
“சமூகத்திலுள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கொண்டு வரவேண்டும் என்று உறுதி பூண்டால், சமத்துவம் என்ற கொள்கையையே எப்போதும் முழங்கிக் கொண்டிராமல், சமூகத்தில் பிற்பட்டவர்களுக்கு கூடுதல் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.உயர் வர்க்கத்தவர்களுடைய வசதி வாய்ப்புகளை குறைத்து விட வேண்டும். எதிர்காலத்தில் சமத்துவம் ஏற்பட நிகழ்காலத்தில் இவ்வாறு சமத்துவமின்மை கொள்கையை மேற்கொள்ளவேண்டும்” அண்ணல் அம்பேத்கர்.
அண்ணல் அம்பேத்கரை நினைப்போம்...
பெரும்பான்மை வாதம் தகர்ப்போம்...
அண்ணலை நினைப்போம்....
இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா?

டி.அருள் எழிலன்.
‘ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?
‘‘இந்து மகா சமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும் போது நான் எப்படியம்மா நிம்மதியாக நித்திரை கொள்வேன்’’
சிங்கள மகாகாவியத்தின் நயகனான துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஒரு இரவில் அவனது தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக மகாவம்சம் இந்த உறையாடலை நிகழ்த்துகிறது. சிங்களர்களின் காவிய நாயகன் துட்டகைமுனுவுக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவில் வசிக்கும் சகல மக்களையுமே இன்று இந்து மகாச் சமுத்திரம் துரத்திக் கொண்டிருக்கிறது. எழுபதாண்டுகால இனப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இழுபட இந்து மகாச் சமுத்திரமும் அதை ஆதிக்கம் செய்ய முனையும் ஏகாதிபத்திய நாடுகளுமே காரணம் என்பதை காலம் இந்த இருபது ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறது. முன்னர் அமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்டதற்குப் பிறகு இன்று இந்தியா இந்து மகாச் சமுத்திரத்தில் தன் நலனையும் பேணி அமெரிககவின் நலனையும் பேணுகிறது என்ற குற்றச்சாட்டு பல தரப்பாலும் முன்வைக்கப்படும் சூழலில் அப்படி இந்து மகாச் சமுத்திரத்தில் என்னதான் இருக்கிறது? உலகின் வேறு எந்த கடற்பிராந்தியமும் இன்று இவளவு மோசமான போர் பதட்டத்துடன் காணப்படுமா? என்று தெரியவில்லை. யுத்தங்கள், சுரண்டல் வர்த்தகங்கள் என ஆதிக்கக்கனவின் விருட்சமாக இன்று மாறி இருக்கிறது இந்து மகாச் சமுத்திரம். ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிக்கா ஆகிய நான்கு கண்டங்களுக்கிடையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்துச் சமுத்திரம் 28,350,000 சதுரமைல் ( இன்று அன்டார்டிக்காவின் பனிப் பாறைகள் வெகுவேகமாக உருகுவதால இந்து மகாச் சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது)பரப்பைக் கொண்டது. மூன்று கண்டங்களிலும் 47 நாடுகள் இந்து மகாச்சமுத்திரத்தை அண்டிய பிராந்திய நாடுகளாக அமைந்துள்ளன. இதில் 36 நாடுகள் இந்துச் சமுத்திரத்தின் கரையோர நாடுகள். 11 நாடுகள் இந்துச் சமுத்திரத்தின் இயர்க்கை, செயர்க்கை துறைமுக (Hinter Land) பின்னணி கொண்ட நாடுகளாக உள்ளன.
இந்து சமுத்திரம் அய்ரோப்பிய, அமெரிக்க, மேற்குலக, நாடுகளை வர்த்தக ரீதியாக பாரசீகத்துடன் இணைக்கும் ஒரு அதி முக்கிய பகுதியாகவும் இருந்து வருகிறது. உலக அளவில் ஐந்து புவியியல் அரசியல் பிரதேசங்களை உள்ளடக்கி ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்துகிறது. கிழக்கு ஆப்ரிக்கப் பிராந்தியம், தென் மேற்காசிய பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், தென்கிழக்காசியப் பிராந்தியம், அஸ்திரேலியப் பிராந்தியம் என பெரும் வளங்களை கொட்டி வைத்திருக்கும் இந்தப் பிராந்தியம் ஏகாதிபத்திய சுரண்டல் காரர்களின் கூடாரமாக இப்போதும் எப்போதும் இருந்தே வருகிறது. உலக அளவிலான பெட்ரோலிய இருப்பில் 55% கொண்டிருக்கும் சவுதி, குவைத், ஈரான் போன்ற நாடுகளும் இந்த இந்துச் சமுத்திரத்தை அண்டியே இருகின்றன. பாரசீக வளைகுடாக்கள் காஸ்டிலியான பெட்ரோலியத்தின் இருப்பிடம் என்றால் தென்கிழக்காசிய நாடுகளோ அபூர்வ கனிமங்களின் கிடங்காக இருக்கிறது. தகரம், செம்பு, ஈயம் போன்றவை தென் கிழக்கிலும் தென் ஆப்ரிக்காவிலும் கிடைக்க இன்றைய அணு ஆயுதப் போட்டியின் அவசியத் தேவையான யுரேனியமோ இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பெருமளவில் கொட்டிக்கிடக்கிறது. செம்புவுக்கு ஷாம்பியாவும் ஈயத்திற்கு ஆஸ்திரேலியாவும், யுரேனியத்துக்கு இந்தியாவும், பெட்ரோலுக்கு வளைகுடாவும், தகரத்திற்கு மலேசியாவும் இருக்க ஒட்டு மொத்தமாக இந்த வளங்கள் அனைத்தையும் அள்ளிச் செல்ல அரிய வாய்ப்பாக இந்துச் சமுத்திரமும் இருக்கும் போது அதை நாடு பிடிக்க வந்த வெள்ளை ஆக்ரமிப்பாளர்கள் விட்டு விடுவார்களா? என்ன?
இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமரிக்காவின் தலைமையில் NATO என்கிற பெயரில் வலதுசாரி நாடுகளும் சோவியத் யூனியனின் தலைமையில் WARSAW என்னும் அமைப்பின் கீழ் நாடுகளும் அணிசேர்ந்த போது அமெரிக்கா, சோவியத் யூனியன் என இரண்டு வல்லரசுகளுமே இந்து மகாச் சமுத்திரத்தை தங்களின் நோக்கங்களுக்காக பயன் படுத்திக் கொண்டன. அமெரிக்காவின் ராணுவ ரீதியான போர் வெறிக் கொள்கை இந்துச் சமுத்திரத்தை ஆக்ரமித்த போது அது சோவியத் யூனியனின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. சோவியத் யூனியனும் இந்துச் சமுத்திர பிராந்தியத்தில் தனக்கும் தன் கூட்டாளிகளுக்கும் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர் கொள்ள நிர்பந்தத்திற்கு ஆளானது.
அமைப்புகள் அறிகைகள் மாநாடுகள் என்னும் பெயரில் தென்கிழக்கையும் மத்தியக் கிழக்கையும் சுரண்டுகிற அமெரிக்காவின் சுரண்டப் பொருளாதார நலனுக்கு மேற்குலக நாடுகள் துணைபோயின மூன்றாம் உலக நாடுகளோட் பலியாகின.அமெரிக்கா 1954 செப்டம்பர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா,பிரிட்டன், பிரான்ஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, போன்ற நாடுகளை ஒருங்கிணைத்து சியாட்டோ(CEATO) என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. சியாட்டோ 1961-ல் "ANZUS" அன்சுஸ் என்ற கூட்டமைப்பாக விரிவு பெற்றது. பின்னர் துருக்கியும் ஈராக்கும் செய்து கொண்ட பாக்தாத் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்டோ ""SENTO" உருவானது இதில் அமெரிக்கா பிரிட்டன் உட்பட எல்லா நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் போர் வெறிக்கும் பிரிட்டனின் சுரண்டல் வர்த்தகத்திற்கும் வழி அமைத்துக் கொடுக்கும் விதமாக தேச நலனின் பெயரால் இத்தனை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்ட இந்து சமுத்திரத்தை ஒட்டிய நாடுகளில் அமெரிக்க பிரிட்டன் படைகளின் ராணுவ தளங்கள் அமைக்கபட்டன.அமெரிக்கா தன் ராணுவ தளத்தை மிக வலுவாக ஆஸ்திரேலியாவில் அமைத்தது 1968&ல் இந்துச் சமுத்திரத்தில் ஏவுகணைச் சோதனையையும் நடத்தியது. இதே காலக் கட்டத்தில் பிரிட்டனின் காலனிப் பகுதியாக இருந்த டியாகோ கார்சியா(Diego Garcia ) தீவில் பிரிட்டனும் தன் ராணுவ இராணுவத் தளத்தை நிறுவி இந்து மகாச் சமுத்திர பிராந்தியத்தை பதட்டத்திற்குள்ளாக்கியது.இன்றும் இத்தீவு பிரிட்டனால் உரிமை கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்க, பிரிட்டனின் ராணுவ பலங்கள் இந்து மகாச் சமுத்திரத்தில் அதிகரிக்க அதிகரிக்க சோவியத் யூனியனோ தென்மேற்காசியாவில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியது. 1958&ல் ஈராக்கில் ஏற்பட்ட புரட்சி சோவியத் யூனியன் இந்து மகாச் சமுத்திரத்தில் காலூன்ற ஒரு வாய்ப்பாக கிடைத்தது. செனட்டோ கூட்டமைப்பில் இருந்து ஈராக் வெளியேற அதை சோவியத் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. 1968&ல் ஏமன் பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த போது ஏமனில் பிரிட்டனின் பலம் குறைந்தது. வல்லரசாதிக்கப் போட்டிகள், ராணுவ மேலாதிக்கங்கள், இயர்க்கை வளங்களின் கொள்ளை இடுதல் என ஏதோ ஒருவகையில் எப்போதும் இந்து மகாச்சமுத்திரம் அமெரிக்காவின் வர்த்தக வலையமாகவே இருந்து வந்திருக்கிறது. வர்த்தக நோக்கம் கொண்ட, ராணுவ நோக்கம் கொண்ட இத்தகைய ஏகாதிபத்திய ஆக்ரமிப்புகள் எப்போதும் இந்த பிராந்தியத்தை போர் பதட்டத்துடனே வைத்திருக்கிறது.இந்த சுரண்டல் நோக்கத்தினால் ஆசியா, ஆப்ரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் என பெரும்பதட்டத்தில் மூழ்கியதோடு இந்த நாடுகளில் சுயமான திடமான நிரந்தர பொருளாதார வளர்ச்சியை மேற்குலகம் மட்டுபடுத்தி வந்திருக்கிறது. வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்தில் மூலதனம் ஏது மற்ற மேற்குலகம் இந்த நாடுகளைச் சுரண்டியே பல நூற்றாண்டுகளாய் தின்று கொழித்தது.
