அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...

டி.அருள் எழிலன்



உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய சூழலில் இந்தியாவிலேயே மரபணு மாற்றச் சோதனையில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். கத்தரி நெல்லில் மரபணு மாற்றத்தை நடத்தியவர்கள் இப்போது கைவைத்திருப்பது நமது பாரம்பரீய மருந்துகளான சித்தா ஆயுர்வேதத்தில். சோதனைகள் முடிந்து விரைவில் நமது பாரம்பரீய வேம்பும், மஞ்சளும், இஞ்சியும் அமெரிக்க தனியார் முதலாளிகளின் கைகளுக்கு செல்லப் போகிறது. வேகமாக இவைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள், சிலர் மௌனமாக வேடிக்கை பார்த்து தாரைவார்ப்பை ஆதரிக்கிறார்கள்.

‘‘ மரபணு பொறியியல் அல்லது மரபணு மாற்றம் என்பது தாவரங்களில் பூச்சிக் கொல்லி சக்தியை அதிகரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்த நமது மரபான பயிர்களின் அணுக்களை மாற்றி உற்பத்தி செய்வதுதான் மரபணு மாற்றம் செய்வது.ஒரு விளை பொருளை எடுத்து அதில் செயர்க்கை கரு ஊட்டல் மூலம் பத்து விதமான புதிய ரக அதே விளை பொருளை உருவாக்குவதுதாம் மரபணு மாற்றம்.இந்த மரபணு மாற்றத்தின் அபாயங்களை அறிந்த அய்ரோப்பிய நாடுகள் இந்த ஆய்வுகளை தங்கள் நாட்டில் செய்ய தடைவித்திருக்கிறது.அது மட்டுமல்ல அமெரிக்காவில் கூட இந்த ஆய்வுகள் ஆய்வுக் கூடங்களில் வைத்து நடத்தப்படுகிறதே தவிற அவர்களின் விளை நிலங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.அவர்களின் மண்ணின் வளம் கெட்டு விடும் என்பதால் அமெரிக்க முதலாளிகள் பல்லுயிர் பெருக்கத்தின் இதய பூமிகளுள் ஒன்றான இந்தியாவை தேர்ந்தெடுத்து நமது மண்ணையும் மக்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமெரிக்க முதலாளிகளுக்கு பல்லக்குத் தூக்கும் இந்திய அரசியல்வாதிகளோ பணத்துக்காக நாட்டையும் இந்த மக்களையும் அமெரிக்க முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார்.சித்த வைத்தியர் டாக்டர் சிவராமன்.
‘‘ கத்தரி,வெண்டை,தக்காளி,நெல்,கம்பு,இராகி,சோளம்,உளுந்து,தட்டைப்பயறு,கொண்டைக்கடலை,உருளைக்கிழங்கு,குட்டிக்கிழங்கு,வாழை,பப்பாளி,ஏலம்,கரும்பு, என பல வகையான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.(நிமீஸீமீtவீநீ விஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ ஷீக்ஷீ நிமீஸீமீtவீநீ விணீஸீவீஜீuறீணீtவீஷீஸீ) இவைகளில் நெல்ரகங்கள்,காய்கரி ரகங்கள் என வயல்களில் சோதனை நிலையில் உள்ளன. தமிழ்நாடு வேளாண்பலகலைக் கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், சென்னையில் லயோலாக் கல்லூரியும் இத்தைகைய மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.மகிகோ மான்சான்டோ என்னும் அமெரிக்க நிறுவனத்திறகாக நடத்தப்படும் இந்த ஆய்வுகளுக்காக இந்திய விவசாயிகளும் விளை நிலங்களும் பலிகடாவாக்கப்படுகிறது.அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்லி மரபணு மாற்றப் பயிர்களை பயிர் செய்யச் சொல்கிறார்கள் பயிர் செய்யும் விளை பொருட்களில் இருந்து கண்டு பிடிக்கப்படும் புதிய ரக விளை பொருட்களுக்கான உரிமை அமெரிக்க மான்டான்டோவுக்கு போய் விடும். அப்படி நமது விளை பொருளுக்கான உரிமை அமெரிக்க முதலாளிகள் கையில் சென்ற பிறகு இந்திய விவாசாயிகள் விரும்பினால் கூட அதை விளைவிக்க முடியாது.காப்புரிமைச் சட்டத்தின் கீழ நெல் விவசாயம் செய்யும் விவசாயி கைது செய்யப்படுவார்.அது மட்டுமல்ல ஏன் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஆய்வை தடை செய்திருக்கின்றன? இந்த மரபணு மாற்றப்பயிர்களால் விளை நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன? அதை உண்ணுகிற மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் என்ன? என்பது போன்ற எளிய சந்தேகங்களுக்கு இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைகழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் பதில் சொல்ல வேண்டும்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் தமிழக பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.

