பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும்.



பூவரசி வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பூவரசி குழந்தையைக் கடத்திக் கொலை செய்யும் செயலுக்கு தூண்டுதலாக இருந்த ஜெயக்குமார் தன்னை ஒரு உலக மகா யோக்கியனாக நீதிமன்றத்தில் நிறுவுகிறான். ஆணாதிக்க பொது ஒழுக்கத்தை பாதுகாக்கும் நீதியும் அதை ஏற்றுக் கொள்கிற போக்கிலேயே வழக்கு செல்கிறது. நான் அநேகமாக இன்னும் நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றம் பூவரசிக்கு தூக்குத் தண்டனையை வழங்கி தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும். ஜெயக்குமாரின் ஏமாளி மனைவியோ தூக்குத்தண்டனை விதிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக பூவரசியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போட வேண்டும் என்று பேட்டி கொடுப்பார். சொல்ல முடியாது விருகம்பாக்க வாசிகள் வெடி கொளுத்தி இனிப்பு வழங்கி பூவரசியின் தீர்ப்பை வரவேற்றாலும் வரவேற்பார்கள்.

கொடூர குற்றவாளிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதன் மூலம் கொடூர குற்றங்களையும் ஆதரிக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என் மீது குறைபடுகிறார்கள். கொடூர குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் நமது கவலையே தவிற கொடூர குற்றங்களுக்கு தண்டனையே தேவை இல்லை என்பதல்ல என் வாதம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் அவருக்கான உரிமைகள் உண்டு. அவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சுமத்தியவர்களுக்கு உண்டு அதை சட்டத்தின் வழி நின்று நிரூபிக்க வேண்டுமே தவிற பொதுப்புத்தி, பொது மனச்சாட்சி, மக்கள் விருப்பங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பலான தீர்ப்புகளில் சட்டத்தின் அளவுகோல்களை விட பொதுப்புத்தியும், நம்பிக்கையும், பெரும்பான்மனை மக்கள் விருப்பமுமே நீதியின் முடிவாய் இருக்கிறது. கோவை மோகன்ராஜ் என்கவுண்டரிலும், பூவரசி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நான் பூவரசி செய்த குழந்தைக் கொலையை எதை வைத்தும் நியாயப்படுத்த வில்லை. பூவரசியை மிக மோசமான முறையில் ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் ஏமாற்றி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். பூவரசி எல்லா இந்திய பெண்களையும் போல தன்னை திருமணம் செய்யும் படி ஜெயக்குமாரை வற்புறுத்த அவரோ ஒரு கட்டத்தில் பூவரசியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.ஆண்களின் விஷக் கொடுக்குகளுக்கு தன்னை பலியாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் மனப்போராட்டம் ஒரு பக்கம். இதை எதையும் கண்டு கொள்ளாத ஜெயக்குமார் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்தது இன்னொரு பக்கம் என பூவரசி மன ரீதியான துன்பங்களுக்கு ஆளான நிலையில் ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது குழந்தையைக் கடத்திக் கொன்று விட்டார். இப்போது ஜெயக்குமார் கதையை இப்படித் திரிக்கிறார். பூவரசி மீது தான் இரக்கப்பட்டு வேலை கொடுத்ததாகவும் அவர் விரும்பியே தான் அவருடன் பழகியதாகவும் கடைசியில் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார். ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.ஜெயக்குமாரின் மனைவிக்குமே தன் கணவன் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய விளையாட்டால்தான் இக்கொலை நடந்தது என்ற எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. இந்த இடத்தில் ஜெயக்குமாரின் மனைவிக்கு இம்மாதிரியான தொடர்பு இருந்தால் அதை ஜெயக்குமார் மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் உண்டு. ஆக சொத்துடமை சமூகத்தின் இறுகிய கட்டமைப்பான ஆண் தலைமை தன் சகல அதிகாரங்களையும் பெண் மீது செலுத்துகிறது. ஜெயக்குமார் பூவரசியை ஏமாற்றியது ஆண் என்ற இயல்பில் என்பதை ஒரு பெண்ணின் தலை மீது சுமத்துகிறது.

ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை

பூவரசியை ஜெயக்குமார் பல முறை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தார். ஊடகங்களோ அவர் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அந்த பெண்ணை அம்மணமாக்கி பாலியல் வன்முறை செய்கின்றது. ஓவ்வொரு முறை அவர் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போதும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போது வெளியில் ஒரு கூட்டம் பெண்கள் துடைப்பங்களோடு திரண்டு வந்து அவரை அடிக்கிறோம் பேர்வழி என்று நிற்கிறார்கள். கையில் துடைப்பங்களோடு நிற்கும் அவர்களும் ஒவ்வொரு பூவரசிகள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாத வரை அது இந்த சமூக அமைப்பிற்கு சாதகம் என்பதால் போலீசே சில நேரங்களில் குற்றம் சுமத்தப்பட்டவரை அடிக்க ஆள் திரட்டுகிறார்கள். பெண் போலீசின் பிடியில் அழைத்து வரப்படும் பூவரசியை இரண்டு நிமிடங்கள் பெண் போலீசே மீடியா முன்னால் நிறுத்துகிறார்கள். இது ஏதோ தற்செயலாக நடக்கிற நிகழ்வல்ல, அன்றைக்கு ஒரு புது பூவரசி கிளிப்பிங்ஸ் கிடைத்தால் செய்திக்கு முக்கியத்துவம் என்பதால் இவர்களின் போலீஸ் கூட்டு என்னும் அடிப்படையிலேயே பாளாஷ்களை அந்தப் பெண்ணின் மீது இறக்குகிறார்கள். ஆக அவர் தினம் தோறும் ஊடகங்களாலும் தொந்தரவு செய்யப்படுகிறார்.

எடிகா அன்னம்மாவும், பூவரசியும்

இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நமது மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணய்யரிடம் வந்த வழக்கில் அவர் எடிகாவை கருணை காட்டி விடுதலை செய்தார் ( நான் கிருஷ்ணய்யரைக் கண்ட நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் "கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.இங்கு எடிகாவோடு பூவரசியையும் பொறுத்திப் பார்க்கலாம் தன்னை காதலித்தவன் ஏமாற்றியதால் அவன் மீது வரவேண்டிய கோபம் அந்த பெண்ணுக்கு அவனது குழந்தை மீது வந்து கொலையும் செய்து விடுகிறாள். இங்கே கொடூரமான குற்றங்களையோ பாலியல் சார்ந்த கொலைகளையோ பூவரசி மீதான குற்றச்சாட்டுகளோடு ஒப்பிடவே முடியாது.
பூவரசி கொலை செய்த சூழல், அவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு, அவரது சமூகப் பின்னணி, தனிமை, ஏற்கனவே அவர் உளவியல் ரீதியாகவும், சிறை ரீதியாகவும் அனுபவித்து விட்ட தண்டனை உள்ளிட்ட சகல விஷயங்களையும் கணக்கில் கொண்டு பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்காக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

11 comments:

Anonymous said...

டேய் உங்களை மாதிரி அறிவுஜீவிங்க,மனித உரிமைக்காரனுங்க, லா பாயிண்ட் பேசுறவனுங்க இவனுங்களை முதல்ல போட்டுத் தள்ளணும். இவனுங்களுக்கு மக்கள் மேல் அன்பு கிடையாது கொலைகாரிங்க, கொள்ளைக்காரங்க மேலதான் அன்பு. திருந்தவே மாட்டானுங்க.

அன்பு.

Anonymous said...

Judgment meant to not only about what they have done,It also prevent an upcoming crime in our society.

Anonymous said...

Humar Rights means a commen man has all rights to live.. but a paid gang kill him. so his right of living is been destroyed. His family will be suffered due to the loss of earning member. After that the killers will be caught. But the witness will not stand in their own stand till the case judgement. In many paid murder cases it is not proven in court and the accuists released.... These idiots claim for the accusts right and forget about the comn man's right and his family... So what is wrong if the accuist is not treated as per rights law? he simply overrule others living and surviving right... why cant he loose something? even his life.....

GP said...

முட்டாள்தனமான பதிவு. கடவுள் படைத்த உயிரை பறிக்க அரசுக்கும் மனிதனுக்கும்
உரிமை இல்லையென்றால் அந்த அப்பாவி குழந்தையின் உயிரை பறிக்க இவளுக்கு ஏது? ஆணாதிக்கம் என்று வாய்ஜாலம் பேசி, செய்த கொலைக்கு வக்காலத்து வாங்க வேண்டாம். நீதி மன்றத்தில் விசாரணை நடத்தி குற்றமெனில் தக்க தண்டனை வழங்குவதே முறையானது.

சீனு said...

//ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.//

கேனத்தனமான லாஜிக். இது தான் உங்கள் கருத்தென்றால், பூவரசியும் தூக்கிலிடப்படவேண்டும் என்றே நினைக்கிறேன்.

