பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும்.



பூவரசி வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பூவரசி குழந்தையைக் கடத்திக் கொலை செய்யும் செயலுக்கு தூண்டுதலாக இருந்த ஜெயக்குமார் தன்னை ஒரு உலக மகா யோக்கியனாக நீதிமன்றத்தில் நிறுவுகிறான். ஆணாதிக்க பொது ஒழுக்கத்தை பாதுகாக்கும் நீதியும் அதை ஏற்றுக் கொள்கிற போக்கிலேயே வழக்கு செல்கிறது. நான் அநேகமாக இன்னும் நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றம் பூவரசிக்கு தூக்குத் தண்டனையை வழங்கி தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும். ஜெயக்குமாரின் ஏமாளி மனைவியோ தூக்குத்தண்டனை விதிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக பூவரசியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போட வேண்டும் என்று பேட்டி கொடுப்பார். சொல்ல முடியாது விருகம்பாக்க வாசிகள் வெடி கொளுத்தி இனிப்பு வழங்கி பூவரசியின் தீர்ப்பை வரவேற்றாலும் வரவேற்பார்கள்.

கொடூர குற்றவாளிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதன் மூலம் கொடூர குற்றங்களையும் ஆதரிக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என் மீது குறைபடுகிறார்கள். கொடூர குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் நமது கவலையே தவிற கொடூர குற்றங்களுக்கு தண்டனையே தேவை இல்லை என்பதல்ல என் வாதம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் அவருக்கான உரிமைகள் உண்டு. அவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சுமத்தியவர்களுக்கு உண்டு அதை சட்டத்தின் வழி நின்று நிரூபிக்க வேண்டுமே தவிற பொதுப்புத்தி, பொது மனச்சாட்சி, மக்கள் விருப்பங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பலான தீர்ப்புகளில் சட்டத்தின் அளவுகோல்களை விட பொதுப்புத்தியும், நம்பிக்கையும், பெரும்பான்மனை மக்கள் விருப்பமுமே நீதியின் முடிவாய் இருக்கிறது. கோவை மோகன்ராஜ் என்கவுண்டரிலும், பூவரசி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நான் பூவரசி செய்த குழந்தைக் கொலையை எதை வைத்தும் நியாயப்படுத்த வில்லை. பூவரசியை மிக மோசமான முறையில் ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் ஏமாற்றி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். பூவரசி எல்லா இந்திய பெண்களையும் போல தன்னை திருமணம் செய்யும் படி ஜெயக்குமாரை வற்புறுத்த அவரோ ஒரு கட்டத்தில் பூவரசியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.ஆண்களின் விஷக் கொடுக்குகளுக்கு தன்னை பலியாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் மனப்போராட்டம் ஒரு பக்கம். இதை எதையும் கண்டு கொள்ளாத ஜெயக்குமார் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்தது இன்னொரு பக்கம் என பூவரசி மன ரீதியான துன்பங்களுக்கு ஆளான நிலையில் ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது குழந்தையைக் கடத்திக் கொன்று விட்டார். இப்போது ஜெயக்குமார் கதையை இப்படித் திரிக்கிறார். பூவரசி மீது தான் இரக்கப்பட்டு வேலை கொடுத்ததாகவும் அவர் விரும்பியே தான் அவருடன் பழகியதாகவும் கடைசியில் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார். ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.ஜெயக்குமாரின் மனைவிக்குமே தன் கணவன் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய விளையாட்டால்தான் இக்கொலை நடந்தது என்ற எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. இந்த இடத்தில் ஜெயக்குமாரின் மனைவிக்கு இம்மாதிரியான தொடர்பு இருந்தால் அதை ஜெயக்குமார் மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் உண்டு. ஆக சொத்துடமை சமூகத்தின் இறுகிய கட்டமைப்பான ஆண் தலைமை தன் சகல அதிகாரங்களையும் பெண் மீது செலுத்துகிறது. ஜெயக்குமார் பூவரசியை ஏமாற்றியது ஆண் என்ற இயல்பில் என்பதை ஒரு பெண்ணின் தலை மீது சுமத்துகிறது.

ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை

பூவரசியை ஜெயக்குமார் பல முறை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தார். ஊடகங்களோ அவர் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அந்த பெண்ணை அம்மணமாக்கி பாலியல் வன்முறை செய்கின்றது. ஓவ்வொரு முறை அவர் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போதும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போது வெளியில் ஒரு கூட்டம் பெண்கள் துடைப்பங்களோடு திரண்டு வந்து அவரை அடிக்கிறோம் பேர்வழி என்று நிற்கிறார்கள். கையில் துடைப்பங்களோடு நிற்கும் அவர்களும் ஒவ்வொரு பூவரசிகள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாத வரை அது இந்த சமூக அமைப்பிற்கு சாதகம் என்பதால் போலீசே சில நேரங்களில் குற்றம் சுமத்தப்பட்டவரை அடிக்க ஆள் திரட்டுகிறார்கள். பெண் போலீசின் பிடியில் அழைத்து வரப்படும் பூவரசியை இரண்டு நிமிடங்கள் பெண் போலீசே மீடியா முன்னால் நிறுத்துகிறார்கள். இது ஏதோ தற்செயலாக நடக்கிற நிகழ்வல்ல, அன்றைக்கு ஒரு புது பூவரசி கிளிப்பிங்ஸ் கிடைத்தால் செய்திக்கு முக்கியத்துவம் என்பதால் இவர்களின் போலீஸ் கூட்டு என்னும் அடிப்படையிலேயே பாளாஷ்களை அந்தப் பெண்ணின் மீது இறக்குகிறார்கள். ஆக அவர் தினம் தோறும் ஊடகங்களாலும் தொந்தரவு செய்யப்படுகிறார்.

எடிகா அன்னம்மாவும், பூவரசியும்

இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நமது மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணய்யரிடம் வந்த வழக்கில் அவர் எடிகாவை கருணை காட்டி விடுதலை செய்தார் ( நான் கிருஷ்ணய்யரைக் கண்ட நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் "கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.இங்கு எடிகாவோடு பூவரசியையும் பொறுத்திப் பார்க்கலாம் தன்னை காதலித்தவன் ஏமாற்றியதால் அவன் மீது வரவேண்டிய கோபம் அந்த பெண்ணுக்கு அவனது குழந்தை மீது வந்து கொலையும் செய்து விடுகிறாள். இங்கே கொடூரமான குற்றங்களையோ பாலியல் சார்ந்த கொலைகளையோ பூவரசி மீதான குற்றச்சாட்டுகளோடு ஒப்பிடவே முடியாது.
பூவரசி கொலை செய்த சூழல், அவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு, அவரது சமூகப் பின்னணி, தனிமை, ஏற்கனவே அவர் உளவியல் ரீதியாகவும், சிறை ரீதியாகவும் அனுபவித்து விட்ட தண்டனை உள்ளிட்ட சகல விஷயங்களையும் கணக்கில் கொண்டு பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்காக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலையா? - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நேர்காணல்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 13&ம் தேதி இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்தக் கொடூர நிகழ்வின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன. அந்தத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களோ, தூக்கில் தொங்க விட்டு தண்டிப்பதே சரி என்று ஆவேசம் பொங்க கூறுகின்றன.ஜனாதிபதியின் கைகளில் இருக்கும் கருணை மனுவில், அப்சலின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க... இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை போராளியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ் ணய்யரை கேரளத்தின் எர்ணாகுளத் தில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

முதுமையின் சுருக்கங்கள் உடம்பில் தெரிந்தாலும் மனதில் தளர்வு துளியும் இல்லை. இரண்டு பேரை கைத்துணையாக அழைத்துக்கொண்டு இப்பவும்கூட மனித உரிமை கூட்டங்களுக்கு போகி றார் கிருஷ்ணய்யர். ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு என்று நான் வழங்கிய சில தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத்தான் இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்றபடி நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் கிருஷ்ணய்யர். நானும் நீதிபதியாக இருந்தவன். சுதந்திர இந்தியாவில் மக்களால் ஓட்டுச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்கவும் பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு கொலைக்கு தண்டனையாக அரசு இன்னொரு கொலையை நிகழ்த்துவது மகா பாவம்.

1957 - ல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்தியாவின் முதல் கேரள அர சாங்கத்தில் ஈ.எம்.எஸ்&ன் தலைமையிலான அரசாங்கத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது என்னிடம் சி.ஏ.பாலன் போட்ட மனு என்னிடம் வந்தது. அவருக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய் திருந்தது. ஜனாதிபதி அவருடைய கருணை மனுவை நிராகரித்திருந்தார். உயிர் வாழ்வதற்கான அவரது கோரிக்கை என்னிடம் வந்தபோது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க முடிந்தது. அதே மாதிரி உச்சநீதிமன்றத்தில் என்னிடம் வந்த எடிகா அன்னம்மா வின்வழக்கையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொ ருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள்.

எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பாயத்தில் என்னோடு நீதிபதி சர்க்காரியாவும் இருந்தார். நான் அவரிடம், இந்த இளம் பெண்னை நாம் தூக்கிலிடகூடாது என்றேன். கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டேன். மரண தண்டனையில் இருந்து தப்பிய பாலனும் சரி, எடிகாவும் சரி... அதன் பின்னர் பயம் தொலைந்து கொலை வெறியோடு அலையவில்லையே!

உலகின் நூற்றுக் கணக்கான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ராஜீவ் காந்தியைவிட வஞ்சகமான முறையில் மவுண்ட் பேட்டன் பிரபு கொல்லப்பட்டார். ஆனால், அவரைக் கொன்ற வருக்கு பிரிட்டன் மரண தண்டனை வழங்கவில்லை. கொலை என்பது ஒருவன் ஆத்திரத்தில் தன்னை இழக்கிற கணத்தில், அவன் அறவே வேறு மனிதனாகி விடுகிற சூழ்நிலையில் நடப்பது. அப்போது எந்தத் தண்டனையைப் பற்றியும் யோசித்துவிட்டு அந்தக் கொடுமையை அவன் செய்வதில்லை. மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளைஞர் களுக்கும் இது பொருந்தும். நான் மரண தண்டனைதான் வேண்டாம் என்று சொல்கிறேனே தவிர, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளே வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் நானும் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஏற்று வாழும் குடிமகன்தான். மரண தண்ட னையோ, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் என்ற பிற்போக் குத்தனம் கொண்டது!

அப்சலின் மரண தண்ட னைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே?

நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்று ஒரு தீர்ப்பில் எழுதி னேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன். காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அப்சல் மட்டுமல்ல யாரையுமே தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார். அவர் மீது அப்சலுக்கோ, தீவிரவாதிகளுக்கோ ஆதரவானவர் என்று முத்திரை குத்த முடியுமா?

நீங்களெல்லாம் சொல்கிற அளவுக்கு, மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் மக்களிடமிருந்து எழவில்லையே? மக்களின் மனநிலை வேறாக அல்லவா இருக்கிறது?

மக்களிடம் மரண தண்டனைக்கு ஆதரவான சிந்தனைப் போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரிக்க முடியாது. எல்லா நேரமும் மக்கள் மிக நியாயமாக யோசிப்பார்கள் என்றோ நல்ல தீர்ப்பையே கொடுப் பார்கள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றப் பார்க்கிற அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால் மக்களின் இந்தக் குறிப்பிட்ட கருத்துடன் பின் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பனாக இருக்க விரும்புகிறேன். நான் சொல்வதெல்லாம் இதுதான்... அன்பை பளிங்கில் பதித்திடுங்கள்... காயங்களை தூசியைப்போல துடைத்திடுங்கள் என்கிற பாரசீக பழமொழியை நினைவில்கொள்வோம். ஏனென்றால் அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும் நிம்மதியையும் தரும் என்றார் உருக்கமாக!


நன்றி- ஆனந்தவிகடன்,
25- 10- 2006

குருதியுறையும் தண்டகாரண்யா.