இந்தியாவின் முதல் மரபணு மாற்ற பொருளான கத்தரிக்காயை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த மரபணு மாற்றப்பயிர்களை அங்கீகரிப்பதற்கும் சந்தைப் படுத்துவதற்குமான ‘தேசீய உயிர்த் தொழில் நுட்ப அங்கீகரிப்பு அமைப்புச் சட்டம்’ ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது இதில் விளைபொருட்கள், பாரம்பரீய மருந்துகள்,உணவுப் பொருட்களோடு தொடர்புடைய இந்த சோதனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய ஏழு அமைச்சகங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை வெறும் அறிவுரைகள் வழங்கும் கருத்துக் கருவூலங்களாகவே மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் பொறுப்பின் கீழ் வரும் பாரம்பரீய மருந்துகளான சித்தா,ஆயுர்வேத பரம்பரை மூலிகைகளை குறிவைத்திருக்கிறது மரபணு மாற்றச் சோதனைகள்.

‘‘உலகில் பல்லுயிர் விளை நிலம் என்ற வலையம் ஒன்று உண்டு. அதாவது மண்ணின் தன்மைக் கேற்ப வளருகிற தாவரங்கள்.இம்மாதிரி பல்லுயிர் வளம் உலகம் முழுக்க 14 இடங்களில்தான் உள்ளது அதில் பிரதான ஒன்பது இடங்கள் இந்தியாவில் உள்ளது. உலகெங்கிலும் ஆங்கில மருந்துகளின் பின் விளைவுகளினால் அதிலிருந்து மீள நினைக்கும் மக்கள் ஸிணீtவீஷீஸீணீறீ மிக்ஷ்மீபீ றிலீஹ்பீஷீ னீமீபீவீநீவீஸீமீ &க்கு மாற நினைக்கிறார்கள். இதனால் உலகெங்கிலும் இந்திய மூலிகை மருந்துகளுக்கும் பல்லுயிர் சூழலில் வளரும் மருத்துவ குணமுள்ள மருந்துகளுக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றம் மூலம் மாற்றி இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிமான மக்களை அதை நுகரும் சந்தைப் மனிதர்களாக மாற்ற முயர்ச்சிக்கிறது அமெரிக்க நிறுவனங்கள். அதற்கு துணை போகிறது மத்திய அரசு.சித்த வைத்தியத்தில் நில வேம்பு இருக்கிறது காலம் காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நில வேம்பு சிக்கன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் நில வேம்பில் உள்ள எந்த கெமிக்கல் சிக்கன் குன்யாவை கட்டுப்படுத்துகிறது என்றால் அதை பாரம்பரீய மருத்துவத்தில் தீர்மானமாக சொல்லிவிட முடியாது ஆனால் மரபணு மாற்றத்தில் நிலவேம்பில் உள்ள ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்துக் கொண்டு அது ஒரு நோய்க்கு மருந்தாகிறது என்பதை கண்டு பிடித்து உடனே நிலவேம்பில் அந்த கெமிக்கலைச் செலுத்தி அதை அதிக அளவில் உற்பத்தி செய்து. அதை சந்தைப் படுத்துவார்கள்.இதன் மூலம் ஒரு பக்கம் நில வேம்பின் காப்புரிமை கண்டு பிடித்த கம்பெனியின் கைகளில் போவதோடு. நில வேம்பின் வளர்ச்சியே பாதிக்கப்படும்.இதை எப்படி புரிந்து கொள்வதென்றால் பால் கலக்காத கடும் டீ யை நாம் அருந்தும் போது அது வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது, ஆனால் தேயிலையில் இருக்கும் எல்லா கெமிக்கலையும் எடுத்து தனித்தனியாக பிரித்து சோதித்தால் அதில் எந்த கெமிக்கலுக்கும் அப்படி வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடிய மலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இல்லை என்பது ஆய்வில் தெரிகிறது. இதுதான் நமது பாரம்பரீய மருந்துகள். அதன் மருத்துவ குணம் என்பது இந்த மண்ணின் உயிர்ச்சூழலோடும் வளத்தோடும் தொடர்புடையது.இந்த மூலைகைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுவதுதான் அதன் இயர்க்கைத் தத்துவம். ஆனால் இவர்கள் இதை வெறும் பணம் வசூலிக்கும் மருந்தாக மாற்றுவதோடு சாதாரண மக்களின் வீடுகளில் வளர்க்கும் இந்த தாவரங்களை காப்புரிமை என்ற பெயரில் ஏக போக உரிமையாளர்களாகப் பார்க்கிறார்கள்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இம்மாதிரி ஆய்வுகளை பாரம்பரீய மூலிகை தாவரங்களில் நடத்தப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என்கிற டாக்டர் சிவராமன்.
‘‘இந்தியாவில் உள்ள தாவரங்களில் சுமார் 1500 தாவரங்கள் மருத்துவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.அதில் 500 தாவரங்கள் நேரடியாக மருந்து தயாரிப்பில் ஈடு படுத்தப்படுகிறது. இது மருந்தின் வீரியம், மூலப்பொருட்களின் பயன்பாடு நோயாளிகளின் தேவை என இவைகளை கணக்கிட்டே உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் மரபணு மாற்றத்தை அனுமதித்தால் இந்த மூலிகைச் செடிகளின் தன்மை அதாவது மருத்துவ குணம் மாறுவதோடு இனி இந்த தாவரங்களுக்கு நாம் உரிமை கொண்டாட முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான்.அதனால் உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த மரபணு மாற்ற சோதனையை அடியோடு கைவிட வேண்டும் அதுதான் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது’’ என்கிறார் டாக்டர் சிவராமன்.-

