இந்தப் போர் எங்களோடு முடிவது இல்லை

டி. அருள் எழிலன் \

‘‘இந்த ஒப்பந்தம் எமது அரசியல் இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவத்தினர் ஏற்கிறார்கள். நாம் ஆயுதங்களை கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கே இடித்துக் கூற விரும்புகிறேன்.

இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்க வில்லை: சிங்கள: இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை’’ ‘‘தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலக்கட்டத்திலும் தேர்தலில் பங்கு பெறப் போவதில்லை முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். ’’

இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது 1987& ஆகஸ்ட் 4&ஆம் நாள் ஈழ மக்களிடம் ஒரு குழப்பம் நிலவியது அந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் திரண்டிருந்த ஈழ மக்களுக்கு மத்தியில் ‘‘நாம் இந்தியாவை நேசிக்கிறோம்’’ என்னும் தலைப்பில் பிரபாகரன் நிகழ்த்திய உரையின் சில வரிகள்தான் இவை. இருபதாண்டுகளைக் கடந்து விட்ட இந்த உரை இன்று காலத்தினால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இடையில் கழிந்த இருபதாண்டுகளில் ஈழத்தில் யார் யாரோ வந்து போய் விட்டார்கள். சமாதானப்பேச்சுக்கள், சண்டை நிறுத்தங்கள், இயற்கைப் பேரிடர்கள், இடம் கடந்து செல்லல் என்று காலம் ஈழ மக்களை கடத்தி வந்திருக்கிறது. ஆனால் ஈழத் தமிழர் மேல் பூசப்பட்டுள்ள இனவாத துன்பச் சேறு இன்னும் கரைந்த பாடில்லை. யாராலும் அதை கழுவித் துடைக்கவும் முடியவில்லை. ‘‘இலங்கை சிங்களர்களுக்கே சொந்தம்’’என்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்வதன் மூலம் இனவெறியின் கோர முகத்தை அறியலாம்.

ஆனாலும் கால் நூற்றாண்டை விழுங்கி விட்ட காலம் யதார்த்தத்தின் முன்னால் மெத்தனமாக அகங்காரத்துடன் நிற்கிறது கோரமான சிங்கள முகத்துடன். இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிட பத்து ஆண்டுகள் கூட காத்திருக்க தேவையில்லாமல் போய் விட்டது. புலிகள் என்கிற போராளிக் குழு இந்திய இலங்கை தரப்பிற்கு வழங்கிய சந்தர்ப்பம் இரண்டு தரப்பையுமே நகைத்திருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் அமெரிக்க காலனியத்தின் சந்தையாக மாறியிருக்கிறது இந்த இருபதாண்டுகளில். ஆனால் புலிகள்?

இந்தியா உண்மையாக ஈழ மக்களை இலங்கையை நேசித்திருந்தால் இந்தப் போர் எப்போதோ முடித்து வைக்கப்பட்டிருக்கும். தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமாதான, சகவாழ்வு, வாழாவிடினும் பாதுகாப்பான ஒரு வாழ்வை தங்களின் தாயங்களில் வாழ்ந்திருக்க முடியும். விமானப்படை உருவாக்கி இலங்கையின் மூல பொருளாதாரத்தை பலவீனமாக்கும் புலிகளின் போர்த்தந்திரத்தைப் பார்க்கும் போது போர் அடுத்த தலைமுறைக்கும் கைமாறியிருப்பதை அறிய முடிகிறது. அநீதியான இந்த போர் எத்தனை தலைமுறைகளைத்தான் கொன்று தீர்க்கப் போகிறது. இடையில் கழிந்த இருபதாண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்கள் இனவெறி வடிவத்தை இறுக்கமாக பின்னியிருக்கிறார்கள்.

புலிகளோ அதே தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையோடு எந்த மாற்றமும் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் போர் முறையை வளர்த்தெடுத்திருக்கிறார்களே தவிற கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை. சுதுமலையில் ஒலித்த அதே குரல் அதே கோரிக்கை இன்றும் ஒலிக்கிறது வன்னியிலிருந்து.

தமிழகம் மீண்டும் ஈழத்தை திரும்பிப் பார்க்கிறது. ஈழ மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்களை எண்பதுகளைப் போல இளைஞர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால் மழையில் நனைவதும், ஈழ மக்களுக்காக ஒப்பாரிப் பாடுவதும், கூடி உண்ணாவிரதம் இருப்பதும் அரசியல் தெளிவற்று இருப்பதால் அந்த போராட்டங்கள் நமது ஓட்டுச் சீட்டு சுகவாசிகளால் சூறையாடப்படுகின்றன. ஆனால் நம்மைப் போல அல்ல ஈழமக்கள். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வாழ்கிறார்கள். அன்றாடம் செத்து மடிகிறார்கள். நாமோ அறிக்கைகளுக்குள் வாழ்கிறோம்.

பதுங்கு குழிகளுக்குள் வாழ்வதைப் போலன்று அறிக்கைகளுக்குள் வாழ்வது. யுத்தம் அன்றாடம் உயிரை பலியெடுக்கிறது. பசியை பரிசளிக்கிறது. குழந்தமையைக் கொன்று விடுகிறது. அடுத்த தலைமுறையை வேரோடு அறுத்துச் சாய்த்து சவக்குழிகளாக்குகிறது. ஆனால் அறிக்கைகள் அப்படியானதல்ல. கோஷங்களுக்கு என்ன முக்கியத்துவமோ அதே முக்கியத்துவம்தான் அறிக்கைகளுக்கும். சில நேரங்களில் சிலேடையாகவும் பல நேரங்களில் நகைச்சுவையாகவும் அவை அமைந்து விடுவதால் சலிப்பைப் போக்கிக் கொள்ள அவைகள் உற்சாக பானமாக பயன்படக் கூடும். ஈழ விடுதலையின் சாரம் தமிழகத்தின் விழிப்பிலேயே தங்கியிருப்பதான ஒரு கருத்து பல்வேறு சிந்தனையாளர்களாலும் முன்வைக்கப்படும் சூழலில் ஈழப் போரில் தமிழகத்தின் பங்கில் ஒரு வரலாற்று ஓர்மை பொதிந்துள்ளது.

எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிடப்பட்ட கலவரத்தின் விளைவாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்ற காலம் அது. இன வெறி பாசிஸ்டுகளான சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதப் போரை தமிழகத்திலிருந்து முன்னெடுக்கும் விதமாக ஈழப் போராளிகள் தமிழகத்தை தங்களின் இயங்குதளமாக மாற்றியிருந்தனர். சொந்த நாட்டின் சூழலை எதிர் கொள்ள அண்டை நாட்டின் நிலப்பகுதியை இயங்குதளமாக மாற்றுவதும் கொரில்லா போருக்கான புறச் சூழலை வலுப்படுத்தும் தளமாக அண்டை எல்லையை பயன்படுத்துவதும் உலகெங்கிலும் உள்ள போராளிக் குழுக்களின் நடைமுறைதான். இன்று திபெத்தியர்களுக்கும் பாகிஸ்தான் பழங்குடிப் போராளிகளுக்கும் இந்தியா எதற்காக ஆதரவளித்ததோ அதை விட அதிகமாக ஈழப் போராளிகளை இந்தியா ஆதரித்தது. ஆனால் ஈழ அகதிகளை திபெத் அகதிகளைக் காட்டிலும் கேவலமாக பன்றித் தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பது போல் அடைத்து வைத்திருக்கிறது.

அதே நேரம் எண்பதுகளில் ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. திராவிட இயக்க அரசியலில் எம். ஜி. ஆர், கலைஞர் என இருவருமே போராளிகளை ஆதரித்தனர். எண்பதுகளில் திமுக மேடைகளில் மூன்று முழக்கங்கள் பிரதானமாக இருக்கும். (அதிமுக மேடைகளில் கவர்ச்சிக் கோஷம் மட்டும்தான்) மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், ஈழத்தமிழர் கண்ணீர் துடைப்போம் என்கிற மூன்று முழக்கங்களும் வலிமையாக சமூகத் தளத்தில் எடுத்து வைக்கப்பட்ட வரலாறு திமுகவிற்கு உண்டு. அதன் பின்னர் தொண்ணூறுகளில் வாக்குச் சீட்டு அரசியலில் வீழ்ச்சியும் உதிரிக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியும் தேசிய கட்சிகளின் முக்கியத்துவத்தை டில்லியில் குறைத்தது அல்லது உடைத்துப் போட்டது.

மத்தியில் யார் ஆட்சியமைத்தாலும் தென் மாநிலங்களின் உதவி இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது அதிலும் குறிப்பாக தமிழக கட்சிகளின் துணையில்லாமல் அதிலும் திமுக,அதிமுக என்கிற இரண்டு கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாத சூழல். மத்தியில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய திமுகவின் மேடைகளில் இன்று இந்த மூன்று கோஷங்களும் இல்லை. அப்படியானால் மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் வந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இந்தி திணிப்பு என்பதே ஒழிந்து போன ஒன்று என எடுத்துக் கொள்வதா? அல்லது ஈழத் தமிழனின் கண்ணீர்தான் துடைக்கப்பட்டு விட்டதா?

என்றால் இன்றைக்கு ஈழத்தில் கேட்கிற அதே அழுகுரல்தான் அன்றைக்கும் கேட்டது. முப்பதாண்டுகளைக் கடந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் விருப்பத்தையும் மீறி தமிழக முதல்வரின் விருப்பத்தையும் மீறி இந்தியா இலங்கை அரசின் போரை ஆதரிக்கிறது. இலங்கை அரசு ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட போரை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதே இல்லையா? இந்தியா ஏன் இந்தப் போர் தொடருவதை விரும்புகிறது. எப்போதெல்லாம் இந்தியா இலங்கை அரசை ஆதரித்ததோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான போரை இலங்கை தீவீரப்படுத்தியிருக்கிறது. எப்போதெல்லாம் இந்தியா இலங்கையை கண்டித்ததோ அப்போதெல்லாம் இலங்கை பலவீனமாகியிருக்கிறது.

யாழ்குடா நாட்டை கைப்பற்றும் நோக்கோடு ஊரடங்குச் சட்டத்தை அமல் படுத்தி 1987& மே மாதம் ‘ஆப்பரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கையை முடுக்கி விட்டது இலங்கை ராணுவம். இந்தப் படையெடுப்பை விரும்பாத இந்தியா ஜூலையில் போர் விமானங்கள் மூலம் வடமராட்சி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களைப் போட்டது. உணவுப் பொருட்களை அப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்தியா அனுப்பி வைக்காமல் ஒரு அண்டை நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி தன் விமானங்களை பறக்க விட்டு உணவுகளைப் போட்டது. ஜெயவர்த்தன வடமராட்சி மீதான படையெடுப்பை கைவிட்டார். இந்த கைவிடலும் பின்னர் வந்த இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் என்ற இரண்டுமே ஈழ விடுதலைப் போரில் கசப்பான பல நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றது இரு பக்கமும். வடமராட்சியின் மீதான போரை இந்தியாதான் நிறுத்தியது.

இலங்கை விவாகரத்தில் எப்போதும் இரட்டை அணுகுமுறையையே கடை பிடித்திருக்கிறது. இந்திராவின் காலத்தில் இருந்தே இதுதான் நிலை. அது ஒரு பக்கம் பார்த்தசாரதியை சாமாதானத் தூதராக இலங்கைக்கு அனுப்பும். இன்னொரு பக்கம் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஈழத்தில் இறக்கும். இரு தரப்பும் ஒன்றை ஒன்று மோதி வென்று விடாமல் போரை நீடிப்பதுதான் அன்றைய இந்தியாவின் அணுகுமுறை. இன்றைய இந்தியா பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு என்று ஒரு பக்கம் சொல்லும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கும். ஆயுதமும் வட்டியில்லாக் கடனும் கொடுக்கும். கூடவே இலங்கையில் வேறு குழுக்களை உருவாக்கவும் முயற்சிக்கும்.

ஆனால் இந்தியாவை தட்டிக் கழிப்பது என்பது இலங்கைக்கு கைவந்த கலை. இந்திராவின் தூதுவர் பார்த்தசாரதி உருவாக்கிய கிuஸீமீஜ்uக்ஷீமீ ‘நீ’ &யை நிராகரித்தது இலங்கை அரசு. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் பிரதான கூறுகளில் ஒன்றான வடக்கு கிழக்கு இணைப்பை உச்சநீதிமன்றத்தின் மூலம் உடைத்தெறிந்தது இலங்கை அரசு. வடக்கு கிழக்கை மூன்று அல்லது நான்கு கூறுகளாக்கி தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து அவர்களை சிதறடித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது இன்னும் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. (இதெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. வி. தங்கபாலுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெறுமனே இந்திய,இலங்கை அமைதி ஒப்பந்தம்தான் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு என்று கூவிக் கொண்டிருப்பதை விட்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை சரி பண்ண போதுமான கவனம் எடுப்பது நல்லது.)

அது போல இந்தியா முன்னெடுத்த திம்பு பேச்சுக்களில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகளும் அது தொடர்பாக ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் தயாரிக்கப்பட்ட மகஜர் இன்னும் இந்திய புலனாய்வு அலுவலகத்தில் இருக்கக் கூடும். அதை தேடி எடுத்துப் பார்த்தாலே தெரியும் அதில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எதுவும் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை. மாறாக தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான ஜனநாயக கோரிக்கையாகவே இருக்கும். திம்பு பேச்சுக்களின் தோல்விக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஈழப் போரின் தனிபெரும் சக்திகளாக வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும். இந்தியாவை யார் உதாசீனப்படுத்தினார்கள் தட்டிக் கழித்தார்கள் என்று பார்த்தால் பல உண்மைகள் நமக்குத் தெரிய வரும்.

ஒப்பந்தங்களை தொடர்ந்து சிதைத்து வந்தது. பேச்சுவார்த்தை மேஜைகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களைக் கூட அமுல் செய்யாமல் இழுத்தடித்தது. சுனாமி நிதியைக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் ஊழல் செய்தது என இந்தியாவை இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்ததை காலம் அறியும், ஆனால் போராளிகள் இந்தியாவை எப்போதும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கையில் தெரிகிறது. சகோதரக் குழுக்களுக்குள் எழுந்த மோதல் தமிழகத்திலும் சில விசும்பல்களை ஏற்படுத்த நமது தாய்நாட்டிலிருந்தே ஈழத்துக்காக போராடலாம் என்று யாழ்ப்பாணம் திரும்பிச் சென்ற பிரபாகரனையும் ஏனைய சில போராளித் தலைவர்களையும் வேண்டி விரும்பி அழைத்தது இந்தியாதான்.

அதனூடாகத்தான் விருந்தாளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது தமிழக மக்களிடம் போராளிகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழக தலைவர்கள் போராளிகள் மீது செலுத்திய செல்வாக்கு என இந்திய மத்திய அரசு இலங்கை மீதான தன் அயலுறவுக் கொள்கைக்கு போராளிகளையும் தமிழக தலைவர்களையும் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் பேச்சுவார்த்தைக்கு போராளிகள் சம்மதித்தது என்பது இந்தியாவின் நிர்பந்தத்தின் பேரிலேதான் நடந்தது. அது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தையும் ஈழ மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் மூன்றாம் தரப்பாக்கி இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக தலைவர்களையும் தமிழக மக்களையும் ஒரு காயாக பயன்படுத்திக் கொண்டது இந்தியத் தரப்பு.

பல நேரங்களில் இந்தியா போராளிகளை பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்க வைக்க எம். ஜி. ஆரை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் ஈழத் தமிழர் நலன் தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடும் தமிழக மக்கள் மற்றும் தமிழக தலைவர்களின் நிலைப்பாடும் ஒன்றாகவா இருந்தது? அன்றிலிருந்து இன்று வரை மத்திய அரசின் நிலைப்பாடும் தமிழக மக்களின்,தமிழக தலைவர்களின் நிலைப்பாடும் வேறு வேறானவை. இன்னும் சொல்லப்போனால் எதிரெதிரானவை. இந்தியா இலங்கை ஆட்சியாளர்களை மிரட்டியோ கெஞ்சியோ வலிந்த நட்பை உருவாக்கி ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்க்க முற்பட்டனர். தீர்க்க முற்பட்டதைக் காட்டிலும் இரு தரப்பும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் ஊடாக இனப் பிரச்சனை தீராமல் தொடர்ந்து அதை நீடிக்க விடுவது என்பதாய் கூட இந்தியாவின் அணுகுமுறை இன்று வரை இருந்து வருகிறது.