(இகட்டுரை எழுதி முடிக்கப்பட்ட பின் மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் இருந்தும் ஜார்கண்டில் கிகுந்தி மாவட்ட காடுகளில் இருந்தும் வருகிற செய்திகள் இந்தியா தன் சொந்த்க் குடிகள் மீதான் போரை துவங்கி விட்டதை முன்னறிவிக்கின்றன. வன்னி மக்கள் மீது வீசக் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை இப்போது தன் சொந்தக் குடிகள் மீதே பயன்படுத்தத் துவங்கியிருகிறது இந்தியா. இனி வரும் மாதங்களில் பெரும் ரத்தக்களரியை நடத்தி முடிப்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் அவர்கள்)

சிதம்பரம் வாயில் தவழும் சைவத் தமிழைக் கேட்கக் கேட்க இனிக்கும். பிசகில்லாத மொழி நடையில் தூய தமிழாய் வந்து விழுகிற வார்த்தைகளும் அவர் தும்பைப் பூ நிறத்தில் உடுத்தியிருக்கும் கதர்ச் சட்டையின் வெண்மை போனறதுதான்.ஆனால் ஈழப் படுகொலைகளில் அவர் பேசிய வார்த்தைகளின் எச்சில் ஈரம் காய்வதற்குள் நடத்தி முடித்த கொலை பாதகம் நினைவிலிருந்து அகல்வதற்குள், காஷ்மீரிலும் மத்திய இந்தியாவிலும் ரத்த தாண்டவத்தைத் துவங்கும் வேட்டையை துவங்கி விட்டார்கள். ஒரு பக்கம் போரையும் இன்னொரு பக்கம் வெள்ளை முகத்தையும் காட்டும் இந்த மனிதர். இப்போது பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாகப் பேசுகிறார். அச்சமாக இருக்கிறது.அவர்கள் எப்போதெல்லாம் முன்னேற்ற, என்ற சொல்லை பிரயோகிக்கிறார்களோ அப்போதெல்லாம் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படும் அனுபவத்தை நாம் காண்கிற நிலையில் மத்திய இந்தியாவின் லால்கர் முதல் சர்ஜாகர் வரை பழங்குடிகளை அமைதியான முறையில் கொன்றொழித்து விடுவார்களோ என்று நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.மாவோயிஸ்டுகளின் சமாதான முன்னெடுப்புகளை இவர்கள் நடத்திய இரண்டு கொலைகள் சீர்குலைத்திருக்கிறது. இந்த மனிதரின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டினார் சுவாமியும் சமூக சேவகருமான அக்னிவேஷ். இந்திய புரட்சிகர இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சிக்குரி ராஜ்குமாரையும் பத்திரிகையாளர் ஹேமச் சந்திர பாண்டேயையும் போலி என்கவுண்டரில் கொன்றதன் மூலம் தண்டகாரண்யா போரில் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நீருபித்திருக்கிறது.

சுவாமி அக்னிவேஷின் வாக்குமூலம்.
…………………………………………………………………………
சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கேட்டுக் கொண்டதன் பேரில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டவர். சிக்குரி ராஜ்குமாரும், ஹேமச்சந்திர பாண்டேயும் கொல்லப்பட்ட பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான அவரின் நம்பிக்கைகள் பெருமளவு குலைந்து விட்டது. அவர் சிதம்பரத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். சுவாமியின் நீண்ட நேர்காணலை zee news.com வெளியிட்டுள்ளது. தோழர்கள் கொல்லப்பட்டது, அமைதி முயர்ச்சி தொடர்பாக அவரது நேர்காணலின் சுருக்கம்.

சிக்குரி ராஜ்குமாரும், ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டேவும் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதில் என்னவிதமான கருத்தை நான் சொல்லி விட முடியும். மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்குமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைக்கான மீடியேட்டராக நான் இருந்தேன். அமைதி முயர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்குமாரையும் பாண்டேயையும், கொன்று விட்டார்கள். மக்களும் சரி மாவோயிஸ்டுகளும் சரி இந்த இருவரும் ஆந்திர போலீசால் கொல்லப்பட்டதாகத்தான் சொல்கிறார்கள். இக்கொலைகள் போலி என்கவுண்டர் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள். நானும் இதை கொலை என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக நான் சமீபத்தில் ப. சிதம்பரத்தைச் சந்தித்தேன். ஏன் இப்படிச் செய்து விட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ”எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் ஆந்திர அரசைப் போய் கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு எதுவுமே தெரியாது. என்றார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதல் நடவடிக்கையாகவும் முன்னணி நடவடிக்கையாகவும் உள்ள நகசல் ஒழிப்புப் போர் பற்றி கவனம் கொள்ளும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அந்த பதில் என்னை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

சமாதானம் தொடர்பாக என்ன மாதிரியான உரையாடல் நடந்தது. மாவோயிஸ்டுகள் அமைதி முயர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?

இந்த வருடம் (2010) மே&11&ஆம் தியதி சிதம்பரம் ஒரு கடிதம் கொடுத்தார். அதை நான் மாவோயிஸ்டுகளுக்குக் கொடுத்தேன். மே மாதம் 31&ஆம் தியதி மாவோயிஸ்டுகளிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொள்கிறோம். அதற்கு வசதியாக எங்கள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் நீடிக்க விரும்புகிறோம் என்று மாவோயிஸ்டுகள் கொடுத்தனுப்பிய இரண்டரை பக்க கடிதம் மிகுந்த நம்பிக்கையளிக்கும் படி இருந்தது. நான் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சிதம்பரத்தைப் பார்க்கச் சென்றேன். கடிதத்தைப் பார்த்து விட்டு இதில் பேச்சுவார்த்தைக்கான தேதியோ யுத்த நிறுத்தத்திற்கான தேதியோ குறிப்பிடப்பட வில்லையே, நான் உயரதிகாரிகளுடன் பேச தேதி இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்றார். அவரே மூன்று தியதிகளைக் குறித்துக் கொடுக்க தையும் நான் மாவோயிஸ்டுகளிடம் தெரிவித்தேன். அது தொடர்பாக ஆலோசித்து விட்டுச் சொல்வதாக அவர்கள் சொல்ல அதற்குள்தான் இருவரைக் கொன்று சூழலை மோசமாக்கி விட்டார்கள்.

ஜனநாயகத்தில் பங்கேற்போம் என்று மாவோயிஸ்டுகள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர சம்மதித்து விட்டார்களா?

தேர்தல் அரசியலுக்கு வருவதாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களின் கஷ்டங்களையும், மக்களின் கஷ்டங்களையும் சமாதானமான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

அவர்கள் இராணுவத்தினரையும் மக்களையும் கொன்றிருக்கிறார்களே?

அவர்கள் கடைசியாக எழுதியிருக்கும் கடிதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்படவில்லை. எங்களைத் தேடி வந்து எங்களுடைய பகுதிகளுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் போது மட்டுமே நாங்கள் பாதுகாப்பிற்காக சுடுகிறோம். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்றும் அந்த மக்களுக்காக நாங்கள் வருந்துகிறோம் அவர்களுக்கு முறையான நட்ட ஈட்டைக் கொடுங்கள் என்கிறார்கள். மேலும் சட்டீஸ்கர் தாக்குதலில் கொல்லபப்ட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்து தோழர் உசந்தி மத்திய அரசுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். என்னைப் பொறுத்தவரையில் வன்முறையை யார் செய்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன். துப்பாக்கி முனையில் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் மனப்பூர்வமாகவே இவைகளைப் பேசுகிறார்கள். நல்லெண்ண நடவடிக்கையாத்தான் இவைகளைப் பார்க்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பழங்குடி மக்களின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்பாக்கிறார்கள்.

அரசு நிஜமாகவே பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது நாடகம் ஆடுகிறதா?

நீங்கள் சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள். எனக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. ராஜ்குமார் கொலை தொடர்பாக சிதம்பரத்திடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலும் சரி சமாதானம் ஒன்றை உருவாக்கும் முயர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே ராஜ்குமார், பாண்டேவைக் கொன்றதும் சரி நான் குழம்பிப் போயிருக்கிறேன்.

மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

ஒரு பகுதியில் முன்னேற்றத்தைக் கொண்டு வர அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி விட்டுதான் அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்றில்லை. அப்படி மக்களை வெளியேற்றி வளர்ச்சியைக் கொண்டு வரவும் முடியாது. மாறாக மக்களின் வளர்ச்சிதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி. மக்களின் முன்னேற்றம்தான் அந்தப் பகுதியின் முன்னேற்றம். அவர்களின் பூர்வீக நிலங்களின் உரிமை அவர்களுக்கு வேண்டுமென்று நினைக்கிறார்கள் இதில் என்ன தவறு? அவர்களின் நிலங்களை அபகரித்து மக்களை அப்புறப்படுத்தி விட்டு எப்படி வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும் அந்த வளர்ச்சி யாருக்கானது? 1948 – ல் -பக்காரா அணையைக் கடிட்னார்கள். அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பல்லாயிரம் ப்ழங்குடி மக்களின் வாரிசுகளும் சந்ததிகளும் இன்னமும் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது போல தெஹ்ரி டேம் , நர்மதா டேம் எல்லாம் வளர்ச்சிக்காக வந்தவைதான் அந்த மக்கள் என்ன ஆனார்கள்? ரூர்கேலா, பெக்காரோ, ஆகியவை எலலாமே வளர்ச்சியின் பெயரால் வந்தவைதான் இவைகள் மக்களை வஞ்சிக்கவில்லையா? ஆகவே மக்களை அப்புறப்படுத்தி விட்டு வளர்ச்சியைக் கொண்டு வருவது என்பதை நான் ஆதரிக்கவில்லை.

மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் போது அரசும் ஆயுதம் கொண்டுதானே தாக்கும்?

நீங்கள் ஒரு பொதுப் புத்தியில் இருந்து கொண்டு பொது ஜன மன நிலையில் இருந்து பேசுகிறீர்கள். பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலையில் இருந்து இந்தப் பிரச்சனையைப் பார்க்க வேண்டும். மாவோயிஸ்டுகளை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். அது மக்களின் கோபத்தை அதிகரிக்கிறது. அதனால்தான் மக்கள் அதிகளவில் மாவோயிஸ்டுகளோடு சேர்கிறார்கள். மற்றபடி நான் காந்தியின் சீடன் அமைதி வழியில்தான் இதைத் தீர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவன். பிரச்சனையில் வேரைக் கண்டு பிடித்து அமைதி வழியில் அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிற சுட்டுக் கொல்வதோ வன்முறை செய்வதோ பிரச்சனைக்குத் தீர்வாகாது.

மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

சமாதானம் வரவேண்டும். இருவருமே பேச வேண்டும். இதற்கு மேலும் உயிர்களை நாம் இழக்கக் கூடாது.

ஆஸாத் (ராஜ்குமார்) இறந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளுடனான உங்கள் பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது?

ஆசாத்தின் மரணம் சமாதான முயர்ச்சிகளைக் குழப்பி விட்டது. ஆசாத்தின் கொலையைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் பந்த் அறிவித்தார்கள். பந்தின் போது மிகக் குறைந்த அளவில்தான் வன்முறை நடந்தது. ஆக அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதைத்தான் இது காட்டுகிறது என்கிறார் சுவாமி அக்னிவேஷ்.

அமைதி என்பது புதை குழியா?
…………………………………………………..

மாப்பிளாவில், பூம்கல்லில், தெபக்காவில், தெலுங்கானா கிளர்ச்சியில் என்று நூற்றாண்டுகால போராட்ட வரலாறுகளாலும் ஏராளமான விவசாயிகளின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டங்களாலும் இந்தியச் சமூகங்கள் பெயரளவுக்கேனும் ஒரு சில உரிமைகளைப் பெற்றிருக்கின்றன. பெரிய ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆளும் வர்க்கங்கள் இழப்புகளை கணக்கில் கொண்டும் தாங்கள் விரும்புகிற சமூக அமைப்பிற்கு பங்கம் வராமல் இருக்கவும் நிலப்பகிர்வு, ஆரம்பக் கல்வி, மானியங்கள், போன்றவற்றை மிக மிகக் குறைந்த அளவில் கொடுத்து வருகின்றன. தனியார் மூலதனங்களின் குவியல், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், இவர்களின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் இன்றைய இந்தியாவில் இந்த உரிமைகளை இந்தியச் சமூகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை நாம் காண்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேஷன் அட்டைகளைக் கூட பறித்து விடும் திட்டங்களை வித விதமான தந்திரங்களோடு அரசுகள் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். முப்போக விளைச்சலையும் இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் நட்ட ஈடு கேட்கிறார்கள். பத்தாயிரம் கேட்டால் ஐந்தாயிரமாவது கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய வளமும் ஏகாதிபத்திய கொள்ளை லாப வெறிக்கு பலியாக்கப்படுகிற சூழலில் அதற்கு எதிரான பரந்த மக்கள் திரள் எதிர்ப்பு வடிவமாகவே நாம் மத்திய இந்திய பழங்குடி மக்களின் போராட்டங்களைக் காண்கிறோம்.

