நாய்கள்



மதுக்கடையின் வாசலில் காத்திருக்கிறாள் உஷா. மது போதையில் கடந்து போகும் சிலர் அவளை கவனிப்பதில்லை.
குழம்பிய சித்தத்தோடு யாருடனாவது உரையாட ப்ரியப்படும் போதை மனிதர்கள் சிலர் உஷாவிடம் தலையைச் சொறிந்தபடி தங்களின் சோகங்களைச் சொல்கிறார்கள்.சில நேரங்களில் தலைக் குழைத்தபடியும் நாக்கைத் துருத்தியும் கதைகளை கேட்கும் உஷாவுக்கு ரத்தமும் சதையும் சுண்டிப் போய் விட்டது. காலம் கிழித்தும் கழித்தும் போடும் கோடுகளில் உஷா இன்று கிழவி. பல ஆண்டுகளாய் போலிஸ் மோப்ப நாயாக அரசுப் பணியாற்றிய உஷா இன்று சாரயக்கடையை காவல்காக்கிறாள். இன்று எஞ்சியிருக்கிற நினைவுகளோடு தன் கடைசிக் காலத்தைக் கழிக்கிறாள்.எல்லா அநாதை நாய்களுக்கும் இறுதி முடிவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் போலீஸ் நாய்களுக்குமா?

சென்னையில் அதிகாலையில் நடந்த கோரக் கொலைகளின் போது மௌனத்தைச் சுமந்த படி வந்து சென்ற உயரதிகாரிகளுக்குப் பிறகு,நீளச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய்கள் வந்தது.பரபரத்து ஓடி முடிவில் ஒரு முட்டுச் சந்துக்குள் போய் படுத்துக் கொண்டது. அல்லது சிறிது தூரம் ஓடிய பின் தன்னை வேடிக்கை பார்க்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டது போலீஸ் மோப்ப நாய்.திருட்டு,கொலை,கொள்ளை,போதை மருந்து கடத்தல், என குற்றவாளிகளைப் பிடிக்க பயன் படும் போலீஸ் மோப்ப நாய்கள் இது வரை எந்தக் குற்றவாளிகளையாவது பிடித்திருக்கிறதா? அல்லது சும்மா பந்தாவுக்காகத்தனா இந்த நாய்கள். என்று விசாரிக்கப் போனால்.பல விசித்திரங்களையும் வேதனைகளையும் சாகசங்களையும் சுமந்து திரிகிறது நாய்கள்.


குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டைநாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்களுக்கு மோப்ப நாய்களின் கதைகளின் தெரியுமோ தெரியாதோ?

1952- ல் இந்தியாவிலேயே முதன் முதலாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது சென்னை போலீசில்தான். ஆனால் மோப்ப நாய்களுக்கெல்லாம் முன்னோடி ஜெர்மனியின் ஹிடலர். தனது நாஜிப்படையினர் போரில் காயமடையும் போது முதலுதவிக்காக நாயகளை பயன்படுத்திய ஹிட்லர், பின்னர் கண்ணிவெடிகளை கண்டு பிடித்து துப்புச் சொல்வதற்கும் நாய்களை பயன் படுத்தினாராம்.மனிதர்களிடம் இரக்கமற்று நடந்து கொண்ட அந்த ஆரிய சர்வாதிகாரி நாய்களிடம் காட்டிய அன்பு அலாதியானது.தமிழக போலீஸ் மோப்ப நாய்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் இரண்டிலிருந்து நான்கு நாய்கள் வரை பேணப்படுகின்றன. இரண்டு நாய்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் இரண்டு நாய்கள் குண்டுகளை கணடறியவும் பயன்படுகிறது. இன்றைய தேதியில் தமிழகத்தின் சிறந்த மோப்ப நாய்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் யோசிக்கிறார்கள்.

"முன்னாடி பொன்னி, யுவராஜ், சீஃப் என்றெல்லாம் நாய்கள் இருந்தது. இப்பவும் இருக்கு...ஆனா..."என்று இழுக்கிறார்கள்.