எண்பதுகளில் பிராந்திய நலன் நோக்கில் இலங்கையில் வேறு எந்த நாடும் கால்பதிப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் பிராந்திய நலனுக்கு தோதாக அன்று உலகம் ரஷ்யா,அமெரிக்கா என்னும் இரு பெரும் வல்லரசுகளின் கீழ் இருதுருவ அரசியலில் கீழ் அணிதிரண்டு பங்கிடப்பட்டிருந்த சூழலில் இந்தியாவின் தென் பிராந்திய நலன் என்பது இந்து மாகா சமுத்திரத்தின் மீதும் இலங்கையின் மீதும் இருந்தது. ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா அறிவிக்கப்படாத காலனியாக மூன்றாம் உலக நாடுகளை ஆக்ரமித்த போது இந்தியாவும் இன்று அமெரிக்காவின் அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாறியிருக்கிறது. இன்று இந்தியாவுக்கென்று என்ன பிராந்திய நலன் இருக்க முடியும்.

உண்மையில் அமெரிக்காவையும் மீறி திருகோணமலைத் துறைமுகத்தை தன் மேலாதிக்கத்தின் கீழ் இந்தியாவால் கொண்டு வர முடியுமா? இந்து மகாக் கடல் பகுதியை தன் ராணுவக் கட்டுக்குள்தான் வைக்க முடியுமா? என்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த தோல்வியிலிருந்தே பிராந்திய நலனைப் பேச முடியும். வடக்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் இந்தியாவின் பிராந்திய நலன் ஆட்டம் கண்டிருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைகளே இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்று மாறிப் போன பிறகு இலங்கையை ஒரு சந்தையாக மட்டுமே பார்க்கிறது இந்தியா. அமெரிக்காவுக்கு எப்படி இந்தியா ஒரு சந்தையோ அது போல இலங்கை இந்தியாவின் சந்தை. சந்தையில் அதுவும் போர் நடக்கும் சந்தையில் எதை எதை எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ அதை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறது இந்தியா.

ஆப்கானில், ஈராக்கில், லெபனானின் நடந்த நடந்து கொண்டிருக்கிற போர்கள் எல்லாம் அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் நலனில் பேரிலேயே நடந்து வருகிறது. இலங்கையில் நடந்து வரும் போரும் முடிவில்லா போராக நீள வேண்டும் என இந்தியா விரும்புகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது காரணம். ஈழ மக்களுக்கெதிரான போரில் இந்தியா இலங்கை அரசின் கையையும் ஓங்க விட்டதில்லை. புலிகளின் கைகைகளையும் ஓங்க விட்டதில்லை தன் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் ஏவல் பையன்களைப் போல இவர்கள் போராளிகளை நடத்தினார்கள். ஆனால் ஈழ விடுதலை என்னும் விஷயத்தில் போராளிகள் விடாப்பிடியாக இருந்த ஒரே காரணத்தாலேயே போராளிகள் இந்தியாவை பகைக்கும்படியாயிற்று.

ராஜீவ் ஜெயவர்த்தனாவால் செய்து கொள்ளப்பட்ட இந்திய&இலங்கை ஒப்பந்தம் என்பது நிர்பந்தத்தின் பேரில் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசும் விரும்ப வில்லை. போராளிகளும் விரும்பவில்லை. இந்தியாவை நட்புச் சக்தியாக பார்த்த போராளிகள் இந்தியாவின் பேச்சைக் கேட்டனர். எப்படி இந்திராவின் ஆலோசகர் பார்த்தசாரதி தயாரித்த Aunexure ‘நீ’ யை ஜெயவர்த்தனா சர்வகட்சி நாடகத்தின் மூலம் குலைத்தாரோ அது போல ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தமும் சிங்கள ஆட்சியாளர்களால் குலைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட தமிழர்களின் பாரம்பரிய தாயகப்பகுதியான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட இலங்கை தன் இனவாத நெருப்பில் எரித்துப் போட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாய் அன்று நடந்த ஆயுத கையளிப்பு சடங்கு நடந்த வேளையில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் புலிகள் தரப்பை நோக்கி ஒரூ கேள்வியை வீசினார்கள். ‘‘முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கப் போகிறீர்களா?’’ ‘‘ஒரு ஆயுதத்தைக் கூட வைத்துக் கொள்ள மாட்டீர்களா? என்பதுதான் அந்தக் கேள்விகள். யோகி ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக தன் ஜெர்மன் கைத்துப்பாக்கியை இந்தியத் தளபதிகளின் மேஜையில் யாரும் எதிர்பாராத வகையில் வெடுக்கென்று வைத்த போது அதை யாராலும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. யோகியின் இந்தச் செயல்பாடு மேலோட்டமாகப் பார்த்தால் சாரமில்லாமல் இருக்கும். ஆனால் ஒரு வேளை மொத்தமாக ஆயுதங்களை அன்று புலிகள் ஒப்படைத்திருந்தால் இந்த முப்பதாண்டுகளில் ஈழ மக்கள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.

சுதுமலயில் பிரபாகரன் சுட்டிக்காட்டிய இனவாத நெருப்பு தமிழ் மக்களை பொசுக்கியிருக்கும். இன்று இலங்கை அரசு ‘‘புலிகளுக்கு ராணுவத்தீர்வையும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும்’’ வழங்குவதாகக் கூறி ஈழ மக்கள் மீது போரைத் தீவீரமாக்கியிருக்கிறது. இதை புலிகளுக்கு எதிரான போரா? ஈழ மக்களுக்கு எதிரான போரா? என்கிற கேள்விகள் மிக மிக அற்பத்தனமான அபத்தமான கேள்விகள். யுத்தத்தை விரும்பாத எவரும் யுத்தத்தை எதிர்ப்பார்களே தவிர அதை வகை பிரித்து எதிர்க்க முடியாது.

நாளை வடக்கு மக்களுக்கு சிங்கள அரசாங்கம் வழங்கப் போவதாக சொல்லப்படும் ஜனநாயத்தை கிழக்கு மக்களுக்கு ஏற்கனவே வழங்கிவிட்டது சிங்கள அரசு. கிழக்கில் கருணா குழுவின் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ அமைப்பின் பிள்ளையானைக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது இலங்கை. ஒரு பக்கம் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் நடக்கும் உட்கட்சி மோதலில் ஏராளமானோர் கொல்லப்படும் சூழலில். ஒரு போலீஸ்காரரைக் கூட கிழக்கு மாகாண அரசால் நியமிக்க முடியாத அளவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு அரசையே எம்மிடம் வழங்கியிருக்கிறார்கள் என்று பிள்ளையான் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டுகிறார். போதாக்குறைக்கு பிள்ளையானின் ஆட்கள் ஒவ்வொருவராக இலங்கை அரசால் படுகொலை செய்யப்படுகிறார்கள். கிழக்கில் நாள்தோறும் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.

பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையே நடக்கும் கோஷ்டி மோதலில் இடையில் சிக்கிக் கொண்டதென்னவோ கிழக்கு மக்கள்தான். கிழக்கின் அதிகாரம் குறித்து கருணா சொல்கிறார். ‘‘ கிழக்கிற்கு எவ்விதமான போலீஸ் அதிகாரமும் தேவையில்லை’’ என்கிறார். மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் இலங்கை அரசின் லட்சணமும் இதுதான் கிழக்கு மக்களுக்கு தவணை முறையில் ஜனநாயகத்தை பரிசளிக்கும் கருணா கும்பலின் லட்சணமும் இதுதான். ஆக அரசியல் தீர்வு என்னும் மோசடிப் பேச்சின் மூலம் துப்பாக்கிகளாலே தீர்வுகளைக் காணலாம் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால் தான் போட்ட ஒப்பந்தத்தையே இல்லாதொழித்த இலங்கை அரசை கண்டும் காணாமல் இருக்கும் இந்தியா, ஒப்பந்தம் அமைதிப்படையினரின் அட்டூழியங்கள் இவைகளின் பின் விளைவாக நிகழ்ந்த ராஜீவ் கொலையில் ராஜீவ் கொலையை மட்டும் காரணமாக வைத்து புலிகளை தடை செய்து இந்தியாவில் முடக்கியிருக்கும் சூழலில் இலங்கை அரசுக்கு வட்டியில்லாக் கடனும் ஏராளமான ஆயுதங்களையும் கொடுக்கிறது.

ஒன்றிலோ இலங்கையையும் புலிகளையும் சம அளவில் விலக்கி வைக்க வேண்டும். ஆனால் இந்தியா தங்களுக்கு யார் துரோகம் இழைத்தார்களோ அவர்களை அணைத்துக் கொள்வதில் பொதிந்திருப்பது பிராந்திய நலன் என்பதெல்லாம் இல்லை. முதலில் நாம் சுட்டிக் காட்டிய புலித்தலைவரின் சுதுமலை பிரகடனத்தையும் இந்த ஆண்டு மாவீரர் நாள் உறையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். ’’ ‘‘உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். ’’

‘‘எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.” ‘‘பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். ’’ ‘‘இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம். ’’

‘‘சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.’’ ‘‘இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர். ’’ ‘‘இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. ’’

‘‘எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். ’’ ‘‘அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. ’’

ஈழத் தமிழரின் விடுதலைப் போரை விடுதலைப் புலிகளே இன்று முன்னெடுத்து வரும் சூழலில்,இந்தியாவின் துரோகத்தை தோலிருத்துக் காட்டும் அதே சமயம் இந்தியாவின் நட்பை புலிகள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் புலிகளை மோதி வென்று விடலாம் என்று இலங்கை அரசு நினைக்கும் என்றால் அதற்கும் இந்தியாவே மௌனசாட்சி. ஏனென்றால் வெல்ல முடியுமா? முடியாதா என்பதை இந்தியா அறியும். எண்பதுகளில் பிற்பகுதியில் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படை புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைகிறோம் என்று 1987&அக்டோபர் பத்தாம் தேதி ‘ஆப்பரேஷன் பவான்’ என்ற பெயரில் புலிகள் மீது போர் தொடுத்தது. மூன்றாண்டுகலாம் நீடித்த இந்தப் போரில் ஒரு சின்ன கொரில்லா போராளிக் குழுவிடம் மோதி இந்தியா இழந்த ராணுவ வீர்களின் எண்ணிக்கை 1,500. சீனவுடனும் பாகிஸ்தானுடனும் இந்தியா நடத்திய பெரும் போரில் கூட இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு இந்த எண்ணிக்கையில் இருந்ததில்லை.

புலிகளை அழிக்கிறோம் என்று அன்றைக்கு இந்தியா வீசிய குண்டுகளும் சரி இன்றைக்கு இலங்கை வீசுகிற குண்டுகளும் சரி ஈழ மக்கள் மீதல்லவா? விழுகிறது. இல்லை இல்லை அவர்கள் புலிகள்தான் என்றால். தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளையும் ஈழ மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக முதல்வர் சொன்ன மாதிரி ‘‘புலிகள் மீது வீசப்படும் குண்டும் ஈழத் தமிழன் மேல் வீசப்படும் குண்டும் ஒன்றுதான்’’ குண்டு ஒன்றுதான் என்றால் உயிர்கள் மட்டும் வேறு வேறா?

இத்தனைக்கும் பிறகும் சர்வதேச நெருக்கடிகள் இந்தியாவின் நெருக்கடிகளையும் கடந்து ஈழப்போர் அடுத்த தலைமுறைக்கு கைமாறியிருக்கிறது. அதைத்தான் புலிகளின் தலைவர் இப்படிச் சொல்கிறார். ‘‘எத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி அந்நிய சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். 

மாவீரர் தின உரையில் பிரபாகரன். . .

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள். இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

ஏன் என் கட்டுரைகள் தமிழ் மணத்தில் தெரிவதில்லை.....

தொழில் நுட்பப் பிரச்சனையா? அல்லது அரசியலா?

அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை.-1

டி.அருள் எழிலன்

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு தொடுத்திருக்கும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கொட்டும் மழையில் நனைந்தபடி லட்சக்கணக்கான மக்கள் தமிழக மக்கள் மத்திய அரசிடம் குரல் கொடுக்கிறார்கள்.அறுபது கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட அந்த மனிதச் சங்கிலி இந்திய மத்திய அரசுக்கு எதிரான உணர்வுச் சங்கிலி. திரைத்துறையினர் நிபந்தனைகளுடன் போராடுகிறார்கள்.மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். என இருபதாண்டுகளுக்குப் பிறகு ஈழ மக்களுக்காக தமிழகம் மீண்டும் கொந்தளிக்கிறது. ஆனாலும் மத்திய அரசு ‘‘எந்த ஒரு அயல்நாட்டின் உள்விவாகரத்திலும் இந்தியா தலையிடாது’’ என்று கைவிரிக்கிறது இந்தியா.‘‘அப்படியானால் இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் பயிர்ச்சியும் மட்டும் கொடுக்கிறீர்களே?இதுதான் உங்கள் தலையிடாக் கொள்கையின் லட்சணமா? என்று கொதிக்கிறார்கள் தமிழக மக்கள்.கடைசியில் கோரிக்கைகள் நிபந்தனைகள் எல்லாம் கைவிடப்பட்டு வெறும் நிவாரணப் பொருட்களைத் திரட்டி ஈழ மக்களுக்காக இலங்கை அரசிடம் ஒப்படைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
உண்மையிலேயே இலங்கையின் உள்விவாகரத்தில் இந்தியா தலையிட்டதே இல்லையா? என்றால் இந்தக் கேள்வியின் சங்கிலி 1983-ஜுலைக் கலவரத்தில் இருந்து தொடங்குகிறது. கரிசனத்தின் பேரில் துவங்கப்பட்ட சமாதான முயர்ச்சி மாபெரும் சூதாட்டமாக மாறிய கதை இது,

சுற்றுலா, தேயிலை இந்த இரண்டையும் தவிர்த்த வேறெந்த முக்கியத்துவமும் இல்லாத இலங்கையையின் மீது இன்று உலக நாடுகள் கண் வைத்திருக்கிறன்றன.அமெரிக்காவுக்கு ஆசியாவின் பங்காளியான சீனாவும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது. இந்தியாவின் பகை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானும் ஆயுதக் கப்பலை அனுப்பி வைக்கிறது. ஈழத்தோடு அறுபடாத தொப்புள் கொடியாய் நீளும் தமிழகத்தைச் சுமந்திருக்கும் இந்தியாவும் ஆயுதம் கொடுக்கிறது என்றால்.இலங்கைத் தீவின் அமைவிடம் அப்படி. முப்பாதாண்டுகளைக் கடந்தும் தொடரும் யுத்தம் முடிவுக்கு வராமல் இழு பட இந்து மகா சமுத்திரம் சுமந்திருக்கும் சர்வதேச அரசியலும் ஒரு காரணம்.

இலங்கையில் அப்படி என்னதான் பிரச்சனை? இந்தியாவால் இதை தீர்த்து வைக்க முடியாதா என்றால். இலங்கை அரசின் இனவெறியின் கடந்த கால கருப்பு வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் காலுக்குக் கீழே விழுந்த கண்ணீர்த்துளி நாடான இலங்கையில் கடந்த ஐம்பதாண்டுகளாக எரிகிற நெருப்பு நம்மையும் சுடுகிறது. எட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல முடியாத படி உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது.

போர்த்துக்கீசியரின் பிடியில் கி.பி 1505 முதல் 1658 வரையும் பின்னர் டச்சுக்காரகளால் கி.பி 1658 முதல் 1796 வரையும் அவர்களிடமிருந்து பிர்ட்டீஷாரால் கைப்பற்றபட்டு 1796&முதல் கி.பி 1850 வரையிலும் இருந்த இலங்கை எனப்படும் ஸ்ரீலங்கா வின் இனப்பிளவு இவர்களில் இருந்தே துவங்குகிறது. அந்நிய ஆட்சி முறை ஆசிய மக்களிடையே குறிப்பாக இந்திய, இலங்கை மக்களிடையே ஏற்படுத்திய பிளவு என்பது இன,கலாசார, பொருளாதார, ஆன்மீக ரீதியிலானதும் கூட. அடிமை வணிகத்தின் தோற்றமும் மன்னராட்சிகளின் பிற்போக்குத்தனமும் மக்களிடையே நிலவிய சமூக முரணும் அந்நிய ஆக்ரமிப்பாளர்களுக்கு எப்போதும் போலவே வசதியாக இருந்தது. மக்களிடையே இருந்த கலாசார வேறுபாடுகளை தங்களின் ஆட்சியதிகாரத்தை பாதுகாப்பதற்காக ஊட்டி வளர்த்தது இவர்கள்தான். இன்று இத்தீவில் வதியும் இரு பெரும் தேசீய இனங்களான சிங்களப் பெருந்தேசீய இனமும் தமிழ்ச் சிறும்பான்மை தேசிய இனமும் முரண்பட்டு நிற்பதற்கான காரணிகளை வளர்த்தெடுத்து சிங்கள ஆட்சியாளர்களிடம் கையளித்து விட்டுப் போனவர்கள் இவர்களே...