சிகப்புத் தீவீரவாதம், அவர்கள் மக்களைக் கொல்கிறவர்கள், அப்பாவிகளை வேட்டையாடுகிறவர்கள் என்று தொடர்ந்து பல மாதங்களாக இந்திய ஊடகங்கள் கூச்சலிட்டு வந்தன. நாம் நமது தலைவர்கள் என்று பார்த்தவர்கள் எல்லாம் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டும் கடமையை தேசீய வெறியாக கட்டமைக்க முயன்றார்கள்.ஒரு வேளை கார்கில் போருக்கு நிதி திரட்டி தடித்தனமாக இந்திய,பாகிஸ்தான் மக்கள் மீது திணிக்கப்பட்ட போர் ஒன்றிர்கு நிதி திரட்டி மக்களை தேசிய வெறியில் திரட்டியது போல மாவோயிஸ்ட் அழிப்பு என்னும் பெயரில் மக்களை அணி திரட்டும் ஆபத்தும் அதனூடாக ஊடகங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாயை அடைத்து பெரும் ரத்தக் களரியை தேசியப் பெருமிதமாக கட்டி எழுப்பி விடும் ஆபத்தும் இதில் இருக்கிறது. ஆக முழு அளவிலான விமானத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சுழலை பின்தளத்தில் உருவாக்கிக் கொண்டு சி.ஆர்.பி.எப்ஃ, ஸ்பெஷல் கமாண்டோ போர்ஸ், ஆந்திர சிறப்பு அதிரடிப்படை, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, என பல படைகளையும் ஒருங்கிணைத்து இஸ்ரேலின் மொசாட்டிடம் பயிற்சி பெற வைத்து நவீன போர் முறைக்கு தயார் படுத்தி களமிரக்கி இருக்கிறது இந்திய அரசு.

பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கான சமூக நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டே அடர்ந்த காடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை முகாம்களை விலக்கிக் கொள்வதும் அவர்களை நகரங்களை நோக்கி பின் வாங்கச் செய்வதும் முழு அளவிலான போர் ஒத்திகை போலத் தெரிகிறது. இன்றைய தேதியில் பல பத்தாயிரம் போர் வீரர்களையோ, ஆளணிப்படைகளையோ களமிரக்கத் தேவையில்லை மக்களையும் மரங்களையும் சேர்த்து எரிய விடும் பாஸ்பரஸ் குண்டுகளும், ஆக்சிஜனைக் கொன்று விடும் க்ளஸ்டர் குண்டுகளுமே போதுமானது. ஆளில்லா உளவு விமானத்தின் துணையோடு மிக நவீன முறையிலான கொடூர உத்திகளைக் கொண்ட வன்னிப் போரின் முன்னுதாரணங்களோடு தண்டகாரண்யா மீது பாயக் காத்திருக்கிறது மன்மோகன், சோனியா, சிதம்பரம் படைகள், தண்டகாரண்யாவில் படர்ந்துள்ள சிகப்புத் தீவீரவாதத்தை ஒழித்துக் கட்ட மேக்சிமம் நான்கு ஆண்டுகள்…… என்கிறார்கள். நண்பர்களே நான்காண்டுகள் கூட பேரழிவு ஆயுதங்களுக்குத் தேவைப்படுமா? என்று தெரியவில்லை.

வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.லால்கர் இயக்கத்தை ஒட்டி அதன் பின்னர் உருவாக்கப்பட்ட முகாம்களே இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் ஒவ்வொரு பழங்குடி கிராமங்களையுமே ஒரு முகாமாக மாற்றி அதை சல்வார்ஜூடும் படைகளிடம் ஒப்படைக்கிறார் சிதம்பரம். புலிகளின் இராணுவத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட மாவோயிஸ்டுகள் நிரந்தர மோதல் போக்கும் , முழு அளவிலான இராணுவ நடவடிக்கையும் பாரிய பின்னடைவுகளை உருவாக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தோழர் கணபதி ஊடகவியலாளர் ஜேன் மிர்தாலுக்கு வழங்கிய நேர்காணலில் ” பொதுவாக மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் யருடனும் ஆயுத மோதலோ வன்முறையோ தேவையில்லை. அவர்கள் எதிரிகளைத் தற்காத்துக் கொள்வதற்கும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே போராடுகிறோம். இன்றைய போராட்டத்தோடு ஒப்பிடும் போது குறைவான நிலப்பரப்பில் நடத்திய தெலுங்கானா கிளர்ச்சியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தோடு இந்தப் போரை சந்திக்கிறோம். அனைத்து சாத்தியங்களையும் கொண்ட இந்த யுத்தத்தில் சிறிய இடை அமைதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது கொஞ்சம் நீண்டகால அமைதியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதுதான்” என்கிறார் தோழர் கணபதி. ஆக வாசல் வரை வந்து ஏவக் காத்திருக்கும் வேட்டைக்காரர்களின் அனுபவங்களை அவர்கள் மக்கள் நலனில் இருந்து யோசிக்கிறார்கள். ஆனால் ஜிண்டாலுக்கும், எஸ்ஸாருக்கும் தேவையான கனிம வளங்கள் புதைந்திருக்கும் நிலங்களைக் காக்க சமாதானமாகவோ, வன்முறை வழியிலோ முயன்றால் அதை எப்படி சிதம்பரம் அனுமதிப்பார். ஆக அமைதியை புதை குழியாக்கும் எல்லா சாத்தியங்களையும் இவர்களே உருவாக்குகிறார்கள். அதன் முன்னுதாரணம்தான் தோழர் சிக்குரி ராஜ்குமார் கொலை.

தோழர் ஆசாத் என்னும் சிக்குரி ராஜ்குமார்.
…………………………………………………………………..
தோழர் ஆசாத் என்றழைக்கப்படுகிற சிக்குரி ராஜேந்திரன் இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்து கல்லூரி நாட்களில் புரட்சிகர இயக்கத்திற்கு வந்தவர். கெமிக்கல் என்ஜினியரிங் முடித்தவர். ஆந்திராவின் மாணவர் இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த தோழர் ராஜ்குமார் பின்னர் மக்கள் யுத்தக் குழுவில் இணைந்தார். கட்சியின் விசாகப்பட்டின மாவட்ட கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்தியா முழுக்க பல்வேறு முக்கிய கருத்தரங்குகளில் பேசியிருக்கிறார். 1981& ல் சென்னையில் நடந்த தேசியம் குறித்த கருத்தரங்கில் தோழரின் பங்கு குறிப்பிடத் தக்கது. 1982&ல் கட்சியால் கர்நாடகாவிற்கு அனுப்பப் பட்டார். இந்திய புரட்சிகர இயக்கத்திற்காக தன் வாழ்வை அர்பணித்துக் கொண்ட தோழர் ஆசாத் கடின உழைப்பாளி. அறிவை மேன்மையான ஒன்றாகக் கருதாத தோழர் ராஜ்குமார் மக்களிடம் உறையாடுவதையும் மக்களுக்காக வாழ்வதையுமே பெருமையாகக் கருதியவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட்டு இலக்கியம், எழுத்து தொடர்பாக ஆழமான விமர்சனங்களை முன் வைத்தவர். இப்போது அவர் இந்திய அரசுப்படைகளின் ஒரு அங்கமான ஆந்திரப் போலிசால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். இந்திய புரட்சிகர இயக்கத்தில் 35 ஆண்டுகளாக தன்னை இணைத்து இடைவிடாது மக்கள் பணி செய்த தோழரின் இழப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் ராஜ்குமார் கொல்லப்பட்டுள்ள நிலையில் தோழர் சீத்தாக்காவும் காணாமல் போயுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தோழர் சிக்குரி ராஜ்குமாரின் தலைக்கு அரசு 12 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. தேடப்படும் பயங்கரவாதியாக அவர் அறிவிக்கப்பட்டிருந்தார். கட்சிப் பணி தொடர்பாக தண்டகாரண்யா நோக்கிச் சென்றவரை நாக்பூர் ரயில் நிலையத்தில் பிடித்து மகாராஷ்டிராவில் உள்ள அடிலாபாத் காட்டிற்குக் கொண்டு சென்று அவரோடு கூடவே கடத்தப்பட்ட பத்திரிகையாளர் ஹேமச்சந்திர பாண்டேயையும் சுட்டுக் கொன்று விட்டு துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. தோழர் ஆசாத்( ராஜ்குமார்) கொல்லப்பட்டது தொடர்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தண்டகாரண்யா பேச்சாளர் தோழர் உசேந்தி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ” நான் ஏற்கனவே ஆசாத்தை ஆந்திரப் போலீசார் குறிவைத்து விட்டதை ஊடகங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஜூன் ஒன்றாம் தியதி ஆசாத் தண்டகாரண்யாவுக்கு வர வேண்டும் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாதம் இங்கே தங்கியிருந்து தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க வேண்டும் என்பது கட்சி அவருக்கு வழங்கிய வேலை. ஹிந்தி மொழியில் ஒலிபரப்பாகும் பி.பி.சி ரேடியோவுக்கு ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பது தோழர் ராஜ்குமாரின் எண்ணம். ஆனால் இது பி.பி.சி வானொலிக்குத் தெரியாது இந்த திட்டத்தின் படி தோழர் ஆசாத் முப்பதாம் தியதியே நாக்பூர் வந்து விடுகிறார். அவர் வந்து விட்ட செய்தி ஜூன் 30&ஆம் தியதி எனக்குக் கிடைத்தது. மறு நாள் ஜூலை ஒன்றாம் தியதி காலை சாதேவ் என்ற தோழரை நாக்பூரில் இருக்கும் சீதாப்ருதி என்ற இடத்தில் சந்தித்து விட்டு அன்றே காலை 11 மணியில் இருந்து ஒரு மணிக்குள் தண்டகாரண்யா வந்து விடுவேன் என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் தோழர் ராஜ்குமார். ஆனால் அதுதான் அவரிடம் இருந்து வந்த கடைசிச் செய்தி.

ஜுலை இரண்டாம் தியதி இரண்டு மாவோயிஸ்டுகளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அடிலாபாத் காட்டில் வைத்து இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், பிஸ்டலும் கிடந்ததாகவும் கதை சொல்கிறார்கள் அடிலாபாத்தில் எங்கள் கட்சியோ எங்களுக்கான வேலைத்திட்டங்களோ எதுவும் இல்லாத போது தோழர்கள் ஏன் அடிலாபாத்திற்கு செல்ல வேண்டும். முதலில் நாங்கள் அவர் சந்திக்கச் சென்ற தோழர் சாதேவையும் கொன்று விட்டார்கள் என்றுதான் நினைத்தோம். சாதேவ் என்று நம்பியதால்தான் அவர் பெயரை முதலில் சொன்னோம். ஆனால் தோழர் சாதேவ் எங்கள் பகுதிக்கு வந்து விட்டார். தோழர் ராஜ்குமாருடன் சென்ற தோழர் சீத்தாக்க்காவைக் காணவில்லை இப்போது வரை சீத்தாக்கா என்னவானார் என்கிற தகவல்கள் இல்லை.” என்கிறார் தோழர் உசேந்தி. தோழர் சீத்தாக்க குறித்து உசேந்தி சொன்னதாக வெளியாகியுள்ள இத்தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துவதற்குள் தோழர் ராஜ்குமாரை கான்பூரில் பிடித்துச் சென்றதாகச் சொல்கிறார்கள்.

ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டே
……………………………………………………………..

உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முற்போக்கு ஊடகவியளாரான ஹேமச்சந்திர பாண்டேவுக்கு வயது 30. உத்தர்காண்டின் பிட்டோகார் நகரில் பிறந்து நைனிடால் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு முடித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக பதிவும் செய்து வைத்திருந்தவர். கல்லூரி நாட்களில் மாணவர் அமைப்பில் இருந்தாலும் அதன் புரட்சிகர நடைமுறையில் முரண்பட்டு விலகியவர் பின்னர் மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக செயல்படுகிறார். மாவோயிஸ்டுகள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர் ஹேமச்சந்திர பாண்டே. ஹைதராபாத்தில் பாண்டேயின் உடல் வைக்கப்பட்டிருந்த போது தோழர் கத்தார், வரவரராவ் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் திரண்டு பாண்டேவுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பவில்லை ஆந்திர மாநில அரசு. நெஹ்துனியா என்ற இந்தி பத்திரிகையின் ஆசிரியர் அலோக் மேத்தாவோ இவர் எங்கள் ஊடகத்தில் எதுவுமே எழுதியதில்லை என்று ஹேமச்சந்திர பாண்டேயின் அடையாளத்தை கைகழுவினார். ஆனால் பாண்டேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த ஊடகவியளார்களோ அவர் பத்திரிகைப் பணியில் தங்களுக்குச் செய்த உதவிகளை பட்டியலிட்டனர். இங்குதான் ஹேமச்சந்திர பாண்டேயின் மனைவி பாபிதாவின் மன உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் ஹேமச்சந்திர பாண்டே மாவோயிஸ்டுகளோடு தனக்குள்ள தொடர்பை தன் மனைவி பாபிதாவிடம் மறைத்திருக்க வேண்டும்.

