூலமான பேரமைதியும் எங்கோ ஒரு சனாதனக் கோட்டைக்குள் நுழைந்து விட்ட அருவறுப்பைக் கொடுத்தது. மயிலாப்பூரில் இருக்கிற பார்ப்பன மடமான இராமகிருஷ்ணா மடத்திலும் மகா போதி மடத்திலும் உரையும் அமைதியில் எந்த வித்தியாசங்களும் இல்லை. புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், மகாபோதி சங்கம், மயிலாப்பூர் மடம் என்று அவர்களின் தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் வித்தியாசங்களில்லை. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிற அவர்களிடம் பூணூல் உண்டு. இவர்களிடம் பூணூல் இல்லை அவளவுதான். மற்றபடி மடத்தில் இருக்கும் பிக்குகள் மிகவும் இளைய வயதுள்ளவர்கள். இலங்கை அரசுக்கும் மகா போதி சங்கத்திற்கும் நேரடி உறவு உண்டு. இலங்கைத் தூதரகத்தின் ஒரு உளவு அமைப்பாக பௌத்த முகமூடியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆரிய சிங்கள அமைப்புதான் மகா போதி சங்கம்.

இடது வலது பக்கங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு மேலே நடு வாசலில் ஒரு மீசை மழித்த ஆசாமி படத்தில் இருக்கிறார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தால்......ஆஹா அது அனகாரிக தர்மபாலா ஆரிய இனமான சிங்கள இனத்தின் மேன்மைகளைப் பேசி சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும், மலையாளிகளுக்கு எதிராகவும் இலங்கையில் இயக்கம் கட்டியவர். உலகம் எதிர்கொண்ட கிரேட் டிப்பரஷன் பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் தேயிலை வீழ்ச்சியும் திண்டாடிய தொழிலாளிவர்க்கத்தின் பிரச்சனைகளுக்கும் காரணமாக சிறுபான்மை மக்களினங்களைக் கைசுட்டி சிங்கள மேனையை நிறுவியவர். இந்திய எதிர்ப்பு (இந்து எதிர்ப்பு) என்பது அனகாரிகாவின் அடிப்படையாக இருந்தாலும். அவருக்கு பார்ப்பனர்கள் மீது பாசம் அதிகம் இருந்திருக்க இயல்பான ஒன்றுமையும் இருந்திருக்க வேண்டும். இங்கிருந்து கடல் வழியாக வர்த்தகங்களுக்காக சென்று வரும் இந்திய தொழிலாளர்களை மிலேச்சர்களாகச் சித்தரித்த அனகாரிகா , பௌத்த மறுமலர்ச்சி என்னும் பெயரில் சிங்கள பேரினவாதத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றியவர். ஒரு நன்றிக்கடனுக்காக அந்த பாசிஸ்ட் கருத்தியலாளரின் படத்தை இங்குள்ள போதி சங்க பிக்குகள் வைத்திருக்கக் கூடும்.

பெரும்பான்மை வாதம்.
பாபர் மசூதி இந்து வெறியர்களால் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்டது. நாடு முழுக்க சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான அப்பாவி இந்துக்களும், முஸ்லீம்களும் அந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டார்கள்.இந்தியா மட்டுமல்லாது பாபர் மசூதி இடிப்பு ஆசிய நாடுகள் முழுக்க சிறுபான்மை பெரும்பான்மை கருத்தியலை கட்டவிழ்த்து விட்டது. வங்கதேசத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் சிறுபான்மையினர். அங்கே சிறுபான்மை இந்துக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்படி ஒரு சிறுபான்மை இந்துக் குடும்பத்தின் மன உணர்வை வெளிப்படுத்தி தனது சொந்த சமூகத்திற்குள் ஜனநாயகக் குரலாக ஒலித்தார் தஸ்லிமா நஸ் ரீன் தனது "லஜ்ஜா" நாவல் மூலம். இந்தியாவில் இந்துப்பாசிசம்..... ஏன் இந்து மதம் கூட உழைக்கும் மக்களுக்கு எதிரான மதம்தான். ஏனைய மதங்கள் ஏதோ உழைக்கும் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக நான் சொல்லவில்லை. மனிதனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மதம் இந்து மதம். அது பெரும்பான்மை மதமாக இங்கு இருப்பதால் இங்குள்ள சிறுபான்மை இனங்களை நசுக்கி அழிக்கிறது. கொலை செய்கிறது, தேசப்பற்றை இந்து மதப் பற்றாக்கி, இந்து மதப் பற்றை தேசப்பற்றாக்கி பர்தா அணிந்த பெண்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. பாவம் வங்கதேசத்தில் வாழும் இந்து அங்கே அவன் எதிர்கொள்கிற தேசிய வெறியும் மத வெறியும் வேறு. எது எப்படி என்றாலும் வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியா மாதிரி பெரும்பான்மை வெறி இல்லை என்று நிச்சயமாகக் கூறலாம். சொந்தச் சகோதரன் அவன் இன்னொரு மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் போல கொலை செய்வதில்லை இஸ்லாமிய மக்கள். ஆனால் இந்த கலாசாரப் பாசிசத்தை முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் கையெடுத்துக் கொள்கின்றன. தலிபான்கள், முஜாகிதீன்கள், அல்கொய்தா, லக்‌ஷர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ கலாசாரப் பாசிஸ்டுகளாக திகழ்கிறார்கள்.


இலங்கை பௌத்த பாசிசம்

இந்தியாவின் இந்து மாத வெறிக்கு சற்றும் குறையாத அல்லது அதை விட அகோரமான ஒரு பாசிச வெறி கொண்ட அரசு மதமாக பௌத்தம் இலங்கையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நிறுவனமயப்பட்ட பௌத்த மதத்தையும், இலங்கை அரசையும், அதன் மேன்மை மிக்க பௌத்த தலதா மாளிகையும், ஏனைய பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கரிய பீடங்களையும் தனித் தனியானவை, அரசுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, என்றெல்லாம் வேறுபடுத்தியோ தனித் தனியாகவோ பிரித்துக் காண முடியாது. இந்த மத நிறுவனங்கள் தவிற ஜாதிக ஹெல உருமய வேறு. எப்படி இந்தியாவில் பஜ்ரங்தள், ஆர்.எஸ். எஸ். விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புகள் வன்முறை அமைப்புகளாக தீர்மானிக்கும் சக்திகளாக செயல்படும் போது பிஜெபி, சிவசேனா போன்றவை வாக்கு வங்கி அரசியல் தளத்தில் வெகு சன அமைப்பாக செயல்படுகிறதோ அப்படித்தான் ஹெல உறுமயவும். பொதுவாக மல்வத்தை, அஸ்கரிய பீடங்கள் ஏதோ ஒரு பிரதான அரசியல் கட்சியின் ஆதரவு அமைப்பாக செயல்பட்டாலும் . போரின் முடிவுக்குப் பின்னர் இவர்கள் அனைவருமே இணைந்து செயல்படுகிற போக்கு காணப்படுகிறது. 2009- ஜனவரியில் கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற இடங்கள் படையினரிடம் விழுந்த போது, ஜாதிக ஜெல உறுமய அமைப்பின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்.... மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரரையும் ,திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைசயும், அஸ்கரிய, பீட தேரரையும் சந்தித்து விட்டு உற்சாகப் பெருக்குடன் ஊடகவியளார்களுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனவரி 29- ல் வாழங்கிய நேர்காணல் // , ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழும் முப்படைத்தளபதிகளின் தலைமையிலும் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரதேசங்களையும் மீட்டு வருகின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் வடக்கின் அனைத்தும் பகுதிகளும் எமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்.பராம்பரிய கலாசார பௌத்த தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டியுள்ளது. மகாநாயக்க தேரருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்// தொடர்ந்தும் கிளிநொச்சி புரதான பௌத்த நகராக இருந்தது என்றார்.

பூம்புகாரும், கொற்கையும், மாமல்லபுரமும், தொண்டியும், மதுரை உள்ளிட்ட தமிழகமே ஒரு காலத்தில் சமணக்காடாக இருந்ததாக வரலாறு சொல்கிறது. சைவமும், வைணவும் சமணர்களைக் கொன்று மாபெரும் இனக்கொலை புரிந்த வரலாறுகள் உண்டு. இங்குள்ளதைப் போல கிளிநொச்சியும் ஒரு சமணக்காடாக இருந்திருக்கலாம். இங்குள்ள பண்டைத் தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கும் போது ஈழத் தமிழர்களிலும் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருக்கும் நியாயங்களை கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் கிடைக்கும் பௌத்த எச்சங்கள் நமக்கு நிரூபிக்கும். வரலாற்றை மீள கட்டு எழுப்புவதும், தூய்மைப்படுத்தி அதை மேன்மையாக்க நினைப்பதும்தான் பாசிசத்தின் முதல் செயல்பாடு. அது இந்தியாவின் இந்துப்பாசிசத்திற்கும் பொறுந்தும், இலங்கையின் பௌத்த பாசிசத்திற்கும் பொறுந்தும். முஸ்லீம் மன்னர்களால் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களை மீண்டும் கட்டு எழுப்பவதினூடாக இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த இங்குள்ள இந்துப் பாசிஸ்டுகள் விரும்புபது போல, ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள இந்து, முஸ்லீம் ஆலயங்களையும் தொழுகைத் தலங்களையும் அகற்றி விட்டு அங்கு சந்திக்கு சந்தி விஹாரைகளை நிறுவுவதினூடாக பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த நினைக்கிறது பௌத்த பாசிசம். அய்யா அறிவுஜீவிகளே இந்து மதம் பாசிச மதம்தான். ஆனால் அதை பின் பற்றும் மக்கள்? அவர்களின் மரபில் சிறு தெய்வவழிபாடும் தமிழ் மரபுதானே? இந்துக்கள் என்பதாலேயே அவர்கள் கொல்லப்படுவதையும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுவதையும் ஆதரிப்பீர்களா?


கடவுள் மறுப்பு என்கிற தத்துவத்தின் கட்டப்பட்ட திராவிட இயக்கம் என்னும் சீர்திருத்த இயக்கம் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அது வழிபாட்டு உரிமையை ஆதரித்தே வந்திருக்கிறது. சீர்திருத்த வாதியான ஈ.வே.ரா பெரியாரின் தீண்டாமைக் கெதிரான போராட்டம் என்பதே வழிபாட்டு வாழ்வுரிமையின் ஒரு பகுதிதான். அதே வாழ்வுரிமை இந்துக்களான பார்ப்பரல்லாத ஈழத் தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? ஆனால் இன்று தமிழகத்தின் திராவிட இயக்க அறிவு ஜீவித் தளத்தில் ஒரு விதமான பௌத்த மேன்மை நினைவுறுத்தப்படுகிறது. அதாவது மாபெரும் இனக்கொலை ஒன்று பௌத்த மேலாதிக்க சிங்கள அரசுப் பாசிசத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக சிங்கள அரசையோ அதன் ஒடுக்குமுறையையோ ஆதரிக்க முடியாமல் மிக வசதியாக பௌத்த மரபிற்குள் இவர்கள் ஒழிந்து கொள்கிறார்கள். சரி பௌத்த மரபே இலங்கையின் அரசு பயங்கரவாதத்தின் ஒரு அங்கம்தான் என்றால் அதை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் அமைதி காக்கிறார்கள். பெரியார், திராவிட இயக்கம் போன்றவைகளின் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்து மத எதிர்ப்பையும் தங்களின் சுயலாப பௌத்த முகமூடிக்காக ஒரு பிராண்டாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் மகா போதி சங்கத்தையும் தாக்கியவர்களும் பெரியார் இயக்கத் தோழர்கள்தான் என்பதை அறியும் போது இன்னமும் மக்களுக்கான அறம் செத்துப் போகவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு இடத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் இன்னொரு இடத்தில் சிறுபான்மையாக வாழும் போது நமது ஆதரவு எப்போதும் சிறுபான்மை மக்களுக்கே அவர்கள் பௌத்தர்களா? தமிழர்களா? இந்துக்களா? என்பதல்ல பிரச்சனை. வரலாறுகளை தகர்த்தெறிந்தவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தவுடன் அதை நிறுத்திக் கொண்டதுடன் தோதான ஒன்றையும் போர்த்திக் கொள்கிறார்கள். ஈழப் படுகொலைகளுக்கு பின்னர் எல்லா விதமான வரலாறுகளையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மை மக்கள் ஆதரவு என்பது மனித நேயத்தின்பால் இருக்க வேண்டும். நமக்கு வேண்டாத மதம் என்பதால் அவர்கள் சாகட்டும் என்பதை ஆதரித்து மௌனமாக இருப்பது போல மனித குலத்திற்கு எதிரானது வேறொன்றும் இல்லை. இலங்கையில் பௌத்த பாசிசம். இந்தியாவில் இந்துப் பாசிசம். மதங்கள் மனிதனுக்கு விடிவைத் தராது என்பதற்கு இது இன்னுமொரு சான்று. தந்திரங்களால் இனி அடுத்த தலைமுறையை ஏமாற்ற முடியாது. கனவான்களே.



எகிப்தில் நடந்தது புரட்சியா? தெரியலையே?

எகிப்தில் புரட்சி நடந்ததா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குள் ஒரே வாழ்த்துக்களும், கொண்டாட்டங்களும் நடக்கின்றன. ஓரளவுக்கு ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி கூட்டி வாசித்தாலும் தெரிய வருவது பரிதாபகரமான இருள் ஒன்று எகிப்தை சூழந்திருக்கிறது என்பதுதான். துனீஷியாவின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து எகிப்தில் மக்கள் கிளர்ந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி எகிப்தின் சர்வாதிகார அரசின் நிர்வாகத்தை முடக்கியதோடு முழுமையான கெய்ரோவையும் முற்றுகையிட்டிருந்தார்கள். வழக்கமாக மக்களைக் கொன்றொழிக்க அரசுகளால் பயன்படுத்தப்படும் பீரங்கிகளின் வாய்கள் பிளாஸ்டிக் துணிகளால் கட்டப்பட்டு போராடிய மக்கள் ஓய்வெடுக்கும் ஒரு கனரக வாகனம் போல பயன்பட்ட்டது. இதற்கப்பால் எகிப்தில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டதெல்லாம் தனிக் கதை. ஆனாலும் இந்த பீராங்கிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் இருக்கும் கொடிகள் ஏன் செங்கொடிகளாக இல்லை? துனிஷியாவில் செங்கொடி தூக்கித்தானே போராடினார்கள். என்றெல்லாம் கேள்விகள். தமிழில் கலையரசன் ப்ளாக் படித்தே நான் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். ஆனாலும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரோ முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியே எகிப்தில் போராட்டங்களை தலைமை தாங்குவதாகவும் பெரும்பாலான எகிப்தியர்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருப்பதாகவும் எழுதியிருந்தார்.
மக்களின் போராட்டங்களின் இறுதி இலக்கு என்ன? போராட்டங்களை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவாகள் என்றெல்லாம் யோசித்த போது ''என்ன ஆனாலும் சரி நான் எகிப்தை விட்டு வெளியேற மாட்டேன். உங்களுக்கு என்னதான் பிரச்சனை சொல்லுங்கள் பேசி சரி செய்யலாம்" என்று பேசினார். ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வெளியே போ.... என்றார்கள். ஒரு வழியாக அவர் நாட்டிலிருந்து வெளியேறி ஒரு தீவுக்குள் சென்று விட்டாராம். இப்போது ஆட்சி? அது இராணுவ ஜெனரல் கைகளில். அடப்பாவிகளா? இதுக்கா போராடினீங்க?