பிரிட்டீஷாரால் கையளிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திரக் கொடியை வடிவமைப்பதில் இருந்து தொடங்குகிறது சுதந்திரத்துக்குப் பிந்தைய இன முரண்பாடு.
மாட்சி¬மைதாங்கிய பிரிட்டீஷ் ராஜ்ஜியத்தின் கொடி இறக்கப்பட்டு 1948&ல் முதல் இலங்கை சுதந்திர சமத்துவக் குடியர்சின் கொடி ஏற்றப்படும் போது அந்தக் கொடி சிங்கள பெரும்பான்மை தேசியத்தின் ஆண்மையையும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் மற்றெல்லா சமூகங்களைக் காட்டிலும் உள்ள உயர் அந்தஸ்த்தையும் காட்ட வேண்டும் என அதன் முதல் பிரதமராக பதவியேற்ற டி.எஸ் சேனநாயகாவும், ஜெயவர்த்தனாவும், ஏ.ஈ.குணசிங்க போன்ற சிங்களத் தலைவர்களும் திட்டமிட்டனர். ஆனால் சிறுபான்மை இனமும் தொன்மைச் சமூகமுமான தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரதிநித்துவம் செய்யும் படியான தேசியக் கொடியைத்தான் நாம் ஏற்ற வேண்டும் என தமிழ்த் தலைவர்களான் எஸ்.ஜே.வி செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம். சி.வன்னியசிங்கம், சி,சுந்தரலிங்கம் போன்ற தமிழ் தலைவர்கள் கோரினார்கள்.

இது பற்றி நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பேசிய தமிழர் தந்தை செல்வநாயகம்‘‘ இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவர்களின் சிங்கக் கொடியையும், தமிழரின் நந்திக் கொடியையும், முஸ்லீம்களின் பிறை நட்சத்திரக் கொடியையும் கொண்டதாக அமைய வேண்டும்’’ என்றார்.
ஜி.ஜி பொன்னம்பலம் வன்னியசிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களும் கொடியின் மீதான தமிழ் மக்களின் மனக் கசப்பை வெளிப்படுத்தினார்கள். கடைசியில் விவாதத்தின் மீது பேசிய டி.எஸ்.சேனநாயகா ‘‘நான் சிங்கக் கொடி ஏற்றப்பட வேண்டும் என விரும்புவதற்கான பிரதான காரணம் என்னவெனில், நாம் எமது தேசத்தைத் தோற்று,மக்கள் இங்கிலாந்தின் அரசரதைத் தமது அரசராக ஏற்றுக் கொண்ட சமயத்தில்,இறுதிக் கண்டியரசன் சிம்மாசனத்திலிருந்து அகற்றப்பட்டு, அவனது சிங்கக் கொடு கீழே இறக்கப்பட்டது. இப்போது நாட்டின் ஆட்சியதிகாரத்தை மீளளிக்கையில் அதனுடன் கூடவே அந்தக் கொடியையும் இங்கிலாந்து மீளளிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நாம் சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்ற எண்ணுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்’’ என்றவர். ‘‘இந்தக் கொடியை ஏற்றிய பின் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என விரும்புவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருத்தமானதொரு கொடியை ஏற்றலாம்’’
என்றும் சொல்ல அப்படியே சிங்கக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்து மாற்றி அமைக்கப்பட்ட கொடி. பீதாம்பரச் சிவப்புப் பின்னணியில் பொன்னிறச் சிங்கம் கொடியில் அப்படியே இருக்க சிவப்புப் பின்னணியில் நான்கு மூலைகளிலும் இருந்த முனைகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக நான்கு பொன்னிற அரச இலைகள் இடம் பெறும்.ஒரே அளவிலான இரண்டு செங்குத்தான கோடுகள் ஒன்று செம்மஞ்சளாகவும் இன்னொன்று பச்சை நிறத்திலும், தமிழர் முஸ்லீம் ஆகிய இரண்டு சிறுபான்மை இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொடியின் அளவு 1:5 என்ற விகிதாசார அளவில் இடம் பெற்றது.

ஆண்மை மிக்க சிங்களத் தேசீயத்தின் பால் நின்று சிறுபான்மை மக்களை அந்த சிங்கள பரப்பிற்குள் அடங்கி நடக்கும்படியான ஒரு செய்தியை டி.எஸ். சேனநாயகாவும்,ஜெயவர்த்தனாவும், ஆ.டி.பண்டாரநாயகாவும் செய்தார்கள். பெரும்பான்மை என்னும் பாசிச கருத்தியல் இன்று உலகெங்குலும் பயங்கரவாத்தை கட்டவிழ்த்து விடுகிறது, செப்டம்பர் 11 &ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் பெரும்பான்மை என்னும் சொல்லுக்கு அதிகாரமானதும் பாசிசபூர்வமானதுமான விளக்கம் இன்று எழுதப்படுகிறது.உலகம் முழுக்க இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பயங்கரவாதம் கட்டி எழுப்பப்பட்டது. அது இந்தியாவில் இந்து பாசிசமாகவும் இலங்கையில் பௌத்த மேலாண்மைகொண்ட சிங்களப்பாசிசமாகவும் இருக்கிறது. துவக்ககாலத்தில் பயங்கரவாதிகள் என்ற சொல் உலக நாடுகளிடம் இல்லை இன்று உலகிற்கு எழுந்துள்ள புதிய சூழலில் பயங்கரவாதம் என்ற சொல்லை சிங்களப் பேரினவாதிகள் பயன்படுத்துவது கொடுமைதான் இல்லையா?

ஆனால் சிங்கள மேலாண்மை பெற்ற தேசீயக் கொடியை அவர்கள் ஏற்றும் போதே இலங்கைத் தீவில் வதியும் ஒட்டு மொத்த பூவீகத் தமிழருக்கு தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழருக்கும் ஒரு செய்தியை அவர்கள் சொன்னார்கள். அது இத்தீவில் ஆளப் பிறந்த இனம் சிங்களர்கள் என்றும் எல்லா காலத்திலும் சிங்களர்களின் நம்பிக்கையைப் பெற்ற சிங்கள இறைமையையின் மீது தீரா நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்ட ஒரு இனமாக மட்டுமே இத்தீவில் சிறுபான்மையோர் வாழ முடியும் என்பதை அந்தக் கொடியை ஏற்றி வைத்த போதே சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். துரோகமானதும் வஞ்சகமானதுமான இக்காரியம் சிங்கள தலைவர்களின் கைச் சாதுர்யத்தாலும் சில தமிழ்த் தலைவர்களின் துரோகத்தாலும் விளைந்தது என்றால் அதில் உண்மையும் யதார்த்தமும் இல்லாமல் இல்லை.

ஆனால் சுதந்திரத்துக்குப் பின் வரப்போகிற அடுத்தடுத்த சிங்கள இனவெறிச் சட்டங்களை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ள வில்லை. ஏனென்றால் டி.எஸ்.சேனநாயகா வம்சாவளிகள் தொடர்பான பிரஜாஉரிமைச் சட்டத்தை வெள்ளையர் வெளியேரும் வரை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. சகல தரப்ப்பு மக்களையும் சமாதானப்படுத்தும் ஒரு நாடகத்தோடு பிரிட்டீஷாரை திருப்திப்படுத்தி இலங்கையை விட்டு வெளியேற்றிய பின்பே சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை வேறோடு சாய்க்கும் கோரமுகங்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டது.ஆனால் மோசமாக துவங்கபட்ட அந்த நாட்கத்தின் போக்கு தமிழ் இளைஞர்களால் மாற்றி எழுதப்படும் என்பதை சிங்களர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடரும்...

அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...

டி.அருள் எழிலன்



உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய சூழலில் இந்தியாவிலேயே மரபணு மாற்றச் சோதனையில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். கத்தரி நெல்லில் மரபணு மாற்றத்தை நடத்தியவர்கள் இப்போது கைவைத்திருப்பது நமது பாரம்பரீய மருந்துகளான சித்தா ஆயுர்வேதத்தில். சோதனைகள் முடிந்து விரைவில் நமது பாரம்பரீய வேம்பும், மஞ்சளும், இஞ்சியும் அமெரிக்க தனியார் முதலாளிகளின் கைகளுக்கு செல்லப் போகிறது. வேகமாக இவைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள், சிலர் மௌனமாக வேடிக்கை பார்த்து தாரைவார்ப்பை ஆதரிக்கிறார்கள்.

‘‘ மரபணு பொறியியல் அல்லது மரபணு மாற்றம் என்பது தாவரங்களில் பூச்சிக் கொல்லி சக்தியை அதிகரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்த நமது மரபான பயிர்களின் அணுக்களை மாற்றி உற்பத்தி செய்வதுதான் மரபணு மாற்றம் செய்வது.ஒரு விளை பொருளை எடுத்து அதில் செயர்க்கை கரு ஊட்டல் மூலம் பத்து விதமான புதிய ரக அதே விளை பொருளை உருவாக்குவதுதாம் மரபணு மாற்றம்.இந்த மரபணு மாற்றத்தின் அபாயங்களை அறிந்த அய்ரோப்பிய நாடுகள் இந்த ஆய்வுகளை தங்கள் நாட்டில் செய்ய தடைவித்திருக்கிறது.அது மட்டுமல்ல அமெரிக்காவில் கூட இந்த ஆய்வுகள் ஆய்வுக் கூடங்களில் வைத்து நடத்தப்படுகிறதே தவிற அவர்களின் விளை நிலங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.அவர்களின் மண்ணின் வளம் கெட்டு விடும் என்பதால் அமெரிக்க முதலாளிகள் பல்லுயிர் பெருக்கத்தின் இதய பூமிகளுள் ஒன்றான இந்தியாவை தேர்ந்தெடுத்து நமது மண்ணையும் மக்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமெரிக்க முதலாளிகளுக்கு பல்லக்குத் தூக்கும் இந்திய அரசியல்வாதிகளோ பணத்துக்காக நாட்டையும் இந்த மக்களையும் அமெரிக்க முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார்.சித்த வைத்தியர் டாக்டர் சிவராமன்.
‘‘ கத்தரி,வெண்டை,தக்காளி,நெல்,கம்பு,இராகி,சோளம்,உளுந்து,தட்டைப்பயறு,கொண்டைக்கடலை,உருளைக்கிழங்கு,குட்டிக்கிழங்கு,வாழை,பப்பாளி,ஏலம்,கரும்பு, என பல வகையான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.(நிமீஸீமீtவீநீ விஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ ஷீக்ஷீ நிமீஸீமீtவீநீ விணீஸீவீஜீuறீணீtவீஷீஸீ) இவைகளில் நெல்ரகங்கள்,காய்கரி ரகங்கள் என வயல்களில் சோதனை நிலையில் உள்ளன. தமிழ்நாடு வேளாண்பலகலைக் கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், சென்னையில் லயோலாக் கல்லூரியும் இத்தைகைய மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.மகிகோ மான்சான்டோ என்னும் அமெரிக்க நிறுவனத்திறகாக நடத்தப்படும் இந்த ஆய்வுகளுக்காக இந்திய விவசாயிகளும் விளை நிலங்களும் பலிகடாவாக்கப்படுகிறது.அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்லி மரபணு மாற்றப் பயிர்களை பயிர் செய்யச் சொல்கிறார்கள் பயிர் செய்யும் விளை பொருட்களில் இருந்து கண்டு பிடிக்கப்படும் புதிய ரக விளை பொருட்களுக்கான உரிமை அமெரிக்க மான்டான்டோவுக்கு போய் விடும். அப்படி நமது விளை பொருளுக்கான உரிமை அமெரிக்க முதலாளிகள் கையில் சென்ற பிறகு இந்திய விவாசாயிகள் விரும்பினால் கூட அதை விளைவிக்க முடியாது.காப்புரிமைச் சட்டத்தின் கீழ நெல் விவசாயம் செய்யும் விவசாயி கைது செய்யப்படுவார்.அது மட்டுமல்ல ஏன் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஆய்வை தடை செய்திருக்கின்றன? இந்த மரபணு மாற்றப்பயிர்களால் விளை நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன? அதை உண்ணுகிற மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் என்ன? என்பது போன்ற எளிய சந்தேகங்களுக்கு இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைகழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் பதில் சொல்ல வேண்டும்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் தமிழக பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.

இந்தியாவின் முதல் மரபணு மாற்ற பொருளான கத்தரிக்காயை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த மரபணு மாற்றப்பயிர்களை அங்கீகரிப்பதற்கும் சந்தைப் படுத்துவதற்குமான ‘தேசீய உயிர்த் தொழில் நுட்ப அங்கீகரிப்பு அமைப்புச் சட்டம்’ ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது இதில் விளைபொருட்கள், பாரம்பரீய மருந்துகள்,உணவுப் பொருட்களோடு தொடர்புடைய இந்த சோதனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய ஏழு அமைச்சகங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை வெறும் அறிவுரைகள் வழங்கும் கருத்துக் கருவூலங்களாகவே மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் பொறுப்பின் கீழ் வரும் பாரம்பரீய மருந்துகளான சித்தா,ஆயுர்வேத பரம்பரை மூலிகைகளை குறிவைத்திருக்கிறது மரபணு மாற்றச் சோதனைகள்.

‘‘உலகில் பல்லுயிர் விளை நிலம் என்ற வலையம் ஒன்று உண்டு. அதாவது மண்ணின் தன்மைக் கேற்ப வளருகிற தாவரங்கள்.இம்மாதிரி பல்லுயிர் வளம் உலகம் முழுக்க 14 இடங்களில்தான் உள்ளது அதில் பிரதான ஒன்பது இடங்கள் இந்தியாவில் உள்ளது. உலகெங்கிலும் ஆங்கில மருந்துகளின் பின் விளைவுகளினால் அதிலிருந்து மீள நினைக்கும் மக்கள் ஸிணீtவீஷீஸீணீறீ மிக்ஷ்மீபீ றிலீஹ்பீஷீ னீமீபீவீநீவீஸீமீ &க்கு மாற நினைக்கிறார்கள். இதனால் உலகெங்கிலும் இந்திய மூலிகை மருந்துகளுக்கும் பல்லுயிர் சூழலில் வளரும் மருத்துவ குணமுள்ள மருந்துகளுக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றம் மூலம் மாற்றி இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிமான மக்களை அதை நுகரும் சந்தைப் மனிதர்களாக மாற்ற முயர்ச்சிக்கிறது அமெரிக்க நிறுவனங்கள். அதற்கு துணை போகிறது மத்திய அரசு.சித்த வைத்தியத்தில் நில வேம்பு இருக்கிறது காலம் காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நில வேம்பு சிக்கன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் நில வேம்பில் உள்ள எந்த கெமிக்கல் சிக்கன் குன்யாவை கட்டுப்படுத்துகிறது என்றால் அதை பாரம்பரீய மருத்துவத்தில் தீர்மானமாக சொல்லிவிட முடியாது ஆனால் மரபணு மாற்றத்தில் நிலவேம்பில் உள்ள ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்துக் கொண்டு அது ஒரு நோய்க்கு மருந்தாகிறது என்பதை கண்டு பிடித்து உடனே நிலவேம்பில் அந்த கெமிக்கலைச் செலுத்தி அதை அதிக அளவில் உற்பத்தி செய்து. அதை சந்தைப் படுத்துவார்கள்.இதன் மூலம் ஒரு பக்கம் நில வேம்பின் காப்புரிமை கண்டு பிடித்த கம்பெனியின் கைகளில் போவதோடு. நில வேம்பின் வளர்ச்சியே பாதிக்கப்படும்.இதை எப்படி புரிந்து கொள்வதென்றால் பால் கலக்காத கடும் டீ யை நாம் அருந்தும் போது அது வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது, ஆனால் தேயிலையில் இருக்கும் எல்லா கெமிக்கலையும் எடுத்து தனித்தனியாக பிரித்து சோதித்தால் அதில் எந்த கெமிக்கலுக்கும் அப்படி வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடிய மலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இல்லை என்பது ஆய்வில் தெரிகிறது. இதுதான் நமது பாரம்பரீய மருந்துகள். அதன் மருத்துவ குணம் என்பது இந்த மண்ணின் உயிர்ச்சூழலோடும் வளத்தோடும் தொடர்புடையது.இந்த மூலைகைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுவதுதான் அதன் இயர்க்கைத் தத்துவம். ஆனால் இவர்கள் இதை வெறும் பணம் வசூலிக்கும் மருந்தாக மாற்றுவதோடு சாதாரண மக்களின் வீடுகளில் வளர்க்கும் இந்த தாவரங்களை காப்புரிமை என்ற பெயரில் ஏக போக உரிமையாளர்களாகப் பார்க்கிறார்கள்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இம்மாதிரி ஆய்வுகளை பாரம்பரீய மூலிகை தாவரங்களில் நடத்தப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என்கிற டாக்டர் சிவராமன்.
‘‘இந்தியாவில் உள்ள தாவரங்களில் சுமார் 1500 தாவரங்கள் மருத்துவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.அதில் 500 தாவரங்கள் நேரடியாக மருந்து தயாரிப்பில் ஈடு படுத்தப்படுகிறது. இது மருந்தின் வீரியம், மூலப்பொருட்களின் பயன்பாடு நோயாளிகளின் தேவை என இவைகளை கணக்கிட்டே உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் மரபணு மாற்றத்தை அனுமதித்தால் இந்த மூலிகைச் செடிகளின் தன்மை அதாவது மருத்துவ குணம் மாறுவதோடு இனி இந்த தாவரங்களுக்கு நாம் உரிமை கொண்டாட முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான்.அதனால் உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த மரபணு மாற்ற சோதனையை அடியோடு கைவிட வேண்டும் அதுதான் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது’’ என்கிறார் டாக்டர் சிவராமன்.-