அவர் தனது புரட்சிகர செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பார் என்று ஹேமந்த் நினைத்திருக்கக் கூடும். பாபிதா இப்படிச் சொல்கிறார் ” பாண்டேவுக்கு மாவோயிஸ்டுகள் மீது கரிசனம் இருக்கலாம் ஆனால் அவர் எப்போதும் ஒரு மாவோயிஸ்டாக இருந்ததில்லை. பலர் அவரை மாவோயிஸ்டு என்கிறார்கள். சிலர் அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்கள். பாண்டே ஒரு பத்திரிகையாளர் எங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால் அவர் சுதந்திர ஊடகவியலாளராக இருந்தார். அதற்கான சான்றுகள் என்னிடம் இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தியதி நாக்பூரில் ஒரு பத்திரிகைப் பணிக்காகச் ( Assignmend) செல்கிறேன் என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்” என்கிறார் பாபிதா.

ஆனால் மாவோயிஸ்ட் கட்சியினரோ கட்சியின் வடக்கு மண்டலத்தில் ஹேமச்சந்திர பாண்டேவுக்கு நாங்களே சில வேலைகளைக் கொடுத்திருக்கிறோம். மண்டலப் பொறுப்பாளராகவும் அவரை சமீபத்தில் நியமித்திருந்தோம் என்கிறார்கள்.

ஹேமச்சந்திர பாண்டே கட்சியோடும் மக்களோடும் நெருக்கமாக இருந்திருக்கிறார். ஒரு ஊடகவியளாராக இருந்து முழுப் பொழுதையும் மாத ஊதியக்காரனாக கழிக்காமல் மக்களோடு இணைந்த பத்திரிகையாளராக பணியாற்றியும் வந்திருக்கிறார். இதில் கட்சியோடு கொண்டிருந்த தொடர்புகளை அவர் பாபிதாவிடம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். தனது கணவரின் கொலைக்காக பாபிதா ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியைச் சந்தித்து ஹேமந்தின் சம்பளப்பட்டுவாடா ரசீதுகளைக் காண்பித்து ஹேமச்சந்திர பாண்டே ஒரு ஊடகவியளர் அவரை ஏன் ஆந்திர சிறப்பு அதிரடிப்படைக் கொன்றது என்று விசாரணைக் கோரிக்கை வைக்க அவரோ, ‘ஹேமச்சந்திர பாண்டே கட்சியின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். ரெட்டியோ, சிதம்பரமோ அவர்களுக்கு பாபிதாக்களின் கண்ணீருக்கு என்ன முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாராளுமன்றத் தாக்குதலில், தாஜ் ஹோட்டல் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளின் கண்ணீருக்கே இந்த செல்வந்தவர்களிடம் ஒரு மதிப்பும் கிடையாது. மும்பை தாஜ் ஹோட்டலில் கொல்லப்பட்ட கோடீஸ்வரர்களின் கண்ணீருக்கு வேண்டு மென்றால் ஆளும் வர்க்கங்களிடம் மதிப்பிருக்கலாம்.

மாவோயிஸ்டுகள் கடத்திக் கொன்ற காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் மனைவியின் கண்ணீருக்கோ, அல்லது தாந்தேவாடாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்களின் மனைவிகளின் கண்ணீருகோ என்ன மதிப்பிருக்கும்? காஷ்மீரில், மத்திய இந்தியாவில் போராடும் சக்திகளுக்கு எதிராக இந்திய கூட்டு மனச்சாட்சியில் ஒரு தேசிய வெறியை கட்டமைக்க மட்டுமே இந்தப் பிணங்களை பயன்படுத்துகிறார்கள். ராஜீவ்காந்தியைப் புதைக்காமல் இன்னமும் தமிழகத்தையே ஒரு எமர்ஜென்சிக் கோட்டையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களே அது போன்ற ஒரு நிரந்தர ஒடுக்குமுறைக்காக இந்தப் பிணங்கள் தேவைப்படுகின்றன. ஆக பாபிதா யாரிடம் போய் நியாயம் கேட்க முடியும்?

கூடவே அவர்கள் அமைதியையும் கொன்று விட்டார்கள்.
………………………………………………………………………………………….

பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைகள் இன்னமும் மீதமிருப்பதாக சுவாமி அக்னிவேஷ் சொல்லியிருக்கிறார். மாவோயிஸ்டுகளிடமிருந்து வந்த கடிதத்தில் தேதி குறிப்பிடாதிருந்த நிலையில் சிதம்பரம் மூன்று தேதிகளை அதாவது ஜூலை 10, ஜூலை 15, ஜூலை 20 இந்த மூன்று நாட்களும் அரசுப் படைகள் யுத்த நிறுத்தம் செய்யும். அதே நாட்களில் மாவோயிஸ்டுகளும் யுத்த நிறுத்தத்திற்கு தயாரா என்று சிதம்பரம் அகினிவேஷிடம் கடிதம் மூலம் கேட்க அரசின் கோரிக்கையை அக்னிவேஷ் மாவோயிஸ்டுகளிடம் தெரிவிக்கிறார். அந்த கோரிக்கை தொடர்பான ஆலோசனைக்குத்தான் தோழர்கள் சிக்குரி ராஜ்குமாரும், சீத்தாக்காவும், தோழர் ஹேமச்சந்திர பாண்டேவும், சாதேவும் நாக்பூரில் சந்திக்கும் திட்டத்தோடு சென்றிருக்கிறார்கள். இப்போது சாதேசைத் தவிற யாருமே இல்லை. ராஜேந்திரனும், பாண்டேவும் கொல்லப்பட்டு விட்டார்கள். சீத்தாக்கா என்னவானார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அமைதிக்கான நாட்களாக குறிக்கப்பட்ட ஜூலை முடியப் போகிறது ராஜ்குமாரின் ரத்தக் கறைகளோடு நிற்கும் அவர்களிடம் நாங்கள் பேச வெண்டுமா? என்று ஆவேசமாக மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இக்கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட நிலையில் இன்று 26&07&2010 அன்று ஆறு மாவோயிஸ்டுகளைக் நேரடி மோதலில் கொன்று விட்டதாக செய்திகள் வருகின்றன. மாவோயிஸ்டுகளை இவர்கள் கொலைகளைச் செய்யத் தூண்டுகிறார்கள். இவர்கள் செய்யும் கொலைகளுக்கு பதிலடியாக அவர்கள் செய்யும் அரசியல் படுகொலைகளை பூதாகரப்படுத்திக் காட்டுகிற ஊடகங்கள் விலங்களைப் போல கொன்று கம்புகளின் காவிச்செல்லப்படும் மாவோயிஸ்டுகளின் உடல்கள் பற்றி குறைந்த பட்ச கவலையைக் கூட வெளிப்படுத்துவதில்லை.

தண்டகாரண்யாவின் இன்றைய அமைதி இழந்த் நிலைக்கு சோனியா, மன்மோகன், சிதம்பரம்தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த பல வருடங்களாக அமைதி இழந்து விட்ட தண்டகாரண்யா மக்களுக்கு குறைந்த பட்சம் சிவில் வாழ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால் நமக்கும் சந்தோஷம் தான். ஆனால் இவர்கள் மாவோயிஸ்டுகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். பழங்குடிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைதிக்கான சாத்தியங்கள் குறித்துப் பேச முடியும்.

இந்திய அரசோ மாவோயிஸ்டுகள் பாராளுமன்ற அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

அதாவது சி,பி.எம் கட்சியைப் போல அவர்களும் தேர்தல் அரசியலில் பேரம் பேசும் சக்திகளாக வலுப்பெறுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் ஒரு போதும் தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பவில்லை. வரவிரும்பவில்லை என்பதை விட அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவ அமைப்பை தூக்கி எரிந்து விட்டு புதிய ஜனநாயக புரட்சியை மாவோ சிந்தனையில் வன்முறை வழியில் நிறுவப் போராடும் அமைப்பு எப்படி தேர்தல் அரசியலுக்குள் வரும் என்பதே அடிப்படை முரண். அடுத்து மாவோயிஸ்டுகள் வைக்கும் அடுத்த கோரிக்கை, நிலத்தின் மீதான உரிமை பழங்குடி மக்களுக்கே என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. ஆயுதப் போராட்டம் தேர்தல் அரசியல் என்பதை எல்லாம் விட சிதம்பரம் அன் கோவுக்கு உறுத்துகிற மிகப்பெரிய அச்சுறுத்தலே இதுதான். அவர்கள் எஸ்ஸார், ஜிண்டால் உள்ளிட்ட ஏராளமான சுரங்க, கனிம நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டு வைத்துக் கொண்டு நிலங்களை குறிவைத்து களமிறங்குகிறார்கள். மக்களை வெளியேற்றி விட்டு முழுமையாக வளங்களை கொள்ளையடிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் சிதம்பரத்தின் திட்டம். மாவோயிஸ்டுகளோ மக்களையும் நிலங்களையும் காப்பாற்றியாக வேண்டும். ஒன்றிலோ புரட்சியை மாவோயிஸ்டுகள் கொண்டு வர வேண்டும் அல்லது போராட வேண்டும். அல்லது தனியார் முதலாளிகளுக்காக தனிப்பட்ட விருப்பங்களோடு படைகளைக் குவிக்கும் சிதம்பரம் வெற்றி பெற வேண்டும். எழுத்தாளர் அருந்ததிராய் தோழர்களுடன் ஒரு பயணம் என்னும் நூலில் முக்கியமான பிரதானமான அந்தக் கேள்வியை முன்வைக்கிறார் தண்டகாரண்யா காடுகளில் உள்ள வளங்களை இந்தியா எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மாவோயிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். ஒரு வேளை மாவோ சிந்தனையின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளின் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அந்த கனிமங்களை தோண்டி எடுக்காமல் விட்டு விடுவார்களா ? என்று கேட்டிருக்கிறார். தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் கண்டறியப்பட்டிருக்கும் பிளாட்டினப்படிமங்கள் என்பது எடுத்து பயன்படுத்தத்தான்.

ஆனால் அது யாருடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்பது உருவாகிறது. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு மரபான விவசாய முறைகளை நவீனப்படுத்தி காடுகளைப் பாதுகாத்துக் கொண்டே இவைகளைச் செய்ய முடியும். மற்றபடி வளர்ச்சியின் பெயரால் சட்லஜ் நதியின் கட்டப்பட்டிருக்கும் பக்காரா அணையின் பெயராலோ நர்மதாவின் பெயராலோ வெளியேற்றப்படும் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது என்பது அவர்களை தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தவேயன்றி வேறொன்றும் இல்லை. ஆக இங்கே எஸ்ஸாரும்….ஜிண்டாலும்…..ரத்தம் கேட்கிறார்கள். பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்துவதின்றும் இந்தியப் படைகளுக்கு தயக்காமான ஒன்றல்ல. இப்போதே நவீன போர் ஒன்றை தன் சொந்தக் குடிகள் மீதே தொடுப்பதற்கு தயாராகி விட்டது.

இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான்.



சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவரும் ஈழப் போராட்டம், மனித உரிமை விஷயங்களுக்காக போராடியவருமான தோழர் அசோக்குமார் என்னும் இனியன் இரண்டு நாட்களாகியும் நினைவு வராமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு வருமா? பிழைப்பாரா? பிழைத்தாலும் முன்பைப் போல நினைவாற்றலோடு எழுந்து நடக்க முடியுமா? எதுவுமே தெரியவில்லை.தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாத அந்த ஏழைத் தாய் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நமக்காக பல பிரச்சனைகளுக்காகவும் போராடிய தோழர் இனியனைத் தாக்கிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய அதிகாரி ஆல்பர்ட் விலசனும் அவரது அடியாள் படையும் இன்னும் தண்டிக்கப்படாத நிலையில் சாதி வெறி என்னும் இருண்ட மேகம் மிக வேகமாக நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. தலித்துக்களுக்காகப் பேசவோ போராடவோ உண்மையான தலைவர்கள் எவரும் இல்லாத நிலையில் சில காலம் குறைந்திருந்த தாக்குதல் மீண்டும் தமிழகம் முழுக்க தலையெடுக்கிறது.