பிரௌனி பிறந்த நான்காவது நாளில் அவளது வால் முளையிலேயே வெட்டப்பட்டது. மோப்ப நாய்களாக தெரிவு செய்யப்படும் டோபர்மேன் நாய்கள் பிறந்து கண் திறப்பதற்குள் வால்கள் வெட்டப்படும். நீளமாக வளரும் அதன் வால்கள் இடைஞ்சலாக மாரிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.பின்னர் மூன்று மாதத்தில் ஏதோ ஒரு மாலைப்பொழுதிலோ அல்லது அதிகாலையிலோ தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு போலீஸ் மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.கொலை,கொள்ளை,போதை மருந்து கண்டு பிடிப்பு என வகைப் பிரித்து ஒன்பது மாத பயிர்ச்சியை முடிக்கிறது போலீஸ் மோப்ப நாய். ஒரு வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பதாண்டுகாலம் அரசு ஊழியராக பணியாற்றும் இந்த நாய்களுக்கு பணிக்காலத்தில் ஊதியமென்று எதுவும் இல்லை.ஊதியம் வாங்கித்தான் அது என்ன செய்யும் குடும்பமா? குட்டியா?

நாய்களை மோப்ப நாய்களாக பழக்கப்படுத்துவது எப்படி? போதைப் பொருட்களை, வெடிகுண்டுகளை, கொள்ளையர்களை அது எப்படி கண்டு பிடிக்கிறது. என்றால் 220 மில்லியன் நுகர்ச்சி செல்களை தன் மூக்கில் கொண்டிருப்பதுதான் அதன் மோப்பத் திறனின் ரகசியம். மனிதனின் மோப்ப சக்தி இதை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் நமக்கு பிரவுன்சுகரின் சுவையோ கஞ்சாவின் வாசனையோ அந்தப் பழக்கம் இல்லாதவரை தெரியாது.

ஆனால் நாய்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது. ரத்தத்தின் வாசனை..பிரவுன்சுகர், கஞ்சாவின் வாசனை என்றால் எல்லா நாய்களுக்கும் அது தெரிவதில்லை சாதாரண நாய்கள் மல்லிகைப் பூவையும் கஞ்சாவையும் ஒன்றாகவே நுகரும். ஆனால் மோப்ப நாய்கள் கஞ்சாவை,அபினை,புரவுன்சுகரை தனித்தனியாக நுகரும் தன்மை கொண்டவை. ஆமாம் கஞ்சாவுக்கும் பிரவுன் சுகருக்கும் அபினுக்கும் இன்னும் உள்ள போதைப் பொருட்களுக்கும் பழக்கப்படுத்தப்படுகின்றன இந்த போலீஸ் மோப்ப நாய்கள். வெடிகுண்டை கண்டறிய நாய்களுக்கு ஜெலட்டின் குச்சிகளின் வாசனை பழக்கப்படுத்தப்படுகின்றன. மெல்ல கொல்லும் போதையை மனிதன் எப்படி பழகிய பிறகு தேடி வெறி கொண்டு ஓடுகிறானோ அதே வெறி மோப்ப நாய்களுக்கு ஊட்டப்படுகிறது.

தமிழக காவல்துறையில் ஜெர்மன்ஷெப்பர்ட்,லேப்ரடா ரெட் ரீவர்,டோபர்மேன் சிஞ்சர்,டூபர் சிஞ்சர்,கோல்டன் ரெட் ரீவர் என்ற அந்நிய நாய்கள் பயன் படுத்தப்படுகின்றன. நம்மூர் ராஜபாளையம் நாய் இப்போதெல்லாம் வட இந்தியா மார்வாடிகளின் வீடுகளில் காதுகளில் கம்மலோடும் மூக்கில் மூக்குத்தி போட்டும் காவல் காக்கிறதாம். போலீஸ் பயன்படுத்தும் நாய்களில் டோபர்மேன் சிஞ்சர், கொலை கொள்ளைகளில் துப்பறியவும், ஜெர்மன் ஷெப்பர்ட்,லேப்ரடா வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும்,கோல்டன் ரெட் ரீவர் போதை மருந்துகளை ஆயவும் பயன் படுத்தப்படுகிறது.ஆனால் எந்த போலீஸ் நாயும் கொலைகாரரையோ கொள்ளையரையோ துரத்திப் பிடித்து கவ்விக் கொண்டு வந்து கைகளில் கொடுப்பதில்லை. இரண்டரை அடி தூரத்தில் கொலை செய்தவர் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மற்றபடி கொலை காரர் சென்ற திசை அவர் விட்டுச் சென்ற பொருட்கள் என கொலை நடந்த இடத்துக்குள் எது கிடந்தாலும் எடுத்துக் கொடுத்துவிடும்.

சில காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளிலும் இம்மாதிரி நாய்கள் வளர்க்கப்படுகிறதாம்.பழிவாங்கப்படும் சில கான்ஸ்டபிள்கள் உயரிதிகாரி வீட்டு நாயை கவனிப்பதற்கும் காய்கரி வாங்கி கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள்.அதிகாரி வீட்டு நாய்க்கு கிடைக்கும் மரியாதை இந்த காவலர்களுக்கு கிடைப்பதில்லை.