‘‘உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் சந்தைக்கு வரும் போது அந்தப் பொருள் பற்றிய விபரங்களை குறிப்புகளாக அச்சிட்டு அதை அந்தப் பொருளின் உறை மீது லேபிளாக ஒட்டுவது வழக்கம். ஆனால் மரபணு மாற்ற பொருட்கள் சந்தைக்கும் வரும் போது அது இயர்க்கையாய் நமது விவசாயிகள் உற்பத்தி செய்ததா? அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? என்கிற விபரம் கூட அதில் இருக்காதாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்ப்ட்ட கத்தரிக்காயை வாங்கி உண்டு நமக்கு ஏதாவது விசித்திரமான நோர்கள் உருவானால் அது எதனால் உருவானது என்று கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியாத சூழலுக்கு மக்களை தள்ளி விட்டது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் சந்தைக்கு வரும் எந்தப் பொருளும் இது மரபணு மாற்றம் மூலம் தயாரிகக்ப்பட்டது என்கிற விபரம் இருக்கும். நுகர்வோருக்கு வாங்கும் பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தியாவில் நுகர்வோருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கூட் மறுக்கப்பட்டு அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதை வாங்க வேண்டும் என்ற மறைமுகமான நிர்பந்தத்துக்கு இது வழி வகுக்கிறது.அது மட்டுமல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிற ‘‘ஆயுஷ்’ நிறுவனம்தான் பாரம்பரீய மூலிகைகள் மருந்துகளை வளர்தெடுக்கிறது.ஒரு பக்கம் இப்படி வளர்த்தெடுப்பது போல் வளர்த்து விட்டு அதே பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றச் சோதனைகளுக்கு உட்படுத்துவதை வேடிக்கை பார்க்கிற அன்புமணி ராமதாஸ் இந்த ஆய்வுகளை தடை செய்ய முன் வரவேண்டும்.இந்திய மக்களுக்கு செய்கிற உண்மையான மக்கள் சேவை என்பது இதுதான்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.

சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....



தலித்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மிக மோசமான தக்குதல் ஒன்றை ஊடகங்களும் அரசதிகார ஆதிக்க சாதி சக்திகளும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மோதல் மத்யமரின் மனதில் தலித் மாணவர்களுக்கு எதிரான மிக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது.

‘‘காட்டுமிராண்டிகள்...இவர்களெல்லாம் சட்டம் படித்து என்ன செய்யப் போகிறார்கள்’’

‘‘இவர்களெல்லாம் சட்டம் படித்து நீதிபதிகள் ஆனால் என்ன நடக்கும்’’

‘‘உடனடியாக சென்னை சட்டக் கல்லூரியின் அம்பேத்கர் பெயரை மாற்ற வேண்டும்’’

‘‘கல்லூரி விடுதிகளை மூட வேண்டும்’’

இன்னபிறக் கோரிக்கைகள் தலித்துக்களை குறி வைத்து வீசப்படுகின்ற சூழலில். சிக்கிக் கொண்ட மாணவனை ஏன் இவளவு கோபத்தோடு தலித் மாணவர்கள் தாக்க வேண்டு என்ற கேள்வியை ஆதிக்க சாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள், அரசியல்கட்சிகள், அரசு நிர்வாகம் என எல்லா தரப்பும் தந்திரமாக மறைத்து விடுகிறது.

பணக்கார ஆண்டைகளுக்கும் பண்ணை வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியம் என்று மாறிப் போன சூழலில் இன்னும் ஏழைகள் தங்களின் பிள்ளைகளை படிக்க நம்பியிருப்பது பிரதானமாக இரண்டு துறைகளைத்தான் ஒன்று நர்சிங், இன்னொன்று டீச்சர் டிரெயினிங்.(இந்த இரண்டிலும் மோசடிக் கும்பல் புகுந்து விட்டதென்பது தனிக்கதை) மூன்றாவதாக உயர்கல்விப் பிரிவில் வருகிற சட்டம் படிக்க வருபவர்களும் சாதாரண எளிய குடும்பத்து பிள்ளைகள்தான். பப்ளிக் டாயெல்ட்டுகளைப் போல இருக்கும் அரசு விடுதிகளில் தங்கித்தான் பெரும்பாலான தலித் மாணவர்கள் சட்டம் படிக்கிறார்கள். அந்த வகையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 60% மாணவர்கள் பள்ளர்,பறையர் வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும் மீதி சாதிகளாக 40% பேரும் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்கள். தனியார் முதலாளிகளின் கையில் உயர்கல்வி சென்ற பிறகு இடஒதுக்கீட்டின் உரிமையும் அரசின் சலுகைகளும் கொஞ்சமேனும் மிச்சமிருப்பது சட்டக் கல்லூரிகளில்தான்.ஆனால் முதல் தலைமுறையாக இழிவை சுமக்க மறுத்து சட்டம் படிக்க வந்தக் கூட்டம்.

பொதுவாக எந்தக் கல்லூரி மாணவர்களும் பொதுப் பிரச்சனைகளுக்காக இன்று போராட வருவதில்லை. அரசு ஒரு போராட்டம் நடத்தினால் மீடியாக்களில் கிடைக்கும் பப்ளிசிட்டிகளை விரும்புகிற மத்யதர மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கவனஈர்ப்பை மேற்கொள்வார்கள். இதை கும்பகோணம் பள்ளியில் எரித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளில் தொடங்கி இதயத்தை தானம் கொடுத்த ஹிதேந்திரன் வரை காணமுடியும். ஆனால் இன்றும் பொதுப் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வருபவர்கள் என்றால் அது சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டும்தான். அதனால் அவர்களுக்கு வன்முறையாளர்கள் என்ற முத்திரையும் இந்த மெழுகுவர்த்தி ஏற்றுகிற மத்யமரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதோடு இணைத்துத்தான் இந்த தாக்குதல்களை ஒட்டி எழுந்திருக்கும் எண்ண ஓட்டங்களை பார்க்க வேண்டும்.

தலித் மாணவர்கள் தேவரின மாணவர்கள் முரண்பாடு என்பது பல ஆண்டுகளாக சென்னை சட்டக் கல்லூரிக்குள் இருந்திருக்கிறது. அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த இந்து சாதியமைப்பின் ஒரு அங்கம்தானே? சமூகத்தின் உள்ள சாதி ஏற்றத் தாழ்வுகள் சட்டக் கல்லூரிக்குள் மட்டும் இருக்காது என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்.தவிறவும் மாணவச் சமுதாயம் சாதி பேதம் பார்க்காது என்பதை நம்புகிறவர்கள். தென் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளில் போய் பார்க்கட்டும் தலித் மாணவர்கள் ஆதிக்க சாதி மாணவர்களால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று. சாதி எல்லாவனுக்குள்ளும் இருக்கிறது. அது மாணவர்கள் மனதில் யூனிபார்ம் போட்டு சம்மணமிட்டிருக்கிறது.தனது பள்ளிப் பாடப்புத்தகத்தில் அம்பேத்கரின் படம் இருப்பதை இழிவாக நினைக்கும் அளவுக்கு ஆதிக்க சாதி மாணவர்களின் மனதில் விஷம் ஏற்றப்பட்டிருக்கிறது.

இம்மாதிரி ஒரு சூழலில்தான் சென்னை சட்டக் கல்லூரியில் தேவர் குருபூஜை அன்று அடிக்கப்பட்ட போஸ்டரில் தந்திரமாக அம்பேத்கர் பெயரை தவிர்த்திருக்கிறார்கள் தேவரின மாணவர்கள். அது தொடர்பான கொதிப்புதான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தவிறவும் வெறுமனே இதை ஒரு போஸ்டர் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. மோதிக் கொண்ட இரண்டு தரப்பினருமே வெளியூர் மாணவர்கள்.
சென்னைக்கு வெளியே என்ன நடக்கிறது.

மேலவளவில் ஒரு ஆளை கும்பலாக கூடி வெட்டியது யார்?

திண்ணியத்தில் ஒரு தலித்தை குடும்பமாக சேர்ந்து பீயைத் தின்ன வைத்தது யார்?

குழந்தை என்றும் பார்க்காமல் தனத்தின் கண்ணைக் குத்தியது யார்?

உத்தபுரத்தில் சுவர் கட்டி பிரித்துவைத்தது யார்? அதில் 16 செங்கற்களை உடைத்ததற்காக இன்னும் கொதித்துக் கொண்டிருப்பது யார்?

சுண்டூரில்,காயர்லாஞ்சியில், கொடியன்குளத்தில்,தாமிரபரணியில் கொத்துக் கொத்தாக அடித்து துவைக்கப்பட்டது யார்?

விடை சொல்ல முடியாத? விடை சொல்வதை தவிர்க்கிற நமது ஆதிக்க சாதி மனோபாவாம்தான் சென்னை சட்டக் கல்லூரி தாக்குதலையும் ஒரு தாக்குதலாக மட்டுமே பார்க்காமல் தலித்துக்களின் கோடூரமாகப் பார்க்கிறது.

வடமாவட்டங்களில் வன்னியர்கள் தலித்துக்கள் என்றும் தென் மாவட்டங்களில் தேவர் தலித்துக்கள் என்றும் நாடார் தலித்துக்கள் என்றும் இன்னபிற ஆதிக்கசாதிகள் தலித்துக்கள் என்றும் சாதி தலித்துக்களை எதிர் எதிராக நிறுத்தியதோடு, பள்ளர் பறையர் அருந்தயர் என தலித்துக்களையும் மூன்று கோண்த்தில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஊரில் அடிபடுகிற, ஆண்டைகளின் வயலில் நக்கிப் பிழைக்கிற தங்களின் அப்பன்மார் பட்ட அவஸ்தைகளை அவமானங்களை இன்றைய தலித் தலைமுறை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை அவர்கள் நிமிர்ந்து நடக்க ஆசைப்படுகிறார்கள். சாதீய ஒடுக்குறையின் கோபம் ஒரு தலைமுறைக் கோபமாக தலித் மாணவர்களுக்குள் இருக்கிறது.இந்த சமூக வரலாற்றுப் பின்னணியோடுதான் சட்டக் கல்லூரி மோதலை அணுக வேண்டுமே தவிற சட்ட ரீதியாக அல்ல.

கல்லூரி மோதலை விசாரித்த வரையில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் (தேவரின மாணவர்கள்) என்ற இருமாணவர்களும் கடந்த எட்டாம் தேதி பாலநாதன்,ஜெகதீசன் என்கிற இரண்டு தலித் மாணவர்களை தாக்கியதாகவும் இது குறித்த முறைப்பாடு கல்லூரி முதல்வரிடம் இருப்பதாகவும். பாரதி கண்ணன் மீதும் சில தலித் மாணவர்கள் மீதும் பூக்கடை போலீசில் சில வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த 12&ஆம் தேதி பாரதி கண்ணன்,ஆறுமுகம் இருவரும் இதில் பாரதி கண்ணன் திட்டமிட்டே கத்தியோடு போய் சித்திரைச் செல்வன் என்ற மாணவன் காதை அருத்தாராம். உண்மையில் சித்திரைச் செல்வன்,பாரதி கண்ணன், ஆறுமுகம் இந்த மூவருக்குமே அங்கு அன்று செமஸ்டர் தேர்வு கிடையாது என்று சொல்லப்படுகிறது. பாரதி கண்ணன் தகுந்த திட்டமிடலோடு போய் மாணவர்களை தேர்வெழுத விடாமல் தடுத்ததாகவும் அந்த மோதலே தேர்வு முடிந்த பிறகு பழிவாங்கும் தாக்குதலாகவும் மாறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் தொடர்ந்து தலித் மாணவர்களை கோபப்படுத்தும் படியான தேவரின மாணவர்களின் நடத்தை.இன்னொரு பக்கம் இழிவுகளைச் சுமந்த கோபம் இழிவின் மீதான் கோபம் என்று பார்க்கும் போது ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த மூர்க்கம் காண்டுமிராண்டித்தனம் இவைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது தாக்கிய இருபது மாணவர்களைத் தேட 22 படைகளை அமைத்திருக்கிறது தமிழக அரசு.காது அறுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சித்திரைச் செல்வன் உடபட தலித் மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் தாக்குதலுக்கு காரணமான பாரதிகண்ணன் இது வரை கைது செய்யப்பட வில்லை. தனிப்படை அமைப்பது என்பதே தலித் மாணவர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் செயல்தான். நடந்துவரும் பாரபட்சமான காவல்துறை செயல்பாடுகளை தட்டிக் கேட்க வேண்டிய தலித் தலைவர்களோ, தேர்தல் அமைப்பில் பங்குபெறும் கம்யூனிஸ்டுகளோ இதை வெறும் கல்லூரி கலவரம் என்ற வகையில் கோஷமிடுகிறார்கள்.

தாக்குதலில் ஈடுபட்டவன் கைது செய்யப்படும் போது தாக்குதலுக்கு காரணமானவனும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒன்று இப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்த வேகத்தில் தலித் மாணவன் இரண்டு பேரின் குடலை உருவிச் சாய்த்த்திருந்தால் இந்த ஊடகங்களும் மத்யமரின் சாதிமனமும் இதை இவளவு துல்லியமாக பிரித்துப் பேசியிருக்காது. சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் என்கிற அளவில் பேசிவிட்டுப் போயிருக்கும்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களைக் கூட போலிஸ் துரத்திக் கொண்டிருக்கிறது. பாரதிகண்ணன் என்கிற மாணவரால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வன் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் காதை அறுத்த பாரதிகண்ணனோ மாவீரராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மிக மோசமான சாதி தீவீரவாதம் தமிழகத்தில் வேர் விட்டிருக்கிறது தலித்துக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என நினைக்கிறது சாதி வெறி ஊடகங்களும் அரசு நிர்வாகமும். இதை தட்டிக் கேட்க வேண்டிய தங்களை தலித் தலைவர்கள் என்று சொல்லக் கூடிய தலைவர்களோ தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து மௌனம் காத்து ஆதிக்க சாதி அரசியலுக்கு தூபம் போடுகிறார்கள்.

இப்போது அவர்கள் எங்கு வந்து சேர வேண்டும் என நினைத்தார்களோ அங்கு வந்து விட்டார்கள்.சொல்ல வேண்டிய ஸ்லோகன் தெளிவாகவே சொல்லப்படுகிறது.

ஒன்று ஹாஸ்டலை மூட வேண்டும்
இரண்டு அம்பேத்கர் பெயரை நீக்க வேண்டும்.

இதுதான் இன்று ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுக்கருத்து.

தென்கிழக்கின் தத்துவமரபில் மிகப் பெரும் புரட்சியை நிகழ்த்திய அம்பேத்கரும் முதுகுளத்தூர் புகழ் முத்துராமலிங்கத் தேவரையும் ஒன்றாக்கி கதைப்பதன் அபத்தம் கூட அறியாத அளவுக்கு சாதி மண்டிய மூளைகள் இந்த கோஷங்களை முன்வைக்கிறன.