இம்மாதிரி சூழலில்தான் இந்து மகாச் சமுத்திரத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் இந்தியாவின் நோக்கமும் அதன் பிராந்திய நலன் என்னும் பெயரில் இந்தியா அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வர்த்தக நோக்கமும் இன்று ஆழ்ந்து கவனிக்க வேண்டியவை. சுதந்திர இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாக இருந்த ஜவஹர்லால் நேருவும், கிருஷ்ணமேனனும் குடியேற்றவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிறவாத எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு, தேசீய விடுதலைப் போராட்டங்களை அங்கீகரித்தல் என்னும் கொள்கைகளை ஏட்டளவில் உருவாக்கி வைத்தனர். இதனூடாக இந்தியா அணிசேராக் கொள்கையை தங்களின் அயலுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் நல்லப் பிள்ளை என்கிற மாதிரியான இவ்வகைக் கொள்கைக்கு உலகில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் போனதோடு இந்தியா அந்த கொள்கைக்கு உண்மையாக எப்போதும் இருந்ததும் இல்லை.
1962-ல் சீனா இந்தியா மீது படையெடுத்த போது அமெரிக்கா சீனாவை ஆதரித்து நின்றது. பின்னடைவைச் சந்தித்த இந்தியா சோவியத் யூனியனைச் சார்ந்திருந்தது.சீனாவின் அமெரிக்கச் சார்புக் கொள்கையும் திபெத்தின் மீதான ரஷ்யாவின் கவனம் என ரஷயா தன் பிராந்திய நலன் பொருட்டு இந்தியாவை ஆதரித்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ அமைப்பின் கீழும் சோவியத் யூனியன் வார்ஷோ அமைப்பின் கீழும் உலகைப் பங்கிட்டு இந்து மகாச்சமுத்திரத்தில் ஆதிக்கம் செய்த போது இந்த இரண்டு வல்லாதிக்கங்களுக்கிடையில் அணிசேராக் கொள்கையை வைத்துக் கொண்டு அணிசேராக் கொள்கையை என்றும் தலியிடாக் கொள்கை என்றும் சோஷலிசப் பொருளாதாரம் என்று இந்தியா பேசித்திரிந்தது. ஆனால் இந்து மகாச் சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவமோ அதன் வர்த்தகப் பாதையின் அதி முக்கிய பாதுகாப்பின் அவசியத்தையோ இந்தியா அறிந்திருக்க வில்லை. அல்லது அறிந்திருந்தும் அதை முக்கியத்துவம் அற்ற ஒரு விஷயமாக இந்தியா நினைத்திருக்கலாம்.
இந்நிலையில் தான் இந்து மகாச் சமுத்திரம் குறித்த தன் பார்வையை முதன் முதலாக பதிவு செய்தார் கே.என் பணிக்கர்.‘‘அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், போன்ற நாடுகளுக்கு இந்து மகாச் சமுத்திரம் ஒரு முக்கியமான கடல் பிராந்தியம் மட்டுமே. ஆனால் இந்தியாவுக்கு இந்து மகாச் சமுத்திரம்தான் அதன் உயிர்நாடி. இந்தியாவின் உயிர்வாழ்வு இப்பிராந்தியத்திலேயே அடங்கியுள்ளது. இக்கடல் பிராந்தியம் பாதுகாக்கப்படாது விட்டால் இந்தியாவிற்கு கைத்தொழில் அபிவிருத்தி இல்லை. வர்த்தக வளர்ச்சி இல்லை, ஒரு ஸ்திரமான அரசியல் அடித்தளமும் சாத்தியமில்லை’’என்று இந்தியாவின் மிக முக்கிய வரலாற்றாசிரியரும் அன்றைய சிந்தனையாளருமான கே.என். பணிக்கர் இவ்விதமாய் எழுதியிருக்கிறார்.அராபியரின் மத்தியக் கால கடல் வழிக் குறிப்புகளையும், பிற்கால நிகழ்வுகளையும் கொண்டே பணிக்கர் இவ்விதமான கருத்தைக் கூறியிருந்தாலும் ஐம்பதுகளில் பணிக்கரின் இந்தக் கருத்துக்களுக்கு இந்தியாவில் எதுவிதமான முக்கியத்துவமும் இல்லை. அறுபதுகளின் பிற்பகுதியில் உலகச் சூழல் மாறிய பிறகும் தென் கிழக்கில் தனக்கு நேர்ந்த அனுபவம் காரணமாகவுமே இந்தியா இந்து மகாச் சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தது. பணிக்கரின் இந்தக் கருத்து ஏகாதிபத்தியங்களின் ஆசையை உள்ளடக்கியது என்றாலும் இந்திய நோக்கில் அதற்கு புவியியல் முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. பணிக்கரின் கருத்து இந்தியாவின் மேற்குப்பகுதியைப் பாதுகாக்கிற கொள்கையாகவும் இந்திய துணைக் கண்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை வெளி வல்லரசுகளிடம் விழுந்து விடாமல் தடுப்பதாகவும் இந்துச் சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாகவும் இருந்தது.