நாய்கள் நமது செல்லப் பிராணிகள் ஆனால் பன்றிகள்.அவைகள் சாக்கடைப் பிராணிகள். ஆனால் நாய்களை விட பல மடங்கு மோப்ப சக்தியுள்ளது பன்றி. ஜெர்மன் இத்தாலி போன்ற நாடுகளில் மோப்ப பணிக்கு பன்றிகளை பயன் படுத்த துவங்கிவிட்டார்கள். நாய்க்கு நன்றி உண்டு பன்றிக்கு உண்டா? என்றால் நாயை விட அதிகாமான நன்றியுணர்ச்சி பன்றிக்குத்தான் இருக்கும் ஏனென்றால் நுகர்ச்சியின் அளவைக் கொண்டே நன்றியை நாம் தீர்மானிக்கிறோம்.அப்படியானால் பன்றியையும் நாயையும் விட புலிக்கு அதிக நன்றி இருக்க வேண்டுமே என்று கேட்கிறார் ஒரு காவலதிகாரி காரணம் புலியின் நுகர்ச்சியளவு இந்த இரண்டையும் விட அதிகம். எப்படி இருந்தாலும் நுகர்ச்சியின் அளவைக் கொண்டு நன்றியை தீர்மானிக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம் மனிதனிடம் அது சுத்தமாக இல்லையே? நுகர்ச்சியளவுதான் நன்றியை தீர்மானிக்கும் என்றால் நன்றியுணர்வு மனிதனிடம் அல்லவா? அதிகம் இருக்க வேண்டும்.

தன் வாழ்வின் பெரும் பங்கு நாட்களை காக்கிச் சட்டைகளோடு கழித்து விட்டு தன் அந்திமக்காலத்தில் வீதிக்கு வரும் போது மோப்ப நாய்க்கு அது புது உலகம். தெருநாய்களை அது எதிர் கொள்ள முடியாமல் அஞ்சி நடுங்கி வெளியில் வாழ்க்கையை தீர்த்துக் கொள்கிறது. நாம் மேலே சாராயக்கடையில் சந்தித்த உஷாவின் கதையும் இப்படித்தான்.இவ்விதமாய் ஒரு போலீஸ் மோப்ப நாய் வாழ்ந்து மடிகிறது.தனது பணிக்காலத்திலிருந்து அது ஓய்வு பெறும் போது கவலர்கள் கண்னீர் சிந்துகிறார்கள்.இரக்க முள்ள ஒரு அதிகாரி அரசுக்கு பரிந்துறைத்ததன் பேரில் இப்போது தமிழக அரசு போலீஸ் மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. கடைசி வரை அது அரசுப் பராமரிப்பிலேயே வாழ்கிறது. ஆமாம்! வாழக்கை முடிகிற நிம்மதியாக வாழட்டும் அந்த நாய்கள்.

இலங்கை கொலை செயவது இந்திய ஆயுதங்களால்.....


சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பகை நாடுகள். ஆனால் இலங்கை? சாயங்கால வேளையில் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குப் போய் மது அருந்திய படி சீட்டாடுவார்கள் இல்லையா? அப்படி ஒரு கிளப்தான் இலங்கைக்கு இந்தியா.அதனால்தான் இலங்கை பாகிஸ்தான் சீனா என இந்தியாவின் இடது வலது எல்லைப்புற நாடுகளை வைத்து நம்மிடம் சீட்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த சீட்டாட்டத்தில் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தில் சிக்கியிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழக மீனவர்களும் கூட,

இந்தியாவின் அந்தப்புறத்தில் நடைபெறும் இம்மாதிரி விளையாட்டுக்கள் ஈழத்தமிழரின் உயிரையும் இந்தியத் தமிழரின் உயிர்களையும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறது. 1980_ பதுகளில் கொழுந்து விட்டெறிந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் விளைவாய் இந்தியா இலங்கையில் தலையிட்ட போது இந்தியாவின் நண்பனாக இருந்தது விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போராளிகளுக்கு ராணுவப் பயிர்ச்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டது. வெருண்டு போன அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானா தந்திரமாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவைக் கோர்த்து விட்டார். 1987&ல் உருவான் இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரச்சனையை தீராச் சிக்கலுக்குள் ஆழ்த்தியது. இன்று ராஜீவ் கொலைக்குப் பிறகு போராளிகள் பகையாளிகளாகவும் இலங்கை ராணுவத்தினர் நண்பர்களாகவும் இந்தியாவுக்கு மாறிப்போனார்கள்.