தவறு செய்த அந்த ஆணும் தண்டிக்கவேண்டும் தான். ஆனால், இவள் அவனை கொன்றிருந்தால் தப்பேயில்லை. ஆனால், கேனத்தனமாக அந்த பையனை கொலை செய்தது தான் வேதனையானது. இதில் இவளுக்கு சப்போர்ட் வேறு.

Anonymous said...

அதாவது பூவரசிக்கு கொலை செய்யும் உரிமை உண்டு. ஆனால் ஜெயக்குமாரை மட்டுமே குழந்தையை அல்ல என்பது உங்களின் கருத்து நான் என்ன சொல்கிறேன். என்றால் கொலை என்ற உணர்ச்சிகரமான ஒரு கொதிப்பு என்பதையே உருவாக்கியவர் ஜெயக்குமார் தான். தன்னை விட பலமிக்கவனான ஜெயக்குமாரை கொல்வதை இயலாத காரணம் என நினைத்திருக்கலாம். தவிறவும் காலா காலத்திற்கும் ஜெயக்குமார் நினைத்து துன்புறும் படி அவரைத் தண்டிக்கும் எண்ணத்தில் உணர்ச்சி மேலீட்டில் பூவரசி ஜெயக்குமாரின் குழந்தையைக் கொன்று விட்டார். இந்தக் கொலையை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அந்த அப்பாவிப் பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புகள் இங்கே பேசப்படவில்லை.

டி.அருள் எழிலன்.

Anonymous said...

நம்மில் ஒருவரால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், நம் குடும்பத்துக் குழந்தையை அந்தக் கையாலாகாத நபர் கொன்றிருந்தாலும் அருள் இப்படி பேசுவாரா?

Anonymous said...

Arivazhagan wrote: "பூவரசிக்குக் குறைந்த பட்சத் தண்டனையும், பூவரசியை இந்த மனநிலைக்குக் கொண்டு வந்த ஜெயக்குமாருக்கு அதிகபட்சத் தண்டனையும், தன கணவனுடைய குற்றங்களை மறைக்கவும், அவனுக்கு ஆதரவாகப் பேசும் அவரது மனைவிக்கு ஒரு எச்சரிக்கையான தண்டனையும் வழங்கப்படலாம் என்று என் மனதில் படுகிறது. ஆனால், காஷ்மீரில் துப்பாக்கியால் சில குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற நமது ராணுவ வீரர்கள் பலருக்கும், இலங்கையில் பல அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்து சமாதானத்தின் தூதுவராக வலம் வரும் ராஜபக்ஷேவுக்கும், ஆப்கானில் பல அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்த ஜார்ஜ் புஷ்ஷுக்கும், இன்னும் பல கூட்டுக் கொலை புரிந்த பல்வேறு உலகத் தலைவர்களுக்கும், அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி விடுதலைப் போர் என்றும், நாட்டு ஒற்றுமைக்கான போர் என்றும், தீவிரவாததிற்கு எதிரான போர் என்றும் ஒரு மந்தை உளவியலில் அடைபட்டுக் கிடக்கும் நமது சமூகத்திற்கு பூவரசியின் மனச் சிதைவும், ஜெயக்குமாரின் பாலியல் சார்ந்த உளவியல் வக்கிரமும் எளிதில் புரிந்து விடும் என்கிறீர்களா எழிலன். நம்பிக்கை தானே வாழ்க்கை, நமது கடமைகளைச் செய்வோம். வேறு என்ன செய்ய???"

Arivazhagan

thanks-face book

Anonymous said...