பெருவாரியான உழைக்கும் மக்களைக் கொண்ட இந்த இரண்டு இனங்களும் இன்று எதிர் எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு உண்மை தெரியாமல்...

கள்ளரோ,மறவரோ,பள்ளர்களோ,பறையர்களோ யாராக இருந்தாலும் இன்னும் பத்து வருடம் கழித்து சென்னை சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியுமா என்று தெரியவில்லை. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை பட்டா போட்டு அமெரிக்க கோக் கம்பெனிக்கு விற்றாலும் விற்று விடுவார்கள், இப்போ வெட்டிக் கொண்டு சாகிற இவர்கள் நினைத்தால் கூட சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியாது. அங்கு மட்டுமல்ல எங்குமே சட்டம் படிக்க முடியாது காரணம் எப்படி உயர் கல்வி தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டதோ அது போல சட்டப் படிப்பும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டாகிவிட்டது. பெரும் பண முதலைகள் மட்டுமே படித்து வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வர முடியும் சூழல் வந்து விட்டது.வட இந்திய மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் தமிழகத்தின் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போய் படித்து பட்டம் பெற்று வருகிற சூழலில். உங்களின் எதிரிகள் யாரென்றே தெரிந்து கொள்ளாமல் மோதிக் கொள்வதை என்னவென்று சொல்வது. அது மட்டுமல்லாமல் ஒரு பணக்கார தேவர் பெரும் முதலீட்டில் சட்டக் கல்லூரி ஒன்று துவங்கிவிட்டால் ஏழைகளாக இருக்கும் எல்லா தேவர்களும் எனது சட்டக் கல்லூரியில் இடம் தருவேன் என்று சொல்லி விடுவாரா? இல்லை தலித் முதலாளிதான் அப்படி சொல்லி விடுவாரா? பணக்காரன் தன் சொத்தைப் பேணவும் குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்கவும் சொந்த சமூகத்தை சுரண்டிப் பிழைக்கவுமே சாதி வெறியை வளர்த்தெடுக்கிறான்.உழைப்புக்கும் நிலத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதா பார்ப்பான் இந்த தாசி மக்களுக்கெல்லாம் தத்துவம் வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த பார்பன தத்துவங்களை எல்லாம் உடைத்து நொறுக்கிய அம்பேத்கரையும் பெரியாரையும் மறுக்கும் அடியாட்களாக உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருப்பதும் அவன்தான்.

தனக்கும் கீழாக ஒரு அடிமையை வைத்திருந்து ஆதிக்கம் செய்வதில் சந்தோசமடையும் ஆதிக்க சாதிக்காரன் பார்ப்பானுக்கு அடிமையாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறான் என்பதோடு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஒரு குடியரசு தின விழாவில் குறிப்பிட்டதைச் சொல்லி முடிக்கிறேன்.‘‘இந்திய சமூகத்தில் ஒரு விதமான எதிர்ப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நமது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற குறைந்த பட்ச உரிமைகளைக் கூட சலுகைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைப்படுகிற போக்கு இந்திய சமூகங்களிடம் வளர்ந்திருக்கிறது’’என்று வேதனைப் பட்டார். ஆமாம் நம்மை விட கீழான மக்களுக்கு மிக மிக குறைவாக கிடைக்கும் சலுகைகளைப் பார்த்து நாம் ஏன் பொறாமைப் பட வேண்டும்.

ஊடகங்களில் முஸ்லீம்கள்

ச.பாலமுருகன்

இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.

மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.

ஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது. சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது. பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது. பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.
முஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது. சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.
அமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான். பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் & அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.
ஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது. 1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.

இந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.

1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.
2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.

நன்றி.விழிப்புணர்வு

பேர‌ழிவில் ஈழ‌த்த‌மிழ‌ர்




காந்தி பிறந்த நாளான நேற்று ஈழத்தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசையும் அதற்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் இந்திய அரசையும் கண்டித்து தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்த அதே வேளை. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலாமாவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜியும் டில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து காக்க இலங்கை கடற்படையும் இந்திய கடற்படையும் கூட்டு ரோந்து செல்வதாக முடிவு எடுத்திருக்கிறார்கள். மத்திய அரசின் தமிழர் விரோத போக்கு எவளவு ஈனத்தனமானது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது... நண்பர்களே!

த‌மிழ்நாட்டில் முத‌ல்வ‌ராக‌ இருக்கும் திரு,க‌ருணாநிதிக்கு தெரியாம‌ல் இதெல்லாம் ந‌டந்திருக்குமா? என்ன? இந்தியா பாம்புக்கு வாலையும் மீனுக்கு பாலையும் காட்டும் வித்தையை க‌ற்றுக் கொண்டிருக்கிறார் க‌ருணாநிதி.
இந்த‌ நேரத்தில்தான் த‌மிழ‌க‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் நில‌மைக்காக‌ தோன்றியுள்ள‌ கொந்த‌ளிப்பை வெறும் அர‌சிய‌ல் கூட்டுக்கான‌ ஒத்திகை என‌ அர‌சிய‌ல் புரோக்க‌ர்க‌ளும் சில‌ ப‌த்திரிகைகளும் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகிறார்க‌ள்.

இது மிக‌வும் சிக்க‌லான‌ உண‌ர்வு பூர்வ‌மான‌ பிர‌ச்ச‌னை.ஈழ‌ப் போரில் போராளிக்குழுக்க‌ள் மீதான‌ க‌ச‌ப்புகள்,அர‌சிய‌ல் முர‌ண்பாடுக‌ள் ந‌ம‌க்கு இருக்க‌லாம்.ஆனால் நாம் அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து ஈழ‌ ம‌க்க‌ள் மீது தொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் இந்த‌ கொலை பாத‌கப் போரை முடிவுக்கு கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளை நாம் காக்க‌ முன்வ‌ர‌வேண்டும்.ந‌ம‌து மீன‌வ‌ர்க‌ளை அன்றாட‌ம் கொலை செய்யும் சிங்க‌ள‌ப் ப‌டைக‌ளிட‌ம் இந்தியா ந‌ம‌து மீன‌வ‌ர்க‌ளை ஒப்ப‌டைப்ப‌தை அனும‌திக்க‌க் கூடாது.கொலை செய்ப‌வ‌னோடு கூட்டு ரோந்து என்ப‌து ஊரை ஏமாற்றுகிற‌ வேலை. த‌விற‌வும் அப்ப‌டி கூட்டு ரோந்து செய்வ‌த‌ன் மூல‌ம். தின‌ம் தோறும் நிக‌ழ்த்த‌ப்ப‌டும் கொலைக‌ளுக்கு இந்தியாவும் இல‌ங்கையும் சேர்ந்து ச‌ட்ட‌பூர்வ‌மான‌ அங்கீகார‌த்தை வ‌ழ‌ங்க‌க் கூடும்.

ஆக‌வே தோழ‌ர்க‌ளே!
#ஈழ‌த்த‌மிழ‌னை நீங்க‌ள் காக்க‌த் த‌விறினால் நாளை இதுதான் ந‌ம‌க்கும் ந‌ட‌க்கும்.

#த‌மிழ‌க‌ மீன‌வ‌ன் கொல்ல‌ப்ப‌டுவ‌தை மௌனியாக‌ நாம் வேடிக்கை பார்த்தாம் மீன‌வ‌னுக்கு எதிராக‌ நீண்ட‌ சிங்க‌ள‌த் துப்பாக்கிக‌ள் நாளை ந‌ம‌க்கு எதிராக‌வும் திரும்பும்.உங்க‌ள் எதிர்ப்புக‌ளை ப‌திவு செய்யுங்க‌ள்.

பட்டினியின் பிடியில் ஏழைகளும்... கஞ்சித் தொட்டிகளும்



மரக்கா லுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழா க்குருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக் குழந்தை விற்ற பஞ்சம்-.
(நல்லதங்காள் கதையில் பஞ்சம் வந்த படலம்)


வறுமையின் கொடுமை தாங்காமல் தன் ஏழு குழந்தைகளோடு கிணற்றில் குதித்து மரித்துப் போன நல்லதங்காள் கிணறு இன்றும் இருக்கிறது விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுறத்தில்,

வறுமையின் கொடுமையில் ஜெயலட்சுமி தன் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் செத்துப் போக குதித்த கிணறு.சேலம் காரியப்பட்டியை அடித்த குள்ளம்பட்டியில் இருக்கிறது.

"கடைசிப் பையன் பரதன் பிறந்த போதே சோத்துக்கு வழியில்லாம பல நாள் பட்டினியா கெடந்திருக்கோம். ஒத்தாச உதவிக்கு யாருமில்ல. சொந்த பந்தமிண்ணு ஒண்ணும் இல்ல. கைத்தறி தொழிலும் படுத்துக்கிச்சு சமையல் சப்ளையர் வேலைக்குப் போனேன். அப்பாவுக்கு வேலை கிடைச்சுதா? சம்பளம் கிடைச்சுதாண்ணு பசிக்குற பிள்ளைக்கு என்ன தெரியும்? அது அழதான் செய்யும். வேலை தேடி நான் போயிருந்த நேரம் எப்படித்தான் இந்த மூணு பச்ச மண்ணுகளையும் கொல்லணும்ணு தோணுச்சோ பாவி மகளுக்கு" என்று தன் மனைவி ஜெயலெட்சுமியை சபித்தபடி அழுகிறார் கணவன் கிருஷணன்.


"அவர் வெளியூர் போய் மூணு நாள் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அரிசி,பருப்பு, புளி- ணு எந்தப் பொருளும் வீட்டில் இல்லை. ராத்திரி முழுக்க புள்ளைங்க அம்மா பசிக்குதுண்ணு அழுதாங்க. ஒருத்தன் அப்பா எங்கம்மாணு கேட்டு கதறுறான். பரதன் காது வலியில துடிக்கிறான். நான்தான் சகாலாம்ணு நினைச்சேன். நான் மட்டும் செத்துட்டா பிள்ளைங்க நாளைக்கு நாலு பேர் கிட்ட போய் கையேந்திடக் கூடாதில்லியா?கைத்தறிக்காக வாங்கிட கடனுக்கு வட்டி கூட கட்ட முடியல்ல பேசாம நம்மளோட குழந்தைகளையும் சேர்த்து கொலை பண்ணிடலாம்ணுதான் குழந்தைகளை கிணற்றில் போட்டேன். நானும் விழுந்தேன். இப்போ நாம் மட்டும் உயிரோட இருக்கேன் எம் புள்ளைங்க போய்ச் சேர்ந்துட்டாங்க. வறுமையும் பசியும் என் குடும்பத்தையே அழிச்சிடுச்சு." என்று பரிதாபமாக வாக்குமூலம் அளித்திருக்கும் ஜெயலெட்சுமி இப்போது சேலம் சிறையில்.

ஒரு ஏழைக்கூலியின் வாழ்க்கையையும் வலியையும் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்தால். ஜெயலெட்சுமியையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சூழலில்தான் இன்று தமிழகத்தில் பல லட்சம் கூலி விவசாயிகளின் குடும்பங்கள் இருக்கிறது.

‘‘பூமி வறண்டு விவசாயம் கெட்டுப் போய் பல லட்சம் மக்கள் பட்டினியால் மடிந்து போவதுதான் பஞ்சம் என்றில்லை. 1930&பதுகளில் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது அதற்கு கிரேட் டிப்ரஷன் (ரீக்ஷீமீணீt பீமீஜீக்ஷீணீtவீஷீஸீ) என்று பெயர் வைத்தார்கள் மீண்டும் அதே சூழல் இப்போது அமெரிக்காவில் உருவாகி வருகிறது. அமெரிக்கா சந்திக்கும் அதே கொடுமை இப்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பகால அறிகுறிதான் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு. விலைவாசி உயர்வு.மின்சாரம் முதல் மிளாக்ய்ப்பொடி வரை ஏற்படும் தட்டுப்பாடு.கைத்தறி நெசவு,பட்டு நெசவு, விவசாயம், கூலிவேலை, சிறு வணிகம் என இன்று தமிழகத்தில் எந்தத் தொழிலையும் செய்ய முடியாத சூழல்.நகரமயமாதல் பெருகப் பெருக தனியார் மூலதனம் குவிய குவிய பல லட்சம் விவசாயிகள் பட்டியின் பிடிக்குள் தள்ளப்படுகிறார்கள். என்பதே கசப்பான உண்மை. ஒட்டு மொத்த கூலி தொழிலாளர்களும் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழும் சூழலே இன்று கிராமப்புறங்களில் நிலவுகிறது’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த இடது சாரி சிந்தனையாளர்.

என்னதான் சோத்துக்கு கஷ்டம் வந்தாலும் வீட்டின் மூலையில் குவித்து வைத்திருக்கும் கோட்டை நெல் என்று சொல்லக் கூடிய விதை நெல்லை ஒரு போதும் எடுத்துச் சமைக்க மாட்டார்கள் விவசாயிகள். அது ஆடி மாதம் வரை அடுத்த விதைப்புக்காக காத்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலான விவசாயிகள் கோட்டை நெல் வைத்துக் கொள்வதில்லை. காரணம் விளைச்சலுக்கு வழியில்லை அப்படியே விளைந்தாலும் நெல்லுக்கு விலையில்லை. பட்டுநெசவு, கைத்தறி, விவசாயம், கரும்பு உற்பத்தி என்று விவசாயமோ கைத்தறியோ இன்று லாபகரமான தொழிலாக மட்டுமல்ல சராசரி வாழ்வைக் கூட ஓட்டுவதற்கு இந்தத் தொழில்கள் கை கொடுக்காத சூழலில் கடனின் மூழ்கி அதிலிருந்து மீள முடியாமல் சில தற்கொலைகளும் நடந்திருக்கிறது. வழக்கம் போல குடும்பத் தகராறு என்று தற்கொலைக்கான காரணம் எழுதி கணக்கை முடித்துக் கொள்கிறது போலீஸ்.

தமிழகம் முழுக்க உள்ள கைத்தறி தொழிலாளர்கள் இன்று கஞ்சித் தொட்டிக்கு முன்னால் கையேந்தி நிற்க வேண்டிய பரிதாப நிலை. நூல் விலை ஏற்றம் தாள முடியாத கடன் சுமையால் தள்ளாடும் சூழலில் மிக மோசமான கந்து வட்டி கொடுமைக்காரர்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நெசவாளர்களும் உண்டு. பல நாள் பட்டினியின் விளைவு இன்று சோமனூர், பல்லடம் போன்ற பகுதியில் வேலை இல்லாத நெசவாளர்களுக்காக கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை தமிழகம் முழுக்க குறிப்பாக விவசாயம் பாழ் பட்ட, நெசவுத் தொழில் கெட்டுப் போன ஊர்களில் எல்லாம் இதே நிலைதான்.

கஞ்சித்தொட்டி மூலம் உணவிடும் வழக்கம் எப்படி வந்தது என்றால்,

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்கள் கொடுத்த பரிசுதான் பஞ்சம்.
இங்கிலாந்தின் நெசவாலைக் கம்பெனிகளுக்கு தேவையான பருத்தியையும் அவுரிச் செடியையும் பயிர் செய்யச் சொல்லி நமது விவசாயிகளை நிர்பந்திக்க வேளாண் உற்பத்தி குறைந்தது. குறைவாக விளைந்ததையும் ஏற்றுமதி செய்தனர் வெள்ளையர். விளைவு 1783&ல் தொடங்கி 1867 வரை சென்னை ஏழு முறை கொடிய பஞ்சத்தைக் கண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்தனர். தொடர்ந்து வந்தது தாது வருடப் பஞ்சம். 1876&ல் தொடங்கிய தமிழ் தாது வருடத்தில் வந்த பஞ்சத்தை ‘‘தாது வருடப் பஞ்சம்’ என்று பதிவு செய்திருக்கிறது வரலாறு. 40 லட்சம் தமிழ் மக்களின் உயிரைப் பலி கொண்ட ‘தாது வருடப் பஞ்சத்தின் போது’’ மக்களுக்கு பிச்சை போட நினைத்த வெள்ளை அரசு திறந்து வைத்ததுதான் இந்தக் ‘கஞ்சித் தொட்டி’ ஆனால் திறந்து வைக்கப்பட்ட கஞ்சித்தொட்டிகள் மடிந்து கொண்டிருந்த மக்களுக்கு முன்னால் பல்லிளித்து நின்றன. அன்றைய பஞ்சத்தில் அதிகமாக கொத்துக் கொத்தாக செத்துப் போனது தென் ஆற்காடு மாவட்ட மக்கள்தான் இன்றைக்கும் தென் ஆற்காடு மாவட்ட கிராமங்களில் ‘தாது வருஷ பஞ்சக் கும்மி’ என்ற கும்மிப் பாடல்கள் பாடப்படுகின்றன. பஞ்சமும் வறுமையும் மரணத்தை மட்டும் கொண்டு வரவில்லை. அது பல விதமான சமூக நோய்களை கொண்டு வந்தது கொலை, கொள்ளை, வழிப்பறி, தற்கொலை என்று பல விதமான துன்பங்களை மக்களுக்குக் கொண்டு வந்தது.
சுதந்திரம் அடைந்த இந்த ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்றும் இதே கொள்ளை,வழிப்பறி, இலவச மோசடிகள்,பணத்துக்கான கொலைகள் எனறு மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் பலரும்.