இப்போது 800 இலங்கை ராணுவத்தினரை ராணுவ விருந்தினர்களாக இந்தியாவுக்கு அழைத்து அவர்களுக்கு பல்வேறு ராணுவ பயிர்ச்சிகளை அளிக்கிறார்கள். என்று தெஹல்கா இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. மஹாராஸ்டிரா.டேராடூன்,பூனே,மிஸோராம்,குஜராத்தின் வடோதரா போன்ற வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் இந்த பயிர்ச்சி நடைபெறுவதாக தெஹல்கா சுட்டிக்காட்டியிருக்கிறது. இம்மாதிரி பயிர்ச்சிகளுக்கு வரும் ராணுவ வீரர்களுக்காக இலங்கை அரசிடம் இருந்து எவ்விதமான பிரதிபலனும் இந்தியா பார்ப்பதில்லை மாறாக பயிர்ச்சிக்கு வருகிற சிங்கள வீரர்களுக்கு படிகள் கொடுத்து உறசாகப்படுத்துகிறது இந்தியா.‘‘இந்தியா எங்களுக்கு செய்வது மிக மிகப் பெரிய உதவி இது மட்டும்தான் எங்களை உற்சாகப்படுத்தும்’’என்று இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா சொல்லும் அளவுக்கு இந்தியாவின் ஆதரவு தொடருகிறதாம்.என்றெல்லாம் விரிகிறது அந்தக் அந்தக் கட்டுரை.

ஏன் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டும். என்ன காரணத்திறாக இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயிர்ச்சி பெற வேண்டும் என்றால்.எளிமையான ஒரு காரணத்தைத் தவிற வேறு என்ன இருக்க முடியும். இலங்கைக்கு சுற்றியுள்ள எந்த நாடுகளுடனும் சச்சரவும் இல்லை. அண்டை நாடுகள் தாக்கும் ஆபத்தும் இல்லை. ஆனால் உள்நாட்டுக்குள் எழுந்த பகை பெருந்தீயாய் எரியத் துவங்கிய பிறகு இலங்கை அரசின் எதிரிகளாக மாரிப்போனதென்னவோ தமிழ் மக்கள்தான். எப்போதுமே இன்னொரு நாட்டின் உதவி இல்லாமல் இலங்கை அரசால் விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது. இதை தெரிந்து வைத்திருக்கும் இலங்கை தொடர்ந்து ஏதோ ஒரு நாட்டை தங்களின் உள்நாட்டுப் போருக்கு உதவியாக பயன் படுத்தியே வந்திருக்கிறது. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவிடம் இருந்து பெருமளவு ராணுவ உதவிகளைப் பெற்றது இலங்கை. ராஜீவ் கொலைக்குப் பிறகு இலங்கை பிரச்சனையில் இருந்து இந்தியா ஒதுங்க. நார்வேயின் தலைமையில் ஐய்ரோப்பிய நாடுகள் இலங்கையில் சமரச முயர்ச்சிகளைத் துவங்க அது எல்லா வகையிலும் இலங்கை அரசுக்கு நெருக்கடியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் இருந்தது. நான்காண்டுகால சமாதான பேச்சுவார்த்தை முறிந்து போக நார்வே உடபட மேற்குலக நாடுகள் இலங்கை பிரச்சனையில் இருந்து வெளியேறியது. உடனே இலங்கை பாகிஸ்தானிடம் போய் ஆயுதம் வாங்கியது. அதற்கு இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஒரு ரியாக்கசனும் இல்லையே என யோசித்த இலங்கை அதிரடியாக சீனாவிடம் போய் ஆயுதம் வாங்கியதோடு சீன இலங்கை ராணுவ கூட்டுப் பயிர்ச்சியை ரகசியமாக இலங்கை கடற் பிராந்தியத்தியத்தில் நடத்தியது.இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சீனா இலங்கையில் இருந்த படி இந்தியாவின் தென் பகுதிகளை தீவீரமாக உளவு பார்த்ததாம்.குறிப்பாக கல்பாக்கம் அணு மின் நிலையம் கூடன்குளம் அணு உலையும் சீனா வின் கண்காணிப்புக்குள் இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் ‘‘இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விற்காது.அதே சமயம் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்கள் வாங்கக் கூடாது’’ என்று பகிரங்கமாகவே இலங்கையை எச்சரித்தார். இலங்கை எதிர் பார்த்ததும் இதைத்தான் சீனாவும் பாகிஸ்தானும் கொடுக்கும் ஆயுதங்களை விட புவியியல் ரீதியில் இந்தியா கொடுக்கும் ராணுவ உதவிகளே மேலானது என்பதை தெரிந்து வைத்திருந்த இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடத் துவங்கி விட்டதை சந்தோசமாக வரவேற்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை புலிகளின் ஆதரவாளர்களாலேயே முன் வைக்கப்பட்டது. ஆனால் எப்படி இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவாகவா? அல்லது கொல்லப்படும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவா?என்றால் அதற்கும் நாரயணன் பதில் சொல்லி விட்டார். ‘‘புலிகளிடம் இருக்கும் விமானப்படையும் கடற்படையும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானவை’’ என்று இந்தியா யாருக்கு ஆதரவாக செயல்படப் போகிறது என்பதையும் தெளிவு படுத்தி விட்டார்.எழுதப்படாத ரகசிய ஒப்பந்தத்தை செயல் படுத்த ரகசியப் பயணங்களை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு மேற்கொள்கிறார்களாம்.அப்படி மேற்கொள்கிற பயணங்கள் இலங்கையில் ராஜபக்ஷே அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்குக் கூட தெரியாமல் மறைக்கப்பட்டு மிகவும் ரகசியமாக வைக்கப்படுகிறது. ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இந்தியாவின் தாராள ராணுவ உதவியுடன் கிழக்கை மீட்டெடுத்த இலங்கை அடுத்து குறிவைத்திருப்பது. வன்னியை ஆனால் அத்தனை எளிதில் வன்னி இலங்கை ராணுவத்திடம் விழும் என்பதை இலங்கை ராணுவமே நம்பத்தயாராக இல்லை.யுத்தம் என்றால் இடங்களை பிடிப்பது நீண்ட நாட்கள் அதை பாதுகாக்க முடியாமல் கைவிடுவதும் சகஜமான ஒன்று. ஆனால் வன்னி அப்படியல்ல அது புலிகளின் இதயம். அந்த இதயத்தை குறிவைக்கத்தான் இப்போது இந்தியாவில் பயிர்ச்சிகள் நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