கடைசி வரை போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ஒரு சர்வாதிகாரி இன்னொரு சர்வாதிகாரியிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சத்தமில்லாமல் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார். எகிபதிய மக்கள் முபாரக்கிடம் தோற்று விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை எகிப்தில் மக்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறார்கள். முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி அதை முன்னெடுக்கிறது அல்லது பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் நோக்கம் நிறைவேறாமலேயே மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். இராணுவக் கவுன்சிலோ ''நடைமுறையில் உள்ள அரசியல் சட்டம் மக்களை திருப்திப்படுத்த வில்லை. ஆகவே அதை செயல்படுத்தாமல் விலக்கி வைக்கும். மெலும் பாராளுமன்ற அதிபர் ஆட்சிமுறையைக் இன்னும் ஆறு மாதங்களில் கொண்டு வருவோம். அதற்கு இப்போது நாட்டில் அமைதி நிலவ வேண்டும்"" என்று உயர் மட்ட கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் கூட்டத்தில் முபாரக்கில் ஆளுயரப் படத்தை அகற்றிச் செல்வதையும் வீடியோவாக எடுத்து வெளியிட மக்கள் சந்தோசக் கூச்சலிடுகிறார்கள்.
எகிப்தில் இனி என்ன நடக்கும் எனத் தெரியவில்லை.

இன்றைய நிமிடம் வரை எகிப்தில் எந்த மாற்றமும் நடைபெற வில்லை. ஒரு கொடிய சர்வாதிகாரியிடம் இருந்து ஆட்சி மாறி இராணுவக் கவுன்சிலிடம் ஆட்சி மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். ஆனால் இன்னமும் தாஹிர் சதுக்கத்தில் ஒரு குழுவினர் போராடுகிறார்கள். பெரும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்த சதுக்கத்தில் இப்போது இராணுவத் தலைகள். ஒரு இஸ்லாமியப் புரட்சி என்றாலும் அது அமெரிக்காவுக்கு எதிராக இருந்தால் நல்ல விஷயம்தானே என்ற ஆவலில் இருந்தேன் எல்லாம் சப்பையாக முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இதை எல்லாம் நினைக்கும் போது ஏனோ முத்துக்குமார் நினைவுக்கு வருகிறார். வெகு வேகமாக அவரைக் கொண்டு போய் புதைத்த புண்ணியவான்கள் தமிழீழ ஆதரவாளர்களும், தேர்தல் அரசியல்வாதிகளும். நாம் அன்றைக்கு சில அரசியல்வாதிகளிடம் அடிவாங்கிய மாதிரி எகிப்திலும் எவனோ ஒரு உணர்வாளன் ஒரு அல்லக்கையிடமோ, கைக்கூலியிடமோ அடிவாங்குவான் இல்லையா?

இரோம் ஷர்மிளா கவிதைகள்.


மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா. தமிழில் முதன் முதலாக அவரது சில கவிதைகளையும் நேர்காணல்களையும் அம்பையின் மொழியாக்கத்தில் “அமைதியின் நறுமணம் “ என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். போராடும் ஒரு பெண்ணின் தனிமையை, காதலை, துயரைப் பேசுகிறது இந்த நூல்.

காதல்

என் அன்பு என்று நான் குறிப்பிடும் நீ
தாங்க முடியாத சுமையாய்
என் தசைநார்களில் புகுந்துகொண்டிருக்கிறாய்
இனிமேல் என்னால்
வேறு யார் தரும் அன்பையும்
ஏற்க முடியாது
கனமில்லாத இந்தப் பாத்திரம்
அதன் விளிம்புவரை
நிரம்பியாகிவிட்டது.

என்னிடமிருந்து வெகுதூரம் போய்விடு
என் நலன் பற்றி இனி விசாரிக்க வேண்டாம்
எனக்காகக் கவலைப்பட வேண்டாம்
காலப் புயல் என்னை அடித்துச் சென்றால்
அனலில் இடப்பட்ட வாழ்க்கை என்னுடையது
காலமெல்லாம் உடனிருக்கும் நண்பனுக்காக
என் மனம் ஏங்குகிறது
யார் ஏற்றாலும் சரி
ஏற்காவிட்டாலும் சரி
அவன்தான் என் வாழ்க்கையின் சாரம்.

என் விழிகள் நிரந்தரமாக மூடும்போது
என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும்போது
எனக்காகக் காத்திரு
என் அன்பே.

பாக்கியவதி

இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத
என் அன்பு
கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது
காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது
என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்
ஏக்கம் மூஷீமீகிறது
கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குஷீமீ நான்
அதனால்தான் மனமே இல்லாமல்
பின்வாங்கல்
என்னை மறந்துவிடு என் அன்பே
இன்று நான் வேறு ஒருவனுக்கு
உரிமையானவளாக இருக்கலாம்
அன்று நீ பச்சோந்தியானாளிணி
இப்படித்தான்
நாம் பிரிந்தோம், அன்புடன்
உன்னை நான் ஆராதித்தேன் மனமார
ஆனால் இன்று நீ
பாக்கியம் செளிணித இன்னொருத்திக்கு
உரியவன்.

அமைதியின் நறுமணம்.

வாழ்க்கை முடிந்துபோனதும்
உயிரற்ற கூடான என் உடலை
தயவுசெளிணிது தூக்கிச் சென்று
தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்
வைத்துவிடுங்கள்.

என் செத்த உடல்
கோடரியாலும் மண்வெட்டியாலும்
சிதைக்கப்பட்டு
நெருப்பில் சாம்பலாவதை
நினைத்தால்
மனத்தில் அசூயை பொங்குகிறது
வதங்கப்போகும் சருமம்
பூமியினடியே அழுகட்டும்
வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்
உலோகக்கருவாக அது மாறட்டும்
இனி வரும் காலங்களில்
நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து
நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.

வெற்றிபெற்ற புழு

கடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில்
புழு கடவுளைக் கொன்றுவிட்டது
நேர்மையான மனிதன்
கடவுளாகப் போற்றப்படுவான்
கடவுளை எதிர்த்து வெற்றிகண்ட பாவிகளை
அசுத்தமான புழுவான நான் வெறுக்கிறேன்
அவர்களுக்கு இருளைத் தவிர
வேறொரு முடிவில்லை.

சிறை உலகை

என்னால் மறக்க முடியவில்லை
பறவைகள் சிறகடிக்கும்போது
விழிகளில் நீர் பொங்கும்
நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
என்னும் கேள்வி எழும்
பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
எனக் கூவத் தோன்றும்
என்னைப் போன்றவர்கள்
கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!
உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்
வாழ்க்கைகள் சிதறுண்டன
உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்
உன்னால்தான் அதிகாரத்தை
நாங்கள் வெறுக்கிறோம்.

சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் சொல்கிறார். “ நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது... நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும்
இல்லை. இப்போது நான் செளிணிவதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செளிணியலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி எது தவறு என்பதை உணர்ந்தபோது அவர்கள் செய்ததில் எது சரி எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.

நூல் கிடைக்குமிடம்.
அமைதியில் நறுமணம்.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில்,
629001.

நன்றி- குங்குமம்

தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும்- இராமேஸ்வரத்தில் இலங்கை கூலிப்படைகள்.

இதுவரை 539 மீனவர்களை இலங்கைக் கடற்படைச் சுட்டுக் கொன்றிருக்கிறது.இந்திய அரசோ தமிழக அரசோ உருப்படியாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. மக்களுக்கு எதிரான ஜெயலலிதாவும், கருணாநியும் நடத்தும் அரசியல் நாடகங்களுக்கு மட்டுமே இந்தப் படுகொலைகள் இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தின் பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டம் நீரோடி வரை சுமார் ஆயிரத்துச் சொச்சம் கிலோ மீட்டரைக் கொண்ட வங்கக்கடலிலும், அரபிக் கடலிலுமாக மீன் பிடிக்கிறார்கள். இந்திய இலங்கை கடல் எல்லையில் மட்டுமே கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதலை இலங்கை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பின்னர் எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும் அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாத முத்திரையை புலிகளுக்கு எதிராக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திய ராஜபட்சே, இந்தியாவின் தனியார் தாராளமயாக்கலையும் மக்களின் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் அதன் உள்நாட்டு முதலாளிகளின் நலனையும் புரிந்து கொண்ட ராஜபட்சே இந்திய, இலங்கை நலன்களுக்காக இராமேஸ்வரம் மீனவர்களைக் கொன்று அந்த கடல்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார். மிகச் சரியாக தமிழக தலைவர்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் ராஜபட்சேவுக்கும் அவரது கும்பலுக்கும் தெரியும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்று. கோமாளிகளால் முன்னெடுக்கப்படும் தேர்தல் நேர நாடகமென்பதும் ராஜபட்சேவுக்குத் தெரியும். அதனால்தான் வழக்கம் போல இந்தியாவோடு பரஸ்பர புரிதலோடு இந்த மீனவர் படுகொலைகளை வைத்தே கடற்கரை தொடர்பான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகள் இறங்கியிருக்கிறது. மீனவர்களுக்க்கு லைசென்ஸ் முறை கொண்டு வந்து கடலோரத்தில் மீன் பிடிப்பை ஒழுங்கு செய்வது, பன்னாட்டு நிறுவனங்களின் கடல் கொள்ளைக்கு எதிராக அவர்களின் ஏரியாவுக்குள் ஊடுறுவும் நம்மூர் படகுகளை கைப்பற்றி சட்டவிரோத காவலில் வைத்து, தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பின் படி ஒன்பது வருடம் வரை சிறையில் தள்ளுவது (கைது செய்யப்படுகிற மீனவர்களை எத்தனை நாள் வேண்டுமென்றாலும் சட்டவிரோத காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது இச்சட்டம்) என்கிறது அந்த கருப்புச் சட்டமான கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் ஷரத்துக்கள்.


வழக்கம் போல மீனவர் படுகொலைகளின் போதும் நாடகமாடும் ஜெயலலிதா, கருணாநிதி யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் இச்சட்டத்தை அமல்படுத்துவார்கள். நாம் நடத்திக் கொண்டிருக்கும் திராவிட, தமிழ் தேசிய அரசியல் எதுவாக இருந்தாலும் அது எல்லையோர பழங்குடி மக்களை நிராகரிக்கும் ஒரு அரசியலே. புவியியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பழங்குடிச் சமூகங்கள் அதிராக வர்க்கங்களுக்கு எதிராக எழுச்சி பெறும் இந்தக் காலத்தில் இந்தியாவின் தெற்கு மூலையில் எல்லையோரப் பழங்குடிகளான மீனவ மக்களை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே வஞ்சிக்கிறது. இரு நாடுகளுக்குமே அந்தப் பகுதியில் மீனவர்கள் வாழக்கூடாது என்பதுதான் எண்ணம். நீண்டகால அரசியல் திட்டங்களும், இராணுவ நோக்கங்களும், வர்த்தக நோக்கங்களுமாக பல காரணிகளின் இந்திய இலங்கை அரசுகளுக்கு இருப்பதால் அவர்கள் இக்கொலைகளை ஊக்குவிக்கிறார்கள். முன்னர் நேரடியாக இராணுவத்தை வைத்து இக்கொலைகளை செய்த இலங்கை அரசு இப்போது சட்டவிரோத ஆயுதக் குழுக்களை இக்கொலைகளுக்கு பயன்படுத்துவதாகத் தெரிகிறது. தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும் என்ற சட்டவிரோத ஆயுதக் குழுவை பழங்குடி மக்கள் மீது ஏவும் இந்திய அரசு. இராமேஸ்வரத்தில் இலங்கை அரசின் கூலிப்படைகளை தனது சொந்தக் குடிகளாக மீனவப்பழங்குடி மக்கள் மீது ஏவ அனுமதிக்கிறது. இக்கொலைகளை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே நடத்தும் இனப்படுகொலை என்று சொல்வதற்கான முழு உண்மையும் இதில் உள்ளது. இந்தியாவின் கோரமான இந்தப் பச்சைப் படுகொலைகளை கண்டிக்கவோ சுட்டிக்காட்டவோ தயங்கும் நாம் சீனா இந்தியாவைத் தாக்குகிறது, பாகிஸ்தான் இந்தியா மீது பாய்கிறது என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களை குண்டு வைத்துக் கொல்லும் பயங்கரவாத அழிவு சக்திகள் செய்யும் நாசகார வேலையைத்தானே இந்தியா அதன் சொந்தக் குடிகள் மீது செய்கிறது.