‘‘உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் சந்தைக்கு வரும் போது அந்தப் பொருள் பற்றிய விபரங்களை குறிப்புகளாக அச்சிட்டு அதை அந்தப் பொருளின் உறை மீது லேபிளாக ஒட்டுவது வழக்கம். ஆனால் மரபணு மாற்ற பொருட்கள் சந்தைக்கும் வரும் போது அது இயர்க்கையாய் நமது விவசாயிகள் உற்பத்தி செய்ததா? அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? என்கிற விபரம் கூட அதில் இருக்காதாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்ப்ட்ட கத்தரிக்காயை வாங்கி உண்டு நமக்கு ஏதாவது விசித்திரமான நோர்கள் உருவானால் அது எதனால் உருவானது என்று கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியாத சூழலுக்கு மக்களை தள்ளி விட்டது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் சந்தைக்கு வரும் எந்தப் பொருளும் இது மரபணு மாற்றம் மூலம் தயாரிகக்ப்பட்டது என்கிற விபரம் இருக்கும். நுகர்வோருக்கு வாங்கும் பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தியாவில் நுகர்வோருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கூட் மறுக்கப்பட்டு அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதை வாங்க வேண்டும் என்ற மறைமுகமான நிர்பந்தத்துக்கு இது வழி வகுக்கிறது.அது மட்டுமல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிற ‘‘ஆயுஷ்’ நிறுவனம்தான் பாரம்பரீய மூலிகைகள் மருந்துகளை வளர்தெடுக்கிறது.ஒரு பக்கம் இப்படி வளர்த்தெடுப்பது போல் வளர்த்து விட்டு அதே பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றச் சோதனைகளுக்கு உட்படுத்துவதை வேடிக்கை பார்க்கிற அன்புமணி ராமதாஸ் இந்த ஆய்வுகளை தடை செய்ய முன் வரவேண்டும்.இந்திய மக்களுக்கு செய்கிற உண்மையான மக்கள் சேவை என்பது இதுதான்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.

சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....



தலித்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மிக மோசமான தக்குதல் ஒன்றை ஊடகங்களும் அரசதிகார ஆதிக்க சாதி சக்திகளும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மோதல் மத்யமரின் மனதில் தலித் மாணவர்களுக்கு எதிரான மிக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது.

‘‘காட்டுமிராண்டிகள்...இவர்களெல்லாம் சட்டம் படித்து என்ன செய்யப் போகிறார்கள்’’

‘‘இவர்களெல்லாம் சட்டம் படித்து நீதிபதிகள் ஆனால் என்ன நடக்கும்’’

‘‘உடனடியாக சென்னை சட்டக் கல்லூரியின் அம்பேத்கர் பெயரை மாற்ற வேண்டும்’’

‘‘கல்லூரி விடுதிகளை மூட வேண்டும்’’

இன்னபிறக் கோரிக்கைகள் தலித்துக்களை குறி வைத்து வீசப்படுகின்ற சூழலில். சிக்கிக் கொண்ட மாணவனை ஏன் இவளவு கோபத்தோடு தலித் மாணவர்கள் தாக்க வேண்டு என்ற கேள்வியை ஆதிக்க சாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள், அரசியல்கட்சிகள், அரசு நிர்வாகம் என எல்லா தரப்பும் தந்திரமாக மறைத்து விடுகிறது.

பணக்கார ஆண்டைகளுக்கும் பண்ணை வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியம் என்று மாறிப் போன சூழலில் இன்னும் ஏழைகள் தங்களின் பிள்ளைகளை படிக்க நம்பியிருப்பது பிரதானமாக இரண்டு துறைகளைத்தான் ஒன்று நர்சிங், இன்னொன்று டீச்சர் டிரெயினிங்.(இந்த இரண்டிலும் மோசடிக் கும்பல் புகுந்து விட்டதென்பது தனிக்கதை) மூன்றாவதாக உயர்கல்விப் பிரிவில் வருகிற சட்டம் படிக்க வருபவர்களும் சாதாரண எளிய குடும்பத்து பிள்ளைகள்தான். பப்ளிக் டாயெல்ட்டுகளைப் போல இருக்கும் அரசு விடுதிகளில் தங்கித்தான் பெரும்பாலான தலித் மாணவர்கள் சட்டம் படிக்கிறார்கள். அந்த வகையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 60% மாணவர்கள் பள்ளர்,பறையர் வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும் மீதி சாதிகளாக 40% பேரும் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்கள். தனியார் முதலாளிகளின் கையில் உயர்கல்வி சென்ற பிறகு இடஒதுக்கீட்டின் உரிமையும் அரசின் சலுகைகளும் கொஞ்சமேனும் மிச்சமிருப்பது சட்டக் கல்லூரிகளில்தான்.ஆனால் முதல் தலைமுறையாக இழிவை சுமக்க மறுத்து சட்டம் படிக்க வந்தக் கூட்டம்.

பொதுவாக எந்தக் கல்லூரி மாணவர்களும் பொதுப் பிரச்சனைகளுக்காக இன்று போராட வருவதில்லை. அரசு ஒரு போராட்டம் நடத்தினால் மீடியாக்களில் கிடைக்கும் பப்ளிசிட்டிகளை விரும்புகிற மத்யதர மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கவனஈர்ப்பை மேற்கொள்வார்கள். இதை கும்பகோணம் பள்ளியில் எரித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளில் தொடங்கி இதயத்தை தானம் கொடுத்த ஹிதேந்திரன் வரை காணமுடியும். ஆனால் இன்றும் பொதுப் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வருபவர்கள் என்றால் அது சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டும்தான். அதனால் அவர்களுக்கு வன்முறையாளர்கள் என்ற முத்திரையும் இந்த மெழுகுவர்த்தி ஏற்றுகிற மத்யமரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதோடு இணைத்துத்தான் இந்த தாக்குதல்களை ஒட்டி எழுந்திருக்கும் எண்ண ஓட்டங்களை பார்க்க வேண்டும்.