அன்றைய சூழலில் அமெரிக்காவும் பிரிட்டனும் இந்து மகாச் சமுத்திரப் பிரேதசத்தை தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்து மகாச் சமுத்திரத்தை கட்டுப்படுத்த மூன்று முக்கிய துறைமுகங்களை எந்த நாடு கட்டுப்படுத்துகிறதோ அந்த நாடு இந்தப் பகுதியில் செல்வாக்குச் செலுத்துவதாக இருந்தது. ஒன்று ஏடன் துறைமுகம் இதுதான் இந்துச் சமுத்திரத்தின் நுழைவாயில் ஏடன் துறைமுகம் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாவது திருகோணமலைத் துறைமுகம் இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூன்றாவது சிங்கப்பூர் துறைமுகம் இதுவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்து மகாச் சமுத்திரத்தின் மீது இந்தியா கவனம் செலுத்திய போது அது மிகவும் பலவீனமாக இருந்தது. மூன்று முக்கிய துறைமுகங்களிலும் செல்வாக்குச் செலுத்த இயலாவிட்டாலும் அந்நியப் படைகளின் ஆதிக்கத்தையாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் நினைத்தது இந்தியா.
இந்து சமுத்திரத்தின் அமைதி குறித்த பதட்டங்களும் கேள்விகளும் கூடி வந்த போது 1971&ல் ஐ.நா சபை இந்து மகாச் சமுத்திரம் சமாதானப் பிராந்தியமாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இன்றைக்கு ஐநாவின் தீர்மானங்களுக்கு உலகில் எவ்விதமான முக்கியத்துவமும் இல்லாமல் போனதோ அது போலவே அன்றைக்கும் ஐநாவின் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.இந்து மகாச் சமுத்திர அரசியலில் இந்தியா எப்போது கவனம் செலுத்தத் தொடங்கியதோ அன்றைக்கு அது சீனாவுடனுன் பாகிஸ்தானுடனும் இரு யுத்தங்களைச் சந்தித்தது. 1971&ல் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வெறும் பதிநான்கு நாட்களுக்குள் பாகிஸ்தானை பிரித்து வங்காளதேசத்தை உருவாக்கியது இந்தியா. பாகிஸ்தானை அத்து மீறித் தாக்கிய இந்தியாவுக்கு ஆதரவளித்தது சோவியத் யூனியன். சீனாவும் அமெரிக்காவும் பாகிஸ்தானை ஆதரித்தாலும் போரின் முடிவுகளைத் தெரிந்து அதற்கு தோதானது போல நடந்து கொள்கிற மனோபாவத்தில் இருந்தது அமெரிக்கா.உண்மையில் போரின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமைய பாகிஸ்தானை அப்படியே கைவிட்டது அமெரிக்கா. இந்தியாவை சமாளிக்க வேண்டுமானால் பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பல பெற்றாக வேண்டிய சூழலில் பாகிஸ்தான் பிரான்சின் உதவியை நாடியது. இந்தியா புதிதாக உருவாக்கிக் கொடுத்த வங்காளதேசத்தை இலங்கை பல ஆண்டுகளாக அங்கீகரிக்க மறுத்தது.
இந்நிலையில் சோவியத் யூனியனின் ஆதரவு நாடான ஈராக் தன் நாட்டில் அணுசக்தி நிலையங்களை அமைத்தது அதை அமெரிக்கா உருவாக்கிய இஸ்ரேலோ குண்டு வீசி அழித்தது. இந்நிலையில் பாகிஸ்தானும் அணு சக்திக்கான நிலையங்களை அமைக்க இஸ்ரேல் அதை ‘இஸ்லாமியக் குண்டு’ என்று வர்ணித்தது. அமெரிக்காதான் இஸ்ரேல் இஸ்ரேல்தான் அமெரிக்கா என்றான பிறகு பாகிஸ்தானுடன் நெருங்காமல் இந்தியாவுடன் நெருங்குவதையே அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பின. 1977&ல் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ‘‘தென்னாசியாவில் இந்தியா வல்லரசாக தலைமை வகிக்க வேண்டும்’’ என்றார். அமெரிக்க எதிர்ப்புணர்வுகள் பாகிஸ்தான் முழுக்க எரிய இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகம் எரிக்கபப்ட்டது.
