பட்டினியின் பிடியில் ஏழைகளும்... கஞ்சித் தொட்டிகளும்



மரக்கா லுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழா க்குருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக் குழந்தை விற்ற பஞ்சம்-.
(நல்லதங்காள் கதையில் பஞ்சம் வந்த படலம்)


வறுமையின் கொடுமை தாங்காமல் தன் ஏழு குழந்தைகளோடு கிணற்றில் குதித்து மரித்துப் போன நல்லதங்காள் கிணறு இன்றும் இருக்கிறது விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுறத்தில்,

வறுமையின் கொடுமையில் ஜெயலட்சுமி தன் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் செத்துப் போக குதித்த கிணறு.சேலம் காரியப்பட்டியை அடித்த குள்ளம்பட்டியில் இருக்கிறது.

"கடைசிப் பையன் பரதன் பிறந்த போதே சோத்துக்கு வழியில்லாம பல நாள் பட்டினியா கெடந்திருக்கோம். ஒத்தாச உதவிக்கு யாருமில்ல. சொந்த பந்தமிண்ணு ஒண்ணும் இல்ல. கைத்தறி தொழிலும் படுத்துக்கிச்சு சமையல் சப்ளையர் வேலைக்குப் போனேன். அப்பாவுக்கு வேலை கிடைச்சுதா? சம்பளம் கிடைச்சுதாண்ணு பசிக்குற பிள்ளைக்கு என்ன தெரியும்? அது அழதான் செய்யும். வேலை தேடி நான் போயிருந்த நேரம் எப்படித்தான் இந்த மூணு பச்ச மண்ணுகளையும் கொல்லணும்ணு தோணுச்சோ பாவி மகளுக்கு" என்று தன் மனைவி ஜெயலெட்சுமியை சபித்தபடி அழுகிறார் கணவன் கிருஷணன்.


"அவர் வெளியூர் போய் மூணு நாள் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அரிசி,பருப்பு, புளி- ணு எந்தப் பொருளும் வீட்டில் இல்லை. ராத்திரி முழுக்க புள்ளைங்க அம்மா பசிக்குதுண்ணு அழுதாங்க. ஒருத்தன் அப்பா எங்கம்மாணு கேட்டு கதறுறான். பரதன் காது வலியில துடிக்கிறான். நான்தான் சகாலாம்ணு நினைச்சேன். நான் மட்டும் செத்துட்டா பிள்ளைங்க நாளைக்கு நாலு பேர் கிட்ட போய் கையேந்திடக் கூடாதில்லியா?கைத்தறிக்காக வாங்கிட கடனுக்கு வட்டி கூட கட்ட முடியல்ல பேசாம நம்மளோட குழந்தைகளையும் சேர்த்து கொலை பண்ணிடலாம்ணுதான் குழந்தைகளை கிணற்றில் போட்டேன். நானும் விழுந்தேன். இப்போ நாம் மட்டும் உயிரோட இருக்கேன் எம் புள்ளைங்க போய்ச் சேர்ந்துட்டாங்க. வறுமையும் பசியும் என் குடும்பத்தையே அழிச்சிடுச்சு." என்று பரிதாபமாக வாக்குமூலம் அளித்திருக்கும் ஜெயலெட்சுமி இப்போது சேலம் சிறையில்.

ஒரு ஏழைக்கூலியின் வாழ்க்கையையும் வலியையும் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்தால். ஜெயலெட்சுமியையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சூழலில்தான் இன்று தமிழகத்தில் பல லட்சம் கூலி விவசாயிகளின் குடும்பங்கள் இருக்கிறது.

‘‘பூமி வறண்டு விவசாயம் கெட்டுப் போய் பல லட்சம் மக்கள் பட்டினியால் மடிந்து போவதுதான் பஞ்சம் என்றில்லை. 1930&பதுகளில் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது அதற்கு கிரேட் டிப்ரஷன் (ரீக்ஷீமீணீt பீமீஜீக்ஷீணீtவீஷீஸீ) என்று பெயர் வைத்தார்கள் மீண்டும் அதே சூழல் இப்போது அமெரிக்காவில் உருவாகி வருகிறது. அமெரிக்கா சந்திக்கும் அதே கொடுமை இப்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பகால அறிகுறிதான் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு. விலைவாசி உயர்வு.மின்சாரம் முதல் மிளாக்ய்ப்பொடி வரை ஏற்படும் தட்டுப்பாடு.கைத்தறி நெசவு,பட்டு நெசவு, விவசாயம், கூலிவேலை, சிறு வணிகம் என இன்று தமிழகத்தில் எந்தத் தொழிலையும் செய்ய முடியாத சூழல்.நகரமயமாதல் பெருகப் பெருக தனியார் மூலதனம் குவிய குவிய பல லட்சம் விவசாயிகள் பட்டியின் பிடிக்குள் தள்ளப்படுகிறார்கள். என்பதே கசப்பான உண்மை. ஒட்டு மொத்த கூலி தொழிலாளர்களும் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழும் சூழலே இன்று கிராமப்புறங்களில் நிலவுகிறது’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த இடது சாரி சிந்தனையாளர்.

என்னதான் சோத்துக்கு கஷ்டம் வந்தாலும் வீட்டின் மூலையில் குவித்து வைத்திருக்கும் கோட்டை நெல் என்று சொல்லக் கூடிய விதை நெல்லை ஒரு போதும் எடுத்துச் சமைக்க மாட்டார்கள் விவசாயிகள். அது ஆடி மாதம் வரை அடுத்த விதைப்புக்காக காத்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலான விவசாயிகள் கோட்டை நெல் வைத்துக் கொள்வதில்லை. காரணம் விளைச்சலுக்கு வழியில்லை அப்படியே விளைந்தாலும் நெல்லுக்கு விலையில்லை. பட்டுநெசவு, கைத்தறி, விவசாயம், கரும்பு உற்பத்தி என்று விவசாயமோ கைத்தறியோ இன்று லாபகரமான தொழிலாக மட்டுமல்ல சராசரி வாழ்வைக் கூட ஓட்டுவதற்கு இந்தத் தொழில்கள் கை கொடுக்காத சூழலில் கடனின் மூழ்கி அதிலிருந்து மீள முடியாமல் சில தற்கொலைகளும் நடந்திருக்கிறது. வழக்கம் போல குடும்பத் தகராறு என்று தற்கொலைக்கான காரணம் எழுதி கணக்கை முடித்துக் கொள்கிறது போலீஸ்.

தமிழகம் முழுக்க உள்ள கைத்தறி தொழிலாளர்கள் இன்று கஞ்சித் தொட்டிக்கு முன்னால் கையேந்தி நிற்க வேண்டிய பரிதாப நிலை. நூல் விலை ஏற்றம் தாள முடியாத கடன் சுமையால் தள்ளாடும் சூழலில் மிக மோசமான கந்து வட்டி கொடுமைக்காரர்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நெசவாளர்களும் உண்டு. பல நாள் பட்டினியின் விளைவு இன்று சோமனூர், பல்லடம் போன்ற பகுதியில் வேலை இல்லாத நெசவாளர்களுக்காக கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை தமிழகம் முழுக்க குறிப்பாக விவசாயம் பாழ் பட்ட, நெசவுத் தொழில் கெட்டுப் போன ஊர்களில் எல்லாம் இதே நிலைதான்.

கஞ்சித்தொட்டி மூலம் உணவிடும் வழக்கம் எப்படி வந்தது என்றால்,

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்கள் கொடுத்த பரிசுதான் பஞ்சம்.
இங்கிலாந்தின் நெசவாலைக் கம்பெனிகளுக்கு தேவையான பருத்தியையும் அவுரிச் செடியையும் பயிர் செய்யச் சொல்லி நமது விவசாயிகளை நிர்பந்திக்க வேளாண் உற்பத்தி குறைந்தது. குறைவாக விளைந்ததையும் ஏற்றுமதி செய்தனர் வெள்ளையர். விளைவு 1783&ல் தொடங்கி 1867 வரை சென்னை ஏழு முறை கொடிய பஞ்சத்தைக் கண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்தனர். தொடர்ந்து வந்தது தாது வருடப் பஞ்சம். 1876&ல் தொடங்கிய தமிழ் தாது வருடத்தில் வந்த பஞ்சத்தை ‘‘தாது வருடப் பஞ்சம்’ என்று பதிவு செய்திருக்கிறது வரலாறு. 40 லட்சம் தமிழ் மக்களின் உயிரைப் பலி கொண்ட ‘தாது வருடப் பஞ்சத்தின் போது’’ மக்களுக்கு பிச்சை போட நினைத்த வெள்ளை அரசு திறந்து வைத்ததுதான் இந்தக் ‘கஞ்சித் தொட்டி’ ஆனால் திறந்து வைக்கப்பட்ட கஞ்சித்தொட்டிகள் மடிந்து கொண்டிருந்த மக்களுக்கு முன்னால் பல்லிளித்து நின்றன. அன்றைய பஞ்சத்தில் அதிகமாக கொத்துக் கொத்தாக செத்துப் போனது தென் ஆற்காடு மாவட்ட மக்கள்தான் இன்றைக்கும் தென் ஆற்காடு மாவட்ட கிராமங்களில் ‘தாது வருஷ பஞ்சக் கும்மி’ என்ற கும்மிப் பாடல்கள் பாடப்படுகின்றன. பஞ்சமும் வறுமையும் மரணத்தை மட்டும் கொண்டு வரவில்லை. அது பல விதமான சமூக நோய்களை கொண்டு வந்தது கொலை, கொள்ளை, வழிப்பறி, தற்கொலை என்று பல விதமான துன்பங்களை மக்களுக்குக் கொண்டு வந்தது.
சுதந்திரம் அடைந்த இந்த ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்றும் இதே கொள்ளை,வழிப்பறி, இலவச மோசடிகள்,பணத்துக்கான கொலைகள் எனறு மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் பலரும்.