தலித் மாணவர்கள் தேவரின மாணவர்கள் முரண்பாடு என்பது பல ஆண்டுகளாக சென்னை சட்டக் கல்லூரிக்குள் இருந்திருக்கிறது. அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த இந்து சாதியமைப்பின் ஒரு அங்கம்தானே? சமூகத்தின் உள்ள சாதி ஏற்றத் தாழ்வுகள் சட்டக் கல்லூரிக்குள் மட்டும் இருக்காது என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்.தவிறவும் மாணவச் சமுதாயம் சாதி பேதம் பார்க்காது என்பதை நம்புகிறவர்கள். தென் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளில் போய் பார்க்கட்டும் தலித் மாணவர்கள் ஆதிக்க சாதி மாணவர்களால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று. சாதி எல்லாவனுக்குள்ளும் இருக்கிறது. அது மாணவர்கள் மனதில் யூனிபார்ம் போட்டு சம்மணமிட்டிருக்கிறது.தனது பள்ளிப் பாடப்புத்தகத்தில் அம்பேத்கரின் படம் இருப்பதை இழிவாக நினைக்கும் அளவுக்கு ஆதிக்க சாதி மாணவர்களின் மனதில் விஷம் ஏற்றப்பட்டிருக்கிறது.

இம்மாதிரி ஒரு சூழலில்தான் சென்னை சட்டக் கல்லூரியில் தேவர் குருபூஜை அன்று அடிக்கப்பட்ட போஸ்டரில் தந்திரமாக அம்பேத்கர் பெயரை தவிர்த்திருக்கிறார்கள் தேவரின மாணவர்கள். அது தொடர்பான கொதிப்புதான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தவிறவும் வெறுமனே இதை ஒரு போஸ்டர் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. மோதிக் கொண்ட இரண்டு தரப்பினருமே வெளியூர் மாணவர்கள்.
சென்னைக்கு வெளியே என்ன நடக்கிறது.

மேலவளவில் ஒரு ஆளை கும்பலாக கூடி வெட்டியது யார்?

திண்ணியத்தில் ஒரு தலித்தை குடும்பமாக சேர்ந்து பீயைத் தின்ன வைத்தது யார்?

குழந்தை என்றும் பார்க்காமல் தனத்தின் கண்ணைக் குத்தியது யார்?

உத்தபுரத்தில் சுவர் கட்டி பிரித்துவைத்தது யார்? அதில் 16 செங்கற்களை உடைத்ததற்காக இன்னும் கொதித்துக் கொண்டிருப்பது யார்?

சுண்டூரில்,காயர்லாஞ்சியில், கொடியன்குளத்தில்,தாமிரபரணியில் கொத்துக் கொத்தாக அடித்து துவைக்கப்பட்டது யார்?

விடை சொல்ல முடியாத? விடை சொல்வதை தவிர்க்கிற நமது ஆதிக்க சாதி மனோபாவாம்தான் சென்னை சட்டக் கல்லூரி தாக்குதலையும் ஒரு தாக்குதலாக மட்டுமே பார்க்காமல் தலித்துக்களின் கோடூரமாகப் பார்க்கிறது.

வடமாவட்டங்களில் வன்னியர்கள் தலித்துக்கள் என்றும் தென் மாவட்டங்களில் தேவர் தலித்துக்கள் என்றும் நாடார் தலித்துக்கள் என்றும் இன்னபிற ஆதிக்கசாதிகள் தலித்துக்கள் என்றும் சாதி தலித்துக்களை எதிர் எதிராக நிறுத்தியதோடு, பள்ளர் பறையர் அருந்தயர் என தலித்துக்களையும் மூன்று கோண்த்தில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஊரில் அடிபடுகிற, ஆண்டைகளின் வயலில் நக்கிப் பிழைக்கிற தங்களின் அப்பன்மார் பட்ட அவஸ்தைகளை அவமானங்களை இன்றைய தலித் தலைமுறை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை அவர்கள் நிமிர்ந்து நடக்க ஆசைப்படுகிறார்கள். சாதீய ஒடுக்குறையின் கோபம் ஒரு தலைமுறைக் கோபமாக தலித் மாணவர்களுக்குள் இருக்கிறது.இந்த சமூக வரலாற்றுப் பின்னணியோடுதான் சட்டக் கல்லூரி மோதலை அணுக வேண்டுமே தவிற சட்ட ரீதியாக அல்ல.