இந்நிலையில் ஈரானின் புரட்சி வெடித்ததை ஒட்டி ரஷ்யப்படைகள் ஆப்கானுக்குள் நுழைய ஈரானில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. பாகிஸ்தானிலும் எதிர்ப்பலை, ஈரானிலும் முயர்ச்சிகள் தோல்வி, இந்தியாவிலும் அமெரிகாவின் கருத்துக்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை, வங்காளதேசம், நேபாளம்,பூடான் என எல்லா நாடுகளுமே இந்தியாவின் மேலாதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. ஆனால் அமெரிககாவின் மிக நெருங்கிய நண்பனாக இருந்து தனது துறைமுக நகரங்களை அமெரிக்க படைகளின் பயன்பாட்டுக்கும் இராணுவ சோதனைகளுக்கும் விட்டுக் கொடுத்து வந்தது இலங்கை மட்டுமே. எப்படி அமெரிக்கா கொடுத்த நல்லெண்ண சமிக்ஜைகளை இந்தியா கண்டு கொள்ளவில்லையோ அது போல இலங்கைக்கு இந்தியா கொடுத்த நல்லெண்ண தூதுகளையும் இலங்கையும் கண்டு கொள்ளவில்லை.
எல்லா நடுகளும் கைவிட்டுப் போகும் சுழலில் அமெரிக்க அதிபர் 200 மில்லியன் அளவுக்கு ராணுவ உதவியும் 200 மில்லியன் அளவுக்கு பொருளாதார உதவியும் பாகிஸ்தானுக்கு செய்யப்படும் என அறிவிக்க, பாகிஸ்தானின் அப்போதைய அதிபராக இருந்த ஜியா&உல்&ஹக் ‘‘ இம்மாதிரியான அற்பத்தனமான உதவிகள் நாம் பெறுவதென்பது சோவியத் யூனியனின் பகைமை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்’’ என்று அந்த உதவியை நிராகரித்தார். ஜியா.பின்னர் வந்த ரீகன் பாகிஸ்தான் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.பிரிட்டீஷ் இந்தியாவில் இந்தியாவின் பரந்துபட்ட பாதுகாப்பிறாகான ஒரு பிரேதசமாக இருந்தது திபெத்தும் ஆபாக்னிஸ்தானும்தான் கடைசியில் ஆப்கானை ஆக்ரமிக்கும் நோக்கில் ரஷ்யா ஆப்கானுக்குள் நுழைந்தது. திபெத் 1950&ல் சீனாவுடன் இணைக்கப்ப்ட்டது அமெரிக்காவின் நட்பு நாடான சீனா திபெத்தை இணைத்துக் கொண்டது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு உகந்ததல்ல என்று ரஷ்யா இந்தியாவின் கவனத்தை ஈர்த்தாலும் நேருவோ மாவோவை ஆதரித்தார். திபெத்தின் இணைப்பு வெளிப்படையான ஆதரவை இந்தியா தெரிவிக்காவிட்டாலும் அதை எதிரிக்கவில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக 1962&ல் இந்தியா சீனப் போர் நடந்துஅ திபெத்தை மயமிட்டே சீனப்படைகள் இந்தியாவை வெற்றி கொண்டது. திபெத் வழியாகவே சீனப்படைகள் இந்தியாவை எதிர் கொண்டது.
எப்படி திபெத்தும் ஆப்கானும் பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவுக்கு அரண் என்று தங்களின் ஏகாதிபத்திய போர் வெறிக் கொள்கைக்காக கற்பித்தார்களோ அது போலவே இந்தியாவின் தென் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை மீதான இந்திய ஆதிக்கமும் தேவையானது என கற்பித்தார்கள். முதலில் ஐய்ரோப்பிய வர்த்தகர்களாலும். பின்னர் போர்த்துக்கீசியராலும், டச்சுக்காரர்களாலும், பின்னர் ஆங்கிலேயராலும் இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட போது காலனியின் காலனிப் பிரேதசமாக இலங்கையையும் வெள்ளையர்கள் மாற்றினார்கள். வர்த்தக, வணிக கேந்திர முக்கியத்துவமும்,கேளிக்கை பொழுதுபோக்கிற்காகவும் தீவு பயன்படுத்தப்பட்டது.எப்படி இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகும்.‘‘ சிந்தனையால் இந்தியனாகவும் ருசியால் வெள்ளைக்காரனாகவும்’’ ஒரு இந்தியக் குழந்தை வளரவேண்டும் என மெக்காலே ஆசைப்பட்டாரோ அது போலவே சிந்தனையால் இலங்கையராகவும் ருசியால் வெள்ளையர்களாகவும் வளர்க்கப்பட்டவர்தான் டி.எஸ். சேனநாயகாவும் அவரது ஐக்கிய தேசீய கட்சியும்.
வெளிஉறவு தொடர்பான இலங்கைக் கொள்கையை வகுத்த சோல்பாரியும், ஜெனிங்ஸ்சும், மேற்குலக வெள்ளை ஒழுக்கத்தை இலங்கைத் தீவின் ஒழுக்கமாக கொண்டார்கள். இடதுசாரி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்று கட்டமைத்தார்கள்.இந்திய எதிர்ப்பும் வெள்ளை ஒழுக்கமும் சேர்ந்துதான் இனவாத நெருப்பை சிங்கள ஆட்சியாளர்களின் மனதில் கொளுத்தியது.