ஒரு இணைய முயர்ச்சி. www.savetnfisherman.org

மீனவர் படுகொலை தொடர்பாக இருந்த அலுப்பையும் சலிப்பையும் போக்கியது இந்த இணையதளம்தான். யுவகிருஷ்ணா இதை ஆதரியுங்கள் என்று தன் ப்ளாக்கில் போட்டிருந்தார் முதலில் அது என்னவன்று எனக்குப் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது டிவிட்டர் மூலம் குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்காக கருத்துப் பரிமாறி உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு இணையதளம் இது என்று. நன்றாக இருந்தது பல முன்னணி பதிவர்களும் டிவிட்டர்களும் வந்து கருத்துச் சொன்னார்கள். பத்ரி, சந்தனமுல்லை, கார்த்திக், அதிஷா, பாலபாரதி, உண்மைத்தமிழன், இன்னும் ஏராளமானோர் கமெண்டுகள் அடிக்கடி வந்தது. நானும் கமெண்ட் போடலாம் என்று போட்டேன் ஒரு கட்டத்தில் என்ன போடுவதென்று தெரியவில்லை. கருணாநிதியைத் திட்டி நான்கைந்து கமெண்டுகளைத் தட்டி விட்டேன். அதாவது கருணாநிதி மீது இருக்கும் அரசியல் விமர்சனம் வேறு. ஆனால் இந்த இணையம் கருணாநிதியைத் திட்ட துவங்கியதல்ல இது நமது மீனவர் பிரச்சனையை, இந்தியாவின், தமிழகத்தின் வஞ்சகத்தை, அதன் கையாலாகத் தனத்தை, அல்லது சொந்தக் குடிகளுக்கு அரசுகள் செய்யும் துரோகத்தை உலக அளவில் பேசி கவனத்தை ஈர்ப்பதே நோக்கம் என்னும் போது குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பான கருத்துக்களை பரிமாறுவதன் மூலமே நோக்கத்தில் வெற்றி ஈட்ட முடியும். தவிறவும் ரோசா வசந்த் ஒரு கமெண்ட் போட்டிருந்தார் ’’சத்தம் போடாதீங்க ஆங்கிலத்தில் எழுதுங்கள்” என்கிற தொனியில் சொல்லியிருந்தார் எனக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இனி காலத்தை ஒட்ட முடியாது. தமிழில் அதிகமானோர் பங்காற்றும் அதே நேரத்தில் காத்திரமான மொழி பெயர்ப்புகள், கட்டுரைகளை ஆங்கிலத்தில் உருவாக்க வேண்டும். தமிழில் இருக்கும் கட்டுரைகள் எந்த அந்நிய மொழிச் சிந்தனைகளுக்கும் சளைத்ததல்ல அக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் மாற்றி இந்த இணையம் மூலம் கொண்டு செல்ல வேண்டும். வெகுவேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்பமும் உலக அளவில் செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் ஆங்கிலப் பகிர்தல்கள் அவசியம். ஆங்கிலம் தெரிந்த நபர்கள் உண்மையான அக்கரையோடு இதில் களமிரங்க வேண்டும். என்பது என் கோரிக்கை. மற்றபடி www.savetnfisherman.org இணையத்தை துவங்கியவர்களே இந்த வருடத்தின் மிகச் சிறந்த மனிதர்கள் கருத்துப் பரவலில் சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்து இந்தியா முழுக்க ஒரு டிவிட்டரில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு இணையக் கிளர்ச்சிதானே? அந்த நண்பர்களை பாராட்டுகிறேன். மீனவர் படுகொலை தொடர்பாக உங்கள் கட்டுரைகளை savetnfisherman@gmail.com அனுப்புங்கள்.

ஒரு எழுத்தாளன் நான் இதற்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் -நாஞ்சில் நாடன் பேட்டி.


‘‘ விருப்பு வெறுப்புகளுப்பால் நான் இந்த மக்களோடும் மண்ணோடும் ஊடாடிக் கொண்டிருக்கிறேன். மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். வெட்கம், அவமானம், பெருமிதம், பசி, இரக்கம், காமம், அறச்சீற்றம் என எல்லா உணர்வுகளாலும் எல்லா மனிதர்களைப் போலவே கட்டப்பட்டவன்தான் நானும். 1977 - ல் நான் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை எழுதிய போது நான் மதிக்கும் விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரும் அந்த நாவலைப் பற்றி மதிப்பிட்டதிலிருந்து என்னை நான் சாகித்ய அகாடமி விருதுக்கு தகுயானவன் என்று நினைத்திருந்தேன். அந்த நாவல் சுமார் எட்டு பதிப்புகள் கண்டு இருபதாயிரம் பிரதிகள் வரை விற்றுத் தீர்ந்து சுமார் 35 ஆண்டுகளாக நான் எழுதியும் விட்டேன். இப்போது எனக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்திருக்கிறார்கள். இப்போது எனக்கு வயது 63’’



என்று விருதின் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன் தனது இளமையின் வசீகரத்தை இன்னும் வயதில் தொலைத்து விடவில்லை. எழுத்தைப் போலவே எப்போதும் கலகலப்பாக இருக்கிறார் நாஞ்சில் நாடன். ஆறு நாவல்களும், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளும், 112 சிறுகதைகளும், கட்டுரை கவிதைகளும் எழுதியிருக்கிறார். தமிழில் வட்டார வாழ்வியலை நவீன இலக்கியத்திற்கு பரிச்சயப்படுத்தியது நாஞ்சில் நாடனின் எழுத்து.

‘‘எல்லோருடைய சந்தோசங்களையும், எல்லோருடைய துக்கங்களையும் நான் சுமந்து நடப்பவன் என்கிற முறையில் ஒரே நேரத்தில் இந்த விருது எனக்கு சந்தோசத்தையும் கொடுக்கிறது. கூடவே சில கவலைகளையும் நான் பார்க்க எழுதவந்தவர்கள் எழுதத்துவங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். ஆனால் தமிழ் எழுத்துப்பரப்பில் என்னை விட மூத்தவர்களும் உண்டு என் சமகால எழுத்தாளர்களும் உண்டு அம்பை, வெங்கட்சாமிநாதன், நா.முத்துசாமி, கோவை ஞானி, ஞானக்கூத்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ஜெயமோகன், பா.செயப்பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா, ம.இல.தங்கப்பா என்று நீண்டு செல்லும் இந்த பட்டியலின் பின்னே ஒரு புறக்கணிப்பு அரசியல் உண்டு. இன்று எனக்குக் கிடைத்ததற்காக நான் பெருமைப்படலாம், என் எழுத்தால் மட்டுமே இது சாத்தியமானதென்று மார்தட்டலாம் ஆனால் என் வாழ்வில் என் சிந்தனையில் ஏதோ ஒருவகையில் இவர்கள் எல்லோரும் இணைந்த ஒரு கலவையாகவே நான் இருக்கிறேன். இவர்களின் எல்லா காலடித் தடங்களுள் என்னுடையதும் ஒன்றாக இருக்கும் போது இந்த புறக்கணிப்பை சுட்டிக் காட்டுவதை என் கடமையாக நினைக்கிறேன். இவர்களோ நனோ விருதுகளுக்காக தேடி அலைந்தவர்களில்லை. ஆனால் அது தீவீரமாக இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமல் போகும் போது அது இந்த மக்களுக்குத்தான் இழப்பே தவிற எழுத்தாளனுக்கில்லை. ’’ என்கிறார் நாஞ்சில் நாடன்.


நாஞ்சில் நாடனுக்கு இப்போது சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோ நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் குறித்து ஒரு நூலை எழுதி முடித்திருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களுக்கான எழுத்துத் திட்டங்களோடு இருக்கும் நாஞ்சில் நாடன் தற்போது கோவையில் வசிக்கிறார்.


‘‘ ஆண்டாளை ‘சூடிக் கொடுத்த சுடர்க் கொடி’ என்று சொல்வார்கள். திருவில்லிப்புத்தூரில் இருக்கிற பெருமாள் மீது கொண்ட காதலால் தன் கழுத்தில் சூடிய மாலையை பெருமாளுக்குக் கொடுத்தாளாம் ஆண்டாள். பொதுவாக ஒருவர் சூடிய பூவை இன்னொருவருக்குக் கொடுக்கும் மரபு நம்மிடம் இல்லை. ஆனால் ஆண்டாளின் அந்த செயல் பிடித்திருந்ததால் ஒரு சிறுகதைக்கு சூடிய பூ சூடற்க என்று பெயர் வைத்தேன். அந்த நூலுக்குத்தான் விருது கிடைத்திருக்கிறது. இந்தப் பொழுது சந்தோசமாக கழிகிறது. ஒரு எழுத்தாளன் நான் இதற்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் என்ன செய்ய? ’’ என்கிறா நாஞ்சில் நாடன்.

நன்றி- குங்குமம்.





இலங்கை - கைது கடத்தல் காணாமல் போதல்.

கைது, அல்லது கடத்தல்,

இலங்கையில் போர் நிறுத்தம் கோரிய தமிழக போராட்டங்களை முழு அர்ப்பணிப்போடு நடத்தியவர்களில் குறிப்பிடத் தக்கவர் தோழர் அங்கயர்கன்னி. பெருஞ்சித்திரனாரின் பேத்தியான கயல் என்னும் அங்கயர்கன்னி அவரது உறவினரான திருமலை என்பருடன் முறைப்பட
சுற்றுலா விசா பெற்று இலங்கை சென்றுள்ளார். அப்படி சென்றவர்களை இலங்கை இராணுவம் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் குறித்து எவ்வித தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தோழர் கயல் விடுதலைச் செய்யப்படா விட்டால் வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை முன்னெடுக்கும் முயர்ச்சிகளை நண்பர்கள் துவங்கியுள்ளனர். போர் நிறுத்தம் கோரிய தமிழக போராட்டங்களில் கயலின் பங்கு அளப்பரியது. தோழர் முத்துக்குமாரின் உடல் கிடத்தப்பட்டிருந்த கொளத்தூரில் அந்த மூன்று நாட்களும் அவர் வழக்கறிஞர்களோடு இணைந்து நின்று முத்துக்குமாரின் கனவுகளுக்காக போராடினார். அவரது கைது நாம் அனைவருக்கும் விடப்பட்ட சவால். ஆவன செய்வோம்.
பிரகீத் எகனெலியகொட நீங்களும் கேளுங்கள்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் கொலைகள்தான் நின்ற பாடில்லை. கோத்தபய ராஜபட்சேவின் கண்காணிப்பின் இயங்குவதாகச் சொல்லப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் இன்னமும் மக்களையும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புவோரையும் கொன்றொழித்து வருகிறார்கள். இலங்கை அரசின் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஊடகங்கள் அமைதியாகிப் போயின. அல்லது அரசுக்கு ஆதரவாக மட்டுமே எழுத வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு வருகிற நிலையில் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திரம் கோரி நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி, ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பு, புலம்பெயர் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு ஆகியன சர்வதேச ரீதியாக கவனத்துக்குட்படுத்தும்படி கோரியுள்ளன.

அரசியல் கார்டூனிஸ்டான பிரகீத் எகனெலியகொட காணாமல் போய் ஒரு வருடமாகும் நிலையில் இன்று வரை அவர் குறித்த மௌனத்தை மட்டுமே பதிலாகத் தருகிறார்கள் இலங்கை ஆட்சியாளர்கள். பிரகதீக் கட்டத்தப்பட்டு 2010 ஜனவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இந்நிலையில் சர்வதேச அளவிலான கலைஞர்களை அழைத்து காலி இலக்கிய சர்வதேசத் திருவிழா ஒன்று கொழும்பில் நடத்தப்படும் நிலையில் காணாமல் போன பிரகதீக் குறித்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

இதில் நம் மரியாதைக்குரியவர்கள் கையொப்பம் மிட்டிருக்கிறார்கள். நீங்களும் இடுங்கள்... பிரகீத்திற்காக,

நோம் சோம்ஸ்கி அருந்ததி ராய் கென் லோச் அன்ரனி லொவன்;ரின் தாரிக் அலி சேரன் டேவ் ரம்ரன் .கையொப்பம் இட - http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html

மீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்?


சென்ற ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டார் இந்த ஆண்டு பாண்டியன் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு முன் பல நூறு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடலோர எல்லையில் மீன் பிடிக்கக் கூடாது என்பதும். இனி மேல் ஈழத்தில் எவ்விதமான அரசியல் முயர்ச்சிகளும் இல்லாமல் போக வேண்டுமென்கிற நீண்டகால நோக்கில் இராமேஸ்வரம் பகுதி இரு நாட்டு அரசுகளின் பிடிக்குள் வருவதும். மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும்தான் இந்திய, இலங்கை அரசுகளின் திட்டம். கூட்டுக் கொலை செய்வதோ கூட்டம் கூட்டமாய் மக்களை வெளியேற்றுவதோ நகர்புறங்களில் இலகுவாக இருக்கும் போது எல்லைப் புற கிராமங்களில் அரசுகள் இம்மாதிரியான கொலைகளையும் கடற்கரை மேலாண்மைச் சட்டங்களையுமே நம்பியிருக்கிறது. மற்றபடி இனி இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகளைக் கூட இனப்படுகொலைகள் என்று சொல்வதற்கான எல்லா அர்த்தங்களும் உண்டு. தண்டகாரண்யா படுகொலைகளை பழங்குடி இனப்படுகொலை என்று சமீபகாலத்தில் அறிவுஜீவிகள் குறிப்பிடும் நிலையில் இராமேஸ்வரப் படுகொலைகளையும் இனி நாம் அப்படியே அழைக்கலாம். இந்த இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதி மன்மோகனை இப்பிரச்சனையில் தலையிடக் கோரி அவசரத் தந்தியை எல்லோருக்கும் முன்னர் முதல் ஆளாக டில்லிக்கு அனுப்ப, இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை நேரில் அழைத்து இந்தியா இது தொடர்பாக அறிவுறுத்த அவரோ ஊடகங்களில் // மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது. அவர்களை தாக்கக் கூடாது என்று எங்கள் கடற்படைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து வந்தாலும் கூட தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசுக்கு தெரிவித்து இருப்பதால் இதுகுறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார். இலங்கைத் தரப்பிலும் இந்தியத் தரப்பிலும் விசாரணை நடத்தப்படும்போதுதான் உண்மையிலேயே நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார். எனக்குக் கிடைத்த தகவல்படி சம்பவம் நடந்த பகுதியில் எங்கள் கப்பல் இல்லை என்று கூறப்படுகிறது // என்று நாங்கள் கொலை செய்ய வில்லை என்று சொல்லியிருக்கிறார்.
போரின் போதும் போருக்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வன்னி மக்களை கூட்டுக் கொலை செய்த பௌத்த பாசிச பேரினவாத சிங்கள அரசு. இப்போதும் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. தன் சொந்தக் குடிகளான சிங்கள மக்கள் மீதும், வடக்கிக் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மீதும் இப்படுகொலைகள் ஏவப்படுகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்தான் நேரடியாக இராணுவம் இப்படுகொலைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இலங்கை அரசின் சட்ட விரோத ஆயுதக் குழுக்களைக் கொண்டே இப்படுகொலைகளை இலங்கை செய்கிறது. ஈ.பி.டி.பி, கருணா குழு, முன்னாள் புலி உறுப்பினர்கள் எனப்பலரும் இப்படுகொலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்றதும் இந்தக் குழுக்களாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் இந்தப் பிரச்சனையில் இனி ஒரு மாதத்திற்கு சவுண்ட் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். கருணாநிதி அடித்த தந்தியும், ஜெயலலிதா இதை வைத்து ஆடப் போகும் நாடகங்களும், அப்பால் கடந்த ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டதற்கும் இப்போது பாண்டியன் கொல்லப்பட்டதற்கும் இடையில் நடந்தது அந்த முக்கியமான நிகழ்வு. அது இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை.சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ராமேஸ்வரத்திலும், சென்னை தாமஸ் மலையில் உள்ள தேவாலத்திலுமாக ( இந்தப் பேச்சுவார்த்தையில் சில பாதிரிகளும் உண்டு) இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அப்போது நான் எழுதியிருந்தேன்.

பேச்சுவார்த்தை கொலைக்கு அங்கீகாரம்.