நிலைமைகள் கைமீறிப் போவதை உணார்ந்த புலிகளோ இந்தியாவிடம் நல்லெண்ணம் வளர்க்கவே விரும்புகிறார்கள். ஆகஸ்டில் நடைபெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே புலிகளின் போர் நிறுத்தத்தை நிராகரித்த அரசு கிழக்கை மீட்டது போல வடக்கை மீட்கும் போர் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.புலிகள் இந்தியாவுக்குக் கொடுக்கும் சைகைகள் ஒரு தலைப் பட்சமானவை.ஆனால் இலங்கையும் வேண்டாம் புலிகளும் வேண்டாம் என்பதுதான் இந்தியாவின் தீர்மானமான முடிவு. ஆனால் மீண்டும் மீண்டும் எங்களை தவிர்த்து விட்டு நீங்கள் ஆசிய ஹீரோ கனவை ஒரு நாளும் அடைய முடியாது என இலங்கை அரசு செய்கிற ஆயுத வியாபாரம்தான் இந்தியாவை இலங்கை அரசின் பக்கம் சாய வைத்திருக்கிறது. ‘‘இது மிக மோசமான இன்னொரு அனுபவத்தை இந்தியாவுக்குக் கொடுத்து விடக் கூடாது. ஆகவே சம அளவில் புலிகளிடம் இருந்தும் இலங்கை அரசிடம் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யக் கூடாது.இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாக்கிற பொறுப்புதான் இந்தியாவுக்கு இருக்கிறது.அதைச் செய்யாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது இந்தியா அந்த ஆயுதங்களைக் கொண்டுதான் தினம் தோறும் இலங்கை தமிழ் மக்களை குண்டு வீசிக் கொல்கிறது. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்’’என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில் டில்லியில் பிரதமரைச் சந்தித்த கருணாநிதி சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனையை எழுப்புவதாக உறுதி கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பல மாநாடுகளிலும் மீனவர் பிரச்சனை விவாதிக்கப்பட்டதுதான்.ஆனாலும் 300 பேர் வரை இது வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடலின் மீதான் மீனவர் உரிமை முற்றிலுமாக இலங்கை அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது.ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவ பிரதிநிதிகளை சந்தித்த இலங்கை அமைச்சர்.‘‘மீனவர்களை கொல்வது நாங்களல்ல விடுதலைப் புலிகள்தான்.என்று பழியை புலிகள் மீது போட்டு அனுப்பியிருக்கிறார்.இனிமேலாவது இத்தகைய மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் அதற்கு இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது மாறாக அதை கண்டிக்க வேண்டும் கறாரான அணுகுமுறையை கையாள வேண்டும்