வெள்ளையர் ஆட்சியில் பஞ்சகாலப் பணியாக வேலை கொடுக்கும் திட்டத்தின் கீழ் வெட்டப் பட்டதுதான் சென்னை ‘பக்கிங்ஹாம் கால்வாய்’ இன்றும் வேலைக்கு உணவுத் திட்டத்தில் வருடத்திற்கு நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது ஆனால் அதில் கொடுக்கும் கூலியில் ஒரு குடும்பம் ஒரு வேளை கூட உண்ண முடியாத நிலையில் இந்தத் திட்டத்தில் பெரும் முறை கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. எண்பது ரூபாய் கூலியில் கால் பங்கை சுருட்டி விட்டு மீதியை கொடுப்பது என்கிற முறை கேட்டால்தான் திண்டிவனம் ரெட்டணையில் கூலி கேட்ட போராட்டமும் போலீஸ் தடியடியும். வேலைக்கு உணவுத் திட்டத்தில் நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப் பட்ட மாவட்டங்கள் 200. இதில் தமிழகத்தில் விழுப்புறம், கடலூர்,திருவண்ணாமலை, நாகப்பட்டினம். என நான்கு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. சிவகங்கை நமது நிதி அமைச்சரின் சொந்த மாவட்டம். குறைந்த கூலி பேசிய கூலி கொடுக்கப்படாமை, கிடைக்கிற கூலியும் வாழ்க்கைச் செலவுக்கு போதாமை என்று மக்கள் இந்தத் தொழிலுக்கு இப்போது செல்ல மறுக்கிறார்கள்.

"வறுமையை ஒழிக்கச் செலவிடப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 85 ரூபாய் ஊழல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு 15 ரூபாய் மட்டுமே மக்களுக்குப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் ஓராண்டு காலத்தில் கைமாறும் லஞ்சப் பணம் மட்டும் சுமார் 25,000 கோடியைத் தாண்டும்"என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவதன் உண்மை நெருப்பாய் சுடுகிறது.

மாதம் ஓன்றுக்கு பத்து நாள் வேலை கிடைத்தாலே இன்று வாழ்க்கை பெரும் பாடாக இருக்கிறது. அரிசிச் சோறும் பருப்பில்லாத, காய்கரி இல்லாத புளிக் குழம்பும்தான் இன்று பெரும் பாலான ஏழைகளின் உணவு. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று திட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு. ஆனால் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி நாற்பது ரூபாய்க்கு எண்ணைய், பருப்பு, காய்கரி வாங்கினால்தான் சமைத்துச் சாப்பிட முடியும். இதுதான் இன்றைய ஏழை மக்களின் நிலை.
ஒரு மனிதனின் உளைப்பு நேரமாக எட்டு மணிநேரத்தை தீர்மானித்திருக்கிறது சர்வதேசம். ஆனால் தமிழகத்தில் அந்த எட்டு மணிநேரத்தில்தான்
அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது. பண வீக்கத்தின் நெருக்கடியோடு போராடும் ஏழை மக்கள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை இதுதான். பெருமளவு உணவு உற்பத்தி பாதிப்படைய இந்த மின்வெட்டுதான் பிரதான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

கூலிக்கான பொருளாதாரப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொஞ்சம் கொஞமாக கிராமங்கள் அழிந்து வருகிறது. அரசியல் போட்டிக்காக முன்னர் கஞ்சித் தொட்டிகள் திறந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று நிஜமாகவே கஞ்சித் தொட்டி திறக்கும் நிலையில்தான் அனைத்து கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.இன்னொரு தாது வருடப் பஞ்சத்தையோ, கல் தட்டிப் பஞ்சத்தையோ தாங்கும் நிலையில் தமிழகம் இல்லை.

சைக்கிள் வித்தைக்காரர்



நெடுநேரம் சைக்கிளாடிய களைப்பு தெரிகிறது மணியின் வியர்வையிலும் முகத்திலும். சிதறிவிழுகிற சில்லறைகளை பொறுக்கிய படி குனிந்து கரம் கூப்பி குழந்தைகளுக்கு வணக்கம் சொல்லும் போது மொத்தமாக பூத்துச் சிரிக்கிறார்கள் குழந்தைகள். ஆட்டம் முடிகிறது கூட்டம் கலைகிறது. சைக்கிளை ஓரம் கட்டி விட்டு உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருந்த சில்லறைகளை எண்ணினால் இருபது ரூபாய்க்கு இரண்டு ரூபாய் குறைவு.‘‘யப்பா இஸ்கூலூ யூனிபாமும் சொக்காயும் வாங்கிக் கேட்டமுல காசு கொட்டாந்தியாப்பா‘‘
என மணியின் சோப்புப் பையை வார்த்தைகளால் தேடும் மகனுக்கு சொல்ல இன்றும் பதிலில்லை இந்த சைக்கிள் வித்தைக்காரனிடம்....

‘‘காதல் சாம்ராஜ்ஜியத்தில் நீயரு சமந்தாபாஸ§....
காதல் போர்க்களத்தில் நீயரு சதாம் ஹ§சைனு
சிவராசனை துரத்தும் சி.பி.ஐ போல நான் உன்னை துரத்தினாலும்
சிந்து பாத் கதைபோல முடிவில்லாமல் ஓடுகிறாயே...
அய்யகோ...
கட்டிக்கரும்பே ...
முட்டி எலும்பே...
தாளிக்காத ரசமே...
கொதிக்காத குளம்பே...வா என் அருகில் வந்து உம் மென்று ஒன்று தா‘‘ நரம்புகள் புடைக்க காதல் வசனத்தை மேடையில் பேசும் போது சீட்டிச் சத்தம் செவிட்டில் அறைகிறது. ‘‘இது நானே எழுதின டயாலாக் ஆடி மாச கோவில் திருவிழாவுல போடுற நாடகங்கள்ல நான் மேடையில ஏறி டயலாக் பேசி நடிச்சாதான் சாரு போணியாவுது. சைக்கிள் ஓடியெல்லாம் பொழைக்க முடியுமா‘‘ என்று கேட்கிற மணி முப்பாதாண்டு காலமாக சைக்கிளில் வித்தை செய்கிறார். வசூலுக்கு சைக்கிள், நடிக்க நாடகம், பார்ட் டைம் வாட்ச்மேன் வேலை என கழிகிற மணி. குரோம்பேட்டை ஏரியா பள்ளிக்குழந்தைகளின் கனவு மாமா...

‘‘தஞ்சாவூர்க்காரங்க அப்பவெல்லாம் வந்து சைக்கிள் வித்தை காட்டுவாங்க ஒரு வாரம் ஒரு இடத்துல டேரா போட்டாங்கண்ணா மூணு நாள் நாலு நாள் வண்டியை விட்டு இறங்காம வித்தை செய்வாங்க. இப்போ உள்ளோ சனத்துக்கு எங்க இதெல்லாம் தெரியும். எப்புடிணா? ரெண்டு சைக்கிளில் ரெண்டு பேர் இந்த வித்தையை செய்வாங்க மதியம் சாப்பாடு நேரம் வந்தா அப்படியே வித்தை செய்ற ரெண்டு பேரும் சைக்கிளை இணைச்சு பூட்டி அதையே படுக்கை மாதிரி ஆக்கி சைக்கிளில் இருந்துக்கிட்டே சாப்பிடுவாங்க தூங்குறதும் அப்படித்தான். அப்போ இந்த வித்தை செய்யும் போது இடையில கொஞ்சம் பிரேக் கிடைக்கும் அந்த பிரேக்கில் ஒரு என்டர்டயிம்மெண்டா நான் ரஜினி, கமல் மாதிரி மிமிக்கிரி பண்ணுவேன் என்னோட சூப்பர் ஸ்டார் சந்திரபாபு மாதிரி சொக்கா போட்டுக்கினு ‘குங்குமப் பூவே‘ பாட்டுக்கு ஆடுவேன் எனக்கு நல்லதான் கைதட்டுவாங்க ஆனா வித்தை காட்டுறாம் பாரு அவனுக்கு கிடைக்கிற மருவாதி எனக்கு கிடைக்காது. அப்புறம் மூணு நாள் போட்டி முடிஞ்சி அவங்க சைக்கிளை ஓரம் கட்டுவாங்க பாரு, அப்போ அவஙக சைக்கிளை எடுத்து நான் பழகுவேன். கோவிந்தன் மாஸ்டர்தான் சைக்கிள் வித்தையை எனக்கு கத்துக் கொடுத்து. ‘‘சரிடா இதை வெச்சுப் பொழைச்சுக்கோ‘‘ ணு அனுப்பிவிட்டார் அன்னைக்கு ஆரம்பிச்சவன்தான் எல்லா வித்தையும் செய்வேன். என்னதான் வித்தையானாலும் தலை கீழா நின்னாலும் காசு வேணுமே. நல்லா கைதட்டுறவங்க காசு போட மாட்டாங்க கம்முனு வேடிக்கை பார்க்கிறவங்க சில நேரம் காசு போடுவாங்க. சைக்கிள்ல காலை பேலன்ஸ் பண்னி நிண்னுகினே டியூப்லைட்டை என் முதுகில் தட்டி உடைப்பேன். அந்தப் பாவத்துக்கோசரம் சிலர் பத்து ரூபா இருபது ரூபா தருவாங்க ஒரு நாள் ஸ்கூல் குழந்தைங்க கிட்ட இதைச் செஞ்சேம்பாரு அந்த ஸ்கூலம்மா ‘‘ஏம்பா இதெல்லாம் இங்க செய்யாதப்பா. உன் ரத்தம் யாருக்காவது தேவைப்படும் அதை இப்படி வீணாக்காதே. இங்க மட்டுமில்ல இனி எங்கேயும் இதை செய்யாதேணு‘‘ ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அண்ணேலேர்ந்து நான் ட்யூப்லைட் உடைக்க மாட்டேன். சைக்கிள்ல செய்றதுக்கு 24 ஐட்டம் வெச்சுருக்கேன் ஆனா வெறுமனே சைக்கிள் வித்தை காட்டி வசூலாகுற பணத்தை வெச்சு ஒரு புண்ணாக்கும் புடுங்க முடியாதுணுதான் இப்போ நாடகத்துலயும் சினிமாவுலயும் நடிக்கிறேன்‘‘ என்கிற மணி.

தெருவில் வித்தைகள் செய்வதை குறைத்து பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளிடன் வித்தை காட்டுகிறார். பள்ளி நிர்வாகம் கொடுக்கிற வருமானத்தில் கழிகிறது மணியின் வாழ்க்கை.மணிக்கு ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள்.

‘‘இஸ்கூலில் எப்பவும் வித்தை காட்ட முடியாது. சீசன் மாதிரிதான் இதுவும் இந்த தொழிலே வேண்டாம்டா சாமிணு பெரிய கும்புடா போட்டேன். சைக்கிளை தூக்கி வூட்டுக்கு பின்னாடி வைச்சேன். குரோம்பேட்டையில் ஒரு கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். என் வேலையை பார்த்துக்கிட்டு ஒரே வருஷத்துல கன்பார்ம் பண்னினாங்க ஆனா பாருங்க! அந்தக் கம்பெனியை மூடிட்டாங்க திரும்பிவந்தேன் வீட்டுக்குப் பின்னால போய் ஒதுக்கிப் போட்டிருந்த சைக்கிளை பார்த்தேன் துருப்பிடிச்சு அதைப் பார்க்கவே அவமானமா இருந்தது. வித்தைக்கு மட்டும்தான் டப்பா கட்டின இந்த சைக்கிள் யூஸ் ஆகும் சார். என்னாதான் இருந்தாலும் இத்தனை நாள் சோறு போட்டதை ஒரமா ஒதுக்கலாமா? வேலை வெட்டி இல்லண்ணா ஒரு வாய்க் கஞ்சிக்கு அதானே எங்கிட்டே இருக்கு. அன்னைக்கு வேலையில்லாம திரும்பி வந்தேம்பாருங்க இன்னைக்கு வரைக்கும் சைக்கிளை நான் வீட்டுக்குள்ளாரதான் வைக்கிறேன். என்னோட மூத்த பொண்ணு சார் அது.‘‘

‘‘எங்கப்பாரு சரியா இருந்தா எதுக்கு இந்த நாய்ப் பொழப்பு எங்கப்பா நாடக கம்பெனியில் ஆர்மோனியப் பொட்டி வாசிச்சார். படிச்ச முட்டாளுணு சொல்வாங்க பாருங்க அது எங்கப்பாதான். ஆனா அவரைத் திட்டி என்னவாகப் போகுது.அவர் நாடகத்துல மியூசிக் போட்டாரு சத்தியமா அந்தத் தொழிலுக்கு நாம் போக கூடாதுணு இருந்தேன். சைக்கிள் வித்தை பண்ணினேன் என்னாச்சு அப்டியே காத்துக்கு ஒதுங்குற கட்டுமரம் மாதிரி நானும் நாடகத்துல தானே ஒதுங்கியிருக்கேன். ஒரு நாள் ஒருத்தர் வந்தார் சினிமாவில் டூப் போடுவியாணு? கேட்டார் நானும் சரிணு போனேன். ஆயிரம் ரூபாய்க்கு மேலயே கிடைச்சுது நல்ல பொழப்பா இருக்கேணு எல்லா சினிமாக் கம்பெனிக்கும் என் போட்டோவை தூக்கிக்கிட்டு போவேன். எம் படமில்லாத சினிமாக் கம்பெனியே சென்னையில கிடையாது. எல்லா அசிஸ்டெண்டுங்களுக்கும் என்னைத் தெரியும். ஆனா இந்த அசிஸ்டெண்டுங்க இருக்குறானுங்களே இவனுங்கள மாதிரி கேடிங்க வேற எவனும் கிடையாது. நெஜமா சார், ஒரு கம்பெனிக்கு போனா முடியையும் தாடியையும் வளர்த்துட்டு வாம்பானுங்க. இரண்டு மாசம் மெனக்கெட்டு முடியும் தாடியும் வளர்த்துட்டு போனா படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நளாகும் சம்மதாமா?ணு கேப்பாங்க. ஒருத்தன் முடியை வளர்க்கச் சொல்லுவான் ஒருத்தன் முடியை எடுக்கச் சொல்லுவான். வளத்த முடிக்கு சம்பளம் கொடுத்தாலே வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சிடும்.மயிர வளத்தே மண்ணாப் போனவன் சார் நான். ஆனா எங்க டைரக்டரு கே.ஜி.குருசங்கரு ஆகாய ஜன்னல் ணு ஒரு படம் எடுக்குறாரு அதுல நானும் நடிக்கிறேன். அந்தப் படம் வெளிய வந்தாதான் எனக்கு மறு ஜென்மம். நம்ம சாதாரண காமெடி ஆக்டரு நம்ம அப்பா என்ன சினிமாவுல பெரிய நடிகராவா இருந்தாரு எடுத்த உடனே வாய்ப்பு வர்றதுக்கு. அரசியல்வாதிங்கள மாதிரி சினிமாக்காரங்களும் அவங்க அவங்க புள்ளைங்களத்தான சினிமாவுக்கு கொண்டாராங்க. நான் எம்புள்ளைய சைக்கிள் வித்தைக்கு கொண்டார முடியுமா? கொண்டார மாதிரி மைனர் வேலையா நாம் பாக்குறோம்.இது என்னோட போகட்டும் சார் அதுங்க நாலெழுத்து படிச்சி அரசாங்க உத்தியோகத்துக்கு போகணும் அதான் சார் என் ஆசை‘‘
‘‘சைக்கிள் கலை மாதிரி உலகத்துலயே சிறந்த கலை வேறு எதுவும் கிடையாது ஏண்ணா இது மரண விளையாட்டு கரணம் தப்பினா மரணம் மாதிரி இதுவும் அப்படித்தான் சைக்கிள் வித்தை செய்யும் போது கழுத்தெலும்பு உடைஞ்சி செத்துப் போனவங்கெல்லாம் நான் பாத்துருக்கேன்.என்னைக்கு ஸ்கூல் குழந்தைங்க ‘‘உன்னோட விளையாட்டு போரடிக்குது நீ ஊட்டுக்குப் போணு’’ சொல்றாங்களோ அடுத்த நிமிஷமே இந்த சைக்கிளை சாமி மாதிரி ஆக்கி சும்மா வெச்சுடுவேன். நான் வேறு வேலைக்கு போயிருவேன். ஆனா அப்படி போறதுக்கு நான் ஒரு சைக்கிள் வாங்கணும்.‘‘என்ற படி தன் சைக்கிளை செல்லமாகத் தடவுகிற மணிக்கு மாரியம்மன் கோவில் கூழ் திருவிழா நாடகத்தில் பேச வேண்டிய டயலாக் நினைவுக்கு வர விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார்.
‘‘காவியச் சிலம்பாக நானிருந்தால் உன் காலடியில் தவழ்ந்திருப்பேன்...
வீசும் தென்றல் காற்றாக நானிருந்தால் உன் தாவணியில் குடிபுகுந்திருப்பேன்...
பாடும் குயிலே வா..
ஆடும் மயிலே வா. மணியின் வார்த்தைகள் நீண்டு கொண்டிருக்கிறது வாழும் வாழ்க்கைக்குத் தான் அர்த்தங்கள் ஏதும் இல்லை.