கல்லூரி மோதலை விசாரித்த வரையில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் (தேவரின மாணவர்கள்) என்ற இருமாணவர்களும் கடந்த எட்டாம் தேதி பாலநாதன்,ஜெகதீசன் என்கிற இரண்டு தலித் மாணவர்களை தாக்கியதாகவும் இது குறித்த முறைப்பாடு கல்லூரி முதல்வரிடம் இருப்பதாகவும். பாரதி கண்ணன் மீதும் சில தலித் மாணவர்கள் மீதும் பூக்கடை போலீசில் சில வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த 12&ஆம் தேதி பாரதி கண்ணன்,ஆறுமுகம் இருவரும் இதில் பாரதி கண்ணன் திட்டமிட்டே கத்தியோடு போய் சித்திரைச் செல்வன் என்ற மாணவன் காதை அருத்தாராம். உண்மையில் சித்திரைச் செல்வன்,பாரதி கண்ணன், ஆறுமுகம் இந்த மூவருக்குமே அங்கு அன்று செமஸ்டர் தேர்வு கிடையாது என்று சொல்லப்படுகிறது. பாரதி கண்ணன் தகுந்த திட்டமிடலோடு போய் மாணவர்களை தேர்வெழுத விடாமல் தடுத்ததாகவும் அந்த மோதலே தேர்வு முடிந்த பிறகு பழிவாங்கும் தாக்குதலாகவும் மாறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் தொடர்ந்து தலித் மாணவர்களை கோபப்படுத்தும் படியான தேவரின மாணவர்களின் நடத்தை.இன்னொரு பக்கம் இழிவுகளைச் சுமந்த கோபம் இழிவின் மீதான் கோபம் என்று பார்க்கும் போது ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த மூர்க்கம் காண்டுமிராண்டித்தனம் இவைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது தாக்கிய இருபது மாணவர்களைத் தேட 22 படைகளை அமைத்திருக்கிறது தமிழக அரசு.காது அறுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சித்திரைச் செல்வன் உடபட தலித் மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் தாக்குதலுக்கு காரணமான பாரதிகண்ணன் இது வரை கைது செய்யப்பட வில்லை. தனிப்படை அமைப்பது என்பதே தலித் மாணவர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் செயல்தான். நடந்துவரும் பாரபட்சமான காவல்துறை செயல்பாடுகளை தட்டிக் கேட்க வேண்டிய தலித் தலைவர்களோ, தேர்தல் அமைப்பில் பங்குபெறும் கம்யூனிஸ்டுகளோ இதை வெறும் கல்லூரி கலவரம் என்ற வகையில் கோஷமிடுகிறார்கள்.

தாக்குதலில் ஈடுபட்டவன் கைது செய்யப்படும் போது தாக்குதலுக்கு காரணமானவனும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒன்று இப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்த வேகத்தில் தலித் மாணவன் இரண்டு பேரின் குடலை உருவிச் சாய்த்த்திருந்தால் இந்த ஊடகங்களும் மத்யமரின் சாதிமனமும் இதை இவளவு துல்லியமாக பிரித்துப் பேசியிருக்காது. சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் என்கிற அளவில் பேசிவிட்டுப் போயிருக்கும்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களைக் கூட போலிஸ் துரத்திக் கொண்டிருக்கிறது. பாரதிகண்ணன் என்கிற மாணவரால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வன் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் காதை அறுத்த பாரதிகண்ணனோ மாவீரராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மிக மோசமான சாதி தீவீரவாதம் தமிழகத்தில் வேர் விட்டிருக்கிறது தலித்துக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என நினைக்கிறது சாதி வெறி ஊடகங்களும் அரசு நிர்வாகமும். இதை தட்டிக் கேட்க வேண்டிய தங்களை தலித் தலைவர்கள் என்று சொல்லக் கூடிய தலைவர்களோ தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து மௌனம் காத்து ஆதிக்க சாதி அரசியலுக்கு தூபம் போடுகிறார்கள்.

இப்போது அவர்கள் எங்கு வந்து சேர வேண்டும் என நினைத்தார்களோ அங்கு வந்து விட்டார்கள்.சொல்ல வேண்டிய ஸ்லோகன் தெளிவாகவே சொல்லப்படுகிறது.