சுமார்21 பேர் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லப்படும் சூரியகுமாரன் தலைமையில் இலங்கை அரசின் தூதுவர்களாக இராமேஸ்வரம் வந்தனர் . கேரளாவைச் சார்ந்த தென்னிந்திய மீனவ சங்கங்கங்களின் சம்மேளனம் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் விவேகானந்தன் என்பவர் மூலமாகவும் அதன் சகோதர அமைப்பு என்று சொல்லப்படும் நிரபராதிகள் மீனவர் குழு அமைப்பின் மூலமாகவும் இந்தக் கலந்துரையாடலை அல்லது பேச்சுவார்த்தையை இராமேஸ்வரத்தில் நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தைக்கு பாரம்பரீய மீனப் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஈழ விவகாரத்தில் திவீரமாக இருக்கும் சக்திகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்பதாக இருந்தது.
இத் தூதுக்குழு இராமேஸ்வரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர் தலைவர்கள் என்று சொல்லப்படும் சிலருடன் பேசியிருக்கிறது

. இதில் கடலே வாழ்வாகக் கொண்ட பாரம்பரீய மீனவச் சங்க தலைவர்கள் குறைவு. அதிகம் பேர் தொழில் நிமித்தம் இராமேஸ்வரத்தில் குடியேறியவர்கள் இவர்களுக்கு எப்போதும் மீன் பிடித்தொழிலும் வருமானம் தொடர்பான வருத்தங்களோ கவலைகளோ இருக்குமே தவிற ஒடுக்கப்படும் பாரம்பரீய மீனவ மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த உண்மையான அக்கரையோ கரிசனமோ இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்கிற நிலையில் இப்பேச்சுவார்த்தையில் இவர்கள் பாரம்பரீய மீனவ மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும் மீனவ மக்களை பிரதிநிதுத்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளோ பிரதிநிதிகளோக் கூட மீனவ மக்களுக்குக் கிடையாது. உள்ளூர் புறங்களின் ஆதிக்கசாதி அதிகாரத்தை, பெரும்பான்மை சாதி ஓட்டு அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட இயக்க அல்லது தேசிய இயக்கத் தலைவர்களே இவர்களின் தலைவர்கள்.ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் இம்மக்களின் பிரச்சனைகள் குறித்து உண்மையான அக்கறை இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.இத்தகைய சூழலில் இருந்துதான் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றப்படும் சூழலையும் அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்ற ஆகஸ்டில் இலங்கை அரசின் தூதுவர்களாக வந்தவர்களில் பேசாலை ஆயர் அகஸ்டின் மீன்வளத்துறை அதிகாரி சில்வா, பத்திரிகையாளர் நிரோசா மாலா என்று தெளிவான நிறுவனமயமாக்கப்பட்டக் குழுவாக வந்தனர். வந்தவர்கள் // கடந்த முப்பதாண்டுகளாக எமக்கு போர்ச்சூழல் காரணமாக மீன்பிடித்தொழில் இல்லை. போர் முடிவடைந்துள்ள நிலையில் இப்போதுதான் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறோம். ஆனால் நீண்டகாலமாக தமிழக மீனவர்களான நீங்கள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகிறீர்கள். இரட்டை மடியைப்படுத்துவதாலும், ஒப்பீட்டளவில் டோலர் படகுகளைப் பயன்படுத்துவதாலும் எங்களின் மீன் வளம் கெடுகிறது. ஆகவே நீங்கள் உங்களின் மீன் பிடி எல்லையைச் சுருக்கிக் கொள்ளுங்கள், இரட்டை மடி வலையைப் பயன்படுத்தாதீர்கள். அது போல எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்குவதோ கொல்வதோ சரியில்லை அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.// என்று இராமேஸ்வரத்தில் சூர்யகுமாரன் தெரிவித்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த குழுவினர் பெயர் குறிப்பிடப்படாமல் சென்னையில் பரங்கிமலை சர்ச்சில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சென்னையில் பாரம்பரீய மீனவப் பிரதிநிகள் யாரும் அழைக்கப்பட வில்லை. ஏன் அழைக்கவில்லை என்று கேட்டால் இது இராமேஸ்வரத்தை ஒட்டிய மீனவர் பிரச்சனையாம் அதான் அழைப்பில்லை என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.
சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளித்த மீனவர் குழுவினர் தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறியதாவது:

.// இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது? அதை எப்படி தடுப்பது? மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறோம்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.இதனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றது. அதற்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. " என்று தந்திரமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல விஷயத்தை ஏற்றுகிறார் சூர்யகுமாரன்.
நீங்கள் எங்கள் கடல்பகுதிக்குள் வரக்கூடாது இரட்டை மடியைப் பயன்படுத்தக் கூடாது என்ற இலங்கை அரசின் நோக்கத்தை ஏதோ இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது போல எமது மக்கள் மீது சுமத்துகிறார்கள். ஆனால் எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடாதே, தொழில் உரிமையை அங்கீகரி, கச்சத்தீவில் மீன் பிடி உரிமையை நிலை நாட்டு என்பதெல்லாம் அரசுகளின் விஷயமாம் அதில் தலையிட முடியாதாம். சூர்யகுமாரனின் இந்தக் கருத்து ஈழத் தமிழ் மீனவர்களின் கருத்தா? அல்லது இலங்கை அரசின் கருத்தா? வந்திருப்பவர்கள் உண்மையிலேயே மீன் பிடித்தொழிலில் நேரடியாக ஈடுபடுவர்களாக இருந்திருந்தால் எல்லை தாண்டும் இயர்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னதெல்லாம் எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்பதுதான். ஆக எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் என்ன சொன்னாரோ, அதையே ஒரு குழுவை அனுப்பி இலங்கையும் சொல்லியிருக்கிறது. எப்படியாவது பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சி தெரியாமல் இராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் இதில் பொறுப்பாளிகளாக பங்கேற்கிறார்கள்.
இந்தக் குழுவினர் இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வடமராச்சி பகுதியில் அத்து மீறி மீன் பிடிப்பதாக வடமராட்சி மீனவர் ஒன்றியம் குற்றம் சாட்டியதை இங்கே நாம் சூழலோடு பொறுத்திப் பார்க்க முடியும்

. வருவதற்கு முன்னால் இப்படியான குற்றச்சாட்டுகளை தமிழக மீனவர்கள் மீது சுமத்தியவர்கள் யார் ஒரு வேளை அது சூர்யகுமாரன் தானோ? என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இந்தியப் படகுகள் இப்படி மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வடமராச்சி மீன் பிடிச்சங்கம் குற்றம் சுமத்தியது. அதற்கு முன்னரே இலங்கை அரசின் ஆதரவாளராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் இப்படியான குற்றச்சாட்டைக் கூறியிருந்ததோடு சென்றவருடம் கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா தலத்தில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்திருந்ததாகவும் கடைசியில் தமிழக மீனவர்கள் வரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில்தான் தன்னார்வக்குழுக்களின் ஏற்பாட்டின் படி இச்சந்திப்பு நடந்துள்ளது. போருக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் ஈழத் தமிழ் மீனவர்கள் எப்போதும் மீன் பிடியில் ஈடுபட்டதில்லை. போருக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாரம்பரீய மீன்பிடி வலையமாக இருந்த மன்னார் பகுதிக்குள் தென்பகுதி சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிப்பதும்.
வடபகுதி , கிழக்கு மாகாண தமிழ் மீனவர்களைத் தாக்கி மீன்களை கொள்ளையடித்துச் செல்வதும், மீன்பிடியில் தமிழ் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளும் சிங்கள மீனவர்களுக்கு கட்டற்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ்பாண மீனவர்களின் மீன்பிடித் தொழில் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசு சொல்கிற குற்றச்சாட்டின் நோக்கம்தான் என்ன? உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா? என்றால் புலிகளின் போராட்டம் வலுப்பெற்ற காலங்களில் தமிழக மீனவர்களுக்கு புலிகள் எவ்விதமான தொல்லைகளும் கொடுத்ததில்லை. தங்களின் போராட்டத்திற்கு வலுவான பின் தளமாக உள்ள மீனவர்களுடன் அவர்கள் நல்லுறவு பேணினார்கள். (குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை கொன்று விட்டு பழியை புலிகள் மீது போட்டார்கள்) அதற்கு முந்தைய காலங்களில் யாழ்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில் இது இல்லாது போயிருந்தது. புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்.

புலிகள் இல்லாது போன இன்றைய நிலையில் பேச்சு வார்த்தையின் பெயரால் தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைத் தந்திரமாக செய்வதோடு, தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அரசியல் ரீதியான பிளவை உருவாக்குவதுமே இலங்கையின் நோக்கம். இப்போது கே,பி- யும் இதற்காக களமிரக்கப்பட்டுள்ளார். இந்தப் பிளவை கவனித்தால் எல்லா துறைகளிலும் இந்தப் பிளவை துல்லியமாக செய்வதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுட்டுக் கொல்வது நாங்கள் கொல்ல வில்லையே என்று சொல்வது. நெருக்கடி இல்லாத நேரமென்றால் எல்லை தாண்டியதால் சுட்டோம் என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள் இலங்கையும் இந்தியாவும்.

என்ன செய்யலாம்?

நீண்டகாலமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் . இப்போதும் கொல்லப்படுகிறார்கள் . இது நின்றபாடில்லை, இந்தியா ஈழத் தமிழனை மட்டுமல்ல தமிழகத் தமிழனைக் கூட காப்பாற்றாது. இது மீனவ மக்களுக்கும் தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும் ஆனால் தங்களின் தேர்தல் கூட்டு அரசியலுக்கு அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். மீனவ மக்கள் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்வது ஒன்றுதான் தீர்வு அது எந்த வழியிலேனும் என்றாலும் சரிதான்.

அம்பைக்கு இரண்டு தயிர் சாதங்களும் அருந்ததிராய்க்கு அரசு ஒடுக்குமுறையும்


“இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்" என்றொரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார் சி.எஸ்.லஷ்மி என்றழைக்கப்படும் எழுத்தாளர் அம்பை. அருந்திராய் குறித்த பலரின் கட்டுரைகளும் அதே இதழில் வந்திருக்கிறது. மாலதி மைத்ரியும் அருந்ததிராயை மனித உரிமை நோக்கில் அணுகி ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார். ஆஷிஷ் நந்தியின் கட்டுரையும் அதே இதழில் வந்திருக்கிறது. ஆளும் வர்க்கங்களுக்குப் பணிந்து நடக்கும் - வெகு வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கும் தமிழ் அறிவுலக சூழலில் - நமக்காகவோ ஒடுக்கப்படும் மக்களுக்காகவோ பேசுவதற்கு இன்றைக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய அறிவுஜீவிகளே உள்ளனர். ஒட்டுமொத்த இந்திய ஊடக, எழுத்துலக அறிவுத் தளத்தின் வீழ்ச்சியில் இருந்துதான் நமக்காகப் பேசும் அருந்ததிராய்க்காக நாமும் பேச வேண்டும். அந்தவகையில்தான் நாம் அம்பைக்கு மறுப்பு எழுத வேண்டியிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் பெண் வாழ்வை அழகியலோடு நவீன இலக்கியமாக பதிவு செய்தவர் அம்பை என்று வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். எழுபதுகளில் அம்பை எழுதியதை விட அவரது நண்பரான ஆர்.சூடாமணி எழுதிய கதைகள் சிறந்தவை என்றாலும், அதே அம்பையின் கதைகளை விட வத்சலாவின் சில சிறுகதைகள் சிறந்தவை என்று சொல்லிவிட முடியும் என்றாலும் இவர்கள் அனைவருக்குமே முன்னோடியாய் அறுபதுகளிலேயே பெண் கல்வியை வலியுறுத்தி எழுதிய இன்னொரு எழுத்தாளர் உண்டு. அவர் ஹெப்சிபா ஜேசுதாசன். அவரது புத்தம் வீடு நாவலையும் சரி ஹெப்சிபாவையும் சரி வெங்கட்சாமிநாதன்களும் பேசியதில்லை, ஒரு பெண் என்ற அளவில் கூட ஹெப்சிபாவின் எழுத்துக்களை அம்பையும் வரவேற்றதில்லை.
அம்பை காலச்சுவட்டில் எழுதிய கட்டுரை அருந்ததி ராய் தொடர்பானது. கட்டுரை துவங்குவதே பாபர் மசூதி இடிப்பில் இருந்துதான். 1992-ல் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் உருவான இளம் தலைமுறையினர் மதச்சார்பற்றவர்களாக இருப்பதாகவும் மசூதி இடிப்பை மறக்க முடியாத பெரிசுகள்தான் இன்னமும் ஓலமிட்டுக் கொண்டு இருப்பதாகவும் இளம் தலைமுறையினர் அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் கழிப்பிடங்கள் கட்டலாம் என்று கூறுவதாகவும் எழுதுகிறார். அதுவும் கட்டணக்கழிப்பிடம் வேண்டும் என்கிறார்களாம். இதுதான் கட்டுரையின் துவக்கத்தில் அம்பை சொல்ல வருவது.

தொண்ணூறுகளுக்குப் பிறகே முஸ்லிம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இந்தியாவில் ஏற்படுகிறது. தாங்கள் வஞ்சிக்கப்பட்டதான உணர்விலிருந்து கிளர்ந்தெழுந்த இளம் முஸ்லிம் இளைஞர்கள் இன்றுவரை அயோத்தியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தங்களின் வழிபாட்டுத் தலத்தை மீண்டும் கட்டித் தரவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் போராடுகிறார்கள். அதில் வெறுப்பின் உச்சிக்குச் சென்ற சில இளைஞர்கள் தீவிரவாதத்திற்குப் பலியாகிறார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம் என்றாலும், இந்துக்களின் பெயரால் பாசிஸ்டுகள் இடித்த மசூதியும் அதையொட்டி இந்தியா முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரமும் அதில் நாடு முழுக்க அப்பாவி முஸ்லிம், இந்து மக்கள் கொல்லப்பட்டதும் அம்பையின் மத்யமர் மனநிலையில் மறந்து விட்டது. பழியை இளம் தலைமுறை மீது போடுகிறார்.