வெள்ளையர் ஆட்சியில் பஞ்சகாலப் பணியாக வேலை கொடுக்கும் திட்டத்தின் கீழ் வெட்டப் பட்டதுதான் சென்னை ‘பக்கிங்ஹாம் கால்வாய்’ இன்றும் வேலைக்கு உணவுத் திட்டத்தில் வருடத்திற்கு நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது ஆனால் அதில் கொடுக்கும் கூலியில் ஒரு குடும்பம் ஒரு வேளை கூட உண்ண முடியாத நிலையில் இந்தத் திட்டத்தில் பெரும் முறை கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. எண்பது ரூபாய் கூலியில் கால் பங்கை சுருட்டி விட்டு மீதியை கொடுப்பது என்கிற முறை கேட்டால்தான் திண்டிவனம் ரெட்டணையில் கூலி கேட்ட போராட்டமும் போலீஸ் தடியடியும். வேலைக்கு உணவுத் திட்டத்தில் நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப் பட்ட மாவட்டங்கள் 200. இதில் தமிழகத்தில் விழுப்புறம், கடலூர்,திருவண்ணாமலை, நாகப்பட்டினம். என நான்கு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. சிவகங்கை நமது நிதி அமைச்சரின் சொந்த மாவட்டம். குறைந்த கூலி பேசிய கூலி கொடுக்கப்படாமை, கிடைக்கிற கூலியும் வாழ்க்கைச் செலவுக்கு போதாமை என்று மக்கள் இந்தத் தொழிலுக்கு இப்போது செல்ல மறுக்கிறார்கள்.

"வறுமையை ஒழிக்கச் செலவிடப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 85 ரூபாய் ஊழல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு 15 ரூபாய் மட்டுமே மக்களுக்குப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் ஓராண்டு காலத்தில் கைமாறும் லஞ்சப் பணம் மட்டும் சுமார் 25,000 கோடியைத் தாண்டும்"என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவதன் உண்மை நெருப்பாய் சுடுகிறது.

மாதம் ஓன்றுக்கு பத்து நாள் வேலை கிடைத்தாலே இன்று வாழ்க்கை பெரும் பாடாக இருக்கிறது. அரிசிச் சோறும் பருப்பில்லாத, காய்கரி இல்லாத புளிக் குழம்பும்தான் இன்று பெரும் பாலான ஏழைகளின் உணவு. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று திட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு. ஆனால் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி நாற்பது ரூபாய்க்கு எண்ணைய், பருப்பு, காய்கரி வாங்கினால்தான் சமைத்துச் சாப்பிட முடியும். இதுதான் இன்றைய ஏழை மக்களின் நிலை.
ஒரு மனிதனின் உளைப்பு நேரமாக எட்டு மணிநேரத்தை தீர்மானித்திருக்கிறது சர்வதேசம். ஆனால் தமிழகத்தில் அந்த எட்டு மணிநேரத்தில்தான்
அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது. பண வீக்கத்தின் நெருக்கடியோடு போராடும் ஏழை மக்கள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை இதுதான். பெருமளவு உணவு உற்பத்தி பாதிப்படைய இந்த மின்வெட்டுதான் பிரதான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

கூலிக்கான பொருளாதாரப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொஞ்சம் கொஞமாக கிராமங்கள் அழிந்து வருகிறது. அரசியல் போட்டிக்காக முன்னர் கஞ்சித் தொட்டிகள் திறந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று நிஜமாகவே கஞ்சித் தொட்டி திறக்கும் நிலையில்தான் அனைத்து கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.இன்னொரு தாது வருடப் பஞ்சத்தையோ, கல் தட்டிப் பஞ்சத்தையோ தாங்கும் நிலையில் தமிழகம் இல்லை.

சைக்கிள் வித்தைக்காரர்



நெடுநேரம் சைக்கிளாடிய களைப்பு தெரிகிறது மணியின் வியர்வையிலும் முகத்திலும். சிதறிவிழுகிற சில்லறைகளை பொறுக்கிய படி குனிந்து கரம் கூப்பி குழந்தைகளுக்கு வணக்கம் சொல்லும் போது மொத்தமாக பூத்துச் சிரிக்கிறார்கள் குழந்தைகள். ஆட்டம் முடிகிறது கூட்டம் கலைகிறது. சைக்கிளை ஓரம் கட்டி விட்டு உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருந்த சில்லறைகளை எண்ணினால் இருபது ரூபாய்க்கு இரண்டு ரூபாய் குறைவு.‘‘யப்பா இஸ்கூலூ யூனிபாமும் சொக்காயும் வாங்கிக் கேட்டமுல காசு கொட்டாந்தியாப்பா‘‘
என மணியின் சோப்புப் பையை வார்த்தைகளால் தேடும் மகனுக்கு சொல்ல இன்றும் பதிலில்லை இந்த சைக்கிள் வித்தைக்காரனிடம்....

‘‘காதல் சாம்ராஜ்ஜியத்தில் நீயரு சமந்தாபாஸ§....
காதல் போர்க்களத்தில் நீயரு சதாம் ஹ§சைனு
சிவராசனை துரத்தும் சி.பி.ஐ போல நான் உன்னை துரத்தினாலும்
சிந்து பாத் கதைபோல முடிவில்லாமல் ஓடுகிறாயே...
அய்யகோ...
கட்டிக்கரும்பே ...
முட்டி எலும்பே...
தாளிக்காத ரசமே...
கொதிக்காத குளம்பே...வா என் அருகில் வந்து உம் மென்று ஒன்று தா‘‘ நரம்புகள் புடைக்க காதல் வசனத்தை மேடையில் பேசும் போது சீட்டிச் சத்தம் செவிட்டில் அறைகிறது. ‘‘இது நானே எழுதின டயாலாக் ஆடி மாச கோவில் திருவிழாவுல போடுற நாடகங்கள்ல நான் மேடையில ஏறி டயலாக் பேசி நடிச்சாதான் சாரு போணியாவுது. சைக்கிள் ஓடியெல்லாம் பொழைக்க முடியுமா‘‘ என்று கேட்கிற மணி முப்பாதாண்டு காலமாக சைக்கிளில் வித்தை செய்கிறார். வசூலுக்கு சைக்கிள், நடிக்க நாடகம், பார்ட் டைம் வாட்ச்மேன் வேலை என கழிகிற மணி. குரோம்பேட்டை ஏரியா பள்ளிக்குழந்தைகளின் கனவு மாமா...

‘‘தஞ்சாவூர்க்காரங்க அப்பவெல்லாம் வந்து சைக்கிள் வித்தை காட்டுவாங்க ஒரு வாரம் ஒரு இடத்துல டேரா போட்டாங்கண்ணா மூணு நாள் நாலு நாள் வண்டியை விட்டு இறங்காம வித்தை செய்வாங்க. இப்போ உள்ளோ சனத்துக்கு எங்க இதெல்லாம் தெரியும். எப்புடிணா? ரெண்டு சைக்கிளில் ரெண்டு பேர் இந்த வித்தையை செய்வாங்க மதியம் சாப்பாடு நேரம் வந்தா அப்படியே வித்தை செய்ற ரெண்டு பேரும் சைக்கிளை இணைச்சு பூட்டி அதையே படுக்கை மாதிரி ஆக்கி சைக்கிளில் இருந்துக்கிட்டே சாப்பிடுவாங்க தூங்குறதும் அப்படித்தான். அப்போ இந்த வித்தை செய்யும் போது இடையில கொஞ்சம் பிரேக் கிடைக்கும் அந்த பிரேக்கில் ஒரு என்டர்டயிம்மெண்டா நான் ரஜினி, கமல் மாதிரி மிமிக்கிரி பண்ணுவேன் என்னோட சூப்பர் ஸ்டார் சந்திரபாபு மாதிரி சொக்கா போட்டுக்கினு ‘குங்குமப் பூவே‘ பாட்டுக்கு ஆடுவேன் எனக்கு நல்லதான் கைதட்டுவாங்க ஆனா வித்தை காட்டுறாம் பாரு அவனுக்கு கிடைக்கிற மருவாதி எனக்கு கிடைக்காது. அப்புறம் மூணு நாள் போட்டி முடிஞ்சி அவங்க சைக்கிளை ஓரம் கட்டுவாங்க பாரு, அப்போ அவஙக சைக்கிளை எடுத்து நான் பழகுவேன். கோவிந்தன் மாஸ்டர்தான் சைக்கிள் வித்தையை எனக்கு கத்துக் கொடுத்து. ‘‘சரிடா இதை வெச்சுப் பொழைச்சுக்கோ‘‘ ணு அனுப்பிவிட்டார் அன்னைக்கு ஆரம்பிச்சவன்தான் எல்லா வித்தையும் செய்வேன். என்னதான் வித்தையானாலும் தலை கீழா நின்னாலும் காசு வேணுமே. நல்லா கைதட்டுறவங்க காசு போட மாட்டாங்க கம்முனு வேடிக்கை பார்க்கிறவங்க சில நேரம் காசு போடுவாங்க. சைக்கிள்ல காலை பேலன்ஸ் பண்னி நிண்னுகினே டியூப்லைட்டை என் முதுகில் தட்டி உடைப்பேன். அந்தப் பாவத்துக்கோசரம் சிலர் பத்து ரூபா இருபது ரூபா தருவாங்க ஒரு நாள் ஸ்கூல் குழந்தைங்க கிட்ட இதைச் செஞ்சேம்பாரு அந்த ஸ்கூலம்மா ‘‘ஏம்பா இதெல்லாம் இங்க செய்யாதப்பா. உன் ரத்தம் யாருக்காவது தேவைப்படும் அதை இப்படி வீணாக்காதே. இங்க மட்டுமில்ல இனி எங்கேயும் இதை செய்யாதேணு‘‘ ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அண்ணேலேர்ந்து நான் ட்யூப்லைட் உடைக்க மாட்டேன். சைக்கிள்ல செய்றதுக்கு 24 ஐட்டம் வெச்சுருக்கேன் ஆனா வெறுமனே சைக்கிள் வித்தை காட்டி வசூலாகுற பணத்தை வெச்சு ஒரு புண்ணாக்கும் புடுங்க முடியாதுணுதான் இப்போ நாடகத்துலயும் சினிமாவுலயும் நடிக்கிறேன்‘‘ என்கிற மணி.

தெருவில் வித்தைகள் செய்வதை குறைத்து பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளிடன் வித்தை காட்டுகிறார். பள்ளி நிர்வாகம் கொடுக்கிற வருமானத்தில் கழிகிறது மணியின் வாழ்க்கை.மணிக்கு ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள்.