அத்தியாவசியப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, நிலங்கள் பறிக்கப்படுதல், வலுக்கட்டாய இடப்பெயர்ச்சி என மக்களின் துன்பங்கள் அதிகரித்துச் செல்லச் செல்ல மக்கள் வன்முறையும் ஒரு பக்கம் வெடித்து வருவதைக் காண முடிகிறது. அத்தகைய தன்னெழுச்சிப் போராட்டங்களைக் கூட போலீஸ் இரும்புக் கரம் கொண்டு நொறுக்கும் போது தலித்துக்கள் எல்லாம் எம்மாத்திரம். அப்படி தன்னெழுச்சியாய் கிளர்ந்ததுதான் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்.சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவரான அசோக்குமார் என்னும் இனியனை திருக்கழுக்குன்றம் போலீசார் தாக்கியது தொடர்பாக, 18-ஆம் தேதி சென்னை பாரிமுனைச் சந்தியை மறித்து நடந்த ஏழு மணி நேரப் போராட்டம். வழக்கம் போல மத்யமரின் பப்ளிக் நான்சென்ஸ் மனோபாவத்தையும் மீறி சுமார் ஏழு மணி நேரம் சென்னையை உலுக்கியது.17-ஆம் தியதி அசோக்குமார் பயணம் செய்த பேருந்தில் அவருக்கும் பக்கத்து இருக்கைக்காரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட டிரைவர் பேருந்தை திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருவரையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். தன்னை ஒரு சட்டக்கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்ட இனியனை திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் தலைமையில் சில போலீசார் விசாரித்துக் கொண்டிந்த போது.

அங்கு வந்த இன்னொரு காவலர் ‘’சார் இவன் தான் சார் இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடுவான். போஸ்டர் ஒட்டி டார்ச்சர் பண்ணுவான். செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்” என்று வந்த காக்கிச் சட்டை போட்டுக் கொடுக்க. திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் ’’பறத் தேவுடியாப் பயலா நீயி…… என்றபடி எட்டி உயிர் நிலையில் உதைத்திருக்கிறார். அடுத்தது அத்தனை காக்கிச் சட்டைக்காரர்களும் ஒன்று சேர்ந்து இனியனைச் சுற்றி நின்று ஆல்பர்ட் விலசன் தலைமையில் நிர்வாணமாக்கி உதைத்திருக்கிறார்கள். அடிவயிற்றிலும், விதைப் பகுதியிலும் விழுந்த உதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத இனியன் அப்படியே நிலைகுலைந்து விழ நிர்வாணமாக லாக்கப்பில் போட்டிருக்கிறார்கள். மெள்ள மெள்ள இனியன் லாக்கப்பிலேயே நினைவும் இழக்க பொய்யான தகவலைச் சொல்லி போலீஸ் இனியனின் உறவினர்களை அழைக்க அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்க்கிறார்கள்.

அங்கு கொண்டு செல்லப்பட்ட இனியன் காவல்துறையினரின் தாக்குதலால் வலி தாங்க முடியாமலும் அவமானத்தாலும் தூக்கில் தொங்கி விட்டார். தூக்கில் தொங்கி கொஞ்ச நேரம் கழித்து தூக்கில் தொங்கியவரை இறக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இனியன் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும் இன்னமும் குற்றவாளிகளான திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்படவில்லை.இனியன் தூக்கில் தொங்கினார் என்று செய்தி கசியத் துவங்க சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பாரிமுனை சந்திப்பை நான்கு பக்கமும் அடைத்து போராடினார்கள்.திருக்கழுக்குன்றத்தில், செங்கல்பட்டில், விழுப்புரத்தில், கோவையில், என வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களும் போராடத் துவங்க சென்னையில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் ஏழு மணி நேரம் நீடித்தது. அந்த போராட்டத்தில் கூட போலீசும் அரசும் நீதித்துறையும் மாணவர்களை எப்படியாவது ஏமாற்றி கலைந்து போகச் செய்ய மட்டுமே நினைத்ததே தவிற குற்றவாளியான ஆல்பர்ட் வில்சனை கைது செய்யவோ சஸ்பெண்ட் செய்யவோ முன்வரவில்லை. ஜாமீனில் வெளிவரக்கூடிய லேசான காயத்தை ஏற்படுத்தியதாக ஒரு வழக்கை மட்டும் ஒப்புக்கு பதிவு செய்து அந்த சாதி வெறியனை பாதுகாத்திருக்கிறது தமிழக அரசு.

முப்பது லட்சம் நாற்பது லட்சம் செலவு செய்து தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகளும் சமீபத்தில் சில போராட்டங்களை நடத்தியதைப் பார்த்தோம். காரணம். கல்லூரி வண்டி சரியில்லை, லேபில் விளக்கில்லை, டீயில் டிகாஷன் இல்லை, காபியில் கலர் இல்லை என்பதுதான் அவர்கள் போராட்டத்தின் நோக்கம்.இம்மாதிரி பணக்கொழுப்பெடுத்த இவர்களின் போராட்டங்களில் எனக்கு எப்போதுமே அனுதாபம் இருந்ததில்லை காரணம். எந்த பொதுப்பிரச்சனைக்காவது இவர்கள் வந்திருப்பார்களா? கல்வி தனியார் மயமாக்கப்பட்டு பெரும் வணிகக் கொள்ளையில் ஈடுபடும் கல்வி வள்ளல்கள் குறித்தெல்லாம் இவர்கள் என்றாவது கவலைப்பட்டிருப்பார்களா? இடஒதுக்கீடு,சமச்சீர்கல்வி, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி போன்ற கோஷங்களில் இந்த மாணவர்களின் கருத்தைக் கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் இந்த பாப்கார்ன் பேபிகளின் உண்மை முகத்தை.சரி உன் பிரச்சனைக்குத்தானே போராடுகிறாய் அதற்கு ஏன் முகத்தை மாவோயிஸ்டுகள் மாதிரி இப்படி துண்டால் மூடி விட்டு டிவியில் பேசுறீங்க………….துணியை எடுத்துட்டு துணிச்சலா பேச வேண்டியதுதானே என்றால் பயம் அவன் ஆள் வெச்சு அடிப்பானாம்………….ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்கள்.சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பிரச்சனை என்றாலும் அரசியல் பிரச்சனை என்றாலும் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரினாலும் இட ஒதுக்கீடு கோரிக்கை என்றாலும் முதலில் போராடுவது சட்டக்கல்லூரி மாணவர்கள் அல்லது வழக்கறிஞர்கள்தான் காரணம்.

அவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள். அதுவும் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து படிக்க வருகிறார்கள். ஆகவே சமூக உணர்வும் கோபமும் ஏனைய ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இருப்பதை விட கூடுதலாகவே இவர்களுக்கு இருக்கும். போராடும் சக்திகளில் தலித் மாணவர்கள் இருக்கும் போது போராட்டங்களை ஒடுக்கும் சக்திகளாக இருக்கும் காவல்துறையில் யார் அதிகம்? ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு இனத்தை மிக அதிகமாக காவல்துறையில் சேர்த்தார்கள். ஜெ ஆட்சியில் கொடியன்குளம், என்றால் கருணாநிதி ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர்கள் 19 பேர் அடித்துக் கொல்லப்பட்ட தாமிரபரணிப் படுகொலை என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு முழுக் காரணமும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியைச் சார்ந்த சாதி வெறி போலீஸ்தான் காரணம். இதை நான் மண்டைக்காடு கலவரத்தில் அநாமதேயமாக கொல்லப்பட்ட மீனவ மக்கள் படுகொலையில் துவங்கி கண்டு வருகிறோம். நாடார்கள், தேவர்கள், நாயக்கர்கள், போன்ற சமூகத்தவர்கள் போலீசில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் தலித்துக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை தமிழக போலீஸ் எதிர்கொள்கிற விதத்தை காக்கிச் சட்டைக்குள் இருக்கும் சாதி வெறியை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

சட்டகல்லூரி மாணவர் இனியனைத் தாக்கியதும் இதே சாதி வெறிதான். இது ஏதோ காவல்துறையில் மட்டுமே உள்ளது என்று நினைத்து விடாதீர்கள். அரசு அலுவலகத்தில், பொது வெளியில் என எல்லா இடங்களிலும் நிரவி நிற்கிறது சாதி வெறி.பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு என்றெல்லாம் பேசிய திராவிட இயக்கம் தமிழ் மக்களை கலசார ரீதியில் மாற்ற என்ன முயர்ச்சியை மேற்கொண்டது எனத் தெரியவில்லை. பார்ப்பனர்களிடம் மட்டுமே குவிந்து கிடந்த அதிகாரத்தை பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்த திராவிட இயக்கம் தலித் மக்களை வீதியில் விட்டு விட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்கிற அளவில் பேசப்பட்ட திராவிடக் கொள்கை அதற்கப்பால் எதையுமே செய்யாமல் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களுக்கு எதிராகச் செய்யும் வன்கொடுமைகளைத் தட்டிக் கேட்காததோடு அதை ஓட்டுச் சீட்டு அரசியலுக்காக ஊட்டி வளர்க்கவும் செய்து விட்டது. திராவிட இயக்கத்தின் போக்கில் அது பெரியாருக்குப் பின்னர் நீர்த்துப் போய் விட்ட நிலையில், தமிழ் தேசியவாதிகளை மட்டும் சாதி வெறி விஷயத்தில் யோக்கியமானவர்களாக நினைத்து விடாதீர்கள். தமிழ் ஈழம், தனித் தமிழ்நாடு, காவிரி, முல்லை இதைத் தாண்டி ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் வாயில் திணிக்கிற மலத்தை மறைமுகமாக அவர்களின் சாதி மனம் ஆதரிக்கிறதே தவிற தலித் மக்களுக்காக அவர்களின் சமத்துவ வாழ்வுரிமைக்காக போராடியதே இல்லை. இதை எழுதும் போது ஒரு செய்தி படித்தேன்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட மு.க. அழகிரி பரிந்துரைத்திருப்பதாகவும். சட்டமன்றத் தேர்தலுக்குள் எப்படியாவது மதுரை விமானநிலையத்துக்கு தேவரின் பெயரை வைத்து விட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் ஆவலில் இருப்பதாகவும் அதற்கான மும்மூரமான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. விமானநிலையம் மட்டுமல்ல அங்கிருக்கும் உயர்நீதிமன்ற கிளைக்குக் கூட தேவர் கோர்ட் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரிப்பட ஒன்றும் இல்லை. பயமாய் இருக்கிறது. கொண்டாடப்படும் எந்தச் சாதியிலும் பிறக்காத மனிதர்கள் ஒழிந்து கொள்ளவோ தபிக்கவோ ஒரு இடமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்த பயத்தைத்தான் குஜராத்தில், காயர்லாஞ்சியில், மண்டைக்காட்டில், தாமிரபரணியில், வெண்மணியில், கொடியங்குளத்தில், உத்தபுரத்தில் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.இல்லை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பயம்தான் இனியனை தூக்கில் தொங்கவிட்டது. என்ன செய்யப் போகிறோம்?

ஷோபாசக்தி - புலி படுத்தது.. நாய் நரியானது !




யாருக்கும் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் எனக்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது தேசம் நெட், ரயாகரன் என்னைப் பற்றி எழுதத் துவங்கிய போதே நான் இதை எழுதியிருப்பேன். தனிநபர் தூற்றல்கள், வசவுகள், இது பற்றி நான் கவலைப்பட்டிருந்தால் ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் நான் பத்து பதில் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். சோபா சக்தி எழுதியிருக்கும் சமீபத்திய பதிவுகளும் சரி, ஏற்கனவே எழுதியவர்களும் சரி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் பல பொய்களுமாக கலந்து கட்டி எழுதுகிறார்கள். சோபா சக்தியைப் பொறுத்தவரை சில விஷயங்களில் நான் பேசாததை பேசியதாகச் சொல்கிறார். அவர் நிறுவ நினைக்கும் விம்பத்தைக் கட்டமைக்க நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில வரிகளை வெட்டி ஒட்டி தன் கருத்துக்கு வலுச் சேர்த்து என்னை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட்டதாக நினைக்கிறார். லண்டனின் நான் பேசிய விஷயத்தில் சோபா நான் இப்படிப் பேசியதாகச் ‘’“வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கக் கோரியது அநீதி” சொல்கிறார் சோபாசக்தி. எதற்கு வம்பு நான் பேசியதை நண்பர் கோபி அவர் இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார் அதை நீங்களே கேளுங்கள் . http://www.gopi.net/iataj/conference/2010/speeches. புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்கள் என்ற சொல்லில் உள்ள இலங்கை அரசு ஆதரவு தொனியை கவனியுங்கள். அத்தோடு நான் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டும் பொய்யையும் பாருங்கள்.
............................................