மேற்குலக சிந்தனை மரபில் சிங்களத் தலைமை தாயார்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் பரிசளித்துவிட்டுப்
போன இந்திய காங்கிரஸ் தலைமை இலங்கையிடம் எப்படி நடந்து கொண்டார்கள். இலங்கைக்குள் இந்தியாவுக்கு எதிரான போக்கை கட்டமைத்த வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்டத்தில் சிதறிக்கிடந்த பல நூறு சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்னும் ஒரு துணைக்கண்டத்தை உருவாக்கினார்களோ அது போல இலங்கையையும் இந்தியாவோடு இணைத்துவிடும் ஆசை இந்திய பூர்ஷவாக்களுக்கும்
இருந்தது. ‘‘இந்திய சமஷ்டி அரசில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நீடிக்கலாம்’’ என்று தன் ஆசையை 1945&ல் வெளிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இந்திய வரலாற்றாசிரியர் கே.என்.பணிக்கரோ ‘‘ இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்றார். இந்தியாவில் உருவாகி வரும் எண்ணங்களைப் பார்த்த இலங்கை பூர்ஷவாக்கள் இந்தியா இலங்கையை ஆக்ரமித்து இந்தியவோடு இணைத்துக் கொள்ளுமோ என்று பயந்தனர். உடனே இந்தியாவிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் 1947&ல் டி.எஸ். சேனநாயகா பிரிட்டீஷாரேடு இரண்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். ஒன்று திருகோணமலையில் பிரிட்டீஷாருக்கு கடற்படை தளம் அமைப்பது.இன்னொன்று இலங்கையின் பாதுகாப்பை பிரிட்டீஷார் பொறுப்பேற்பது. உடனே 1949&ல் இந்திய தேசீய காங்கிரஸின் தலைவர் சீதாரமைய்யாவோ ‘‘ இந்தியாவுக்கு விரோதமான நாடுகளுடன் இலங்கை உறவு கொள்ளக் கூடாது என்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு பாதுகாப்புக் கொள்கையே இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை
எச்சரிக்கும் தொனியில் சொன்னார். இலங்கை மீதான் இந்த விருப்பங்கள்.
இந்தியா, சீனா, ரஷயா இந்த மூன்று தரப்பினருமே தங்களை நெருக்குவதாக உணர்ந்த ஐக்கிய தேசீய கட்சியின் அணுகுமுறை இந்தியாவுக்கு எதிராகவே இருந்தது. இந்தியப் பாகிஸ்தான் போரின் போது இலங்கை பாகிஸ்தானை ஆதரித்ததோடு இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்காளதேசத்தை நீண்ட நாள் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் அணிசேராக் கொள்கையின் பிதாமகன்கள் என்றும் அமெரிக்காவின் முகாமிலிருந்து விலகி ரஷ்யாவின் தலைமையை ஏற்றுக் கொணடவர்கள் என்றும் ஒரு தோற்றம் இருந்தது, ஜனதாககட்சி ஆட்சிக்கு வந்து மொராஜ்ஜிதேசாயாய் இந்தியாவின் பிரதமரான போது. 1978&ல் ஒரு முறை இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக இலங்கைக்குப் போனார். அங்கு பேசிய தேசாய் ‘‘இலங்கையின் இனப்பிரச்சனை உள்நாட்டுப் பிரட்டனை என்றும் தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும்’’ என்றார். மொராஜ்ஜிதேசாயும் அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் அமெரிக்க ஆதரவு சக்திகளாக இருந்ததால் இருதரப்பினருமே பரஸ்பரம் அனுசரித்துப் போக விரும்பினார்.
ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் போட்டிக்கான பரிவர்த்தனையில் இந்தியா எப்படி நடந்து கொண்டது என்றால் அது எப்போதும் இலங்கையை தன் காலனிப்பகுதியாகவே வைத்திருக்க விரும்பியது. மேற்குலக நாடுகளோடு இராணுவ ஒப்பந்தங்களை செய்ய எண்பதுகளில் பிரேமதாசா முயர்சித்த போது இந்தியாவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்திரா ஆட்சிக்கு வந்த புதிதில் அமெரிக்க எதிர்ப்புணர்வு இந்தியாவில் இருந்த அதே நேரத்தில் இலங்கையை இந்தியா ஆக்ரமிக்கும் என்ற சிந்தனையும் வேறோடிப் போயிருந்தது. தென்னாசியாவில் இந்தியாவை தனிமைப்படுத்த நினைக்கும் முயர்ச்சிகளை இந்தியா அறிந்திருந்தது. இலங்கை மீது தலையிடுவதற்கான அதை ஆக்ரமிப்பதற்கான தார்மீக அரசியல் நியாங்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கையை அச்சுறுத்த நினைத்தது இந்தியா.இடமிருந்தால் ஆக்ரமிக்கவும்.