‘‘இஸ்கூலில் எப்பவும் வித்தை காட்ட முடியாது. சீசன் மாதிரிதான் இதுவும் இந்த தொழிலே வேண்டாம்டா சாமிணு பெரிய கும்புடா போட்டேன். சைக்கிளை தூக்கி வூட்டுக்கு பின்னாடி வைச்சேன். குரோம்பேட்டையில் ஒரு கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். என் வேலையை பார்த்துக்கிட்டு ஒரே வருஷத்துல கன்பார்ம் பண்னினாங்க ஆனா பாருங்க! அந்தக் கம்பெனியை மூடிட்டாங்க திரும்பிவந்தேன் வீட்டுக்குப் பின்னால போய் ஒதுக்கிப் போட்டிருந்த சைக்கிளை பார்த்தேன் துருப்பிடிச்சு அதைப் பார்க்கவே அவமானமா இருந்தது. வித்தைக்கு மட்டும்தான் டப்பா கட்டின இந்த சைக்கிள் யூஸ் ஆகும் சார். என்னாதான் இருந்தாலும் இத்தனை நாள் சோறு போட்டதை ஒரமா ஒதுக்கலாமா? வேலை வெட்டி இல்லண்ணா ஒரு வாய்க் கஞ்சிக்கு அதானே எங்கிட்டே இருக்கு. அன்னைக்கு வேலையில்லாம திரும்பி வந்தேம்பாருங்க இன்னைக்கு வரைக்கும் சைக்கிளை நான் வீட்டுக்குள்ளாரதான் வைக்கிறேன். என்னோட மூத்த பொண்ணு சார் அது.‘‘

‘‘எங்கப்பாரு சரியா இருந்தா எதுக்கு இந்த நாய்ப் பொழப்பு எங்கப்பா நாடக கம்பெனியில் ஆர்மோனியப் பொட்டி வாசிச்சார். படிச்ச முட்டாளுணு சொல்வாங்க பாருங்க அது எங்கப்பாதான். ஆனா அவரைத் திட்டி என்னவாகப் போகுது.அவர் நாடகத்துல மியூசிக் போட்டாரு சத்தியமா அந்தத் தொழிலுக்கு நாம் போக கூடாதுணு இருந்தேன். சைக்கிள் வித்தை பண்ணினேன் என்னாச்சு அப்டியே காத்துக்கு ஒதுங்குற கட்டுமரம் மாதிரி நானும் நாடகத்துல தானே ஒதுங்கியிருக்கேன். ஒரு நாள் ஒருத்தர் வந்தார் சினிமாவில் டூப் போடுவியாணு? கேட்டார் நானும் சரிணு போனேன். ஆயிரம் ரூபாய்க்கு மேலயே கிடைச்சுது நல்ல பொழப்பா இருக்கேணு எல்லா சினிமாக் கம்பெனிக்கும் என் போட்டோவை தூக்கிக்கிட்டு போவேன். எம் படமில்லாத சினிமாக் கம்பெனியே சென்னையில கிடையாது. எல்லா அசிஸ்டெண்டுங்களுக்கும் என்னைத் தெரியும். ஆனா இந்த அசிஸ்டெண்டுங்க இருக்குறானுங்களே இவனுங்கள மாதிரி கேடிங்க வேற எவனும் கிடையாது. நெஜமா சார், ஒரு கம்பெனிக்கு போனா முடியையும் தாடியையும் வளர்த்துட்டு வாம்பானுங்க. இரண்டு மாசம் மெனக்கெட்டு முடியும் தாடியும் வளர்த்துட்டு போனா படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நளாகும் சம்மதாமா?ணு கேப்பாங்க. ஒருத்தன் முடியை வளர்க்கச் சொல்லுவான் ஒருத்தன் முடியை எடுக்கச் சொல்லுவான். வளத்த முடிக்கு சம்பளம் கொடுத்தாலே வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சிடும்.மயிர வளத்தே மண்ணாப் போனவன் சார் நான். ஆனா எங்க டைரக்டரு கே.ஜி.குருசங்கரு ஆகாய ஜன்னல் ணு ஒரு படம் எடுக்குறாரு அதுல நானும் நடிக்கிறேன். அந்தப் படம் வெளிய வந்தாதான் எனக்கு மறு ஜென்மம். நம்ம சாதாரண காமெடி ஆக்டரு நம்ம அப்பா என்ன சினிமாவுல பெரிய நடிகராவா இருந்தாரு எடுத்த உடனே வாய்ப்பு வர்றதுக்கு. அரசியல்வாதிங்கள மாதிரி சினிமாக்காரங்களும் அவங்க அவங்க புள்ளைங்களத்தான சினிமாவுக்கு கொண்டாராங்க. நான் எம்புள்ளைய சைக்கிள் வித்தைக்கு கொண்டார முடியுமா? கொண்டார மாதிரி மைனர் வேலையா நாம் பாக்குறோம்.இது என்னோட போகட்டும் சார் அதுங்க நாலெழுத்து படிச்சி அரசாங்க உத்தியோகத்துக்கு போகணும் அதான் சார் என் ஆசை‘‘
‘‘சைக்கிள் கலை மாதிரி உலகத்துலயே சிறந்த கலை வேறு எதுவும் கிடையாது ஏண்ணா இது மரண விளையாட்டு கரணம் தப்பினா மரணம் மாதிரி இதுவும் அப்படித்தான் சைக்கிள் வித்தை செய்யும் போது கழுத்தெலும்பு உடைஞ்சி செத்துப் போனவங்கெல்லாம் நான் பாத்துருக்கேன்.என்னைக்கு ஸ்கூல் குழந்தைங்க ‘‘உன்னோட விளையாட்டு போரடிக்குது நீ ஊட்டுக்குப் போணு’’ சொல்றாங்களோ அடுத்த நிமிஷமே இந்த சைக்கிளை சாமி மாதிரி ஆக்கி சும்மா வெச்சுடுவேன். நான் வேறு வேலைக்கு போயிருவேன். ஆனா அப்படி போறதுக்கு நான் ஒரு சைக்கிள் வாங்கணும்.‘‘என்ற படி தன் சைக்கிளை செல்லமாகத் தடவுகிற மணிக்கு மாரியம்மன் கோவில் கூழ் திருவிழா நாடகத்தில் பேச வேண்டிய டயலாக் நினைவுக்கு வர விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார்.
‘‘காவியச் சிலம்பாக நானிருந்தால் உன் காலடியில் தவழ்ந்திருப்பேன்...
வீசும் தென்றல் காற்றாக நானிருந்தால் உன் தாவணியில் குடிபுகுந்திருப்பேன்...
பாடும் குயிலே வா..
ஆடும் மயிலே வா. மணியின் வார்த்தைகள் நீண்டு கொண்டிருக்கிறது வாழும் வாழ்க்கைக்குத் தான் அர்த்தங்கள் ஏதும் இல்லை.

நாய்கள்



மதுக்கடையின் வாசலில் காத்திருக்கிறாள் உஷா. மது போதையில் கடந்து போகும் சிலர் அவளை கவனிப்பதில்லை.
குழம்பிய சித்தத்தோடு யாருடனாவது உரையாட ப்ரியப்படும் போதை மனிதர்கள் சிலர் உஷாவிடம் தலையைச் சொறிந்தபடி தங்களின் சோகங்களைச் சொல்கிறார்கள்.சில நேரங்களில் தலைக் குழைத்தபடியும் நாக்கைத் துருத்தியும் கதைகளை கேட்கும் உஷாவுக்கு ரத்தமும் சதையும் சுண்டிப் போய் விட்டது. காலம் கிழித்தும் கழித்தும் போடும் கோடுகளில் உஷா இன்று கிழவி. பல ஆண்டுகளாய் போலிஸ் மோப்ப நாயாக அரசுப் பணியாற்றிய உஷா இன்று சாரயக்கடையை காவல்காக்கிறாள். இன்று எஞ்சியிருக்கிற நினைவுகளோடு தன் கடைசிக் காலத்தைக் கழிக்கிறாள்.எல்லா அநாதை நாய்களுக்கும் இறுதி முடிவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் போலீஸ் நாய்களுக்குமா?

சென்னையில் அதிகாலையில் நடந்த கோரக் கொலைகளின் போது மௌனத்தைச் சுமந்த படி வந்து சென்ற உயரதிகாரிகளுக்குப் பிறகு,நீளச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய்கள் வந்தது.பரபரத்து ஓடி முடிவில் ஒரு முட்டுச் சந்துக்குள் போய் படுத்துக் கொண்டது. அல்லது சிறிது தூரம் ஓடிய பின் தன்னை வேடிக்கை பார்க்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டது போலீஸ் மோப்ப நாய்.திருட்டு,கொலை,கொள்ளை,போதை மருந்து கடத்தல், என குற்றவாளிகளைப் பிடிக்க பயன் படும் போலீஸ் மோப்ப நாய்கள் இது வரை எந்தக் குற்றவாளிகளையாவது பிடித்திருக்கிறதா? அல்லது சும்மா பந்தாவுக்காகத்தனா இந்த நாய்கள். என்று விசாரிக்கப் போனால்.பல விசித்திரங்களையும் வேதனைகளையும் சாகசங்களையும் சுமந்து திரிகிறது நாய்கள்.


குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டைநாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்களுக்கு மோப்ப நாய்களின் கதைகளின் தெரியுமோ தெரியாதோ?

1952- ல் இந்தியாவிலேயே முதன் முதலாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது சென்னை போலீசில்தான். ஆனால் மோப்ப நாய்களுக்கெல்லாம் முன்னோடி ஜெர்மனியின் ஹிடலர். தனது நாஜிப்படையினர் போரில் காயமடையும் போது முதலுதவிக்காக நாயகளை பயன்படுத்திய ஹிட்லர், பின்னர் கண்ணிவெடிகளை கண்டு பிடித்து துப்புச் சொல்வதற்கும் நாய்களை பயன் படுத்தினாராம்.மனிதர்களிடம் இரக்கமற்று நடந்து கொண்ட அந்த ஆரிய சர்வாதிகாரி நாய்களிடம் காட்டிய அன்பு அலாதியானது.தமிழக போலீஸ் மோப்ப நாய்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் இரண்டிலிருந்து நான்கு நாய்கள் வரை பேணப்படுகின்றன. இரண்டு நாய்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் இரண்டு நாய்கள் குண்டுகளை கணடறியவும் பயன்படுகிறது. இன்றைய தேதியில் தமிழகத்தின் சிறந்த மோப்ப நாய்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் யோசிக்கிறார்கள்.

"முன்னாடி பொன்னி, யுவராஜ், சீஃப் என்றெல்லாம் நாய்கள் இருந்தது. இப்பவும் இருக்கு...ஆனா..."என்று இழுக்கிறார்கள்.