ஷோபா சக்தி என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள் போட்ட காமெண்டுகள் சாரம் இது.
யாரோ கொடுத்த காசில் லண்டன் வருகிறாய், தெருப்பொறுக்கியும், தெருப்பெருக்கியும் சம்பாதிக்கும் பணத்தில் இந்தியா வந்து அரசியல் பேசுகிறேன்.

2.
வைட் காலர் ஜாப், கருணாநிதியின் குடும்ப பத்திரிகை
குங்குமத்தில் கூலிக்கு மாரடிப்பு.

3
முத்துக்குமாரின் ஆன்மா இவரை மன்னிக்குமா?

கமெண்ட்-4
புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது " என வாந்தியெடுப்பதை எப்படிப் புரிந்துகொள்வது! Maybe லண்டன் ஞானோதயம்?என்பதாக சில கட்டுரைகளையும் கமெண்டுகளையும் எழுதிய்யிருந்தார் ஷோபா.

நண்பர்கள் எக்காரணம் கொண்டும் இதற்கு பதிலளிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்ட போதும். சில உண்மைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்று எழுதுகிறேன். நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்.

1. என்னை லண்டனுக்கு அழைத்தவர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினர். ஈழம் தொடர்பான விஷயங்களில் அவர்கள் என்னை நட்பு சக்தியாகக் கருதி அழைத்திருக்கலாம். iataj என்றழைக்கப்படும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் விடுத்த அழைப்பின் பெயரில் வெளிப்படையாகவே நான் சென்று வந்தேன். சரி லண்டன் வந்து போனதோ, இனி வரப்போவதோ இருக்கட்டும், புலம்பெயர் நாட்டில் மூன்று வேலைகள் பார்த்து நாய்படாத பாடு பட்டு காசு சம்பாதித்தாலும் இந்தியா வந்து போக கடன் வாங்கியே வந்து போகும் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கு. ஆனால் காப்பிக் கோப்பை கழுவதாக ஊரை ஏமாற்றி அங்கு அரசு கொடுக்கும் நிதியில் வாழும் சோபாசக்தி மட்டும் எப்படி வருடத்திற்கு மூன்று முறை இந்தியா வந்து போக முடிகிறது. பிரான்சில் அவர் எங்கே எந்த நிறுவனத்தில் எப்போது வேலை பார்த்திருக்கிறார் என்ற உண்மையைச் சொல்வாரா?
புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் இந்தியா வர வீசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இந்திய தூதரகம் மூன்று வாரகால அவகாசம் கேட்கிறது. அப்ளை பண்ணுகிறவரின் வீசாவை டில்லிக்கு அனுப்பி இந்திய புலனாய்வுத்துறை முடிவு செய்த பிறகே புலத்து மக்களுக்கு இந்தியா வர வீசா கிடைக்கும் போது அதெப்படி உங்களுக்கு மட்டும் இந்தியா கேட்கும் போதெல்லாம் வீசா கொடுத்து விடுகிறது? ஒரு அரங்கக் கூட்டம் நடத்தக் கூட தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கும் தீவீர இடதுசாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்படும் போது எப்படி உங்களுக்கு மட்டும் திருவனந்தபுரத்தில் இலங்கை அரசு ஆதரவு மாநாட்டு நடத்த வசதியும் வாய்ப்பும் வருகிறது.

2. வொயிட் காலர் ஜாப்பும், கூலிக்கு மாரடிப்பதும், என்று எழுதியிருக்கிறீர்கள். கூலி கேட்டவனை அடிப்பதை விட கூலிக்கு மாரடிப்பது ஒன்றும் தவறில்லைதானே? ஆனால் நீங்கள் கேட்க வருவது நான் கூலிக்கு மாரடிக்கும் இடத்திற்கும் எனது அரசியல் ஓர்மைகளுக்கும் இடையிலான முரண் தொடர்பானது. எப்படி உங்கள் கொள்கைகளுக்குப் புறம்பான இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்? அ.மார்க்ஸ் மாநிலக் கல்லூரியிலும், ஆதவன் தீட்சண்யா மத்திய அரசு நிறுவனமான பி. எஸ். என். நிறுவனத்திலும், மிக உயர்ந்த ஊதியத்தில் சலுகைகளோடு மிக பாதுகாப்பான அரசு வேலை பார்த்தார்கள். பார்க்கிறார்கள். சோபாசக்தியில் அளவுகோல்படி ஆமாம் என் பார்வையில் அல்ல சோபாசக்தியின் பார்வையின் படி பிஎஸ் என் எல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் ஆ. ராசா ஒரு திமுக அமைச்சர் கொள்கை ரீதியாக போயஸ்கார்டனில் கும்மியடிக்கும் போது நியாயமாக ஆதவன் பிஸ். என். எல் நிறுவனத்தில் கூலிக்குமாரடிக்கக் கூடாதில்லையா? கொள்கை கோட்பாடுகளை எல்லாம் பி.எஸ்.என். எல்- ம், மாநிலக் கல்லூரியும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் அங்கு அவர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள் என்ற உண்மை நீங்கள் என்னை கூலிக்கு மாரடிக்கிறவன் என்று எழுதிய பின்புதான் எனக்கே தெரிந்தது. என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் கூலிக்கு மாரடிக்கிறேன். என்னை மாதிரியே வேலை பார்க்கிறார் உங்கள் நண்பர் சுகுணாதிவாகர் ஒரு தூய கடவுள் மறுப்பாளரான அவர் என்ன? வேலை பார்க்கும் நிறுவனத்தோடு போட்டிருப்பது சுயமரியாதை அக்ரிமெண்டா? ஆக நான் கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எனது குரல்களை எப்போதும் அமைதியாக்கிக் கொண்டதில்லை. சமகாலத்தில் நான் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளிலும் நான் என் அறிவுக்குப் பட்ட மாதிரி எதிர்வினையாற்றுகிறேன். //எழிலன் வயிற்றுப் பிழைப்புக்காகவே அங்கேயிருக்கிறார் என்றொரு வாதமும் முகப் புத்தக விவாதத்தில் வந்துபோனது. ஒரு அரசியல் போராளி வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது நிலைப்பாடுகளையும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. // ஆக ஷோபா என் வேலையை குறி வைக்கிறார். எல்லா அயோக்கியர்களும் ஒரு மாத ஊதியக்காரன் மீது வீசும் கடைசிக் கல்லை என் மீதும் வீசுகிறார் சோபாசக்தி. சரி செய்யுங்கள் முடிந்தால் தாக்குப்பிடிக்கிறேன் அல்லது இந்த வேலையை விட்டு விலகுகிறேன்.

3. தியாகி முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்தார் அருள் எழிலன் கருணாநிதியிடம் ஊதியம் பெறுகிறார், ஆகவே முத்துக்குமாரின் ஆவி என்னை மன்னிக்காது என்பது சோபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு. புலி ஆதரவாளர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று தங்களைத் தாங்களே காட்டிக் கொண்ட சந்தர்ப்பாவாதிகள் முத்துக்குமாரை அன்றே புதைக்க நின்ற போது முத்துக்குமாரை புதைக்க விடாமல் போராடியவர்கள் நாங்கள் நான் மட்டுமல்ல எங்களோடு உங்கள் நண்பர் சுகுணாவும் வேறு வழியில்லாமல் நின்றிருந்தார். //ஒரு கட்டுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை நிர்வாகியும் நண்பருமான வன்னி அரசு கூட முத்துக்குமாரின் உடலை வைத்துக் கொண்டு அருள் எழிலன் தான் மறியல் செய்து கொண்டிருந்தார் அவர் எந்தக் கல்லூரியில் படிக்கிறார்// என்று யாரையோ திட்டுவதாக நினைத்து என்னை வசவிக் கொண்டிருந்தார். ஆக நான் அப்போது என் வேலையைப் பற்றிக் கவலைப்பட வில்லை. உங்களின் ஆத்ம நண்பர்கள் எல்லாம் வெளிப்படையாக இயங்க பயந்து வெவ்வேறு பெயர்களில் மறைந்திருந்து தனி நபர் சண்டைகளில் ஈடுபட்ட போது நான் டி.அருள் எழிலன், அல்லது பொன்னிலா இந்த இரண்டு பெயர்களிலுமே எழுதினேன். முத்துக்குமாரை புதைத்த சந்தர்ப்பவாதிகளை முதன் முதலாக அம்பலப்படுத்தியது நான் தான். அப்போது உங்கள் நண்பர் ஆதவன் உள்ளிட்ட இலங்கை ஆதரவாளர்கள் முத்துக்குமாரை இழிவு செய்தார்கள். ஒரு பக்கம் நீங்கள், இன்னொரு பக்கம் முத்துக்குமாருக்கே துரோகம் செய்த தமிழக சந்தர்ப்பவாதிகள். இவர்களை எல்லாம் எதிர்த்து நாங்கள் சிலரும் நின்றோம். அதில் உங்கள் நண்பரும் உண்டு. இப்போது முத்துக்குமாரின் கடிதத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள் முத்துக்குமாரின் ஆவி யாரை மன்னிக்கு யாரை மன்னிக்காது என்று? கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் அருள் எழிலன் தான் எழுதிய கடிதத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறான் என்று முத்துக்குமாரின் ஆவி என்னை வாழ்த்தும் என்றுதான் நினைகிறேன்.
மக்களை விடுவிக்கக் கோருவது பேரினவாதிகளின் கோரிக்கையே.
.........................................
முதலில் என்னை தனிப்பட்ட ரீதியில் தாக்கிக் கொண்டிருந்த ஷோபா திடீரென என்னை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துகிறாராம். அந்த யோக்கியதையை நீங்களும் வாசியுங்கள்.
//பு லிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது "//
முதலில் லண்டனில் நான் என்ன பேசினேன் என்பதைச் சொல்லி விடுகிறேன் // புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி நீங்கள் ஏன் கோரவில்லை என்று சிலர் எம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். மக்களை விடுவிக்கக் கோரி நான் ஏன் புலிகளைக் கேட்க வேண்டும். 30 ஆண்டுகளாக வன்னி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாக அலகு ஒன்று புலிகளால் அங்கு நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதிக்குள் சென்று மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவமே வெளியேறு என்பது எனது அப்போதைய கோரிக்கையாகவும், வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு என்று கேட்பது இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது. இதுதான் நேர்மையான அரசியலே தவிற புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி கேட்க மாட்டேன். வரிக்கு வரி இப்படி இல்லா விட்டாலும் நான் பேசியதன் பொருள் இதுதான்//

எங்குமே நான் மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரவும் இல்லை எழுதவும் இல்லை. உண்மையில் புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டே பயங்கரவாத இலங்கை அரசின் குற்றச்சாட்டு. புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் வன்னி மக்கள் மீது கிளஸ்டர், பாஸ்பரஸ், உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாய் பச்சைப் படுகொலைகளை இந்தியாவின் துணையோடு நடத்தியது இலங்கை. ஆக புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கோரிக்கை இலங்கை அரசின் கோரிக்கை மட்டுமல்ல இந்திய அரசின் கோரிக்கையும்தான். இந்த இரண்டு கொலைகார கிரிமினல்களின் கோரிக்கையை நான் ஏன் புலிகளை நோக்கி வீச வேண்டும் என்பதே இன்றுவரை என்னிடம் உள்ள கேள்வி. நான் சொன்ன கருத்தை இன்றுவரை நான் மறுக்கவே இல்லை. நான் பேசியது முழுக்க முழுக்க சரியாது. இலங்கை அரசின் அந்த படுபாதக கோரிக்கையைத்தான் சோபாசக்தி அவர்களே நீங்களும் ரயாகரனும் அப்போதும் இப்போதும் முன்வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.வன்னி மக்களோ கடந்த முப்பதாண்டுகளாக புலிகளின் நிர்வாக ஒரு சிறிய அளவிலான சிவில் நிர்வாக அலகிற்குள் வாழ்ந்தார்கள். அதில் ஏராளமான சாதக, பாதங்களும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் நோக்கினாலும் அந்த வாழ்வு சிங்கள பேரினவாத இராணுவத்தின் ஆட்சியை விட சிறந்தது என்பது என் கருத்து. அதை இன்று காலம் நிரூபித்திருக்கிறது.