நாய்கள்



மதுக்கடையின் வாசலில் காத்திருக்கிறாள் உஷா. மது போதையில் கடந்து போகும் சிலர் அவளை கவனிப்பதில்லை.
குழம்பிய சித்தத்தோடு யாருடனாவது உரையாட ப்ரியப்படும் போதை மனிதர்கள் சிலர் உஷாவிடம் தலையைச் சொறிந்தபடி தங்களின் சோகங்களைச் சொல்கிறார்கள்.சில நேரங்களில் தலைக் குழைத்தபடியும் நாக்கைத் துருத்தியும் கதைகளை கேட்கும் உஷாவுக்கு ரத்தமும் சதையும் சுண்டிப் போய் விட்டது. காலம் கிழித்தும் கழித்தும் போடும் கோடுகளில் உஷா இன்று கிழவி. பல ஆண்டுகளாய் போலிஸ் மோப்ப நாயாக அரசுப் பணியாற்றிய உஷா இன்று சாரயக்கடையை காவல்காக்கிறாள். இன்று எஞ்சியிருக்கிற நினைவுகளோடு தன் கடைசிக் காலத்தைக் கழிக்கிறாள்.எல்லா அநாதை நாய்களுக்கும் இறுதி முடிவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் போலீஸ் நாய்களுக்குமா?

சென்னையில் அதிகாலையில் நடந்த கோரக் கொலைகளின் போது மௌனத்தைச் சுமந்த படி வந்து சென்ற உயரதிகாரிகளுக்குப் பிறகு,நீளச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய்கள் வந்தது.பரபரத்து ஓடி முடிவில் ஒரு முட்டுச் சந்துக்குள் போய் படுத்துக் கொண்டது. அல்லது சிறிது தூரம் ஓடிய பின் தன்னை வேடிக்கை பார்க்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டது போலீஸ் மோப்ப நாய்.திருட்டு,கொலை,கொள்ளை,போதை மருந்து கடத்தல், என குற்றவாளிகளைப் பிடிக்க பயன் படும் போலீஸ் மோப்ப நாய்கள் இது வரை எந்தக் குற்றவாளிகளையாவது பிடித்திருக்கிறதா? அல்லது சும்மா பந்தாவுக்காகத்தனா இந்த நாய்கள். என்று விசாரிக்கப் போனால்.பல விசித்திரங்களையும் வேதனைகளையும் சாகசங்களையும் சுமந்து திரிகிறது நாய்கள்.


குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டைநாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்களுக்கு மோப்ப நாய்களின் கதைகளின் தெரியுமோ தெரியாதோ?

1952- ல் இந்தியாவிலேயே முதன் முதலாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது சென்னை போலீசில்தான். ஆனால் மோப்ப நாய்களுக்கெல்லாம் முன்னோடி ஜெர்மனியின் ஹிடலர். தனது நாஜிப்படையினர் போரில் காயமடையும் போது முதலுதவிக்காக நாயகளை பயன்படுத்திய ஹிட்லர், பின்னர் கண்ணிவெடிகளை கண்டு பிடித்து துப்புச் சொல்வதற்கும் நாய்களை பயன் படுத்தினாராம்.மனிதர்களிடம் இரக்கமற்று நடந்து கொண்ட அந்த ஆரிய சர்வாதிகாரி நாய்களிடம் காட்டிய அன்பு அலாதியானது.தமிழக போலீஸ் மோப்ப நாய்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் இரண்டிலிருந்து நான்கு நாய்கள் வரை பேணப்படுகின்றன. இரண்டு நாய்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் இரண்டு நாய்கள் குண்டுகளை கணடறியவும் பயன்படுகிறது. இன்றைய தேதியில் தமிழகத்தின் சிறந்த மோப்ப நாய்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் யோசிக்கிறார்கள்.

"முன்னாடி பொன்னி, யுவராஜ், சீஃப் என்றெல்லாம் நாய்கள் இருந்தது. இப்பவும் இருக்கு...ஆனா..."என்று இழுக்கிறார்கள்.

பிரௌனி பிறந்த நான்காவது நாளில் அவளது வால் முளையிலேயே வெட்டப்பட்டது. மோப்ப நாய்களாக தெரிவு செய்யப்படும் டோபர்மேன் நாய்கள் பிறந்து கண் திறப்பதற்குள் வால்கள் வெட்டப்படும். நீளமாக வளரும் அதன் வால்கள் இடைஞ்சலாக மாரிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.பின்னர் மூன்று மாதத்தில் ஏதோ ஒரு மாலைப்பொழுதிலோ அல்லது அதிகாலையிலோ தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு போலீஸ் மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.கொலை,கொள்ளை,போதை மருந்து கண்டு பிடிப்பு என வகைப் பிரித்து ஒன்பது மாத பயிர்ச்சியை முடிக்கிறது போலீஸ் மோப்ப நாய். ஒரு வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பதாண்டுகாலம் அரசு ஊழியராக பணியாற்றும் இந்த நாய்களுக்கு பணிக்காலத்தில் ஊதியமென்று எதுவும் இல்லை.ஊதியம் வாங்கித்தான் அது என்ன செய்யும் குடும்பமா? குட்டியா?

நாய்களை மோப்ப நாய்களாக பழக்கப்படுத்துவது எப்படி? போதைப் பொருட்களை, வெடிகுண்டுகளை, கொள்ளையர்களை அது எப்படி கண்டு பிடிக்கிறது. என்றால் 220 மில்லியன் நுகர்ச்சி செல்களை தன் மூக்கில் கொண்டிருப்பதுதான் அதன் மோப்பத் திறனின் ரகசியம். மனிதனின் மோப்ப சக்தி இதை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் நமக்கு பிரவுன்சுகரின் சுவையோ கஞ்சாவின் வாசனையோ அந்தப் பழக்கம் இல்லாதவரை தெரியாது.

ஆனால் நாய்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது. ரத்தத்தின் வாசனை..பிரவுன்சுகர், கஞ்சாவின் வாசனை என்றால் எல்லா நாய்களுக்கும் அது தெரிவதில்லை சாதாரண நாய்கள் மல்லிகைப் பூவையும் கஞ்சாவையும் ஒன்றாகவே நுகரும். ஆனால் மோப்ப நாய்கள் கஞ்சாவை,அபினை,புரவுன்சுகரை தனித்தனியாக நுகரும் தன்மை கொண்டவை. ஆமாம் கஞ்சாவுக்கும் பிரவுன் சுகருக்கும் அபினுக்கும் இன்னும் உள்ள போதைப் பொருட்களுக்கும் பழக்கப்படுத்தப்படுகின்றன இந்த போலீஸ் மோப்ப நாய்கள். வெடிகுண்டை கண்டறிய நாய்களுக்கு ஜெலட்டின் குச்சிகளின் வாசனை பழக்கப்படுத்தப்படுகின்றன. மெல்ல கொல்லும் போதையை மனிதன் எப்படி பழகிய பிறகு தேடி வெறி கொண்டு ஓடுகிறானோ அதே வெறி மோப்ப நாய்களுக்கு ஊட்டப்படுகிறது.

தமிழக காவல்துறையில் ஜெர்மன்ஷெப்பர்ட்,லேப்ரடா ரெட் ரீவர்,டோபர்மேன் சிஞ்சர்,டூபர் சிஞ்சர்,கோல்டன் ரெட் ரீவர் என்ற அந்நிய நாய்கள் பயன் படுத்தப்படுகின்றன. நம்மூர் ராஜபாளையம் நாய் இப்போதெல்லாம் வட இந்தியா மார்வாடிகளின் வீடுகளில் காதுகளில் கம்மலோடும் மூக்கில் மூக்குத்தி போட்டும் காவல் காக்கிறதாம். போலீஸ் பயன்படுத்தும் நாய்களில் டோபர்மேன் சிஞ்சர், கொலை கொள்ளைகளில் துப்பறியவும், ஜெர்மன் ஷெப்பர்ட்,லேப்ரடா வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும்,கோல்டன் ரெட் ரீவர் போதை மருந்துகளை ஆயவும் பயன் படுத்தப்படுகிறது.ஆனால் எந்த போலீஸ் நாயும் கொலைகாரரையோ கொள்ளையரையோ துரத்திப் பிடித்து கவ்விக் கொண்டு வந்து கைகளில் கொடுப்பதில்லை. இரண்டரை அடி தூரத்தில் கொலை செய்தவர் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மற்றபடி கொலை காரர் சென்ற திசை அவர் விட்டுச் சென்ற பொருட்கள் என கொலை நடந்த இடத்துக்குள் எது கிடந்தாலும் எடுத்துக் கொடுத்துவிடும்.

சில காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளிலும் இம்மாதிரி நாய்கள் வளர்க்கப்படுகிறதாம்.பழிவாங்கப்படும் சில கான்ஸ்டபிள்கள் உயரிதிகாரி வீட்டு நாயை கவனிப்பதற்கும் காய்கரி வாங்கி கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள்.அதிகாரி வீட்டு நாய்க்கு கிடைக்கும் மரியாதை இந்த காவலர்களுக்கு கிடைப்பதில்லை.

நாய்கள் நமது செல்லப் பிராணிகள் ஆனால் பன்றிகள்.அவைகள் சாக்கடைப் பிராணிகள். ஆனால் நாய்களை விட பல மடங்கு மோப்ப சக்தியுள்ளது பன்றி. ஜெர்மன் இத்தாலி போன்ற நாடுகளில் மோப்ப பணிக்கு பன்றிகளை பயன் படுத்த துவங்கிவிட்டார்கள். நாய்க்கு நன்றி உண்டு பன்றிக்கு உண்டா? என்றால் நாயை விட அதிகாமான நன்றியுணர்ச்சி பன்றிக்குத்தான் இருக்கும் ஏனென்றால் நுகர்ச்சியின் அளவைக் கொண்டே நன்றியை நாம் தீர்மானிக்கிறோம்.அப்படியானால் பன்றியையும் நாயையும் விட புலிக்கு அதிக நன்றி இருக்க வேண்டுமே என்று கேட்கிறார் ஒரு காவலதிகாரி காரணம் புலியின் நுகர்ச்சியளவு இந்த இரண்டையும் விட அதிகம். எப்படி இருந்தாலும் நுகர்ச்சியின் அளவைக் கொண்டு நன்றியை தீர்மானிக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம் மனிதனிடம் அது சுத்தமாக இல்லையே? நுகர்ச்சியளவுதான் நன்றியை தீர்மானிக்கும் என்றால் நன்றியுணர்வு மனிதனிடம் அல்லவா? அதிகம் இருக்க வேண்டும்.

தன் வாழ்வின் பெரும் பங்கு நாட்களை காக்கிச் சட்டைகளோடு கழித்து விட்டு தன் அந்திமக்காலத்தில் வீதிக்கு வரும் போது மோப்ப நாய்க்கு அது புது உலகம். தெருநாய்களை அது எதிர் கொள்ள முடியாமல் அஞ்சி நடுங்கி வெளியில் வாழ்க்கையை தீர்த்துக் கொள்கிறது. நாம் மேலே சாராயக்கடையில் சந்தித்த உஷாவின் கதையும் இப்படித்தான்.இவ்விதமாய் ஒரு போலீஸ் மோப்ப நாய் வாழ்ந்து மடிகிறது.தனது பணிக்காலத்திலிருந்து அது ஓய்வு பெறும் போது கவலர்கள் கண்னீர் சிந்துகிறார்கள்.இரக்க முள்ள ஒரு அதிகாரி அரசுக்கு பரிந்துறைத்ததன் பேரில் இப்போது தமிழக அரசு போலீஸ் மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. கடைசி வரை அது அரசுப் பராமரிப்பிலேயே வாழ்கிறது. ஆமாம்! வாழக்கை முடிகிற நிம்மதியாக வாழட்டும் அந்த நாய்கள்.

இலங்கை கொலை செயவது இந்திய ஆயுதங்களால்.....


சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பகை நாடுகள். ஆனால் இலங்கை? சாயங்கால வேளையில் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குப் போய் மது அருந்திய படி சீட்டாடுவார்கள் இல்லையா? அப்படி ஒரு கிளப்தான் இலங்கைக்கு இந்தியா.அதனால்தான் இலங்கை பாகிஸ்தான் சீனா என இந்தியாவின் இடது வலது எல்லைப்புற நாடுகளை வைத்து நம்மிடம் சீட்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த சீட்டாட்டத்தில் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தில் சிக்கியிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழக மீனவர்களும் கூட,

இந்தியாவின் அந்தப்புறத்தில் நடைபெறும் இம்மாதிரி விளையாட்டுக்கள் ஈழத்தமிழரின் உயிரையும் இந்தியத் தமிழரின் உயிர்களையும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறது. 1980_ பதுகளில் கொழுந்து விட்டெறிந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் விளைவாய் இந்தியா இலங்கையில் தலையிட்ட போது இந்தியாவின் நண்பனாக இருந்தது விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போராளிகளுக்கு ராணுவப் பயிர்ச்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டது. வெருண்டு போன அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானா தந்திரமாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவைக் கோர்த்து விட்டார். 1987&ல் உருவான் இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரச்சனையை தீராச் சிக்கலுக்குள் ஆழ்த்தியது. இன்று ராஜீவ் கொலைக்குப் பிறகு போராளிகள் பகையாளிகளாகவும் இலங்கை ராணுவத்தினர் நண்பர்களாகவும் இந்தியாவுக்கு மாறிப்போனார்கள்.

இப்போது 800 இலங்கை ராணுவத்தினரை ராணுவ விருந்தினர்களாக இந்தியாவுக்கு அழைத்து அவர்களுக்கு பல்வேறு ராணுவ பயிர்ச்சிகளை அளிக்கிறார்கள். என்று தெஹல்கா இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. மஹாராஸ்டிரா.டேராடூன்,பூனே,மிஸோராம்,குஜராத்தின் வடோதரா போன்ற வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் இந்த பயிர்ச்சி நடைபெறுவதாக தெஹல்கா சுட்டிக்காட்டியிருக்கிறது. இம்மாதிரி பயிர்ச்சிகளுக்கு வரும் ராணுவ வீரர்களுக்காக இலங்கை அரசிடம் இருந்து எவ்விதமான பிரதிபலனும் இந்தியா பார்ப்பதில்லை மாறாக பயிர்ச்சிக்கு வருகிற சிங்கள வீரர்களுக்கு படிகள் கொடுத்து உறசாகப்படுத்துகிறது இந்தியா.‘‘இந்தியா எங்களுக்கு செய்வது மிக மிகப் பெரிய உதவி இது மட்டும்தான் எங்களை உற்சாகப்படுத்தும்’’என்று இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா சொல்லும் அளவுக்கு இந்தியாவின் ஆதரவு தொடருகிறதாம்.என்றெல்லாம் விரிகிறது அந்தக் அந்தக் கட்டுரை.