பிரௌனி பிறந்த நான்காவது நாளில் அவளது வால் முளையிலேயே வெட்டப்பட்டது. மோப்ப நாய்களாக தெரிவு செய்யப்படும் டோபர்மேன் நாய்கள் பிறந்து கண் திறப்பதற்குள் வால்கள் வெட்டப்படும். நீளமாக வளரும் அதன் வால்கள் இடைஞ்சலாக மாரிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.பின்னர் மூன்று மாதத்தில் ஏதோ ஒரு மாலைப்பொழுதிலோ அல்லது அதிகாலையிலோ தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு போலீஸ் மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.கொலை,கொள்ளை,போதை மருந்து கண்டு பிடிப்பு என வகைப் பிரித்து ஒன்பது மாத பயிர்ச்சியை முடிக்கிறது போலீஸ் மோப்ப நாய். ஒரு வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பதாண்டுகாலம் அரசு ஊழியராக பணியாற்றும் இந்த நாய்களுக்கு பணிக்காலத்தில் ஊதியமென்று எதுவும் இல்லை.ஊதியம் வாங்கித்தான் அது என்ன செய்யும் குடும்பமா? குட்டியா?

நாய்களை மோப்ப நாய்களாக பழக்கப்படுத்துவது எப்படி? போதைப் பொருட்களை, வெடிகுண்டுகளை, கொள்ளையர்களை அது எப்படி கண்டு பிடிக்கிறது. என்றால் 220 மில்லியன் நுகர்ச்சி செல்களை தன் மூக்கில் கொண்டிருப்பதுதான் அதன் மோப்பத் திறனின் ரகசியம். மனிதனின் மோப்ப சக்தி இதை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் நமக்கு பிரவுன்சுகரின் சுவையோ கஞ்சாவின் வாசனையோ அந்தப் பழக்கம் இல்லாதவரை தெரியாது.

ஆனால் நாய்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது. ரத்தத்தின் வாசனை..பிரவுன்சுகர், கஞ்சாவின் வாசனை என்றால் எல்லா நாய்களுக்கும் அது தெரிவதில்லை சாதாரண நாய்கள் மல்லிகைப் பூவையும் கஞ்சாவையும் ஒன்றாகவே நுகரும். ஆனால் மோப்ப நாய்கள் கஞ்சாவை,அபினை,புரவுன்சுகரை தனித்தனியாக நுகரும் தன்மை கொண்டவை. ஆமாம் கஞ்சாவுக்கும் பிரவுன் சுகருக்கும் அபினுக்கும் இன்னும் உள்ள போதைப் பொருட்களுக்கும் பழக்கப்படுத்தப்படுகின்றன இந்த போலீஸ் மோப்ப நாய்கள். வெடிகுண்டை கண்டறிய நாய்களுக்கு ஜெலட்டின் குச்சிகளின் வாசனை பழக்கப்படுத்தப்படுகின்றன. மெல்ல கொல்லும் போதையை மனிதன் எப்படி பழகிய பிறகு தேடி வெறி கொண்டு ஓடுகிறானோ அதே வெறி மோப்ப நாய்களுக்கு ஊட்டப்படுகிறது.

தமிழக காவல்துறையில் ஜெர்மன்ஷெப்பர்ட்,லேப்ரடா ரெட் ரீவர்,டோபர்மேன் சிஞ்சர்,டூபர் சிஞ்சர்,கோல்டன் ரெட் ரீவர் என்ற அந்நிய நாய்கள் பயன் படுத்தப்படுகின்றன. நம்மூர் ராஜபாளையம் நாய் இப்போதெல்லாம் வட இந்தியா மார்வாடிகளின் வீடுகளில் காதுகளில் கம்மலோடும் மூக்கில் மூக்குத்தி போட்டும் காவல் காக்கிறதாம். போலீஸ் பயன்படுத்தும் நாய்களில் டோபர்மேன் சிஞ்சர், கொலை கொள்ளைகளில் துப்பறியவும், ஜெர்மன் ஷெப்பர்ட்,லேப்ரடா வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும்,கோல்டன் ரெட் ரீவர் போதை மருந்துகளை ஆயவும் பயன் படுத்தப்படுகிறது.ஆனால் எந்த போலீஸ் நாயும் கொலைகாரரையோ கொள்ளையரையோ துரத்திப் பிடித்து கவ்விக் கொண்டு வந்து கைகளில் கொடுப்பதில்லை. இரண்டரை அடி தூரத்தில் கொலை செய்தவர் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மற்றபடி கொலை காரர் சென்ற திசை அவர் விட்டுச் சென்ற பொருட்கள் என கொலை நடந்த இடத்துக்குள் எது கிடந்தாலும் எடுத்துக் கொடுத்துவிடும்.

சில காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளிலும் இம்மாதிரி நாய்கள் வளர்க்கப்படுகிறதாம்.பழிவாங்கப்படும் சில கான்ஸ்டபிள்கள் உயரிதிகாரி வீட்டு நாயை கவனிப்பதற்கும் காய்கரி வாங்கி கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள்.அதிகாரி வீட்டு நாய்க்கு கிடைக்கும் மரியாதை இந்த காவலர்களுக்கு கிடைப்பதில்லை.

நாய்கள் நமது செல்லப் பிராணிகள் ஆனால் பன்றிகள்.அவைகள் சாக்கடைப் பிராணிகள். ஆனால் நாய்களை விட பல மடங்கு மோப்ப சக்தியுள்ளது பன்றி. ஜெர்மன் இத்தாலி போன்ற நாடுகளில் மோப்ப பணிக்கு பன்றிகளை பயன் படுத்த துவங்கிவிட்டார்கள். நாய்க்கு நன்றி உண்டு பன்றிக்கு உண்டா? என்றால் நாயை விட அதிகாமான நன்றியுணர்ச்சி பன்றிக்குத்தான் இருக்கும் ஏனென்றால் நுகர்ச்சியின் அளவைக் கொண்டே நன்றியை நாம் தீர்மானிக்கிறோம்.அப்படியானால் பன்றியையும் நாயையும் விட புலிக்கு அதிக நன்றி இருக்க வேண்டுமே என்று கேட்கிறார் ஒரு காவலதிகாரி காரணம் புலியின் நுகர்ச்சியளவு இந்த இரண்டையும் விட அதிகம். எப்படி இருந்தாலும் நுகர்ச்சியின் அளவைக் கொண்டு நன்றியை தீர்மானிக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம் மனிதனிடம் அது சுத்தமாக இல்லையே? நுகர்ச்சியளவுதான் நன்றியை தீர்மானிக்கும் என்றால் நன்றியுணர்வு மனிதனிடம் அல்லவா? அதிகம் இருக்க வேண்டும்.

தன் வாழ்வின் பெரும் பங்கு நாட்களை காக்கிச் சட்டைகளோடு கழித்து விட்டு தன் அந்திமக்காலத்தில் வீதிக்கு வரும் போது மோப்ப நாய்க்கு அது புது உலகம். தெருநாய்களை அது எதிர் கொள்ள முடியாமல் அஞ்சி நடுங்கி வெளியில் வாழ்க்கையை தீர்த்துக் கொள்கிறது. நாம் மேலே சாராயக்கடையில் சந்தித்த உஷாவின் கதையும் இப்படித்தான்.இவ்விதமாய் ஒரு போலீஸ் மோப்ப நாய் வாழ்ந்து மடிகிறது.தனது பணிக்காலத்திலிருந்து அது ஓய்வு பெறும் போது கவலர்கள் கண்னீர் சிந்துகிறார்கள்.இரக்க முள்ள ஒரு அதிகாரி அரசுக்கு பரிந்துறைத்ததன் பேரில் இப்போது தமிழக அரசு போலீஸ் மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. கடைசி வரை அது அரசுப் பராமரிப்பிலேயே வாழ்கிறது. ஆமாம்! வாழக்கை முடிகிற நிம்மதியாக வாழட்டும் அந்த நாய்கள்.

இலங்கை கொலை செயவது இந்திய ஆயுதங்களால்.....


சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பகை நாடுகள். ஆனால் இலங்கை? சாயங்கால வேளையில் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குப் போய் மது அருந்திய படி சீட்டாடுவார்கள் இல்லையா? அப்படி ஒரு கிளப்தான் இலங்கைக்கு இந்தியா.அதனால்தான் இலங்கை பாகிஸ்தான் சீனா என இந்தியாவின் இடது வலது எல்லைப்புற நாடுகளை வைத்து நம்மிடம் சீட்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த சீட்டாட்டத்தில் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தில் சிக்கியிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழக மீனவர்களும் கூட,

இந்தியாவின் அந்தப்புறத்தில் நடைபெறும் இம்மாதிரி விளையாட்டுக்கள் ஈழத்தமிழரின் உயிரையும் இந்தியத் தமிழரின் உயிர்களையும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறது. 1980_ பதுகளில் கொழுந்து விட்டெறிந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் விளைவாய் இந்தியா இலங்கையில் தலையிட்ட போது இந்தியாவின் நண்பனாக இருந்தது விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போராளிகளுக்கு ராணுவப் பயிர்ச்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டது. வெருண்டு போன அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானா தந்திரமாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவைக் கோர்த்து விட்டார். 1987&ல் உருவான் இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரச்சனையை தீராச் சிக்கலுக்குள் ஆழ்த்தியது. இன்று ராஜீவ் கொலைக்குப் பிறகு போராளிகள் பகையாளிகளாகவும் இலங்கை ராணுவத்தினர் நண்பர்களாகவும் இந்தியாவுக்கு மாறிப்போனார்கள்.

இப்போது 800 இலங்கை ராணுவத்தினரை ராணுவ விருந்தினர்களாக இந்தியாவுக்கு அழைத்து அவர்களுக்கு பல்வேறு ராணுவ பயிர்ச்சிகளை அளிக்கிறார்கள். என்று தெஹல்கா இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. மஹாராஸ்டிரா.டேராடூன்,பூனே,மிஸோராம்,குஜராத்தின் வடோதரா போன்ற வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் இந்த பயிர்ச்சி நடைபெறுவதாக தெஹல்கா சுட்டிக்காட்டியிருக்கிறது. இம்மாதிரி பயிர்ச்சிகளுக்கு வரும் ராணுவ வீரர்களுக்காக இலங்கை அரசிடம் இருந்து எவ்விதமான பிரதிபலனும் இந்தியா பார்ப்பதில்லை மாறாக பயிர்ச்சிக்கு வருகிற சிங்கள வீரர்களுக்கு படிகள் கொடுத்து உறசாகப்படுத்துகிறது இந்தியா.‘‘இந்தியா எங்களுக்கு செய்வது மிக மிகப் பெரிய உதவி இது மட்டும்தான் எங்களை உற்சாகப்படுத்தும்’’என்று இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா சொல்லும் அளவுக்கு இந்தியாவின் ஆதரவு தொடருகிறதாம்.என்றெல்லாம் விரிகிறது அந்தக் அந்தக் கட்டுரை.