புலிகள் மீதான எனது விமர்சனம்
...........................................................
சரி அப்படி என்றால் கீற்றில் நீங்கள் வேறு மாதிரி எழுதியிருப்பதாக ஷோபா சொல்கிறாரே? என்று கேட்கலாம். மே மாதம் 13- வரை புதுமாத்தளன் மருத்துவமனை வரை எனக்கு நேரடியான தொடர்புகள் இருந்தது. மார்ச் மாத இறுதியில் கூட நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தெஹல்காவுக்கு ஒரு ஆங்கிலப் பேட்டியை கடுஞ்சமருக்கு மத்தியில் எடுத்துக் கொடுத்தேன்.( எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தனிக்கதை) இன்று மாற்றிப் பேசுகிற மருத்துவர் சத்தியமூர்த்தி கூட அப்போது புலிகள் மக்களை பிடித்து வைக்கவில்லை என்றார் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர் அப்படிப் பேசினார். இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்கிறார். இராணுவம் மக்களைக் கொல்லவில்லை என்கிறார். வன்னிக்குள் இருந்தவரை புலிகளே கடவுள் என்றவர்கள் யாழ்பாணம் சென்ற பிறகு மாற்றிப் பேசினார்களே அவர்கள் சொன்ன தகவல்கள்தான் புலிகள் மக்களைப் பிடித்தார்கள் என்று. (இந்தத் தகவல்களை மே மாதம் இறுதியில் முகாம்களில் இருந்தபடியே கைத் தொலைபேசியில் என்னிடம் பரிமாறிக் கொண்டார் அந்த நண்பர்) எனக்கு அவர்கள் மீதும் வருத்தம் இல்லை இலங்கையோடு ஒப்பிடும் போது நெருக்கடி குறைவான தமிழகத்திலேயே ஈழ விடுதலைக்கு உண்மையாக இல்லாத சந்தர்ப்பவாதிகள் தங்களின் சுய லாப ஓட்டு வேட்டைக்கு ஈழத்தைப் பயன்படுத்தும் போது உயிர்வாழ்தலே நெருக்கடிக்குள்ளாகி பேரினவாத இராணுவத்திடம் சிக்கியிருக்கும் மக்களும், பிரமுகர்களும் இலங்கை அரசோடு இணைவதை புரிந்து கொள்ள முடிகிறது. போர் பற்றிய குழப்பம் இப்போது அரசோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் என்று அவர்கள் கொடுத்த தகவல்கள் எனக்குள் ஏற்படுத்திய அயர்ச்சி காரணமாகவே எழுதினேன். இன்னொன்றையும் இங்கே சொல்கிறேன். உங்கள் நண்பர் ஒரு நாள் இரவு தொலைபேசினார். நான் போனை எடுத்தவுடம் ஓ வென கதறியழுதார். என்ன இப்படியழுகிறார் என்று எதுவும் பிரச்சனை இருக்கும் போலிருக்கு என்று கேட்டால் ‘’புலிகள் மக்களை இப்படிக் கொல்லலாமா? என்று கேட்டார். ஒருவர் அழுதபடியே கேட்கிறாரே இவரிடம் போய் என்ன விவாதிப்பது என்று சரி சரி விடு.... அப்படியும் சொல்றாங்க என்று மழுப்பலாக பேசினேன். மூன்று நாட்கள் கழித்து அந்த நபர் ஒரு இணையதளத்தில் இப்படி எழுதியிருந்தார் “புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்களை நெருக்கிப் பிடித்துக் கேட்டாலே புலிகள் மக்களைக் கொன்றதை ஒத்துக் கொள்கிறார்கள்” என்று எழுதினார் அந்த அழுகை மனிதர். இப்போது ”என்று தகவல்கள் வருகின்றன" என்று உறுதியில்லாமல் நான் எச்சரிக்கையாக எழுதியதை இந்த தந்திரக்கார நரி புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளதாக சித்தரிக்கின்றது. எனக்குத் தகவலைச் சொன்ன யாழ்பாணத்து மாமனிதர்களோ பேஸ்புக்கில் ஷோபா என்னைச் சித்தரித்து எழுதியதில் லைக் போடுகிறார்கள்.
ஆனால் போர் முடிந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் பிறபகுதி ஒன்றில் ஒரு மனிதரைச் சந்தித்தேன் அவர் போரின் தன் இரண்டு குழந்தைகளையும் தவற விட்டவர் என்பதோடு மனைவியையும் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு பலி கொடுத்து சித்திரவதையான ஒரு வாழ்வை வாழ்ந்தார். (இவரைப் பற்றி இதற்கு மேல் என்னால் இங்கே எழுத முடியாது) அவர் சொன்னார் புலிகள் யாரையும் விதிவிலக்காக கருதவில்லை. பிரபாகரன் தன்னுடைய எல்லா குழந்தைகளையுமே கள முனையில் வைத்திருந்தார். அவர் உண்மையில் தப்பிச் செல்ல நினைக்க வில்லை. தப்பிச் சென்ற மக்களை தடுக்கவும் இல்லை. குடும்பத்தோடு பத்திரமாக யாழ்பாணத்திற்குத் தப்பிச் சென்றவர்களும் உண்டு என்றார். அப்படித் தப்பிச் சென்றவர்களை புலிகள் சுடவில்லை என்றும் சொன்னார். பிறகு ஒரு ஒரு இளம் பெண்ணைக் கேட்ட போது சிறுமிகளைப் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தது உண்மைதான் என்றார். அவர் கூட புலிகள் பொதுமக்கள் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்றார். நான் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் அப்படித்தான் சொன்னார். இது தொடர்பாக சில வாக்குமூலங்கள் என்னிடம் உள்ளன ஆனால் அவைகளை என்னால் வெளியிட இயலாது நண்பர்களே.
போருக்குப் பின்னர் பௌத்த பேரினவாத பாசிச இலங்கை அரசுக்கு எதிராகவும் போரை நடத்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்தியாவுக்கு எதிராகவும் எவளவோ எழுதியிருக்கிறேன். அதில் எல்லாம் புலிகள் மீதான் இந்த விமர்சன ஊடாட்டத்தையும் நீங்கள் கவனிக்க முடியும். புலிகள் மீது ஒரு மென்மையான விமர்சனமும் இலங்கை அரசு மீது கடுமையான விமர்சனமும் இருக்கும். முன்பு புலிகளை கடவுள் என்றவர்கள் இன்று இலங்கை அரசை நக்கிப் பிழைக்கும் போது நான் எப்போதுமே புலிகளை கடவுள் என்று சொன்னதில்லை. அவர்கள் இருந்த போது நான் இன்னும் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும். இருக்கும் போது விமர்சிக்காமல் விட்டு விட்டு இல்லாது போன இப்போது விமர்சிப்பது தொடர்பான குற்ற உணர்வு என்னிடம் இப்போது இருக்கிறது.

2002 -ல் ஜெயலலிதா ஆட்சியில் வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். மோசமான அந்தக் காட்டாட்சியில் (கருணாநிதியின் இன்றைய ஆட்சியை அந்த ஆட்சியைக் கொண்டு சமன் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஜெ, கருணா இருவருமே காட்டாட்சி நடத்துவதில் சளத்தவர்கள் அல்ல) புலிகளைப் பற்றி பேசினாலே பாவம் என்ற எண்ணம் ஊடக உலகில் விரவிக் கிடந்த போது நான் சுப. தமிழ்செல்வனை நேர்காணல் செய்து அந்த மாயையை உடைத்தேன். அன்றிலிருந்து இறுதிவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நேர்காணல்களை புலித் தலைவர்களிடம் பெற்று வெளியிட்டிருக்கிறேன். இதற்காக பத்து காசையோ அல்லது வேறெந்த சலுகைகளையோ நான் யாரிடமும் பெற்றுக் கொண்டதில்லை. ஆனால் தமிழார்வலர், தமிழ் தேசியவாதி என்ற முத்திரை வந்து விழுந்ததுதான் மிச்சம். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத படிப்பறிவற்ற ஒருவனுக்கு தமிழார்வலன் என்கிற முத்திரை விழுந்த கதை இதுதான். நான் தமிழ் தேசியவாதி அல்ல தனித் தமிழ்நாட்டை நான் ஆதரிக்க மாட்டேன் என்று ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்தும் இந்த என் மீது குத்தப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர் அழிய மறுக்கிறது நான் என்ன செய்ய?
நான் செய்த தவறு