இளைய தலைமுறை என்று அவர் சுட்டும் மத்திய தர இந்து சமூக இளைஞர்களும் மறந்து விட்டார்கள். இந்து, முஸ்லீம் ஒற்றுமையில் சம்மட்டியைக் கொண்டு அடித்து வீழ்த்திய இந்துப் பாசிஸ்டுகள் பெரும்பான்மை இந்துக்களின் பெயரிலேயே மசூதியை இடித்தார்கள் எனும்போது அதை மறந்து விடுகிற பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதை நாம் நினைவுபடுத்த வேண்டும் - அம்பைக்கும் சேர்த்துதான். சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அக்கிரமங்களுக்காக பெரும்பான்மை மக்களே போராட வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கை ஒரு பக்கம் இருக்க - நானும் 92-க்குப் பின்னர் வந்த இளம் தலைமுறைதான் - காஞ்சி சங்கரமடத்தை இடித்து விட்டு (அது என்ன வழிபாட்டு தலமா?) அங்கே கட்டணக் கழிப்பிடமல்ல இலவசக் கழிப்பிடமே என் சொந்தச் செலவில் கட்டித் தர நான் ஆசைப்படுகிறேன். இந்தத் தலைமுறை இளைஞனான எனது கோரிக்கைக்கையை அம்பை ஏற்றுக் கொண்டு ஜெயேந்திரரிடம் இது பற்றி பேசுவாரா? மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்கள் வழிபடும் மசூதியை இடித்து விட்டு அங்கே கட்டணக்கழிப்பிடம் கட்டலாம் என்றால் ஏன் அதை காஞ்சிபுரத்திலும் செய்யலாம்தானே?

காஷ்மீர் மதச்சார்பின்மை மன்னர் மரபா?

அடுத்து காஷ்மீருக்கு வரலாற்று ரீதியாகவே மதச்சார்பற்ற வரலாறு ஒன்று இருப்பதாக - லால் தேத் (lal ded) என்னும் காவிக் கவிஞரை எடுத்துக்காட்டுக்கு எடுத்து வருகிறார். இதை விட பெரும்பான்மை முஸ்லீம் மக்களைக் கொண்ட காஷ்மீரை ஓர் இந்து மன்னன் (ஹரிசிங்) ஆண்டதையே அம்பை மதச்சார்பின்மைக்கு உதாரணமாகச் சொல்லியிருக்கலாம். பெருந்தன்மை மன்னர் மரபில் இல்லை அம்பை! அது இந்துக்கள் ஆனாலும் முஸ்லீம்கள் ஆனாலும் மக்களிடமே இருக்கிறது. அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதிக்குப் பதில் கட்டணக்கழிப்பிடம் கட்டுவதை இளைய தலைமுறையின் மதச்சார்பின்மை என்று சொல்லும் அம்பை, காஷ்மீரிகளின் தேசிய இன விடுதலைக் குரலை மறைக்க லால் தேதியின் பாடலை மதச்சார்பின்மையானது என்று சொல்வதன் மூலம் காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் தூண்டுதலில் போராடுகிறவர்கள் என்று சராசரி இந்து மனதோடு நிறுவ முயல்கிறார். காஷ்மீரில் மிக மோசமான படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர்களின் சுயாட்சிக் கோரிக்கைக்காகவும் நிற்கும் அருந்திராய் மீது அம்பைக்கு எரிச்சல் வருவதும் இதனால்தான். அதனால்தான் தனது இந்திய இந்து மனதிற்குத் தோதான லால்தேதைத் தேர்வு செய்கிறார். நாமோ தத்துவத்திலும் மக்களின் வறுமையைப் பாடிய முகம்மது இக்பால் என்னும் சிறந்த காஷ்மீரக் கவிஞனை அம்பைக்கு மாற்றாக நிறுத்துவோம். காஷ்மீரத்து ஏழைகள் குறித்து இக்பால் தன் கவிதையில் எழுதுகிறார் இப்படி,

//பனிக்காலத்தில் உறைய வைக்கும் குளிரில்
அவனது அம்மண உடல் நடுங்குகிறது
அவனது கைத்திறனோ அரச சால்வைகளால்
செல்வந்தர்களைப் போர்த்துகிறது // (நன்றி - ஷோபியான் நூல், எஸ்.வி.ஆர்.)

லால் தேத்தை விட நாம் இக்பாலுடன் நெருங்குவதற்கான காரணம் புரிகிறதுதானே?
//பிரிவினைக்குப் பின் வந்த இனக்கலவரத்தின்போது முஸ்லீம், இந்து, சீக்கியர் இருந்த காஷ்மீரப்படை ஒன்று இந்தியப் படைகளுடன் இணைந்து பாகிஸ்தான் அனுப்பிய பட்டாணியப் பழங்குடியினரை விரட்டி அடித்து காஷ்மீர் நிலத்தில் சட்டம் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்தது//

என்று தனக்குத் தோதான இந்துத்துவ மதச்சார்பை நிறுவ அடுத்த குண்டை அருந்ததி மீது விசுகிறார். காஷ்மீர் மக்களின் இன்றைய இருண்ட வரலாற்றில் கடந்து போன காலத்தின் 1947-அக்டோபர் 22-24 தேதிகள் முக்கியமானவைகள். விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்திய, பாகிஸ்தான் (இந்தியாவின் விஸ்தரிப்பு எண்ணங்களை விட பாகிஸ்தானுக்கு அப்படி ஒன்றும் அதிகம் இல்லை) நாடுகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட சின்னஞ்சிறு அழகிய காஷ்மீர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகப் போராடி இறுதியில் இந்தியாவால் அபகரிக்கப்பட்ட வரலாற்றைச் சுமந்த கருப்பு நாட்கள் அவை. 77% முஸ்லீம்களைக் கொண்ட காஷ்மீர், பாகிஸ்தானோடு ஏன் இணையவில்லை என்று - மதவாதக் கண்ணோட்டம் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஜின்னா காஷ்மீர் இந்து மன்னன் ஹரிசிங்கிடம் பேச தூதரை அனுப்பினார். ஆனால் ஹரிசிங் தான் ஒரு சுற்றுலாப் பயணியாகக் கூட பாகிஸ்தான் வர விரும்பவில்லை என்று பதிலனுப்பினார். இது எனது விருப்பம் மட்டுமல்ல காஷ்மீரிகளின் விருப்பமும் கூட என்று அவன் சொன்ன தகவலைக் கொண்டு சென்றவர்கள் ஹரிசிங்கை வழிக்குக் கொண்டுவர யோசித்ததில் கடைசியாகச் செய்ததுதான் பத்தான் பழங்குடிகளை ஏவி காஷ்மீரைக் கைப்பற்றி பாகிஸ்தானோடு இணைப்பது என்கிற திட்டம்.
காஷ்மீரில் பெரும்பாலான முஸ்லீம் மக்களின் மன்னனாக இந்து ஒருவர் இருக்கிறார்; அவர் விரைவில் காஷ்மீரைக் கொண்டு போய் இந்தியாவோடு இணைத்து விட்டால் இந்துக்களின் ஆட்சியின் கீழ் பெரும்பாலான முஸ்லீம்கள் அவதியுறுவர் என்று பழங்குடிகளின் மூளையில் படுவேகமாக ஏற்றப்பட்டது மதம் என்னும் விஷம். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் சைரப் கயத் கான் (sairab khayat khan) தலைமையில் நடத்தப்பட்ட முதல் புனிதப் போர் பத்தான் பழங்குடிகளின் படையெடுப்புதான் என்கிறது வரலாறு. நீண்டகாலமாக சமவெளிச் சமூகங்களால் புறக்கணிக்கப்பட்ட கோபமும், மறுக்கப்பட்ட நீதியுமாக குமுறியிருந்த பத்தான்களின் மனதில் இந்திய வெறுப்பை மூர்க்கமாக ஏற்றி உசுப்பேற்ற - 1947, அக்டோபர் 24 இரவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை பெரும் ஆயுத பலத்தோடு தாக்கினார்கள் பத்தான் பழங்குடிகள்.

சரி பாகிஸ்தானோடு இணைய விரும்பாத ஹரிசிங் இந்தியாவோடு மட்டும் இணைய விரும்பினாரா? காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்றார் அருந்ததி. அதற்காக அம்பைக்குக் கோபம் வருகிறது. சரி நீங்கள் அறிந்த இந்தியா எப்போது உருவானது, உருவாக்கப்பட்டது? பல்வேறு சமஸ்தானங்களாக தனித்தனி பிரதேசங்களாகப் பிரிந்து கிடந்த இந்தப் பகுதியை அராபியர்களும் பின்னர் வந்த பிரிட்டீஷாருமே இந்தியா என்று அழைத்தனர். இந்தியா என்று அழைத்தனரே தவிர இந்தியா ஒரு நாடே கிடையாது. அது 1948-க்குப் பின்னர் உருவாக்கப்பட்டதே. பரந்துபட்ட இந்தியாவை உருவாக்க விரும்பிய ஆங்கிலேயர்களும், அவர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் ஆளும் வர்க்கங்களும் சமஸ்தான மன்னர்களின் கருத்தை அறிய 565 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய சமஸ்தான இளவரசர்கள் சபையைக் கூட்டினார்கள். அதில் கலந்து கொண்டு பல மன்னர்களும் அவர்களின் திவான்களும், நவாப்களும் சமஸ்தானம் போனாலும் பரவாயில்லை மான்வேட்டை, சிங்க வேட்டை உரிமை எங்களுக்கு வேண்டும், மாளிகையை மட்டுமாவது விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, காஷ்மீர் மன்னன் இதற்கு உடன்பட மறுத்தான்.
ஹரிசிங்கிடம் மவுண்ட் பேட்டன் எதிர்கால இந்திய அரசின் சார்பில் தான் ஒரு வாக்குறுதியை வழங்குவதாகவும் இயற்கையாகவே இங்கு (காஷ்மீரில்) முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும் பூகோள ரீதியாக காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினால் அதை இந்தியா புரிந்து கொள்ளும் என்றும் ஆட்சேபம் தெரிவிக்காது என்றும் மேலும் ஹரிசிங் ஒரு இந்து மன்னராக இருந்தாலும் அவரை வரவேற்பதாகவும் தனது புதிய பாகிஸ்தான் டொமினியனில் அவருக்கு மிக்க கவுரவம் வழங்கப்படும் என்று ஜின்னா தங்களிடம் உறுதி அளித்திருப்பதாகவும் கூறுகிறார்.
மவுண்பேட்டனுக்கு பதிலளித்த ஹரிசிங் "எந்தக் காரணத்திற்காகவும் பாகிஸ்தானுடன் இணைய நான் விரும்பவில்லை" என்கிறார்.
''நல்லது அது உங்கள் விருப்பம். ஆனால் சனத்தொகையில் 90% பேர் முஸ்லீம்கள். ஆகவே இதை நீங்கள் கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் இல்லை என்றால் இந்தியாவோடு இணைந்து கொள்ளலாம். அப்படி இணைந்தால் உங்களின் எல்லைகளைப் பாதுகாக்க ஒரு காலாட்படைப் பிரிவை இங்கே அனுப்பி வைக்கிறேன்" என்கிறார் மவுண்பேட்டன்.

''இல்லை இந்தியாவுடன் சேரவும் நான் விரும்பவில்லை, நான் சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்" என்றான் மன்னன் ஹரிசிங்.
பாகிஸ்தானோடு அல்லது இந்தியாவோடு என்ற இரண்டு தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு மவுண்ட்பேட்டன் நிர்ப்பந்தித்தபோதும் ஹரிசிங் இந்தியாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் சம தூரத்தில் விலகி இருந்தான். இரண்டு கழுகுகளில் ஏதேனும் ஒன்று தன்னைக் கொத்தித் தின்னும் என்பதையறியாத ஹரிசிங்கும் காஷ்மீர் மக்களும் உண்மையான மதச்சார்பற்றவர்களாக இருந்த வரலாறு இதுதான். இந்த மதச்சார்பை லால் தேதிடம் தேட வேண்டிய அவசியமில்லை.

தனித்து சுதந்திரமாக வாழ விரும்பிய காஷ்மீரை பத்தான் பழங்குடிப்படை நெருங்கி விட்டது. வருகிற வழியெங்கும் அவர்கள் ஒரு இடம் விடாமல் கொள்ளையடித்து பெண்களையும் பாலியல் வன்முறை செய்து முன்னேறினார்கள். ஜீலம் ஆற்றுப்பாலத்தைக் கைப்பற்றி அவர்கள் சிறிநகரை அண்டியபோது பத்தான் பழங்குடிப்படை காஷ்மீரைத் தாக்குகிறது என்ற செய்தியை புதுடில்லிக்குச் சொன்னவர் பிரிட்டீஷ் அரசின் படைத்தளபதியாக இருந்த டக்ளஸ் கிரேசேதான். ஹரிசிங் தன் படைகளைத் திரட்டி பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காக்க போருக்குத் தயாரானான். அவனது படைத் தளபதிகளில் பலர் பத்தான்களுடன் கடைசி நேரத்தில் இணைந்து நின்று துரோகம் செய்தனர். பலவீனமான ஹரிசிங்கின் படைகள் பாகிஸ்தான் பின்னணியில் இருக்கும் படைகளோடு போரிடும்போது, மவுண்ட்பேட்டனும் நேருவும் இணைந்து செய்த ஆக்ரமிப்புதான் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தது.
காஷ்மீரில் பிறந்த பண்டிட் இனத்தைச் சார்ந்த பார்ப்பனரான நேருவுக்கு எப்போதுமே காஷ்மீர் மீது அலாதியான விருப்பம் இருந்தது. நேருவின் அகண்ட பாரதத்தின் ஒரு அங்கமாகவும் அழகிய காஷ்மீர் இருந்தது. இந்தியாவை மையப்படுத்தி மேற்காசியா முதல் பசிபிக் பகுதி வரையிலான பரந்துபட்ட பல தேசிய இனங்களைக் கொண்ட ஓர் அரசை உருவாக்க வேண்டும் என்பது நேருவின் கனவு. ஒரு வழியாக சமஸ்தானங்களை அதட்டி மிரட்டி ஒருங்கிணைத்து ஓர் இந்தியாவை உருவாக்கிவிட்ட போதிலும் 1956, மே 10-ஆம் நாள் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் ''அடிப்படையான உண்மை என்னவெனில் இன்னும் இந்தியா ஓர் ஒன்றுபட்ட தேசமாக மாறவில்லை" என்று எழுதுகிறார்.

நேருவின் விஸ்தரிப்பு எண்ணங்கள் எவ்வளவு பெரியது எனபதைப் பாருங்கள் “இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை அரசியல் பொருளாதார ரீதியில் மேலாதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது. இந்தியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பர்மாவை உள்ளடக்கிய தெற்காசிய கூட்டமைப்பை நான் விரும்புகிறேன். இன்றைய உலகில் இரு வல்லரசுகள்தான் உள்ளன. ஒன்று அமெரிக்கா இன்னொன்று ரஷ்யா. நாளைய உலகில் இன்னும் இரு வல்லரசுகள் இருக்கும். ஒன்று சீனா இன்னொன்று இந்தியா. ஐந்தாவதாக ஒரு வல்லரசு இருக்காது" என்று 1945-ஆகஸ்டில் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். பெயரளவுக்கு நேபாளம் தனிநாடாக இருந்தாலும் அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும் தனது ஆதிக்கத்தை நிறுவுகிறார் நேரு. இன்றைய இலங்கையையும், பாகிஸ்தானையும் இந்தியாவோடு இணைத்துக் கொள்ளும் விருப்பம் நேருவுக்கும் சரி காங்கிரசாருக்கும் சரி இருந்தது. இந்திய முதலாளிகளின் - நிலப்பிரபுக்களின் நலனை முன்னெடுத்த நேரு சமஸ்தானங்களை உடைத்து இந்தியா என்ற அகண்ட சமஸ்தானத்தை உருவாக்கி எல்லா தேசிய இனங்களையும் அந்த சிறைக்கூடத்தில் அடைத்தார். அதன் அடுத்த பலிதான் காஷ்மீர்.