ஒன்று ஹாஸ்டலை மூட வேண்டும்
இரண்டு அம்பேத்கர் பெயரை நீக்க வேண்டும்.

இதுதான் இன்று ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுக்கருத்து.

தென்கிழக்கின் தத்துவமரபில் மிகப் பெரும் புரட்சியை நிகழ்த்திய அம்பேத்கரும் முதுகுளத்தூர் புகழ் முத்துராமலிங்கத் தேவரையும் ஒன்றாக்கி கதைப்பதன் அபத்தம் கூட அறியாத அளவுக்கு சாதி மண்டிய மூளைகள் இந்த கோஷங்களை முன்வைக்கிறன.

பெருவாரியான உழைக்கும் மக்களைக் கொண்ட இந்த இரண்டு இனங்களும் இன்று எதிர் எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு உண்மை தெரியாமல்...

கள்ளரோ,மறவரோ,பள்ளர்களோ,பறையர்களோ யாராக இருந்தாலும் இன்னும் பத்து வருடம் கழித்து சென்னை சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியுமா என்று தெரியவில்லை. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை பட்டா போட்டு அமெரிக்க கோக் கம்பெனிக்கு விற்றாலும் விற்று விடுவார்கள், இப்போ வெட்டிக் கொண்டு சாகிற இவர்கள் நினைத்தால் கூட சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியாது. அங்கு மட்டுமல்ல எங்குமே சட்டம் படிக்க முடியாது காரணம் எப்படி உயர் கல்வி தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டதோ அது போல சட்டப் படிப்பும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டாகிவிட்டது. பெரும் பண முதலைகள் மட்டுமே படித்து வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வர முடியும் சூழல் வந்து விட்டது.வட இந்திய மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் தமிழகத்தின் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போய் படித்து பட்டம் பெற்று வருகிற சூழலில். உங்களின் எதிரிகள் யாரென்றே தெரிந்து கொள்ளாமல் மோதிக் கொள்வதை என்னவென்று சொல்வது. அது மட்டுமல்லாமல் ஒரு பணக்கார தேவர் பெரும் முதலீட்டில் சட்டக் கல்லூரி ஒன்று துவங்கிவிட்டால் ஏழைகளாக இருக்கும் எல்லா தேவர்களும் எனது சட்டக் கல்லூரியில் இடம் தருவேன் என்று சொல்லி விடுவாரா? இல்லை தலித் முதலாளிதான் அப்படி சொல்லி விடுவாரா? பணக்காரன் தன் சொத்தைப் பேணவும் குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்கவும் சொந்த சமூகத்தை சுரண்டிப் பிழைக்கவுமே சாதி வெறியை வளர்த்தெடுக்கிறான்.உழைப்புக்கும் நிலத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதா பார்ப்பான் இந்த தாசி மக்களுக்கெல்லாம் தத்துவம் வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த பார்பன தத்துவங்களை எல்லாம் உடைத்து நொறுக்கிய அம்பேத்கரையும் பெரியாரையும் மறுக்கும் அடியாட்களாக உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருப்பதும் அவன்தான்.

தனக்கும் கீழாக ஒரு அடிமையை வைத்திருந்து ஆதிக்கம் செய்வதில் சந்தோசமடையும் ஆதிக்க சாதிக்காரன் பார்ப்பானுக்கு அடிமையாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறான் என்பதோடு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஒரு குடியரசு தின விழாவில் குறிப்பிட்டதைச் சொல்லி முடிக்கிறேன்.‘‘இந்திய சமூகத்தில் ஒரு விதமான எதிர்ப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நமது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற குறைந்த பட்ச உரிமைகளைக் கூட சலுகைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைப்படுகிற போக்கு இந்திய சமூகங்களிடம் வளர்ந்திருக்கிறது’’என்று வேதனைப் பட்டார். ஆமாம் நம்மை விட கீழான மக்களுக்கு மிக மிக குறைவாக கிடைக்கும் சலுகைகளைப் பார்த்து நாம் ஏன் பொறாமைப் பட வேண்டும்.