சமகாலத்தில் தண்டகாரண்யா மக்கள் மீது இந்தியா ஒரு போரைத் தொடுத்திருக்கிறது. மெல்லக் கொல்லும் இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களையும், மாவோயிஸ்டுகளையும் அவர்களிடம் நிலங்களையும் வேட்டையாடி வருகிறது. காஷ்மீர் மக்கள் முழு அளவிலான ஒரு மக்கள் வன்முறையில் இந்தியாவுக்கு எதிராக கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். கல்லெறியும் சிறுவனின் நகங்களை இந்தியாவால் பிடுங்க முடிகிறதே தவிற காஷ்மீரிகள் தேசிய இன விடுதலை உணர்வை இன்று வரை பிடுங்க முடியவில்லை. காஷ்மீர், தண்டகாரண்யா மக்கள் மீதான இந்தியாவின் போருக்கு எதிராக இந்தியா முழுக்க அறிவுவீகள், இடதுசாரிகள், ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் எதிப்பைத் தாண்டி ஈழப் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் என்னும் வட்டத்தைத் தாண்டி நடக்கவில்லை என்பது ஒரு உண்மை. புலிகள் ஈழ விடுதலைப் போரை கையெடுத்துக் கொண்டதோடு இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை கண்கொண்டும் கண்டதில்லை என்பதோடு. சிங்ளனுக்கு எதிராக போராடும் ஏகாபோக உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை தடுத்தும் வந்திருக்கிறார்கள். பின்னர் பேரினவாத அரசுகள் இணைந்து நடத்திய யுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போன போது அனைத்து சக்திகளும் தங்களுக்காக போராட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது கடைசி வரை முழுமையாக நடக்க வில்லை. புலிகளின் அரசியல் நடைமுறைகள் அவர்கள் நம்பிய சக்திகள், மேற்குலகத் தொடர்புகள் அரசுகளை நம்பியிருந்தமை, இந்தியாவின் நிர்ப்பந்தத்தில் சரணடைந்தமை, அரசியல் அற்ற வெற்று இராணுவக் கண்ணோட்டம் என என்று புலிகள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு இதை நான் எந்த இடங்களிலும் மறைத்ததில்லை. இதில் நான் ஏதோ எழுதி விட்டு மறுத்தது போலவும் பேசி விட்டு பம்முவது போலவும் ஏன் பாவ்லா காட்டுகிறீர்கள் சோபாசக்தி.
சுமார் ஐம்பதாயிரம் மக்கள் வரை இனக்கொலை செய்யப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் இந்தியாதான் எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்று நம்புகிற ஈழ மக்களும் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல சீனாவோ, மேற்குலக நாடுகளோ அமெரிக்காவோ எந்த ஒரு நாடும் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அக்கறையில் ஈழ மக்களுக்கு ஒரு போதும் உதவப் போவதும் இல்லை. விடுதலை பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை. (இதை லண்டனிலும் சொன்னேன்) இனியும் இவர்களை நீங்கள் நம்பினால் மிச்சம் மீதியிருக்கும் மக்களையும் இவர்கள் அழித்து விடுவார்கள் இதுதான் உண்மை. இதற்கு மேல் உங்கள் பாடு. அடுத்து காஷ்மீரில் கூட அடிப்படைவாதக் குழுக்கள், பாகிஸ்தான், இந்திய ஆதரவுக் குழுக்கள், தனி காஷ்மீர் கேட்டு போராடுகின்றன. இந்த எல்லா பிழையான போலிக் குழுக்களைக் கடந்து இந்தியா, பாகிஸ்தானில் இரும்புக்கரங்களில் இருந்து விடுதலை காஷ்மீர் கோரும் அமைப்புகளும் உண்டு. குழுக்கள் அவர்களின் அரசியல் பிழைகள், கொலைகள், காட்டிக் கொடுத்தல், என எல்லாம் போராளிக் குழுக்களிடம் இருந்தாலும் காஷ்மீர் மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய விடுதலை உரிமை உண்டா இல்லையா? அது போல ஈழத்திலும் புலிகள் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும் படுகொலைகளும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டம் இருந்தாலும் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை உண்டா இல்லையா?
இலங்கையின் இனி தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடியாது என்பது என் கருத்து. ஆனால் இன்று ஈழத் தமிழர்களிடமே இந்தக் கருத்து இருக்கிறதா? ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் பல மாதங்களாக நிலவுகிறது. ஆக ஈழம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஈழ மக்களும் அவர்களை வழிநடத்தப் போகிற ஈழ இயக்கங்களும்தானே தவிற நான் தமிழகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருப்பதில் இனி அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அளவில் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு. அதை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஈழத்துக்காக இயக்கம் கட்டுவதா? வேண்டமா? என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.என்னுடைய புலி ஆதரவு நிலைப்பாடுகளில் அரசியல் பிழைகள் இருப்பதையும் ஏதோ ஒரு வகையில் நானும் புலிகளின் அழிவில் ஊடக ரீதியாக விமர்சனப்பார்வையற்று துணை போய் இருக்கிறேன் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக வலிமையான முறையில் அவர்களிடம் சில விமர்சனங்களை வைத்திருக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ வைத்திருக்கலாம். மற்றபடி மக்கள் விடுதலை தொடர்பான விஷயங்களில் நான் பேசிய விஷயங்கள் உள்ளிட்டு நான் பேசியதை சரியென நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக சோபாசக்தி, ரயாகரன், அ.மார்க்ஸ், ஆதவன், அல்லது இங்குள்ள புலி ஆதரவாளர்கள் விடும் வீரவசனங்கள் இதை எதையும் நான் எப்போதும் பொருட்படுத்தியதில்லை.
இனியொரு
.....................
மற்றபடி உங்களையோ ஆதவன் தீட்சண்யாவையோ, அ,மார்க்ஸை, சுகன் குறித்தோ எழுதியதில் அவதூறுகள் எதுவும் இல்லை.மார்க்ஸ், ஆதவனின் இலங்கைப் பயணங்கள் குறித்து நான் எதுவும் எழுதியதும் இல்லை. மார்க்ஸ், ஆதவன் இருவருமே டக்ளஸை சந்தித்து விட்டு வந்து ஆதவன் வக்கிரமான தன் எழுத்தை எழுதியபோதும் நான் அதற்காக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் நான் உட்பட நண்பர்கள் எழுதிய எந்தக் கட்டுரைக்காவது நீங்கள் பதில் சொன்னதுண்டா? இக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் சோபா சக்தி. நான் உட்பட நண்பர்கள் எழுதிய கட்டுரைகளில் சில தகவல் பிழைகள் இருக்கும் அந்த தகவல் பிழைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த கட்டுரையையும் நிராகரித்து இதெல்லாம் அவதூறு என்று திசை திருப்பும் வேலையை கச்சிதமாக கன காலமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது லும்பினியிலும் அப்படியான ஒரு தகவல் பிழையை எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறீர்கள் தவிறவும் இலங்கை அரசை ஆதரிக்கிற எவரும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டா ஆதரிக்கிறார். லும்பினி கட்டுரையில் என்னை இனியொரு இணைய தள ஆசிரியர் என்று குறிப்பிடிருக்கிறீர்கள். இது தேசம் நெட், ரயாகரன் இவர்கள்தான் முதல் முதலாக இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியது. அதையே நீங்களும் அருள் எழிலன் இன்யொரு, குங்குமம் இதழ்களில் ஆசிரியர் குழுவில் இருப்பதாக எழுதி ஆள்காட்டி வேலை செய்திருக்கிறீர்கள். குகநாதனிடம் அருள் செழியன் இழந்த பணத்தை மீட்டது தொடர்பாக பிரச்சனை வந்த போது இனியொருவையும் புதிய திசைகளையும் சேர்த்தே அடித்தார்கள். நானே தோழர் நாவலனிடம் நான் இனியொருவில் எழுதுவதால்தான் உங்களுக்கு தர்மசங்கடங்கள் எழுகின்றன. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கடந்த ஒன்றரை மாதங்களாக நான் இனியொரு பக்கமே செல்வதில்லை. இந்த உண்மை உங்களால் தீபக்கிற்கு முன்னால் பிரான்சில் வைத்து தாக்கப்பட்ட நண்பர் அசோக் யோகனுக்கும் தெரியும். தவிறவும் புதிய திசைகள் தோழர்களின் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இனியொரு இருக்கிறது. கருணாநிதியிடம் கூலிக்கு மாரடிக்கும் என்னை மாதிரி தனி நபர்களால் தோழர்களுக்கும் கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு ஒதுங்கினேன் இதுதான் உண்மை. இப்போது நான் இனியொருவிலும் இல்லை வேறெந்த இணையதளங்களிலும் இல்லை.
நீங்கள் எழுதும் லும்பினி இணையதளத்தை வசுமித்ர, மீனா இவர்களை ஆசிரியர்களாக் கொண்டு வெளிவருவதாகச் சொல்லப்படும் லும்பினியை இயக்குவது யார்? அசாதி என்ற பெயரில் தொழில் முதலாளிகள் மீதான் விமர்சனம், பிலால்முகம்மது என்னும் பெயரில் கீற்று மீதான் விமர்சனம், அங்குலிமாலா என்ற பெயரில் சீமானை அடித்து நொறுக்குவது என்று வெவ்வேறு பெயரிகளில் எழுதிய அந்த நபரை உங்களைப் போல நானும் ஆள் காட்டவா? ஆக மறைந்திருந்து கூலிக்கு மாரடிக்கிறவன் எல்லாம் யோக்கியவான் அருள் எழிலன் என்ற பெயரிலேயே எழுதும் நான் கூலிக்கு மாரடிக்கிறவனா? இதுதான் உங்கள் தலித், பின் நவீனத்துவ நீதியா?
நீங்கள் ஒரு அரசு ஆதரவாளர்
.........................................................
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை எழுத்தாளரான நீங்கள் எப்போதாவது இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதுண்டா? எப்போதுமே உங்கள் கட்டுரை இலங்கை அரசை விமர்சனம் செய்வது போலத் துவங்கும் கடைசியில் இங்குள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களையும், புலிகளையும் டிரவுசரைக் கழட்டி விட்டு அமைதியாகிவிடும். ஒரு கட்டுரையில் ஒரு பகுதியை மட்டும் கணக்குக் காட்டாதீர்கள். எப்போதும் உங்களின் எழுத்து எதிர்ப்பியக்கங்களை பல வீனப்படுத்தவும் இயக்கம் கட்டுகிறவர்களை ஏளனம் செய்யவுமே பயன்பட்டிருக்கிறது. இலங்கை அரசை எதிகொள்ளும் எங்களை மாதிரி ஆட்களை அம்பலப்படுத்துகிறேன் ஆயாசப்படுத்துகிறேன் என்று இலங்கை அரசை மறைமுகமாக அதன் கொலை முகத்தில் இருந்து பாதுகாக்கின்றீர்கள். அதற்கு உறுதுணையாக கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பிடித்துத் தொங்குவீர்கள். நான் எங்குமே இலங்கை அரசை ஆதரித்ததும் இல்லை நான் புலிகளின் ஆதரவாளன் இல்லை என்று மாற்றிப் பேசியதும் இல்லை. நான் இப்போதும் இலங்கைக்கு எதிரான விவாகரங்களில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் பௌத்தம், தம்மம், என்று இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அறிவு பயங்கரவாதத்தை எமக்கு எதிராக வீசுகிறீர்கள்.
இலங்கை அரசு இன்று உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களோடும் எதிர்ப்பியக்கங்கள் மீதும் ஒரு உளவியல் போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய ஊடக அமைப்புகள், புரட்சி அமைப்புகள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பலான இந்த அமைப்புகள் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற தன்னார்வக்குழுக்களாக உள்ளனர் சமீபத்தில் சென்னை வந்து மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்ற ராகவன் கூட sldf அமைப்பில்தான் வேலை செய்கிறார். ஆனால் இவர்களுக்கும் அரசுக்குமான் தொடர்பு அது தொடர்பான ஆதரங்களை எடுப்பது எதுவும் சிரமமான காரியங்கள். என்கிற நிலையில் பல்வேறு தகவல்பிழைகளுடனே பல கட்டுரைகளை எழுத முடிகிறது இது ஏதோ எனக்கு மட்டும் என்று நினைத்து வீடாதீர்கள். எல்லோருக்கும் நேரும் தர்மசங்கடம்தான் இது. ஆனால் அந்தத் தகவல் பிழையை எடுத்து ஒரு கட்டுரையையே நிராகரிக்கிற போக்கை என்னவென்று சொல்வது?
கலகத்தின் பெயரால் பேரினவாதத்தை ஆதரிக்கிறவர் நீங்கள்.
.............................................

பெருந்தொகையான சிறுபான்மை தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள பேரினவாதம் அதன் மத அடையாளமான பௌத்தத்தை இன்று ஈழம் எங்கும் நிரவி வருகிறது. இந்துக் கோவில்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டு பௌத்த விஹாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக செய்து வரும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வாழ்வுரிமையை மறுத்து நிற்கிற இலங்கைச் சூழலை பாசிசம் என்று நான் சொல்கிறேன். இல்லை நீங்கள் சொல்வது தவறு அங்கு நிலவுவது பாசிசம் அல்ல என்றால் அதை நிரூபியுங்கள். இதுவரை நீங்கள் நம்பியதாகவும் பேசியதாகவும் சொல்லப்பட்ட அரசியலைப் பேச தடையாக இருந்த புலிகள் இப்போது இல்லை. ஆனால் அதற்கப்பாலும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகள் இப்போது இலங்கைக்கு வெளியே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்தக் சக்திகளோடு இணைந்து நீங்கள் பயங்கரவாத இலங்கை அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்றுதான் போருக்குப் பின்னர் உங்களை எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்களோ இலங்கைக்கு எதிராக வெளியில் உருவாகும் எதிர்ப்புச் சக்திகளை தந்திரமாகத் தாக்கத் துவங்கி விட்டீர்கள்.

இக்கட்டுரையில் சுயவிமர்சனமாக என்னை நான் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டதும். அதை உணர்வதும் உங்களுக்காகவோ என்னைத் தாக்குகிறவர்களுக்காகவோ அல்ல மாறாக நான் எப்போதும் துணையாக நிற்கும் ஈழ மக்களுக்காக ஆமாம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக போராடுகிறார்கள் என்றே புலிகளை ஆதரித்தேன். எதிர்காலத்தில் அந்த மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவேன். ஆனால் நீங்கள் உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது அரசியல் நோங்கங்கள் உள்ளனவா? அ.மார்க்ஸ் எதைச் சார்ந்து இயங்குவாரோ அதற்கு தூபம் போடுகிற சீடப்பிள்ளைகள் நீங்கள் ஆனால் நான் யாருக்கும் எப்போதும் சீடனாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடவை ஒட்டி மார்க்ஸ்சிஸ்டுகள் மீது தலித் அரசியலை ஆயுதமாக்கி உங்கள் ஆசான் அடிக்காத அடியா? அதைத்தானே நீங்கள் ஈழத்தில் செய்தீர்கள். இப்போது காலாவதியாகிப் போன பின்நவீனத்துவத்தை விட்டு விட்டு காந்தியிசம், நபிகள் நாயகம் என்று மாறி மாறி இப்போது அவர் சி,பி.எம் கட்சியில் செட்டிலாகியிருக்கிறார். நீங்களோ உங்களை டிராஸ்கியிஸ்ட் என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள். தண்டகாரண்யாவிலும், ஈழத்திலும் இந்தியா நடத்திய போரை ஆதரிக்கிற அல்லது மௌனமாக இருக்கிற ஒரு கட்சியை எப்படி பின் நவீனத்துவாதிகள் ஆதரிக்க முடியும் என்ற கேள்வியையாவது உங்கள் ஆசானிடம் கேளுங்கள்.
அதே சீனப் பழமொழியை உங்களுக்கு இப்படிச் சொல்கிறேன்.

" தயவு சென்ற வழியே அப்படியே சென்று விடுங்கள் ஒரு போதும் நீங்கள் திரும்பி வர வேண்டாம் நீங்கள் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரி.........எதிரிகள்".