Arivazhagan Kaivalyam commented on your note "பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும்.".
Arivazhagan wrote: "உங்கள் கட்டுரை மிக ஆழமான சமூக உளவியலின் ஒரு பகுதி, ஒரு சிறைக்கைதியின் வரலாற்றை வைத்து முன்னொரு முறை பிரெஞ்சு உளவியலாளர் ஒருவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார், தனது தந்தையின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த ஒரு மகன், தந்தையை குடும்பத்தினர் இழிவு செய்து ஒரு அடிமையைப் போல நடத்தியது கண்டு மனம் வெதும்பிப் பின் வீறு கொண்டு ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கொலை செய்தான். சமூகத்தைப் பொறுத்த வரையில் அவன் செய்தது கொடூரமான கொலையாகவே இருந்தது, ஆனால், அவனது உளவியலை ஆய்வு செய்த அறிஞர் அவனிடத்தில் எந்த ஒரு குற்ற உணர்வும், மன அழுத்தமும் காணக் கிடைக்கவில்லை என்றும். தான் இப்போது தான் மன நிம்மதியோடும், நிறைவோடும் எனது தந்தையின் ஆன்மாவுக்கு விடுதலை கொடுக்கிறேன் என்றும் அந்தக் கைதி குறிப்பிட்டதாகச் சொல்கிறார். உளவியலோடு தொடர்புடைய ஒழுக்கங்கள், நெறிமுறைகள், சட்ட திட்டங்களை நாம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு கால கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். சமூகவியலின் சட்டங்கள் ஒரு தனி மனிதனின் உளவியலில் என்ன வகையான தாக்கம் உண்டாக்கும் என்பது கேள்விக்குறியாகவே இன்றும் இருக்கிறது, பூவரசியின் பாலியல் பயன்படுத்தல் காரணமாக அவரது உளவியல் கடும் பாதிப்படைந்து அந்தப் பாதிப்பை ஏதாவது ஒரு வழியில் ஜெயக்குமாருக்கு வழங்க வேண்டும் என்கிற தீவிரத்தன்மை காணப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு குழந்தையை குற்றங்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத இன்னொரு மனிதப் பிஞ்சை அதே தீவிர மனநிலையில் கொன்று விட்ட பிறகு தான் செய்தது மிகக் கொடூரமான ஒரு கொலை என்று கதறி அழுததில் பூவரசியின் மனநிலையில் குற்ற உணர்வும், கடும் மன அழுத்தமும் தெரிகிறது. சமூக உளவியலோடும், தனி மனித உளவியலோடும் நெருக்கமான தொடர்புகள் இல்லாத பொதுவான சட்டங்கள், உலக உயிர் வாழ்க்கையின் ஒரு சார்பானவை, அவற்றின் இன்னொரு கோணத்தில் அதாவது குற்றங்களின் துவக்கப் புள்ளியில் உண்டாகும் தேவை மற்றும் உளவியல் குழப்பம் குறித்த எந்த அடிப்படையும் இல்லாத சட்டங்கள் ஒரு வகையில் முதலாளித்துவச் சார்புச் சட்டங்கள் என்றே அறியப்படுகிறது, கூட்டு முதலாளித்துவ நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிரான யாவும் குற்றம் என்று வரையறை செய்யப்பட்டிருக்கிற ஒரு சமூகத்தில் தோழரின் கட்டுரை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புகளே அதிகம்."

Arivazhagan
thanks, facebook.

Anonymous said...

அறிவழகன் உங்களின் பின்னூட்டம் எனக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது. காரணம்
நண்பர்கள் மரண தண்டனை வேண்டாம் என்கிற அளவில் பூவரசி விஷயத்தில்
கருத்துச் சொல்கிறார்கள். நான் பூவரசி விஷயத்தை மட்டும் வேறு விதமாகப்
பார்க்கிறேன். அதன் கூட்டு மனச்சாட்சியையும் அதன் உளவியல் சிக்கல்களையும்
நீங்கள் அழகாக விளக்கியுள்ளீர்கள். அந்தப் பெண் கைது செய்யப்பட்ட நாளில்
இருந்து கவனித்து வருகிறேன். பெரும் மனத் துன்பத்திற்கு அவர்
ஆளாகியிருக்கிறார். சிறையில் தாக்கப்பட்டிருக்கிறார். ஊடகங்கள், பொது
மக்கள் மிக மோசமான வக்கிரங்களை ஏவுகிறார்கள். விதிவிலக்காக இந்த வழக்கை
நான் எடுத்துக் கொண்டுதான் அவரை விடுவித்து வாழ்வதற்கான உரிமையை அவருக்கு
வழங்க வேண்டும் என்றேன். எடிகாவுக்கு காட்டப்பட்ட அதே கருணை பூவரசிக்கும்
உண்டு என்பதுதான் என் கருத்து. கூட்டு நம்பிக்கையை பிரதிபலிக்கிற
நீதிமன்றத்தில் இம்மாதிரி பெண்கள் எளிதில் தூக்கிடப்படும் ஆபத்து உண்டு.

டி.அருள் எழிலன்.

Anonymous said...

எழிலன் உங்கள் மனங்கவர்ந்த ம.க.இ.க தோழர்கள் காண விழையும் சோசலிச சமூகத்தில் மரணதண்டனை இருக்குமா? இருக்காதா? அங்கு அனைத்து பிரச்சணைகளும் உளவியல் மற்றும் மனநெருக்கடி போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தீர்ப்பளிப்பார்களா?