களவாடப்பட்ட காஷ்மீர்

ஜின்னாவுக்கு பாகிஸ்தானை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அகண்ட பாரத்தை உருவாக்க ஆசைப்பட்ட நேருவுக்கும் காஷ்மீரை ஆக்ரமித்துக் கொள்ள ஆசை. மவுண்ட்பேட்டனுக்கோ காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இருக்கலாம் தனியாக சுதந்திர தேசமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம். அதிலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இருப்பதால் அவர்கள் பாகிஸ்தானுடன் இணைவதுதான் உகந்ததாக இருக்கும் என்றே கருதினார். காஷ்மீர் மன்னனின் பிரச்சனையோ வேறு.
அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் ரூபாய் 75 லட்சத்திற்கு விலைக்கு வாங்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு, லடாக் பகுதிகளுடன் இணைத்து ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை உருவாக்கினான் டோக்ரா மன்னன் குலாப்சிங். அவனும் சரி அவனது வழிவந்த காஷ்மீரின் கடைசி மன்னன் ஹரிசிங்கும் சரி எல்லா இந்திய மன்னர்களைப் போலவும் ஆடம்பர வாழ்க்கையையே வாழ்ந்தவர்கள். இந்த டோக்ராக்கள் சிறுபான்மை பண்டிட்களிடம் காட்டிய பாசத்தை, பெரும்பான்மை முஸ்லீம் மக்களிடம் காட்டவில்லை; அவர்களின் நன்மதிப்பைப் பெறவுமில்லை. பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் கோரமான வறுமையிலேயே வாழ்ந்தனர். ஆக அடிமை வணிகத்தில் ஊறிய டோக்ரா மன்னர் மரபுக்கு தன் சொத்தும் அடிமைகளும் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற ஆசை.
குலாப்சிங் காஷ்மீர் மக்களுக்கும் நிலத்துக்கும் சேர்த்து பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டியது போக ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீர் மலைப்பகுதி வெள்ளாடுகளின் கழுத்தில் வளர்ந்த மென்மையான ரோமத்தால் ஆன ஆறு கம்பளியை வழங்கி வந்தான். அடிமை வணிகத்தில் டோக்ரா மன்னன் ஹரிசிங்கிற்கு விற்கப்பட்ட காஷ்மீர் மக்கள் காலம்தோறும் அடிமைகளாகவே இருந்து வந்தனர். இந்து மன்னனான ஹரிசிங்கை பெரும்பான்மை முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டாலும் ஹரிசிங்கோ தனது முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தியே வந்தான். 1931-ல் சிறிநகரில் மன்னனுக்கு எதிராக முஸ்லீம்கள் நடத்திய போராட்டத்தில் 22 பேர் கொல்லப்பட்ட வரலாறும் டோக்ரா மன்னனுக்கு உண்டு. காஷ்மீரின் மதச்சார்பின்மை வரலாறு இதுதான்.
பத்தான் படையினர் காஷ்மீரை முற்றுகையிட்டபோது பிரிட்டீஷ் படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர். இந்தியாவில் பிரிட்டீஸ் படையினரின் இராணுவப் பணி முடிந்து விட்ட நிலையில் அவர்களிடம் ஹரிசிங் உதவி கோரியபோது மவுண்ட்பேட்டன் பிரிட்டீஷ் படைகளை அனுப்ப மறுத்து - காஷ்மீர் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியப் படைகளுக்கே உண்டு என்று கைகழுவினார். பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் காஷ்மீர் மன்னரிடம் இருந்து சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைக் கோர வேண்டும் என்று நேருவிடம் சொல்கிறார் மவுண்ட் பேட்டன். மறுநாள் இந்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி வி.பி.கிருஷ்ணமேனனையும், இரு விமானப்படை அதிகாரிகளையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார் நேரு. பல்வேறு சமஸ்தானங்களாக சிதறிக்கிடந்த நிலப்பரப்புகளை ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்குவதில் வி.பி.கிருஷ்ணமேனனுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் விஸ்தரிப்புக் கனவுகளில் துருத்திக் கொண்டிருந்த காஷ்மீரை வழிக்குக் கொண்டுவர இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் பத்தான்களின் முற்றுகையை அதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.



வி.பி.மேனனும் இந்தியா அனுப்பிய தளபதிகளும் ஹரிசிங்கைச் சந்தித்து உடனடியாக சிறிநகருக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ‘பத்தான்கள் ஆக்ரமிக்கும்போது பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு மத்தியில் இந்து மன்னருக்கு பாதுகாப்பு இருக்காது’ என்று இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் சிறிநகருக்கு அவரை இடம்பெயரும்படி அறிவுறுத்தினர். பெரும்பான்மை முஸ்லீம்களை ஓர் இந்து மன்னன் ஆள்வது ஆபத்து என்று பாகிஸ்தான் பத்தான்களை ஏவி படையெடுக்கிறது. இந்தியாவோ பெரும்பான்மை முஸ்லீம் மக்களிடமிருந்து விலகி இந்து மக்கள் வாழும் பகுதிக்குச் செல்லுமாறு ஹரிசிங்கைக் கேட்கிறது. இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுமே எப்படி காஷ்மீரை மதவாத நோக்கில் அடிமைப்படுத்தின என்பதற்கு இதுவே முதல் சான்று.
அக்டோபர் 26-ஆம் தேதி நள்ளிரவில் சிறிநகருக்கு தப்பியோடினார் ஹரிசிங். தப்பியோடிய ஹரிசிங் மிக மோசமான அவமானகரமான ஒரு சகதிக்குள் சிக்கிக் கொண்டார். அன்றைய இரவில் விடிவதற்குள் நாம் பிடிபடுவதாக இருந்தால் என்னை முதலில் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று மன்னர் ஹரிசிங் தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் டில்லி திரும்பியிருந்த மேனன் மீண்டும் அதிகாலையே சிறிநகருக்கு வந்தார். பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற படைகளை அனுப்பிய இந்தியா கூடவே காஷ்மீரை அபகரிக்க வி.பி.மேனனையும் அனுப்பியது.

இரு தேசங்களிலும் இணைய மறுத்த ஹரிசிங்கை பாகிஸ்தான் தூண்டுதலில் பத்தான்கள் ஆக்ரமிக்கிறார்கள். ஆக்ரமிப்பாளாளர்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்தியா அதை இப்போது ஒட்டுமொத்தமாக அபகரித்துக் கொள்ளப் போகிறது. இதுதான் இந்த இரண்டு சண்டியர்களின் ஆக்ரமிப்புக் கதையும்.
பத்தான்களைத் துரத்தி விட்டு காஷ்மீரைக் காக்க இந்தியப் படைகள் தயாராக இருகின்றன. மதச்சார்பின்மைக்கு மகுடமாக இருந்த பல்வேறு இந்தியச் சமூகங்களுள் காஷ்மீரிகளுக்கும் சிறந்த பங்குண்டு. பௌத்த பிக்குகளின் தலமாகவும், சூஃபிக்களின் தலமாகவும், சீக்கியர்களின், இந்துத் துறவிகளின், கிறிஸ்தவ மிஷனரிகளின் சேவைத் தலமாகவும் இருந்த காஷ்மீருக்கு மிக நீண்ட மதச்சார்பற்ற வரலாறு உண்டு. பத்தான்கள் மிக மோசமான கொள்ளை, பாலியல் வன்முறை, கொலைகளில் ஈடுபட்டார்கள். இந்துக்கள், கிறிஸ்தவ பெண் துறவிகள், முஸ்லீம்கள் என காஷ்மீரை நேசித்த அனைவரையுமே அவர்கள் வேட்டையாடினார்கள். வி.பி.மேனனோ காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு பத்தான்களிடமிருந்து காஷ்மீரையும் உங்களையும் காக்க வேண்டுமென்றால் இந்தியாவோடு நீங்கள் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரிசிங்கின் கழுத்தில் கத்தியை வைத்தபடி நின்றார். என்ன செய்வதென்று தெரியாத ஹரிசிங் வி.பி.மேனன் நீட்டிய இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பல மாதங்கள் நடந்த போருக்குப் பின்னர் பத்தான்கள் விரட்டியடிக்கப்பட்டனர். காஷ்மீர் இந்தியாவால் அடிமை கொள்ளப்பட்டது.

அக்கிரமமான முறையில் பறித்தெடுக்கப்பட்ட காஷ்மீரோடு மேனன் டில்லிக்குச் சென்றார். தான் விரும்பிய காஷ்மீர் தனக்குக் கிடைத்தது தொடர்பாக நேருவுக்கும் மகிழ்ச்சி. அவர்கள் மன்னர் ஹரிசிங்கிற்கும் சரி காஷ்மீர் மக்களுக்கும் சரி எந்தவிதமான வாக்குறுதிகளும் அளிக்கவில்லை. அளிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. காஷ்மீர் பாகிஸ்தானுக்குக் கிடைக்காத கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஜின்னா காஷ்மீரிகளை இந்தியா அபகரித்துக் கொண்டதாகவும், காஷ்மீரிகளுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். காஷ்மீர் சர்வதேச அரசியலின் ஒரு அங்கமாக மாறியபோது, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இது தீராப்பகையை உருவாக்கி விடும் என்பதை உணர்ந்த மவுண்ட் பேட்டன் நேருவுக்குக் கொடுத்த நிர்பந்தத்திற்குப் பின் 'காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று அப்போது வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு இந்தியாவின் பிற பகுதிகளை விட காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. காஷ்மீரில் ஏனைய இந்திய மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாது என்பது அதில் பிரதானமான விஷயமாகக் கருதப்படுகிறது.
// 1946 - 1949இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்கான அரசியல் உரிமைகளும் ஏட்டளவில் உருவாக்கப்பட்டன, அதில் The Constitution of Jammu and Kashmir Preamble. - We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves -
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.
1. இது என்ன கூறுகிறது?
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் … … எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்" எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்டனர்.
சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? அதன் முகவுரையில் "இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்" என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் "இந்திய மக்கள்". ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.
2. 1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, ‘குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

தேசியக் கொடி

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந் நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.
144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். ( நன்றி வே.ஆனைமுத்து) //

அளவில் பெரியதும் மக்கள் தொகையில் சிறியதுமான காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, திபெத், ஆப்கான் ஆகிய நாடுகளின் எல்லையில் இருக்கிறது. இப்போது காஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்று நாடுகள் ஆக்ரமித்திருக்கின்றன. காஷ்மீரின் வடபகுதியான சில்ஜிட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை பாகிஸ்தானும், சீன எல்லையை ஒட்டிய பகுதியை சீனாவும் ஆக்ரமித்திருக்கிறது இந்தப் பகுதியை அக்சாய் சின் (aksai shin) என்று அழைக்கிறார்கள். இது போக பெரும்பகுதி ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்ரமித்துள்ளது. சீன இராணுவத்தின் நேரடித் தலையீடு காஷ்மீரில் இல்லை என்றாலும் சமீபகாலமாக சீனாவும் காஷ்மீர் விவாகரங்களில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறது.

ஆயுதப் போராட்டத்திலிருந்து மக்கள் வன்முறைக்கு

காஷ்மீரிகளின் தனி நாட்டுக் கோரிக்கை எண்பதுகளுக்குப் பின்னர் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தது. இந்தப் போராளிக்குழுக்களில் அடிப்படைவாதக் குழுக்களும் உண்டு, பாகிஸ்தானிடம் உதவி பெற்று இயங்கிய குழுக்களும் உண்டு, இந்தியா உருவாக்கிய குழுக்களும் உண்டு. இந்தியா மற்றும் பாகிஸ்தானை எதிர்த்து சுதந்திர காஷ்மீர் கொள்கைக்காக நின்றவர்களும் உண்டு. இந்தியாவில் இருக்கிற இந்து வெறியர்களும், பாகிஸ்தானில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் தலையிட ஆயுதப் போராட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டது. காஷ்மீர் குழுக்களின் ஆயுதப் போராட்டமும், அடிப்படைவாத முஸ்லீம் அரசியலும் இந்தியாவுக்குத் தோதாக அமைய எண்பதுகளில் இராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்தியது.

1958-ல் ஒன்றுபட்ட இந்தியா உருவாகத் தடையாக இருந்த தேசிய இனங்களின் உரிமைக் குரலை நசுக்கி அப்பகுதிகளை பதட்டப்பகுதிகளாக அறிவித்து மிரட்டி இந்தியாவோடு இணைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சிறப்பதிகாரச் சட்டம். 1972-ம் ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டு சித்திரவதை, கடத்தல், பாலியல் வன்முறை, சுட்டுக் கொல்லுதல் போன்ற உரிமைகளை - இராணுவ வீரர்களுக்கு கட்டற்ற முறையில் வழங்கி வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தியது இந்தியா. எண்பதுகளில் இச்சட்டம் காஷ்மீருக்கு விரிவுபடுத்தப்பட்டபோது இந்தியப் படைகள் ஒரு நரவேட்டையை நடத்தி ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் அல்லது அதை பலவீனப்படுத்தினார்கள்.
இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலான பதற்றப்பகுதி என்று மத்திய அரசு உணரும் பட்சத்தில் இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னர் மூலமாக அந்தப் பதட்டப்பகுதியை தன் கட்டுக்குள் கொண்டு வரும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசு தலையிட முடியாது. சட்டமன்றம் கூட இதில் தலையிட முடியாது. ஆனால் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சனைக்கான எட்டு அம்சத் திட்டத்தை வெளியிட்ட ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் மீதான வழக்குகளை கைவிடவும் மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்றவர் சிறப்பதிகாரச்சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே விடப்படுகிறது என்று வடிகட்டிய பொய் ஒன்றைச் சொன்னார். தங்களுடைய படைகள் காஷ்மீரில் நடத்தும் கொலைகளுக்கான பழியை மாநில அரசு மீதே சுமத்தினார் சிதம்பரம். உண்மையில் இந்திய வரலாற்றில் இன்றுவரை அச்சுறுத்தலாக இருக்கும் இச்சட்டம் - ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதையோ, பிரச்சனையின் மீது கருத்துத் தெரிவிப்பதையோ, பிரச்சனையாகப் பேசும் உரிமையையோ தடை செய்கிறது.
அச்சுறுத்தல் என்று இராணுவம் கருதும் பட்சத்தில் சந்தேக நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்வதோடு தேவைப்பட்டால் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யலாம். காஷ்மீரில் பல்லாயிரம் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை இச்சட்டத்திற்கு பலியாக்கியிருக்கிறார்கள். காணாமல் போனவர்கள், கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்டவர்கள் என்று விரியும் இந்த பயங்கரங்களை நடத்த அரசே பல சட்டவிரோதமான முகாம்களையும் நடத்தி வந்தது. ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தோடு மேலும் பல கொடிய சட்டங்களும் காஷ்மீரில் பிரயோகிக்கப்பட்டதுண்டு. இன்று வரை இந்த நிலை மாறவில்லை. ஆள் தூக்கிச் சட்டங்களில் இருந்து தங்களின் சந்ததியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டனர். சையது அலிஷா கிலானி, யாசின் மாலிக், மிர்வேஸ் உமர் ஃபரூக் போன்ற தனிநாடு கோரும் தலைவர்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினர்.