ஏன் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டும். என்ன காரணத்திறாக இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயிர்ச்சி பெற வேண்டும் என்றால்.எளிமையான ஒரு காரணத்தைத் தவிற வேறு என்ன இருக்க முடியும். இலங்கைக்கு சுற்றியுள்ள எந்த நாடுகளுடனும் சச்சரவும் இல்லை. அண்டை நாடுகள் தாக்கும் ஆபத்தும் இல்லை. ஆனால் உள்நாட்டுக்குள் எழுந்த பகை பெருந்தீயாய் எரியத் துவங்கிய பிறகு இலங்கை அரசின் எதிரிகளாக மாரிப்போனதென்னவோ தமிழ் மக்கள்தான். எப்போதுமே இன்னொரு நாட்டின் உதவி இல்லாமல் இலங்கை அரசால் விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது. இதை தெரிந்து வைத்திருக்கும் இலங்கை தொடர்ந்து ஏதோ ஒரு நாட்டை தங்களின் உள்நாட்டுப் போருக்கு உதவியாக பயன் படுத்தியே வந்திருக்கிறது. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவிடம் இருந்து பெருமளவு ராணுவ உதவிகளைப் பெற்றது இலங்கை. ராஜீவ் கொலைக்குப் பிறகு இலங்கை பிரச்சனையில் இருந்து இந்தியா ஒதுங்க. நார்வேயின் தலைமையில் ஐய்ரோப்பிய நாடுகள் இலங்கையில் சமரச முயர்ச்சிகளைத் துவங்க அது எல்லா வகையிலும் இலங்கை அரசுக்கு நெருக்கடியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் இருந்தது. நான்காண்டுகால சமாதான பேச்சுவார்த்தை முறிந்து போக நார்வே உடபட மேற்குலக நாடுகள் இலங்கை பிரச்சனையில் இருந்து வெளியேறியது. உடனே இலங்கை பாகிஸ்தானிடம் போய் ஆயுதம் வாங்கியது. அதற்கு இந்தியா பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஒரு ரியாக்கசனும் இல்லையே என யோசித்த இலங்கை அதிரடியாக சீனாவிடம் போய் ஆயுதம் வாங்கியதோடு சீன இலங்கை ராணுவ கூட்டுப் பயிர்ச்சியை ரகசியமாக இலங்கை கடற் பிராந்தியத்தியத்தில் நடத்தியது.இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சீனா இலங்கையில் இருந்த படி இந்தியாவின் தென் பகுதிகளை தீவீரமாக உளவு பார்த்ததாம்.குறிப்பாக கல்பாக்கம் அணு மின் நிலையம் கூடன்குளம் அணு உலையும் சீனா வின் கண்காணிப்புக்குள் இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் ‘‘இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விற்காது.அதே சமயம் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்கள் வாங்கக் கூடாது’’ என்று பகிரங்கமாகவே இலங்கையை எச்சரித்தார். இலங்கை எதிர் பார்த்ததும் இதைத்தான் சீனாவும் பாகிஸ்தானும் கொடுக்கும் ஆயுதங்களை விட புவியியல் ரீதியில் இந்தியா கொடுக்கும் ராணுவ உதவிகளே மேலானது என்பதை தெரிந்து வைத்திருந்த இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடத் துவங்கி விட்டதை சந்தோசமாக வரவேற்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை புலிகளின் ஆதரவாளர்களாலேயே முன் வைக்கப்பட்டது. ஆனால் எப்படி இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவாகவா? அல்லது கொல்லப்படும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவா?என்றால் அதற்கும் நாரயணன் பதில் சொல்லி விட்டார். ‘‘புலிகளிடம் இருக்கும் விமானப்படையும் கடற்படையும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானவை’’ என்று இந்தியா யாருக்கு ஆதரவாக செயல்படப் போகிறது என்பதையும் தெளிவு படுத்தி விட்டார்.எழுதப்படாத ரகசிய ஒப்பந்தத்தை செயல் படுத்த ரகசியப் பயணங்களை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு மேற்கொள்கிறார்களாம்.அப்படி மேற்கொள்கிற பயணங்கள் இலங்கையில் ராஜபக்ஷே அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்குக் கூட தெரியாமல் மறைக்கப்பட்டு மிகவும் ரகசியமாக வைக்கப்படுகிறது. ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இந்தியாவின் தாராள ராணுவ உதவியுடன் கிழக்கை மீட்டெடுத்த இலங்கை அடுத்து குறிவைத்திருப்பது. வன்னியை ஆனால் அத்தனை எளிதில் வன்னி இலங்கை ராணுவத்திடம் விழும் என்பதை இலங்கை ராணுவமே நம்பத்தயாராக இல்லை.யுத்தம் என்றால் இடங்களை பிடிப்பது நீண்ட நாட்கள் அதை பாதுகாக்க முடியாமல் கைவிடுவதும் சகஜமான ஒன்று. ஆனால் வன்னி அப்படியல்ல அது புலிகளின் இதயம். அந்த இதயத்தை குறிவைக்கத்தான் இப்போது இந்தியாவில் பயிர்ச்சிகள் நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

நிலைமைகள் கைமீறிப் போவதை உணார்ந்த புலிகளோ இந்தியாவிடம் நல்லெண்ணம் வளர்க்கவே விரும்புகிறார்கள். ஆகஸ்டில் நடைபெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே புலிகளின் போர் நிறுத்தத்தை நிராகரித்த அரசு கிழக்கை மீட்டது போல வடக்கை மீட்கும் போர் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.புலிகள் இந்தியாவுக்குக் கொடுக்கும் சைகைகள் ஒரு தலைப் பட்சமானவை.ஆனால் இலங்கையும் வேண்டாம் புலிகளும் வேண்டாம் என்பதுதான் இந்தியாவின் தீர்மானமான முடிவு. ஆனால் மீண்டும் மீண்டும் எங்களை தவிர்த்து விட்டு நீங்கள் ஆசிய ஹீரோ கனவை ஒரு நாளும் அடைய முடியாது என இலங்கை அரசு செய்கிற ஆயுத வியாபாரம்தான் இந்தியாவை இலங்கை அரசின் பக்கம் சாய வைத்திருக்கிறது. ‘‘இது மிக மோசமான இன்னொரு அனுபவத்தை இந்தியாவுக்குக் கொடுத்து விடக் கூடாது. ஆகவே சம அளவில் புலிகளிடம் இருந்தும் இலங்கை அரசிடம் இருந்து இந்தியா ஒதுங்கி இருக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யக் கூடாது.இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாக்கிற பொறுப்புதான் இந்தியாவுக்கு இருக்கிறது.அதைச் செய்யாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது இந்தியா அந்த ஆயுதங்களைக் கொண்டுதான் தினம் தோறும் இலங்கை தமிழ் மக்களை குண்டு வீசிக் கொல்கிறது. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்’’என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்நிலையில் டில்லியில் பிரதமரைச் சந்தித்த கருணாநிதி சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மீனவர் பிரச்சனையை எழுப்புவதாக உறுதி கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பல மாநாடுகளிலும் மீனவர் பிரச்சனை விவாதிக்கப்பட்டதுதான்.ஆனாலும் 300 பேர் வரை இது வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடலின் மீதான் மீனவர் உரிமை முற்றிலுமாக இலங்கை அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது.ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவ பிரதிநிதிகளை சந்தித்த இலங்கை அமைச்சர்.‘‘மீனவர்களை கொல்வது நாங்களல்ல விடுதலைப் புலிகள்தான்.என்று பழியை புலிகள் மீது போட்டு அனுப்பியிருக்கிறார்.இனிமேலாவது இத்தகைய மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் அதற்கு இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது மாறாக அதை கண்டிக்க வேண்டும் கறாரான அணுகுமுறையை கையாள வேண்டும்

பெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்



‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே பாதிக்கப்பட்டு விட்டது.கணவன் மனைவி பிரச்சனைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும் இத்தகைய வழக்குகளை பெண் போலீசார்தான் திறமையாக கையாள்வர் என்று கருதியதால்தான் தமிழகம் முழுக்க மகளிர் காவல் நிலையங்கள் துவங்கப்பட்டன.இந்த மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர் பார்த்தனர்.ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால் சிறிய சிறிய பிரசனைகளுக்குக்கூட பெரிய அளவிலான குற்றம் என்ற வர்ணம் பூசப்படுகிறது.கணவனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை கூறுமாறு பெண்கள் உற்சாகப்படுத்தப் படுகின்றனர்.இதனால் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே பாழடிக்கப்படுகிறது’’
தமிழக மகளிர் காவல் நிலையங்களில் நடக்கும் அத்து மீரலுக்கு எதிராக கொட்டப்பட்ட இந்த வார்த்தைகள் மனித உரிமை அமைப்பினுடையதோ அல்லது சமூகப்பணியாளர்களின் வார்த்தைகளோ அல்ல...முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ரோசைய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக குறிப்பிட அதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுத் தீர்ப்பில் சொன்ன வார்த்தைகள்தான் மேற்கண்டவை.

மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது,சாதாரண குடும்ப பிரச்சனைகளில் காவல் நிலையங்களுக்கு செல்வோரை அடித்து துன்புறுத்தி இரண்டு பக்கமும் வசூலைப் போடுபவர்களாக உருமாறி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொடர்ந்து மகளிர் காவல் நிலையங்கள் மீது உயர் நீதிமன்றம் கணடனக் கணைகளை தொடுத்த படியிருக்கிறது.
150 ஆண்டுகால வரலாறுள்ள தமிழக காவல்துறையில் பெண் போலீஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டது 1973&ல் இப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் போலீசார் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலேயே பணியாற்றினர்.இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ‘‘பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் அணுகுமுறை மாற வேண்டும்’’என்ற நோக்கில் 1992&ல் சென்னையில் முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டது மகளிர் காவல் நிலையம்.இந்தியாவிலேயே முதன் முறையாக என்றெல்லாம் பெருமையாக பேசப்பட்ட மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை இன்று இருநூறைத் தொடுகிறது.ஆனால் தமிழகம் முழுக்க ஆண் காவலர்களுக்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை பல வழக்குகளிலும் நீரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் மகளிர் காவலர்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்,சியாமளா தம்பதிகள் ஐந்து வயது பெண் குழந்தைக்கு பெற்றோர்களான சதீஷ-க்கும் சியாமளாவுக்கும் குடும்ப வாழ்வில் மனஸ்தாபம்.‘‘சதீஷ§க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு,வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்’’என்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சியாமளா.சதீஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்டு தினமும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார் .இந்நிலையில்தான் அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரியும் ராஜலட்சுமி சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷிடமும் சதீஷை சேர்த்து வைப்பதாக சியமாளாவிடமும் பேரம் பேசி கடைசியில் சியாமளா பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டதோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் முறையிட இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது ஒரு சாம்பிள் சம்பவம்தான்....தமிழகம் முழுக்க குடும்ப பிரச்சனைகளை கையாளும் விதத்தில் பெண் போலீசாரும் ஆண் போலீசைப் போலவே தடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுக்க ஒலிக்கிறது.போலீசின் தொல்லைகளுக்கு ஆளாகும் பல குடும்ப ஆண்களும் பெண்களும் பயந்து போய் இதை வெளியில் சொல்லப் பயப்படுவதோடு போலீசார் கேட்கும் தொகையையும் கொடுத்து விட்டு வசூலுக்கு துணையாக ஆண்களுக்கு எதிரான வாக்குமூலங்களையும் கொடுக்கிறார்கள்.

பொதுவாக,கணவர் என்னை ஏமாற்றுகிறார் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார்.மாமனார் மாமியாரோடு சேர்ந்து கொண்டு தனிக்குடித்தனம் வர மறுக்கிறார்.இப்படி குடும்பத்துக்குள் எழும் நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையங்களுக்கு பெண்கள் சென்றால் உடனே வரதட்சணை கொடுமை சட்டத்தின் படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.இந்த வறையறைக்குள் இப்போது வந்திருப்பது குடும்ப வன்முறைச் சட்டம்.உண்மையில் குடும்பத்தில் நடக்கும் வன் கொடுமைகளை சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வெளியில் வருவதில்லை.அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் செல்வதில்லை.


குடும்பங்களில் கணவன் மீதோ மாமனார் மாமியார் மீதோ ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி அதாவது பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் கூட அதை தீர்த்து வைக்கும் சமரச மையங்களாக மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை.எடுத்த எடுப்பிலேயே வரதட்சணை வழக்காக அதை பதிவு செய்யும் படி அறிவுறுத்தி அதன் மூலம் கணவன் குடும்பத்தை மிரட்டி பணிய வைக்கும் ஒரு தவறான போக்கை பெண் போலீசார் கையாளுகின்றனர்.மகளிர் காவல் நிலையத்துக்குப் போன சியாமளா கூட தன் கணவரை தன்னுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று போனவர்தான்.ஆனால் இவரிடம் இணைத்து வைப்பதாகவும் சதீஷிடம் பிரித்து வைப்பதாகவும் வசூலைப் போட்டது போலதான் பெரும்பாலான வழக்குகளில் நடவடிக்கை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.தனிக்குடித்தனப் பிரச்சனை இன்னும் மோசம் கணவனின் உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள் வேறு எங்காவது வசித்தால் கூட அவர்களையும் தொலைபேசியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக சேர்த்து விடுகிறது பெண் போலீஸ்.இப்படி ஒரு முறை கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்த விரும்பிய ஒரு பெண் வழக்கறிஞரின் அறிவுரைப்படி மாமனார் மாமியார் கணவனை தனிக்குடித்தனம் செல்ல விடாமல் தடுப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொன்னார்.அந்தப் பெண்ணும் அப்படியே கொடுத்தார்.போலீசார் நம்மை விசாரிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த மாமனாரும் மாமியாடும் வீட்டிலேயே தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

சமீப காலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தை தவறாக கணவனுக்கு எதிராக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.விருப்பமில்லாத இருவரை கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதும்.சின்ன பிரச்சனைகளோடு காவல் நிலையம் செல்பவர்களை நிரந்தரமாக பிரித்து வைப்பதற்கும் பல இடங்களில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தீர்க்கமாக சொல்லப்படுகிற பொய்கள் நியாயங்களாக மாற்றப்படுவதும்.ஒரு சாராரின் கருத்தே எடுபடாமல் போவதும் அதன் மூலம் பாதிக்கப்படுகிற ஆண்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்காமல் போவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பழைய தாலி செண்டிமெண்டுகளையும் கெடுத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் கொடுமையான பழமரபிலும்தான் நம் கலாசாரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதற்கு போலீசாரும் விதிவிலக்கல்ல.பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கும் அதே நேரத்தில் பெண்களின் குற்றச்சாட்டு உண்மையா?அல்லது பொய்யா என்பதை விசாரிக்கிற கடமையும் போலீசுக்கு உண்டு.

குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவன் மீதான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்துக்குப் போன பெண்ணின் தீர்ப்பை முன்னிட்டு கேரள கோர்ட் சொன்ன தீர்ப்பின் சாரம் தமிழகத்துக்கும் ஏன் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே பொறுந்தும்.

‘‘குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது.தனது முறை தவறிய உறவை மறைப்பதற்காக மனைவி இது போல் செய்திருக்கிறார்.குடும்ப வன்முறைச் சட்டத்தால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.கணவர் மீது போலிப் புகார் கொடுக்கப்படுகிறது.இந்தப் போக்கினால் இந்தச் சட்டமே கேலிக்கூத்தாகி விடுகிறது.இந்த வழக்கில் கணவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவருக்கு உரிய நிவாரணம் வழங்க சட்டத்தில் இடமில்லை.ஆகவே குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்’’என்று தன் தீர்ப்பில் கூறினார் நீதிபது.

குடும்பம் என்கிற நிறுவனத்தில் சிதைக்கப்படும் பெண்வாழ்வின் வேதனைகள் களையப்பட வேண்டும் என்றுதான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கரிசனமான விசாரணையும் பாரபட்சமில்லாமல் நீதியும் கிடைக்கும் என்றுதான் மகளிர் காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டது.காவல்துறையில் அதுவரை ஆண்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன பொது சனங்களுக்கு பெண் போலீசாரை பார்த்த போது நம்பிக்கை துளிர் விட்டது.ஆனால் வழக்குகளை விசாரிக்கிற விதத்திலும் காவல் நிலைய அணுகுமுறைகளிலும் ஆண் போலீசுக்கும் பெண் போலீசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது இப்போது நீரூபிக்கப்பட்டிருக்கிறது.உண்மையில் மகளிர் காவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் உண்மைத் தத்துவங்கள் இனி வரும் காலத்திலாவது நடைமுறையாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்.

உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?



ரௌடிகள் என்கவுண்டருக்கு பயப்படுவதைப் போல குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர்.அஞ்சி நடுங்குவது உண்மை கண்டறியும் சோதனைக்கு.தமிழகத்தில் அதியாமான் கோட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கிகளுக்கு காரணமானவர்கள் என்று போலீஸ் கஸ்டடியில் சிக்கியிருக்கும் எட்டு காவலர்கள் உட்பட வட இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஆருஷி தல்வார் கொலை வரை இன்றைய ஹாட் டாப்பிக் நார்கோ அனாலிசைஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைதான்.

இந்த சோதனைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கொடி பிடிக்கத் துவங்கியிருக்கிறன.‘‘அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த சோதனைகள் மனித உரிமைகளுக்கு எதிரானது’’ என்ற குரல்கள் இந்தியாவில் எழத் துவங்க.இந்த சோதனைகளை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.பெங்களூர் ஹைதராபாத் நகரங்களில் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.இப்போது தமிழக அரசும் உண்மை கண்டறியும் சோதனை மையம் ஒன்றை சென்னையில் அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை என்றழைக்கப்படும் Narco Analysis சோதனையில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவரின் உடலுக்குள் மயக்க மருந்தை செலுத்துவதன் மூலம் அவரின் கற்பனைத் திறனை மட்டுப் படுத்தி மனதை அறை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவோ அல்லது வழக்கின் கண்டு பிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்து கொள்ளவோ மேற்கொள்ளப்படும் முயர்ச்சிதான் இந்த உண்மை கண்டறியும் சோதனை.உலகம் முழுக்க பல்வேறு மயக்க மருந்துகள் இந்த சோதனைக்கு பயன் படுத்தப்பட்டாலும் இந்தியாவில் சோடியம் பென்டத்தால்,சோடியம் அமிட்டால் போன்ற மயக்க மருந்துகளே உண்மை கண்டறியும் சோதனைக்கு பயன் படுத்தப்படுகின்றன.இந்த மருந்துகள் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்டவர் அறை மயக்க நிலைக்கு சென்றுவிடுவார்.அதிலும் சோடியம் பென்டத்தால் அதி வேகமாக செயல்படும்.நம் கனவுகள்,கற்பனைகள்,புனைவுகள் என மூளையோடு தொடர்புடைய அனைத்துமே நமது கற்பனைத்திறனால் உருவாவை.சோடியம் பென்டத்தால் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே மருந்து செலுத்தப்பட்டவரின் கற்பனைத்திறன் மட்டுப்படுத்தப் படுகிறது.இப்போது அவர் அறை மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்.அவரால் தானாக முன் வந்து எதுவும் பேச முடியாது.பெயர் என்ன என்று கேட்டால் பெயரைச் சொல்வார்.ஆருஷியை நீ கொன்றாயா? என்று கேட்டால் ஆம்...அல்லது இல்லை என்று ஒரு வரியிலேயே பதில் சொல்ல முடியும்.ஆமாம் அதனால்தான் மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஒரு விசாரணை முறையாகக் கூட ஏற்றுக் கொள்ள வில்லை காரணம்.ஆம்..அல்லது இல்லை என்று ஆழ்ந்த நித்திரையில் அல்லது மயக்கத்தில் இருக்கும் ஒருவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராகவே பயன் படுத்த முடியும் என்று கேட்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் செலுத்தப்படும் இந்த மருந்து இதயத்துடிப்பின் வேகத்தை,ரத்த நாளங்களின் ஓட்டத்தை,முதுகெலும்பின் வலுவை,இவை எல்லாவற்றையும் விட மூளையின் செயல்பாட்டை சோர்வடையச் செய்கிறது அது மட்டுமல்லாமல் இந்த மருந்துகள் கொடுக்கப்படும் போது பரிசோதனைக்கு உள்ளாபவரின் வயது,உடல் நிலை,ரத்த அழுத்தம் என எதிலொன்றிலும் கவனக்குறைவாக இருந்தால் மயக்க நிலைக்கு சென்றவர் மீண்டும் நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவும் ஆபத்தும் உண்டு.அப்படியே நினைவு திரும்பினாலும் மருந்தின் பின் விளைவுகளை அவர் காலா காலத்துக்கும் அனுபவிக்க நேரிடும்.இயல்பாக இருக்கும் ஒருவரை சோர்வடையச் செய்வதன் மூலம் வாக்குமூலம் பெற நினைப்பதே நமது காவல்துறையின் திறமைக் குறைவுதானே?என்கிறார்கள்.