சுதந்திர இந்தியாவில் நேருவுக்குப் பிறகு குல்சாரிலால் நந்தா, லால்பகதூர் சாஸ்திரி, மொராஜ்ஜிதேசாய் என சில பிரதமர்கள் பதவிக்கு வந்த போதும் அவர்கள் இந்துச் சமுத்திரம் தொடர்பாக அதிக நாட்டம் கொள்ளவில்லை. 1966&ல் இந்தியரா காந்தி பிரதமரான போது இந்து மகாச் சமுத்திர அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார். 1974&ல் பிரதமராக இருந்த இந்திரா தமிழகப் பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். அன்றைக்கு இருந்த சூழலில் இலங்கையை அமெரிக்காவின் பிடியில் இருந்து மீட்டு இந்தியாவின் அனுசரணையாளராக மாற்றவே இந்தியா இவ்விதமாய் நடந்து கொண்டது. இன்றைக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கி உள்ளன. இந்துச் சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்திய அமெரிக்காவை வெளிப்படையாக எதிர்க்க முடியாத இந்திரா இலங்கைக்கு ஏராளமான மறைமுக உதவிகளையும் செய்தார்.ஆனால் இந்தியாராவின் உதவிகள் இலங்கையை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றவில்லை ஏனென்றால் இந்திரா ஆட்சியில் இருந்த போது இலங்கையின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனே அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
1980-ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட புதுடில்லி மாநாட்டில் பேசும் போது ‘‘ கடந்த காலத்தில் இந்து சமுத்திரமானது ஆதிக்கச் சக்திகளை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இன்று இப்பிராந்தியம் அபாயகரமான கொந்தளிப்பாக காட்சியளிக்கிறது இந்து மகாச் சமுத்திரத்தில் கட்டு மீறிச் செல்லும் இராணுவ மயமானது இந்தியாவின் 3,500 மைல் நீள கரையோர எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள அந்நிய நாடுகளின் இராணுவத் தளங்கள் இப்பிராந்தியத்தில் அண்மித்திருப்பதையும் அந்நிய யுத்தக் கப்பல்கள் இப்பிராந்தியத்தில் பவனி வருவதையும் நியாயப்படுத்தக் கூடிய எந்த ஒரு கோட்பாட்டினையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று கேள்வி எழுப்பி எச்சரித்தார் இந்திராகாந்தி.
இந்திராவின் இந்தப் பேச்சு தென்கிழக்கில் சிறு சலசலப்பை உறுவாக்கிய போது இந்திய வெளிவிவாகரத்துறையின் அமைச்சகம் 1981&ல் வெளியிட்ட அறிக்கையில்,
''உலகப் பதட்ட நிலையில் மையம் அய்ரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அத்து மீறி நிர்ணயிக்கப்படும் இராணுவத்தளங்களும் புதிய அணிசேர்க்கைகளும் மேற்காசியாவிலுள்ள பொதுவான பதட்ட நிலையும் பாகிஸ்தான் உட்பட இந்நாடுகளுக்கு வழங்கப்படும் நவீனரக ஆயுத உதவிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ’’ என்ற அந்த அறிக்கை டியாகோ கார்ஷியாவில் ஞிவீமீரீஷீ நிணீக்ஷீநீவீணீ ) உள்ள பிரிட்டன் தளம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் இந்தியாவின் தென் பிராந்தியத்தில் இருந்து 1,100 மைல் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பிரிட்டன் அமெரிக்க கூட்டு இராணுவத் தளம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக அறிக்கை குறிப்பிட்டது.
இந்தியாவின் இந்தக் கொதிப்புகள் உயர்ந்த காலத்திலேயே 1983&ல் இலங்கையில் தமிழ் மக்களுக்குன் எதிரான இனக்கலவரமும் வந்தது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் இந்திராகாந்தி.இலங்கை மீதான இந்தியத் தலையீடு என்பது சுரண்டல் நோக்கங்களைக் கொண்டது. தலையிடாக் கொள்கைதான் எங்களின் அயலுறவுக் கொள்கை என்று சொல்லிக் கொண்டே அத்து மீறி பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தலையிட்டது இந்தியா இன்றும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின்னர் கம்யூனிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு இன்று உலகம் ஒற்றை அதிகாரத்தின் கீழ மறுகாலனியாக்கம் செய்யப்படுகிறது. எப்படி அமெரிக்கச் சந்தைக்கான நுகர்வுப் பொருளாக இந்தியார்கள் மாற்றப்பட்டிருக்கிறார்களோ. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி மாற்றப்பட்டதோ அது போல தங்களின் தரகு முதலாளித்துவ வணிக நோக்கத்துக்காக இலங்கையின் போர் வெறியை ஆதரிப்பதோடு. இலங்கையின் இருப்பையே தீர்மானிக்கும் பொறுப்பை இந்தியா இன்று ஏற்றுக் கொண்டிருகிறது. மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் பெரும் பதட்டத்தை உருவாக்கிவரும் அமெரிக்கா இன்று தென்கிழக்கின் அடியாளாக இந்தியாவை உருவாக்கி வைக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் வரிசையில் இந்தியாவும் இன்று பயங்கரவாத ஆபத்துள்ள நாடுதான். இந்தியாவின் பார்ப்பன இந்து மதவெறிப்பாசிசம் எப்படி ஆரிய சிந்தனைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் கைகோர்க்கிறதோ அது போலவே இலங்கையின் சிங்கள இனவெறிப்பாசிசமும் மேற்குலகோடு கூடுகிறது. இந்தியா அதை ஊதி விடுகிறது.