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும், இனப்படுகொலைகளையும் சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை – ‘புதைக்கப்பட்ட உண்மைகள் (buried evidence)’ என்னும் தலைப்பில் நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளது. நவம்பர் 2006க்கும் 2009 -க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரின் பண்டிபுறா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52 கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகளை ஆவணப்படுத்தியுள்ளது. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டயில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர் உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை இந்திய இராணுவத்தின் கூட்டுப் படுகொலைகளை அம்பலப்படுத்துகிறது. படுகொலைகள் தொடர்பாக அந்த அறிக்கையில்,

// 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. //

// இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது. இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடுருவும்போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின் வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர். // என்று காஷ்மீரின் பயங்கரநிலையைப் பட்டியலிடுகிறது சர்வதேச தீர்ப்பாயத்தின் அறிக்கை.

காஷ்மீர் குறித்து பல மனித உரிமை ஆர்வலர்கள் காட்டும் சித்திரம் இந்திய அரசின் உண்மையான முகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இந்திய துணை இராணுவப் படையினருடன் மோதல் என்ற பெயரில் காஷ்மீரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000. பல நேரங்களில் இந்திய இராணுவம் கொலைகளைச் செய்து விட்டு அந்தப் பழியை காஷ்மீர் போராளிக் குழுக்கள் மீதும் போட்டுள்ளது. பத்ரபால் படுகொலை, சட்டீஸ்புறா சீக்கியர் படுகொலைகளைச் செய்தது இந்தியப் படைகள். பழியோ காஷ்மீர் போராளிக் குழுக்கள் மீது. உச்சக்கட்டமாக 1996-ல் காஷ்மீரின் மனித உரிமைப் போராளியான அன்டிராபியைக் கொன்றதிலிருந்து 2009ல் சோபியான் மாவட்டத்தில் நிலோபர் ஜாண், அசியா ஜாண் படுகொலை வரை இந்திய ராணுவத்தின் கொடுமை விரிந்து செல்கிறது.

பனிலிங்கமும், பார்ப்பன இந்து மத வெறியும்

காஷ்மீரின் நீண்டகால காஷ்மீர் வரலாற்றில் பௌத்தர்களும், சீக்கியர்களும், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக வாழ்ந்து வழிபட்ட வரலாறு உண்டு. பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தபோதிலும் அவர்கள் டோக்ரா வம்சத்தைச் சார்ந்த ஒரு இந்து மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்ததே காஷ்மீர் மக்களின் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக மாறி இந்திய நிறுவனங்களின் ஸ்பான்சர் பயணங்களுள் ஒன்றாக மாறிவிட்ட அமர்நாத் பனிலிங்கக் கோவிலை 1860களில் கண்டுபிடித்ததே முஸ்லீம் இன ஆட்டிடையவர்களான மாலிக்குகளே. அவர்கள் 150 ஆண்டுகளாக அதை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அந்த பனிலிங்கத்தை இந்து மக்களின் வழிபாட்டிற்காகக் கொடுத்ததோடு காலம் காலமாக பனிலிங்கத்தை வழிபட வரும் இந்து யாத்ரீகர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார்கள். எந்தவிதமான மத வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும், முஸ்லீம்களும் வாழ்ந்து வந்த நிலையில்தான் அமர்நாத் கோவிலை வைத்து ஓர் இந்து அரசியலை நுழைத்தது இந்தியா. 2000-ஆம் ஆண்டில் அந்தக் கோவிலுக்கான அறங்காவல் கமிட்டியை உருவாக்க, இதுவரை அந்த கோவிலை பேணிப்பாதுகாத்து வந்த அந்த ஏழை முஸ்லீம் மாலிக்குகள் கோவில் மீதான் உரிமையை இழந்தார்கள். அமர்நாத் கோவிலுக்கு நிலம் வழங்கும் முடிவை காஷ்மீர் மாநில அரசு எடுக்க, காஷ்மீர் மக்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, இந்து மத வெறியர்கள் அதைச் சாட்டாக வைத்து இந்தியா முழுக்க சிறுபான்மை வெறுப்பரசியலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றனர்.
இந்திய அரசால் காஷ்மீருக்குள் நேரடியாக எவ்விதமான குடியேற்றங்களையும் செய்ய முடியாது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு அதைத் தடுப்பதால் காஷ்மீரிகளின் நிலங்களை அபகரிக்க இந்தியா பயன்படுத்தும் ஒரு தந்திரம்தான் இப்போது பனிலிங்க வழிபாடு. துவக்கத்தில் 20,000 பேர் மட்டுமே வந்துபோன லிங்க வழிபாட்டுக்கு இந்தியாவின் வேறு எந்த புனித தலங்களுக்கும் செய்யாத ஏற்பாடுகளை இந்தியா செய்துள்ளது. தங்கும் கூடாரங்கள், ஹெலிஹாப்டர் வசதி போன்றவைகளைச் செய்துள்ள இந்தியா, அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) ஒன்றை உருவாக்கி அமர்நாத் வழிபாட்டை நாற்பது நாள் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் எப்படி புனிதக் கடமையோ அப்படியே இந்துக்களுக்கு அமர்நாத் லிங்க யாத்திரை என்று இந்துப் பாசிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள். பெரும்பான்மை இந்துச் சமூகத்திடம் சமீப ஆண்டுகளாக இந்தக் கோவிலுக்கு பெரும் வரவேற்பு. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை கைவிட்டிருந்த காஷ்மீரிகள், பெருந்திரள் மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைந்தது இந்த பனிலிங்க கோவில் பிரச்சனையால் ஏற்பட்ட சோபியான் (2009 மே) படுகொலைகளில் இருந்துதான்.

பண்டிட்கள்

கடந்த இருபதாண்டுகளில் இருபது லட்சம் பண்டிட்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பதட்டச் சூழலால் வெளியேறியிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமுதாய கூட்டமைப்பு 21-10-2010 அன்று டில்லியில் நடத்திய கருத்தரங்கில் பேசிய அருந்ததிராயின் கருத்தில் இருந்தே அம்பைக்கும் இங்குள்ள இந்திய தேசியவாதிகளுக்கும் மூளை சூடேறுகிறது. ஆனால் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் ஜீலானி அதே கூட்டத்தில் இந்துக்கள், சீக்கியர்கள், பண்டிட்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் விடுத்த அழைப்பையோ அனைத்து மக்களையும் சமத்துவமாக மதித்து காஷ்மீர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்ததையோ தந்திரமாக இந்திய ஊடகங்கள் மறைத்து விட்டன. இது தொடர்பாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?’ நூலிலும், பெரியவர் எஸ்.வி. ராஜதுரை எழுதியுள்ள ஷோபியான் நூலிலும் அண்மைத் தரவுகளோடு ஏராளமான ஆதாரப்பூர்வத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இந்து, முஸ்லீம் பிரச்சனை என்றும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான பிரச்சனை என்றும், பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெறும் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சி என்றும், ஜிகாதிகளின் பயங்கரவாதம் என்றும் தொடர்ந்து நச்சுக் கருத்துக்களை பரப்பும் ஊடகங்கள், அறிவுஜீவிகள் பொதுவாகவே தங்களின் முஸ்லீம் வெறுப்பு அரசியலை முன்னெடுக்க அதற்கு உறுதுணையாக காஷ்மீரில் இருந்து வெளியேறி இப்போது டில்லியில் வசித்து வரும் பண்டிட்டுகளை கையில் எடுத்துக் கொள்வார்கள். காஷ்மீர் பண்டிட்கள் மூஸ்லீம்களால் வெளியேற்றப்பட்டனர் என்று கதை கட்டி தங்களின் வழமையான முஸ்லீம் வெறுப்பை இந்து மனதில் நின்று நிறுவுகின்றனர். காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமல்ல முஸ்லீம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட எல்லா மக்களுமே இந்திய, பாகிஸ்தான் படைகளாலும் போராளிக் குழுக்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரில் எந்த சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்காத கவனிப்பும் அக்கறையும் பண்டிட்களுக்கு மட்டும் கிடைக்கும் ரகசியம் நேருவின் காலத்தில் இருந்தே துவங்கி விட்டது.

தொண்ணூறுகளில் காஷ்மீரில் ஆளுநராக ஜக்மோகன் இருந்தபோது அவருடைய தூண்டுதலின் பேரிலேயே பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்டனர். அப்படி அனுப்பபட்ட பண்டிட்களுக்கு இந்திய அரசாங்கம் டில்லியில் கடைகளையும், குடியிருப்புகளையும் ஒதுக்கிக் கொடுத்திருப்பதோடு, அரசு வேலைகளையும் வழங்கியிருக்கிறது. காஷ்மீரில் அவர்கள் அரசு ஊழியர்களாக பணி செய்திருந்தால் அதை ஓய்வூதியமாகவும் கொடுக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக தமிழகம் வந்த ஈழ அகதிகளை இந்தியா திறந்தவெளிக் கழிப்பிடங்களில் கொட்டி வைத்திருப்பது போல்தான் பர்மா, ஆப்கான், வங்க அகதிகளையும் வைத்திருக்கிறது. திபெத் அகதிகள், காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள் இந்த இரண்டு அகதிகளுக்கும்தான் இந்தியா ஒப்பீட்டளவில் வசதியான ஒரு வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

சீனாவுடனான தனது எல்லைப் பிரச்சனையில் திபெத்தை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் இந்தியா திபெத் அகதிகளை ராஜமரியாதையோடு கவனித்துக் கொள்கிறது. காஷ்மீரில் தன் ஆக்ரமிப்பு இராணுவத்திற்கு எதிராக காஷ்மீரிகள் போராடுவதால் பண்டிட்டுகளை இந்துத்துவப் பாதைக்கு திருப்புவதன் மூலம் காஷ்மீரிகளுக்குள் இந்து முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா. அந்தத் தந்திரத்தின் விருந்தோம்பலும் உயர்குடி அங்கீகாரமும் இணைந்துதான் பண்டிட்களுக்கு டில்லியில் வசதியான வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. ஆனால் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் பண்டிட்களை தாக்கியதோ அவர்களுக்கு எதிரான வன்முறையிலோ இறங்கியதில்லை. ஆயுதக் குழுக்கள் போராடிய காலத்தில் எப்படி சில அப்பாவி முஸ்லீம் குடும்பங்கள் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்களோ அப்படியே சில பண்டிட்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்று வெளியேறிய பண்டிட்களின் வீடுகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் டில்லியில் வாழும் அவர்களோ டில்லியில் இந்தியாவின் தேசியக் கொடிகளைப் பிடித்தபடி காஷ்மீர்களுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் என்று இந்துப் பாசிசம் விதைத்த நச்சுக் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்கள் வன்முறை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை இறந்து போன ஒன்றாகவே கருதினார்கள் பலரும். மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக மக்கள் எதிர்ப்பியக்கங்கள் சாத்தியமற்றுப் போய் விட்டது என்கிற எண்ண ஓட்டங்களுக்கும் அதில் மறைந்திருக்கும் சில உண்மைகளுக்கப்பால் - 2009 மே மாதம் ஷோபியான் பகுதியைச் சேர்ந்த நீலோபர் ஜான் மற்றும் அவரது மைத்துனி அசியா ஜான் என்கிற இரண்டு பெண்கள் இந்திய இராணுவத்திரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ஆப்பிள் தோட்டத்தில் வீசப்பட்டிருப்பதாக செய்திகள் பரவ இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் சோபியான் மாவட்டத்தில் வெடித்தது. அதற்கு முன்னர் பனி லிங்கக் கோவில் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்ட இந்துத்துவ சக்திகள் காஷ்மீர் மக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியபோதும் அந்த மக்கள் ஒற்றுமையாகவே நின்றார்கள். சுமார் 47 நாட்களாக நடந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சி ஒட்டுமொத்த பள்ளத்தாக்கையும் பற்றிக் கொண்டது. ஒட்டு மொத்த காஷ்மீரிகளும் இன்று இந்தியாவுக்கு எதிராக திரண்டு நிற்கும் இன்றைய போராட்டம் உருவாகி சுமார் இரண்டாடுகாலம் ஆகப் போகிறது.