பொதுவாக உண்மை கண்டறியும் சோதனைகளின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை ‘‘உண்மை திரவங்கள்’’என்று அழைக்கிறார்கள்.ஒரு வேளை போலீசார் விரும்பும் வகையில் சந்தேகப் படுபவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் இந்த இயந்திரம் பொய் பேசுகிறது என்று அர்த்தமா?இந்தியாவில் இது வரை எந்த வழக்கிலாவது இந்தச் சோதனை வெற்றிகரமாக பயன் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.ஏனென்றால் தந்திரமாக நடித்து இந்த இயந்திரத்தைக் கூட சிலர் ஏமாற்றிவிட முடியும் என்கிற பார்வையும் உண்டு.

இது போலத்தான் p-300 என்றழைக்கபப்டும் பிரெய்ன் மாப்பிங் (Brain Mapping) அல்லது பாலிகிராப் (Poly Graph test) சோதனைகள்.உண்மை கண்டறியும் சோதனையின் தவிர்க்க முடியாத இன்னொரு சோதனையாக மூளையையும் இதயத்தையும் பகுத்தறியும் இந்த சோதனையும் இன்று நடைபெறுகிறது.குற்றம்சாட்டப்பட்டவரின் இதயப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்கள் மூளையின் அதிர்வலைகளை உணரும் தன்மை கொண்டவை இது கணிப்பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொலையுண்ட நபரின் குரலையோ புகைப்படத்தையோ குற்றம் சாட்டப்பட்டவரிடம் காட்டினால் அவரது மூளையில் அது p-300 என்னும் அதிர்வலைகளை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு நாம் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்தக் கொலையை நாம் கண்ணால் பார்க்கிறோம் ஆனால் அந்தக் கொலையில் நமக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் போலீஸ் நம்மை சந்தேகிக்கிறது நம்மை அழைத்துப்போய் பிரெய்ன் மாப்பிங் டெஸ்டில் அமர்த்தி கொலையான நபரின் புகைப்படத்தையோ குரலையோ நமக்கு காட்டினால் நமது மூளைp-300 அதிர்வலைகளை வெளிப்படுத்தாமல் என்ன செய்யும்.அப்படி அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாலேயே அந்தக் கொலையில் நமக்கும் தொடர்புண்டு என்கிற முடிவுக்கு வர முடியுமா?அப்படி வந்தால் இந்த உண்மை கண்டு பிடிப்பு இயந்திரங்களின் நம்பகத்தன்மைதான் என்ன?
இம்மாதிரி சோதனைகளை குற்ற வழக்குகளில் ஆவணமாகவோ சாட்சியமாகவோ சேர்க்க முடியுமா?என்றால் உலகின் பல்வேறு நாடுகளும் இந்த உண்மை கண்டறியும் சோதனைகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை என ஒதுக்கி வைத்திருக்கின்றன. நீதி மன்றங்களோ இதை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுதலித்திருக்கின்றன.ஆனால் இந்தியாவில் நீதிமன்றங்கள் இம்மாதிரி சோதனைகளை பிரதான சாட்சியங்களாக எடுத்துக் கொள்ளாவிடினும் இதனடிப்படையில் குற்றவாளிகள் யாரையும் தண்டித்ததில்லை.ஆனால் இம்மாதிரி சோதனைகளுக்கு இந்திய நீதிமன்றங்கள் தடை விதித்ததில்லை மாறாக அனுமதியளிக்கின்றன.

மும்பையில் தன் வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஆருஷியின் கொலையில் சில நாட்கள் வரை எந்த துப்பும் கிடைக்க வில்லை.கடைசியில் ஆருஷியின் தந்தை டாக்டர் தல்வாரை கைது செய்தது போலீஸ்.முறை தவறிய உறவு,வேலைக்காரருடன் பழக்கம் என பல கதைகள் ஆருஷியைச் சுற்றி பின்னப்பட்டாலும் இது எதுவும் நீரூபிக்கப்பட வில்லை.தல்வார் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.ஒரு பயனும் இல்லை வழக்கு சி.பி.ஐ&க்கு மாற்றப்பட்ட பிறகு தல்வாரின் மருத்துவமனை உதவியாளர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு அவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.அநத சோதனையின் முடிவும் ரகசியமாக வைக்கப்பட்ட பிறகு கிருஷ்ணாவும் அவரது நண்பர் ராஜ்குமாரும் சேர்ந்து செய்த கொலைகள்தான் ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹெம்ராஜ் என்பரின் கொலையும் என்றும் போலீஸ் இப்போது கூறுகிறது.ராஜ்குமாரின் ரத்தக் கறைபடிந்த சட்டையை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.இந்தியாவையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையை விட சி.பி.சி அதிகாரிகளின் விசாரணை திறமையே கொலையின் முடிச்சுகள் அவிழ காரணமாக இருந்திருக்கிறது.

உலக அளவில் இம்மாதிரி சோதனைகளை மனித உரிமைகளுக்கு எதிரானது என்று பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் சொல்கிறது. 1987& ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா சபையின் சித்திரவைக்கு எதிரான உடன்படிக்கையில் சித்திரவதை என்ற சொல்லுக்கான பொருள் வரையறை செய்யப்பட்டது.‘‘ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ ஒரு தகவலையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெற உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடும் வலியை கொடுந் துன்பத்தை உண்டாக்கும் நடவடிக்கையே சித்திரவதையாகும்’’என்கிறது ஐநாவின் மனித உரிமை விளக்கம்.சட்ட ரீதியாக உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு எதிராக இதை வைத்தே வாதாட முடியும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 20(3) குற்றம் சாட்டப்பட்டுள்ள எவரையும் அவருக்கு எதிராகவே சாட்சியமளுக்கும் படி நிர்பந்திக்கக் கூடாது என்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்படும் போது மயக்கமருந்து செலுத்துகிற ஒருவர்,மனநல மருத்துவர்,க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட்,ஆடியோ வீடியோ கிராபர்,நர்ஸ் என ஐந்து அல்லது ஆறு பேர் இருக்க மனநல நிபுணர் சம்பந்தப்பட்டவரின் முனகலை வாக்குமூலமாகவோ விசாரணை அறிக்கையாகவோ பதிவு செய்வார்.எக்காரணம் கொண்டும் காவல்துறையினர் பரிசோதனை நடக்கும் பகுதிக்குள் நுழைய அனுமதி கிடையாது.ஆனால் இந்தியாவில் காவல்துறையினரே உண்மை கண்டறியும் போது சுற்றி அமர்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்பது வேடிக்கையான வேதனை.அதிலும் சில மருத்துவர்களும் உண்மை கண்டறியும் சோதனைகளில் கலந்து கொண்டு பின்னர் அதை பெரும் வீரமாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.ஆனால் மருத்துவர்களை அங்கீகரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் என்ன சொல்கிறது தெரியுமா?‘‘மனித உரிமைகளுக்கு எதிரான வகையில் ஒரு நபரை சித்ரவதை செய்வதற்கு உதவியாகவோ,உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு மருத்துவர்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்கிறது’’

ஸ்காட்லாந்த் யார்டுக்கு நிகராக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் கூட பல வழக்கு விசாரணையில் தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.விசாரணை அதிகாரியின் திறமை மட்டுமே குற்ற ரகசியங்களை வெளியில் கொண்டுவரப் பட்டு விசாரணை முறைகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமே தவிற இயந்திரமயமாக்கப்படக் கூடாது.அது அரசியல்வாதிகள் உடபட அத்தனை பேருக்குமே ஆபத்துதான்.

இந்தியாவின் கொல்லைப்புறமும் காலைக்கடன் கழிக்கும் விமானங்களும்....



யுத்தம் மனிதகுலத்தை மரணப் படுகுழிக்குள் தள்ளி விடுகிறது.கால் நூற்றாண்டைக் கடந்து இலங்கையில் நடக்கும் யுத்தமோ ஈழத்தமிழர்களை பதுங்கு குழிகளுக்குள் புதைத்துக் கொண்டிருக்கிறது.தினம் தோறும் பொழியப்படும் குண்டுகளோடு கூடவே இப்போது வறுமையும் அவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.இதை ஈழ மக்களின் மீது திணிக்கப்பட்ட இன்னொரு போர் என்கிறார்கள்.ஒரு வேளை உணவோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்கும் ஈழத்தமிழர்கள் இனி அன்றாடம் அமெரிக்காவில் இருந்து உணவு வராதா இந்தியாவிலிருந்து கப்பல் வராதா என்று எதிர் பார்த்திருக்கும் பரிதாபச் சூழலில் சிக்கியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் விலை உயர்வின் பெயரால் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.இலங்கையிலோ அது இன்னும் மோசம்.கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி மக்களை பட்டினியின் விழிம்பில் தள்ள இலங்கை அரசோ தனது இராணுவச் செலவுகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.2003&ல் வெறும் 4,700 கோடியாக இருந்த அதன் இராணுவச் செலவு இன்று 11,700 கோடியாக அதிகரித்திருக்கிறது.இலங்கையின் தேசிய வருமானத்தில் பெரும் பங்கை ஈட்டிக் கொடுத்தது தேயிலையும் சுற்றுலாவும்தான்.மேற்குலகின் அந்தபுரமாக இருந்த கடற்கரை நகரான கொழும்பின் சுற்றுலாத் தொழிலை சுத்தமாக யுத்தம் துடைத்தழித்து விட எதிர் பார்த்த அளவுக்கு தேயிலை உற்பத்தியில் இலக்கை எட்ட முடியவில்லை.அமெரிக்காவின் பொருளாதார ஏற்ற இரக்கம் இன்று உலக நாடுகளை பாதிப்பது போல இலங்கையையும் பாதிக்கிறது.இலங்கையில் இப்போது 21.6% பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது.இது வேறு எந்த தென்கிழக்காசிய நாடுகளிலும் இல்லாத மிக மோசமான நிலை.வாழத் தகுதியான தமிழகத்திலேயே பண வீக்கம் மத்தியதரவர்க்கத்தையும் ஏழைகளையும் பதம் பார்க்கும் போது யுத்த பூமியில் சொல்லவா வேண்டும்.