ஏன் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டும். என்ன காரணத்திறாக இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயிர்ச்சி பெற வேண்டும் என்றால்.எளிமையான ஒரு காரணத்தைத் தவிற வேறு என்ன இருக்க முடியும். இலங்கைக்கு சுற்றியுள்ள எந்த நாடுகளுடனும் சச்சரவும் இல்லை. அண்டை நாடுகள் தாக்கும் ஆபத்தும் இல்லை. ஆனால் உள்நாட்டுக்குள் எழுந்த பகை பெருந்தீயாய் எரியத் துவங்கிய பிறகு இலங்கை அரசின் எதிரிகளாக மாரிப்போனதென்னவோ தமிழ் மக்கள்தான். எப்போதுமே இன்னொரு நாட்டின் உதவி இல்லாமல் இலங்கை அரசால் விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது. இதை தெரிந்து வைத்திருக்கும் இலங்கை தொடர்ந்து ஏதோ ஒரு நாட்டை தங்களின் உள்நாட்டுப் போருக்கு உதவியாக பயன் படுத்தியே வந்திருக்கிறது. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவிடம் இருந்து பெருமளவு ராணுவ உதவிகளைப் பெற்றது இலங்கை. ராஜீவ் கொலைக்குப் பிறகு இலங்கை பிரச்சனையில் இருந்து இந்தியா ஒதுங்க. நார்வேயின் தலைமையில் ஐய்ரோப்பிய நாடுகள் இலங்கையில் சமரச முயர்ச்சிகளைத் துவங்க அது எல்லா வகையிலும் இலங்கை அரசுக்கு நெருக்கடியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் இருந்தது. நான்காண்டுகால சமாதான பேச்சுவார்த்தை முறிந்து போக நார்வே உடபட மேற்குலக நாடுகள் இலங்கை பிரச்சனையில் இருந்து வெளியேறியது. உடனே இலங்கை பாகிஸ்தானிடம் போய் ஆயுதம் வாங்கியது. அதற்கு இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஒரு ரியாக்கசனும் இல்லையே என யோசித்த இலங்கை அதிரடியாக சீனாவிடம் போய் ஆயுதம் வாங்கியதோடு சீன இலங்கை ராணுவ கூட்டுப் பயிர்ச்சியை ரகசியமாக இலங்கை கடற் பிராந்தியத்தியத்தில் நடத்தியது.இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சீனா இலங்கையில் இருந்த படி இந்தியாவின் தென் பகுதிகளை தீவீரமாக உளவு பார்த்ததாம்.குறிப்பாக கல்பாக்கம் அணு மின் நிலையம் கூடன்குளம் அணு உலையும் சீனா வின் கண்காணிப்புக்குள் இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் ‘‘இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விற்காது.அதே சமயம் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்கள் வாங்கக் கூடாது’’ என்று பகிரங்கமாகவே இலங்கையை எச்சரித்தார். இலங்கை எதிர் பார்த்ததும் இதைத்தான் சீனாவும் பாகிஸ்தானும் கொடுக்கும் ஆயுதங்களை விட புவியியல் ரீதியில் இந்தியா கொடுக்கும் ராணுவ உதவிகளே மேலானது என்பதை தெரிந்து வைத்திருந்த இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடத் துவங்கி விட்டதை சந்தோசமாக வரவேற்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை புலிகளின் ஆதரவாளர்களாலேயே முன் வைக்கப்பட்டது. ஆனால் எப்படி இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவாகவா? அல்லது கொல்லப்படும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவா?என்றால் அதற்கும் நாரயணன் பதில் சொல்லி விட்டார். ‘‘புலிகளிடம் இருக்கும் விமானப்படையும் கடற்படையும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானவை’’ என்று இந்தியா யாருக்கு ஆதரவாக செயல்படப் போகிறது என்பதையும் தெளிவு படுத்தி விட்டார்.எழுதப்படாத ரகசிய ஒப்பந்தத்தை செயல் படுத்த ரகசியப் பயணங்களை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு மேற்கொள்கிறார்களாம்.அப்படி மேற்கொள்கிற பயணங்கள் இலங்கையில் ராஜபக்ஷே அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்குக் கூட தெரியாமல் மறைக்கப்பட்டு மிகவும் ரகசியமாக வைக்கப்படுகிறது. ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இந்தியாவின் தாராள ராணுவ உதவியுடன் கிழக்கை மீட்டெடுத்த இலங்கை அடுத்து குறிவைத்திருப்பது. வன்னியை ஆனால் அத்தனை எளிதில் வன்னி இலங்கை ராணுவத்திடம் விழும் என்பதை இலங்கை ராணுவமே நம்பத்தயாராக இல்லை.யுத்தம் என்றால் இடங்களை பிடிப்பது நீண்ட நாட்கள் அதை பாதுகாக்க முடியாமல் கைவிடுவதும் சகஜமான ஒன்று. ஆனால் வன்னி அப்படியல்ல அது புலிகளின் இதயம். அந்த இதயத்தை குறிவைக்கத்தான் இப்போது இந்தியாவில் பயிர்ச்சிகள் நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

நிலைமைகள் கைமீறிப் போவதை உணார்ந்த புலிகளோ இந்தியாவிடம் நல்லெண்ணம் வளர்க்கவே விரும்புகிறார்கள். ஆகஸ்டில் நடைபெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே புலிகளின் போர் நிறுத்தத்தை நிராகரித்த அரசு கிழக்கை மீட்டது போல வடக்கை மீட்கும் போர் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.புலிகள் இந்தியாவுக்குக் கொடுக்கும் சைகைகள் ஒரு தலைப் பட்சமானவை.ஆனால் இலங்கையும் வேண்டாம் புலிகளும் வேண்டாம் என்பதுதான் இந்தியாவின் தீர்மானமான முடிவு. ஆனால் மீண்டும் மீண்டும் எங்களை தவிர்த்து விட்டு நீங்கள் ஆசிய ஹீரோ கனவை ஒரு நாளும் அடைய முடியாது என இலங்கை அரசு செய்கிற ஆயுத வியாபாரம்தான் இந்தியாவை இலங்கை அரசின் பக்கம் சாய வைத்திருக்கிறது. ‘‘இது மிக மோசமான இன்னொரு அனுபவத்தை இந்தியாவுக்குக் கொடுத்து விடக் கூடாது. ஆகவே சம அளவில் புலிகளிடம் இருந்தும் இலங்கை அரசிடம் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யக் கூடாது.இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாக்கிற பொறுப்புதான் இந்தியாவுக்கு இருக்கிறது.அதைச் செய்யாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது இந்தியா அந்த ஆயுதங்களைக் கொண்டுதான் தினம் தோறும் இலங்கை தமிழ் மக்களை குண்டு வீசிக் கொல்கிறது. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்’’என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில் டில்லியில் பிரதமரைச் சந்தித்த கருணாநிதி சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனையை எழுப்புவதாக உறுதி கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பல மாநாடுகளிலும் மீனவர் பிரச்சனை விவாதிக்கப்பட்டதுதான்.ஆனாலும் 300 பேர் வரை இது வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடலின் மீதான் மீனவர் உரிமை முற்றிலுமாக இலங்கை அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது.ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவ பிரதிநிதிகளை சந்தித்த இலங்கை அமைச்சர்.‘‘மீனவர்களை கொல்வது நாங்களல்ல விடுதலைப் புலிகள்தான்.என்று பழியை புலிகள் மீது போட்டு அனுப்பியிருக்கிறார்.இனிமேலாவது இத்தகைய மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் அதற்கு இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது மாறாக அதை கண்டிக்க வேண்டும் கறாரான அணுகுமுறையை கையாள வேண்டும்

பெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்



‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே பாதிக்கப்பட்டு விட்டது.கணவன் மனைவி பிரச்சனைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும் இத்தகைய வழக்குகளை பெண் போலீசார்தான் திறமையாக கையாள்வர் என்று கருதியதால்தான் தமிழகம் முழுக்க மகளிர் காவல் நிலையங்கள் துவங்கப்பட்டன.இந்த மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர் பார்த்தனர்.ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால் சிறிய சிறிய பிரசனைகளுக்குக்கூட பெரிய அளவிலான குற்றம் என்ற வர்ணம் பூசப்படுகிறது.கணவனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை கூறுமாறு பெண்கள் உற்சாகப்படுத்தப் படுகின்றனர்.இதனால் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே பாழடிக்கப்படுகிறது’’
தமிழக மகளிர் காவல் நிலையங்களில் நடக்கும் அத்து மீரலுக்கு எதிராக கொட்டப்பட்ட இந்த வார்த்தைகள் மனித உரிமை அமைப்பினுடையதோ அல்லது சமூகப்பணியாளர்களின் வார்த்தைகளோ அல்ல...முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ரோசைய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக குறிப்பிட அதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுத் தீர்ப்பில் சொன்ன வார்த்தைகள்தான் மேற்கண்டவை.

மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது,சாதாரண குடும்ப பிரச்சனைகளில் காவல் நிலையங்களுக்கு செல்வோரை அடித்து துன்புறுத்தி இரண்டு பக்கமும் வசூலைப் போடுபவர்களாக உருமாறி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொடர்ந்து மகளிர் காவல் நிலையங்கள் மீது உயர் நீதிமன்றம் கணடனக் கணைகளை தொடுத்த படியிருக்கிறது.
150 ஆண்டுகால வரலாறுள்ள தமிழக காவல்துறையில் பெண் போலீஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டது 1973&ல் இப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் போலீசார் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலேயே பணியாற்றினர்.இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ‘‘பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் அணுகுமுறை மாற வேண்டும்’’என்ற நோக்கில் 1992&ல் சென்னையில் முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டது மகளிர் காவல் நிலையம்.இந்தியாவிலேயே முதன் முறையாக என்றெல்லாம் பெருமையாக பேசப்பட்ட மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை இன்று இருநூறைத் தொடுகிறது.ஆனால் தமிழகம் முழுக்க ஆண் காவலர்களுக்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை பல வழக்குகளிலும் நீரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் மகளிர் காவலர்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்,சியாமளா தம்பதிகள் ஐந்து வயது பெண் குழந்தைக்கு பெற்றோர்களான சதீஷ-க்கும் சியாமளாவுக்கும் குடும்ப வாழ்வில் மனஸ்தாபம்.‘‘சதீஷ§க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு,வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்’’என்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சியாமளா.சதீஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்டு தினமும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார் .இந்நிலையில்தான் அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரியும் ராஜலட்சுமி சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷிடமும் சதீஷை சேர்த்து வைப்பதாக சியமாளாவிடமும் பேரம் பேசி கடைசியில் சியாமளா பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டதோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் முறையிட இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது ஒரு சாம்பிள் சம்பவம்தான்....தமிழகம் முழுக்க குடும்ப பிரச்சனைகளை கையாளும் விதத்தில் பெண் போலீசாரும் ஆண் போலீசைப் போலவே தடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுக்க ஒலிக்கிறது.போலீசின் தொல்லைகளுக்கு ஆளாகும் பல குடும்ப ஆண்களும் பெண்களும் பயந்து போய் இதை வெளியில் சொல்லப் பயப்படுவதோடு போலீசார் கேட்கும் தொகையையும் கொடுத்து விட்டு வசூலுக்கு துணையாக ஆண்களுக்கு எதிரான வாக்குமூலங்களையும் கொடுக்கிறார்கள்.

பொதுவாக,கணவர் என்னை ஏமாற்றுகிறார் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார்.மாமனார் மாமியாரோடு சேர்ந்து கொண்டு தனிக்குடித்தனம் வர மறுக்கிறார்.இப்படி குடும்பத்துக்குள் எழும் நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையங்களுக்கு பெண்கள் சென்றால் உடனே வரதட்சணை கொடுமை சட்டத்தின் படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.இந்த வறையறைக்குள் இப்போது வந்திருப்பது குடும்ப வன்முறைச் சட்டம்.உண்மையில் குடும்பத்தில் நடக்கும் வன் கொடுமைகளை சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வெளியில் வருவதில்லை.அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் செல்வதில்லை.


குடும்பங்களில் கணவன் மீதோ மாமனார் மாமியார் மீதோ ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி அதாவது பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் கூட அதை தீர்த்து வைக்கும் சமரச மையங்களாக மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை.எடுத்த எடுப்பிலேயே வரதட்சணை வழக்காக அதை பதிவு செய்யும் படி அறிவுறுத்தி அதன் மூலம் கணவன் குடும்பத்தை மிரட்டி பணிய வைக்கும் ஒரு தவறான போக்கை பெண் போலீசார் கையாளுகின்றனர்.மகளிர் காவல் நிலையத்துக்குப் போன சியாமளா கூட தன் கணவரை தன்னுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று போனவர்தான்.ஆனால் இவரிடம் இணைத்து வைப்பதாகவும் சதீஷிடம் பிரித்து வைப்பதாகவும் வசூலைப் போட்டது போலதான் பெரும்பாலான வழக்குகளில் நடவடிக்கை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.தனிக்குடித்தனப் பிரச்சனை இன்னும் மோசம் கணவனின் உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள் வேறு எங்காவது வசித்தால் கூட அவர்களையும் தொலைபேசியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக சேர்த்து விடுகிறது பெண் போலீஸ்.இப்படி ஒரு முறை கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்த விரும்பிய ஒரு பெண் வழக்கறிஞரின் அறிவுரைப்படி மாமனார் மாமியார் கணவனை தனிக்குடித்தனம் செல்ல விடாமல் தடுப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொன்னார்.அந்தப் பெண்ணும் அப்படியே கொடுத்தார்.போலீசார் நம்மை விசாரிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த மாமனாரும் மாமியாடும் வீட்டிலேயே தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

சமீப காலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தை தவறாக கணவனுக்கு எதிராக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.விருப்பமில்லாத இருவரை கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதும்.சின்ன பிரச்சனைகளோடு காவல் நிலையம் செல்பவர்களை நிரந்தரமாக பிரித்து வைப்பதற்கும் பல இடங்களில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தீர்க்கமாக சொல்லப்படுகிற பொய்கள் நியாயங்களாக மாற்றப்படுவதும்.ஒரு சாராரின் கருத்தே எடுபடாமல் போவதும் அதன் மூலம் பாதிக்கப்படுகிற ஆண்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்காமல் போவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பழைய தாலி செண்டிமெண்டுகளையும் கெடுத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் கொடுமையான பழமரபிலும்தான் நம் கலாசாரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதற்கு போலீசாரும் விதிவிலக்கல்ல.பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கும் அதே நேரத்தில் பெண்களின் குற்றச்சாட்டு உண்மையா?அல்லது பொய்யா என்பதை விசாரிக்கிற கடமையும் போலீசுக்கு உண்டு.

குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவன் மீதான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்துக்குப் போன பெண்ணின் தீர்ப்பை முன்னிட்டு கேரள கோர்ட் சொன்ன தீர்ப்பின் சாரம் தமிழகத்துக்கும் ஏன் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே பொறுந்தும்.

‘‘குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது.தனது முறை தவறிய உறவை மறைப்பதற்காக மனைவி இது போல் செய்திருக்கிறார்.குடும்ப வன்முறைச் சட்டத்தால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.கணவர் மீது போலிப் புகார் கொடுக்கப்படுகிறது.இந்தப் போக்கினால் இந்தச் சட்டமே கேலிக்கூத்தாகி விடுகிறது.இந்த வழக்கில் கணவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவருக்கு உரிய நிவாரணம் வழங்க சட்டத்தில் இடமில்லை.ஆகவே குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்’’என்று தன் தீர்ப்பில் கூறினார் நீதிபது.

குடும்பம் என்கிற நிறுவனத்தில் சிதைக்கப்படும் பெண்வாழ்வின் வேதனைகள் களையப்பட வேண்டும் என்றுதான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கரிசனமான விசாரணையும் பாரபட்சமில்லாமல் நீதியும் கிடைக்கும் என்றுதான் மகளிர் காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டது.காவல்துறையில் அதுவரை ஆண்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன பொது சனங்களுக்கு பெண் போலீசாரை பார்த்த போது நம்பிக்கை துளிர் விட்டது.ஆனால் வழக்குகளை விசாரிக்கிற விதத்திலும் காவல் நிலைய அணுகுமுறைகளிலும் ஆண் போலீசுக்கும் பெண் போலீசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது இப்போது நீரூபிக்கப்பட்டிருக்கிறது.உண்மையில் மகளிர் காவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் உண்மைத் தத்துவங்கள் இனி வரும் காலத்திலாவது நடைமுறையாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்.