இந்தப் பிரச்சனை துவங்கியபோது இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் "காஷ்மீரில் இராணுவ நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளுக்கு எதிரானதுதானே தவிர பொது மக்களுக்கு எதிரானது அல்ல" என்றார். இரு நாடுகளின் ஆக்ரமிப்புக் காலம் தொட்டு இன்றுவரை சுமார் ஒரு இலட்சம் காஷ்மீரிகள் இந்திய, பாகிஸ்தான் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு காஷ்மீரில் மேற்கொண்ட ஆய்வின்படி, காஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் இருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. சோபியான் கொலைக்குப் பின்னர் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆக நடவடிக்கை எல்லாம் தீவிரவாதிகளுக்கு எதிரானது என்றால் கொல்லப்பட்ட காஷ்மீரிகள் எல்லாம் திவீரவாதிகள் என்றுதானே சிதம்பரம் சொல்ல வருகிறார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இராணுவப் படைகளை காஷ்மீருக்குள் இறக்கி வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நினைத்த இந்திய அரசின் அணுகுமுறைகளில் மண் விழுந்திருக்கிறது. சற்றும் எதிர்பாராத வகையில் முழுக் காஷ்மீரும் இந்திய இராணுவ ஆக்ரமிப்புக்கு எதிராக கிளர்ந்து நிற்கிறது.
ஆயுதக் குழுக்கள் இயங்கிய எண்பதுகள் காலத்தில் இந்தியாவின் எல்லா அடக்குமுறைகளுக்கும் நியாயம் கற்பிக்க போதுமான காரணங்கள் இருந்தன. 2009-க்குப் பின்னர் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒடுக்க - பெருந்தொகையான இராணுவத்தினர் மீது கல்லெரியும் காஷ்மீரிகளை - ஒடுக்க இந்தியாவிடம் காரணங்கள் இல்லை. கடந்த காலங்களைக் காட்டிலும் முழுமையான பெருந்திரள் மக்கள் போராட்டமாக காஷ்மீர் போராட்டம் உருவாகி நிற்கிற இந்த நிலையில், ஆயுதக் குழுக்களை கையாண்ட அளவுக்கு இந்தியாவால் மக்கள் வன்முறையை கையாள முடியவில்லை. ஆயுதக் குழுக்களை அமைதியாக்கியதுபோல அவ்வளவு எளிதான விஷயம் இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்ட இந்தியா சுமார் ஆறு லட்சம் துருப்புகளை காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது. நேரடியாக மக்களை, பெண்களை, சிறுவர்களை சுட்டுக் கொல்லும் அரசு இப்போது வேறு விதமான வழிமுறைகளைக் கையாள்கிறது. ஒன்று காஷ்மீருக்கென்று இருக்கக் கூடிய 370- பிரிவை ரத்து செய்து காஷ்மீரை இந்தியப் பெருமுதலாளிகளின் கட்டுக்குள் கொண்டு வருவது. இன்னொன்று தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற செல்வாக்கிழந்த கட்சிகளின் துணையோடு காஷ்மீரிகளின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து நிலைகுலைய வைப்பது. இதுதான் இந்தியாவின் திட்டங்கள்.

கடந்து போன சுதந்திர தின விழாவில் டில்லியில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் "காஷ்மீர் வன்முறைகள் கவலையளிக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதி என்பதை ஏற்றுக் கொண்டு வன்முறையைக் கைவிட்டு வருகிறவர்களிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்" என்று பேசினார். இந்தப் பேச்சில் எங்காவது காஷ்மீரிகளின் நீண்டகால கோரிக்கையான சுதந்திர காஷ்மீர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? ஆனால் அதே நாளில் காங்கிரசோடு கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பரூக் அப்துல்லாவின் மகனும் வாரிசு அரசியலில் வந்து இன்று காஷ்மீரின் முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா பேசும்போது //காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து அளிக்கத் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது ரம்ஜான் புனித மாதம் நடக்கிறது. இதுபோன்ற புனிதமான காலத்தில், பிரிவினைவாதிகள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மாநிலத்தில் வன்முறை அதிகரித்து வருகிறது.// என்று பேசுகிறார். மன்மோகன் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக உமர் காஷ்மீரில் பேசுவதும், காஷ்மீரில் ஆயுதக் குழுக்களின் வன்முறை எதுவும் இல்லாத நிலையில் பிரிவினைவாதிகள் என்று சிதம்பரமும், மன்மோகனும், உமர் அப்துல்லாவும் சொல்வது யாரை?

காஷ்மீரில் இந்தியா முன்னெடுக்கும் பல்வேறு நாடகங்களில் சமீபமாக இந்தியா அறிவித்ததுதான் காஷ்மீருக்கான எட்டு அம்சத் திட்டங்கள். அதன் ஒரு பாத்திரத்தில் நடிக்கும் உரிமை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் நிதி உதவியை இந்தியா வழங்கியிருந்தது. ஆனால் அந்த உதவிகளை காஷ்மீர் மக்கள் நிராகரித்து விட்டார்கள். நூற்றுக்கணக்கான மக்களை, சிறுவர்களைக் கொன்று நரவேட்டை ஒன்றை நடத்தி முடித்து விட்டு இந்தியா வழங்குவதாகச் சொன்ன பணத்தை காஷ்மீர் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் சி,பி.எம், சி.பி.ஐ உறுப்பினர்களோடு நம்மூர் திருமாவளவனும் சென்று வந்தார். இந்தியாவின் சுதந்திர காலத்தை ஒத்த நீண்ட வரலாற்றைக் கொண்ட காஷ்மீரிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏதோ புதிதாய் உருவான ஒன்று என்பதுபோல் காட்ட முயல்கிறது இந்தியா.
இக்குழுவை வழக்கம் போல காஷ்மீர் மக்கள் நிராகரித்தபோதும் தேசிய மாநாட்டுக் கட்சியினர் ஒரு பக்கம் குழுவை வரவேற்று விட்டு இன்னொரு பக்கம் மக்களை இக்குழுவினர் சந்திக்க விடாமல் செய்தனர். ஹூரியத் மாநாட்டுத் தலைவர்கள் கூட முதலில் இக்குழுவினரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்த நாடகம் முற்றிலும் அம்பலமாகிவிடாதபடி காப்பதற்காக சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மிர்வாயிஸ் உமர் பாரூக், கீலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின்மாலிக் ஆகியோரைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்பொழுது, யாசின் மாலிக்கும் மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் இணைந்து, "காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்" எனக் கோரினர். பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அடிப்படையாக, "காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் கீலானி. இக்குழுவினர் எந்தவிதமான அறிக்கையை இந்தியாவிடம் அளிப்பார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு வேளை ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று இக்குழு அறிக்கை அளிக்கும் பட்சத்தில் இந்தியா அச்சட்டத்தை வாபஸ் வாங்கி விடுமா? எட்டு அம்சத் திட்டத்தை அறிவித்த சிதம்பரமே சொல்லி விட்டார் சிறப்பதிகாரச் சட்டம் தொடர்பாக மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று. எவ்வளவு பொய்கள், பித்தலாட்டங்கள்!!
இதுபோன்ற ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்பக் கோரியபோது இறையாண்மையுள்ள இன்னொரு தேசத்திற்குள் இந்தியா தலையிடாது என்று தமிழகத்தின் கோரிக்கையை தட்டிக் கழித்த இந்தியா, இனப்படுகொலை போர் முடிவுக்கு வந்த பின்னர் திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களை சுற்றுலாப் பயணம் போல இலங்கைக்கு அனுப்பியதை இங்கே பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் கொடுத்த அறிக்கை என்னவென்றாவது நமக்குத் தெரியுமா? அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று சொன்ன கருணாநிதியின் வார்த்தைகள் என்னவானது?

காஷ்மீர் தீர்வுக்கு தொழிலதிபர்கள் குழு

நீண்டகால அரசியல் பிரச்சனையான காஷ்மீர் பிரச்சனைக்கு எட்டு அம்சத் திட்டத்தின்படி தீர்வு என்று அறிவித்த இந்தியா இறுதியாக காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவரும் முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இக்குழுவில் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, சிஐஐ அமைப்பின் முன்னாள் தலைவர் தருண் தாஸ், காஷ்மீர் பிரிவு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷகீல் கலாந்தர் நந்தகுமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதியும் குழுவில் இடம் பெறுவார்.
சிஐஐ (Confederation of Indian Industry) என்னும் அமைப்பு இந்திய தொழிலதிபர்களாலும் ஐப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ள பன்னாட்டு தொழிலதிபர்களாலும் நிர்வகிக்கப்படுகிற இந்திய தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பு. தாதுக்களை தோண்டி எடுப்பது, சுரங்கம் அமைப்பது, தகவல் தொழில் நுட்பத்துறை முதலீடு போன்ற தொழில்களில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களின் கைகளில் இப்போது காஷ்மீருக்கான தீர்வு. இந்த தொழில் முதலைகளுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்? காஷ்மீர் பிரச்சனையின் தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் உரிமையை இந்தத் தொழிலதிபர்களிடம் வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த காஷ்மீரையும் இன்னொரு தண்டகாரண்யாவாக மாற்ற இந்தியா முயல்கிறது என்றே தெரிகிறது.
காஷ்மீரில் இந்தியாவைச் சார்ந்த எவரும் நிலம் வாங்க முடியாதபடி அரசியல் சட்டத்தின் 370 பிரிவு காஷ்மீர் மக்களுக்கான நில உத்திரவாதத்தை வழங்கி வரும் நிலையில் காஷ்மீர் இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம், உருவாக்கப்பட வேண்டிய வேலை வாய்ப்புகள், தொழிற்சாலைகள் குறித்து இக்குழு ஆராயுமாம். எந்த மாதிரியான தொழில்களை காஷ்மீரில் தொடங்கலாம் என்று முடிவு செய்து இவர்கள் கொடுக்கிற அறிக்கையை வைத்து இந்தியா காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்குமாம். இந்தியப் பெருமுதலைகள் காஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்களை வாங்கிக் குவிக்கவும், மிஞ்சியிருக்கும் காஷ்மீர்களின் நிலங்களை அபகரிக்கவும் தடையாக இருக்கிற 370-வது பிரிவை நீக்கும் நோக்கிலேயே இப்போது தொழிலதிபர்களை காஷ்மீர் பிரச்சனைக்குள் இறக்கியிருக்கிறார்கள்.

நிலங்களை அபகரித்து, வளங்களை கொள்ளையடித்துச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தங்களையும் தங்களின் நிலங்களையும் காத்துக் கொள்ள தண்டகாரண்யா மக்கள் போராடும் இதே நாட்களில்தான் மக்கள் நிலங்களை அபகரித்து அவர்களை நிலமற்றவர்களாக்கும் ஒரு யுத்த தந்திரத்தை காஷ்மீருக்கும் விரிவுபடுத்துகிறது இந்தியா. தண்டகாரண்யா, ஈழம் இந்த இரண்டிலுமே மக்கள் நிலங்களுக்காகப் போராடும் ஒரு சூழலை நாம் காண்கிறோம். மக்களின் உழைப்பின் மீதான் உரிமையும் நிலத்தின் மீதான உரிமையும் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கைகளில் காஷ்மீர் தீர்வு செல்வது மிகப் பெரிய அழிவுக்கே இட்டுச் செல்லும்.

அருந்ததிராயும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளும்.

மறுகாலனியாதிக்கச் சூழலில் சிக்கி வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் பெரும்பாலான இந்திய மக்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் குவிப்பால் பலன் பெற்று புதிதாக உருவாகிவிட்ட மத்யமர் இன்னொரு பக்கம் - என வெகுவேகமான அடிமை மனோபாவத்திற்குள் கூட்டு மனச்சாட்சி தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஏழைகளின் நம்பிக்கைகளை ஓரளவுக்கு காத்து வந்த நீதிமன்றங்களும் இந்த சமூக அமைப்பின் ஒரு அங்கமாக மாறி மக்கள் மீது பாயும் நிலைகளை நாம் காண்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக பழங்குடிகள், விவசாயிகள், மீனவ மக்கள் மீது அறிவித்தும் அறிவிக்காமலும் ஒரு பெரும்போரை இந்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. கடற்கரை மேலாண்மைச் சட்டங்கள் அமலுக்கு வரும்போது இந்தப் போரின் கொடூரங்களை எல்லையோர மக்கள் அனைவருமே அனுபவிக்க நேரலாம். இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய அறிவுலகமோ அரசின் கொடூர அடக்குமுறைகளைக் கண்டு மௌனம் சாதிக்கிறது அல்லது ஆதரித்து நிற்கிறது, அம்பையைப் போல. ஆனால் அருந்ததிராயோ இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தும் போர் குறித்து இப்படிச் சொல்கிறார் ''உலகிலேயே மிக மோசமான ஏழைகளை குண்டு வீசிக் கொல்கிறது இந்தியா". இதில் என்ன தவறு? அதுபோல காஷ்மீர் தொடர்பாக அவர் ‘’காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை” என்றும் சொன்னார்.
அம்பை அவர்களே!! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது என்றால் எப்போது இருந்தது என்பதைச் சொல்ல வேண்டியது உங்களின் பொறுப்பு. அல்லாமல் அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக இந்திய இறையாண்மையின் இதயத்தில் நின்று நீங்கள் இந்து மனதோடு அருந்ததிராய் மீது பாய்வதால் உங்களுக்கு இரண்டு தயிர்சாதங்களையும் தொட்டுக் கொள்ள மாவடுவையும் இந்தியா பரிசளிக்கும்; அருந்ததிக்கு துப்பாக்கிகளை மட்டுமே பரிசளிக்கும். அருந்ததிக்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்காய்ப் போராடும் எவர் ஒருவருக்கும் அப்படித்தான்.

மற்றபடி காலச்சுவடு கட்டுரையில் மாலதி மைத்ரி ஈழப் போராட்டத்தின்போது அறிவுஜீவிகளின் அணுகுமுறை குறித்து மிகச் சரியாகவே கணித்துள்ளார். ஈழ மக்களின் தேசிய இன விடுதலைக் கோரிக்கை புலிகளோடு துவங்கியதும் இல்லை புலிகளோடு முடிந்து போவதும் இல்லை. காஷ்மீரில், பாலஸ்தீனத்தில், ஏன் அமெரிக்க ஆக்ரமிப்பு ஆப்கானில் என உலக விஷயங்களை அணுகும்போது ‍- அங்கெல்லாம் அடிப்படைவாதக் குழுக்களின் ஆயுத வன்முறையும் ஒரு அங்கமாக இருந்தாலும் - அதை தமிழக அறிவுஜீவிகள் எந்த முன்நிபந்தனையும் இன்றி ஆதரிக்கிறார்கள். ஆனால் ஈழம் என்று வரும்போது மட்டும் இவர்கள் ஆயிரம் தத்துவ அளவீடுகளைக் கொண்டு, குழப்பியடிக்கிறார்கள். வாயைத் திறந்தால் விடுதலைப் புலிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; இலங்கை அரசு குறித்து மௌனம சாதிக்கிறார்கள். தண்டகாரண்யாவில் போராடும் மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, மேற்குவங்கம் தொடங்கி கேரளாவின் முத்தங்கா வரையிலுமான பழங்குடி மக்களின் போராட்டமும் கூட ஈழப் போராட்டத்தைப் போன்றதல்ல. கால ஓட்டத்தில் ஈழப் போராட்டம் இன்று நிலத்திற்கான போராட்டமாக உருமாற்றம் அடைந்திருந்தாலும் கூட அது ஈழ மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமே. அந்த வகையில் மாலதியின் கருத்தை நாம் ஆதரிக்கிறோம். காஷ்மீருக்கு எப்படியோ அதே நீதிதான் ஈழத்திற்கும்.

உதவிய நூல்களும் கட்டுரைகளும்

1. இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்- சுனித் குமார் கோஷ்.
2.ஜவஹர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் - அர்ஜூன் தேவ்.
3. நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்,
4. காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம்.
5. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
6. http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp
7. சாம்பல் மூடிய நெருப்பு -டி.அருள் எழிலன்.
8. ஷோபியான் - காஷ்மீரின் கண்ணீர் கதை- எஸ்.வி. ராஜதுரை.