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை உலகின் பட்டினி கிடப்பவர்களின் பகுதிகளாக(Hunger's Global Hot Spots) சில பகுதிகளை சுட்டிக்காட்டியது.அதில் பிரதான இடங்களுள் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டது இலங்கை.93%குடும்பத்தினர் உணவைக் கைவிடும் சூழலில் இருப்பதாகவும் நிரந்தரக் கடனாளியாகி நிலங்களையும் விற்று விட்டு பட்டினிக்கு முகம் கொடுக்கும் சூழலில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.இன்றைய இயந்திர உலகில் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருட்களான காஸ் சிலிண்டர்,பிரிட்ஜ்,மோட்டார் சைக்கிள்,பெட்ரோல் இவைகளை எல்லாம் இலங்கையில் கொழும்பு நகரில் வாழும் குறிப்பிட்ட குறைந்த மக்களுக்கு மட்டும்தான் ஈழத்தமிழர்கள் இவைகளை எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
ஒரு கிலோ அரிசியை யாழ்ப்பாணத் தமிழர்கள் வாங்க வேண்டும் என்றால் இன்று அவர்கள் அதற்காக 150 ரூபாய் செலவிட வேண்டும்.ஒரு கிலோ சர்க்கரை எண்பது ரூபாய்க்கும்.ஒரு தேங்காய் அறுபது ரூபாய்க்கும்.குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய அத்தியாவசிய பால்பவுடரை ஐநூறு ரூபாய் விலை கொடுத்தும் வாங்க வேண்டிய சூழல்.யுத்த நெருக்கடிளுக்கு மத்தியில் பல நூறு ரூபாய் செலவு செய்து சமையல் பொருட்கள் வாங்கி சமைக்க மண்ணெண்ணைய் அடுப்பை பற்ற வைக்க ஒரு தேவைப்படும் ஒரு தீப்பெட்டியில் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது.இருபது ரூபாய்.ஆனால் புலிகளின் ஆளுகைக் குட்பட்ட வன்னியிலோ ஒரு கிலோ அரிசி முப்பதைந்து ரூபாய் ஆனால் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை பாதுகாப்பு கருதி தடை செய்திருக்கிறார்கள் புலிகள்.

இலங்கை ராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் வாழும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளின் தலையாயது மின்சாரம் ஆனால் ஏதோ ஒரு வகையில் மின்சாரமற்ற ஒரு வாழ்க்கைக்கு சாமாதானப் பேச்சு வார்த்தை முறிந்த பிறகு வாழப் பழகிக் கொண்டார்கள்.ஆனால் கொழும்பையும் யாழ்பாணத்தையும் இணைக்கும் ஏ&9 சாலை மூடப்பட்ட பிறகு உணவுப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என இயல்பு வாழ்க்கைக்கே தள்ளாட வேண்டிய சூழலில் மண்ணில் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உழைக்கும் உரிமையும் மறுக்கப்பட்டு சிதறியிருக்கிறது ஈழத்தமிழர் வாழ்வு.ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆதரவான ஒன்றாக இருந்தது கடல் தொழில் மட்டும்தான்.ஆனால் கடல்புலிகளை ஒழிக்கிறோம் என்று ஈழத்தமிழ் பாரம்பரீய மீனவர்கள் வாழ்கிற கடலோர பகுதிகளின் கடல்களுக்குள் கண்ணி வெடிகளை புதைத்திருக்கிறது இலங்கை அரசு. ஈழத்தமிழர்களையும் தாண்டி இந்திய மீனவர்களையும் பாதிக்கிறது இந்த கடல் கண்ணி வெடிகள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த உணவு நெருக்கடியை புரிந்து கொண்ட உலக வங்கி இலங்கை அரசுக்கு நூறு கோடிரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்க முன் வந்திருக்கிறது.அகதி முகாம்களிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் உலக அளவிலான தன்னார்வ அமைப்புகள்.மக்களுக்கு கொஞ்சம் பொருளாதார உதவிகளையும் உணவுப் பொருட்களையும் வழங்குகிறார்கள்.தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடைகள் பாட நூலகள் என்று தன்னார்வ அமைப்புகள் வழங்கினாலும் அது ஈழத்தமிழரின் வாழ்வில் வசந்த காலம் எதையும் கொண்டு வந்துவிட வில்லை.

உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஈழத்தமிழர்களை மேலும் பாதிக்கும் ஆகவே இலங்கைத் தீவில் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் தேவை.பொருளாதார நிலைகள் சீரடையும் வரையாவது புலிகளும் அரசும் போர் நிறுத்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருகின்றன.இந்நிலையில்தான் சமீபத்தில் இந்திய வெளியுரவுச் செயலர் சிவசங்கரமேனனுன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் பாதுகாப்புச் செயலர் விஜய்சிங்கும் இலங்கை தலைநகர் கெழும்புக்கு பயணம் செய்து இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவையும் சில ராணுவ தளபதிகளையும் சில தமிழ் தலைவர்களையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்கள்.இலங்கை சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ஆயுதங்ளை வாங்கிக் குவிக்கிற சூழலில் இந்திய பிரதிநிதிகளின் இலங்கைப் பயணம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

1983 - ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட கொதித்துப் போன அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.‘‘எங்களின் கொல்லைப்புறத்தில் இப்படியான கொடுமைகள் நடப்பதை இந்தியா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது’’என்று அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானாவிடம் தன் கடுமையான கண்டனங்களைச் சொன்னது இந்தியாவின் தலையீடு இலங்கையில் துவங்கியது.ராஜீவ்காந்தி காலத்தில் அமைதிப்படையின் இலங்கை பயணம் விடுதலைப்புலிகளுடனான போர் என வரலாற்றில் பல காயங்களை அது ஏற்படுத்திச் சென்றது அது.ராஜீவ் கொலையில் கொண்டு போய் விட்டது. பின்னர் இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடாத இந்தியா இப்போது மீண்டும் இலங்கை பிரச்சனையில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.காரணம் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை தங்களை நம்பியிருக்காமல் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதம் வாங்குகிறது என்பதால் இந்தியா இலங்கையை தன் கட்டுக்குள் வைக்க நினைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் சார்க் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் செல்ல விருக்கிறார்.இந்தியப்பிரதமர் இலங்கைக்கு செல்லும் போது இலங்கையில் போர் நடைபெறுவது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கலாம்.ஆகவே இலங்கை அரசும் புலிகளும் அதற்கு முன்னர் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டால் நல்லது என இந்தியா கருதுவதாகவும் இந்திய அதிகாரிகளின் பயணம் அதை ஒட்டியே என்றும் சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம் இலங்கை செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார் என்ற கேள்விக்கு இந்தியாவே தன் கருப்புப் பூனை படைகளோடு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் சில யுத்தக் கப்பல்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று ஒட்டு மொத்தமாக கொழும்பு நகரை மாநாடு நடக்கும் சில நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா விரும்புகிறது என்றும் செய்திகள் கசிய,இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரோ இந்திய பிரதமர் உட்பட அனைவருக்கும் எமது படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் என்று சொன்ன மறு நாள் அம்பாறை மாவட்டத்தில் அரசு விழாவிற்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் விமானத்தை குண்டு வீசி சிதைத்திருக்கிறார்கள் புலிகள்.அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பத்திரமாக கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே.சொந்த நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத இராணுவம் எப்படி ஏனைய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக உத்திரவாதம் கொடுக்கிறது என தலையைப் பிய்த்து கொள்கிறார்கள் அரசியக் விமர்சகர்கள்.

ராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தானாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் தமிழர்களின் தாயகப்பகுதியாக வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியது.ஆனால் தற்போது வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து அதில் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சிவநேசதுறை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானை முதல்வராக்கியிருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே.எப்படி கிழக்கில் ஒரு பிள்ளையானை ராஜபக்ஷேவால் உருவாக்க முடிந்ததோ அது போல வடக்கிலும் ஒரு பிள்ளையானை உருவாக்கி தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் இதற்கு புலிகளை தவிர்த்து விட்டு ஏனைய இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கான அதிகார அமைப்பை ஏற்படுத்த இந்தியா உதவக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.எப்படியிருந்தாலும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு இந்திய பிரதமர் செல்லும் போது பாதுகாப்புகள் கடுமையாக இருக்கும்.ஏனென்றால் ஏற்கனவே ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றிருந்த போது இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவரால் துப்பாக்கி பேனட்டால் தாக்கப்பட்ட சம்பவமே அந்த எச்சரிக்கையை நமக்குக் கொடுக்கும்.
வெளியுறவுக் கொள்கைகள்,தேச எல்லைகள் சார்ந்த நலன்கள்,ராஜதந்திரங்கள்,காய்நகர்த்தல்கள் இது எல்லாவற்றையும் தாண்டி தினம் தோறும் இலங்கைத் தீவில் தமிழன் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறான்.இந்தியாவின் கொல்லைப்புறத்தில் எண்பதுகளில் துவங்கிய மரண ஓலம் இன்னும் தீர்ந்த பாடில்லை.ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுறையின் வரிகளில் சொன்னால்.‘‘காலைக் கடனை கழிப்பதற்கு வருவதைப் போல தினம் தோறும் வந்து போகிறது இலங்கை விமானப்படை’’ஆமாம் நாள் தோறும் அது மனித குலத்தின் மீது ஒரு குண்டை வீசுகிறது.இப்போது பட்டினியையும்....