இலங்கை மீதான இந்தியாவின் இன்றைய நோக்கங்கள்.
இலங்கைத் தீவு பதட்டமாக இருக்கிற வரை அது தென்கிழக்கில் தன்னை அண்டியே இருக்கும் என இந்தியா நம்புகிறது.அது மட்டுமல்லாமல் வர்த்தக நலன் நோக்கில் இலங்கையை தனது காலனிப்பகுதியாக வைத்து சுரண்டலாம் என்கிற நோக்கமும் இந்தியாவுக்கு உண்டு. மீள்கட்டுமானம் என்கிற பெயரில் எப்படி இன்று ஆப்கானுக்குள் இன்று இந்தியா நுழைந்திருக்கிறதோ அதே பாணியிலான மீள்கட்டுமானத்திற்கு இந்தியாவின் சந்தைகளைக் கேட்கிறார்கள் இந்திய முதலாளிகள். அமெரிக்கா மூன்றால் உலக நாடுகளுக்கு விரித்த வலையை இந்தியா இலங்கைக்கு விரித்தது. இலங்கையோ தனது உள்நாட்டு இன முரணையே தென்கிழக்காசியாவின் பிராந்திய அரசியலாக்கி ஆயுத வியாபரத்தில் ஈடுபடுகிறது.
எண்பதுகளில் இருந்துதான் இலங்கையின் இனமுரண் தொடங்குகிறதா? இலங்கைக்குள் சிங்கள பெருந்தேசீய இனத்தின் இனவாதத்திற்கு தமிழ் மக்களா முதல் பலியாகினர் என்று பார்த்தால் சிங்கள இனவாதத்தின் வேர் வெள்ளை ஓழுக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
1930&பதுகளில் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது அதற்கு கிரேட் டிப்ரஷன் (great depration) என்று பெயர் வைத்தார்கள் அப்போது, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி அன்றைய உலகையும் பாதித்தது. தமிழகத்தின் பஞ்சத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட வெள்ளையர் எப்படி பத்து லட்சம் கூலி அடிமைகளை தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்குள் இறக்குமதி செய்தார்களோ அது போலவே கொச்சியிலிருந்தும் ஏராளமான மலையாளிகள் வெள்ளைத் துரைமார்களின் வீடுகளில் வீட்டுப்பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த தொழிலாளர்கள் இலங்கையில் நூற்றாண்டுகாலம் வாழந்து பழகிய பிறகு அவர்கள் தேயிலைத் தோட்டங்களையும் காப்பித் தோட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிய பிறகு இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பலியானார்கள். பொருளாதார வீழ்ச்சி தேயிலைத் தொழிலை பெரும் வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது. அன்றைய தேயிலை பொருளாதாரம் என்பது மேற்குலகிற்காகவும் அமெரிக்க சந்தைகளுக்காகவுமே இலங்கையில் செய்ற்பட்டது. ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு தேயிலைத் தொழிலாளர்கள் வேலையிழந்த போது. இலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள தொழிலாளர்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நாடெங்கிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் மலைத்தோட்டத் தொழிலாளரையும் மலையாள உழைப்பாளிகளையும் சிங்கள உழைக்கும் மக்களையும் மிகப் பெருமளவில் பாதித்தது. பெருமளவு தொழிலாளர்கள் வேலையிழந்த போது பூர்ஷ்வாக்களின் வீடுகளில் வீட்டுப்பணியாளர்களாக இருந்த மலையாளிகள் சிங்கள இனவாதிகளின் கண்களை உறுத்தினார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கும் வேலையின்மைக்கும் இன ரீதியான காரணங்கள் சுட்டப்பட்டன. தொழிற்சங்கங்களே இனரீதியான காரணங்களை கற்பித்து பெரும்பான்மை சிங்களர்களை மலையாளிகளுக்கு எதிராக திருப்பி விட்டனர்.
1930&பதுகளில் கிட்டத்தட்ட முப்பாதாயிரம் பேர் வரை மலையாளிகள் வீட்டுப்பணியாளர்களாக இலங்கையில் இருந்தார்கள். அவர்கள் கேரளத்தின் கொச்சியில் இருந்து அழைத்து வரப்பட்டதால் ‘கொச்சியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். வெள்ளையரின் பிரித்தாளும் சிந்தனை மரபை கைக்கொண்ட ஐக்கிய தேசீயக் கட்சியும் அன்றைய தொழிற்சங்கங்களும் இனவாதத்தை ஒரு அரசியல் கருவியாக கையெடுத்த போது அதற்கு முதல் பலியானது கொச்சியர் என்று அழைக்கப்பட்ட மலையாளிகளே! மே நாள் ஊர்வலங்களில் மலையாளிகளுக்கு எதிரான கருத்துக்கள் உருவாக்கப்பட்டு சிங்கள பெரும்பான்மை வாதத்தை முன்வைத்தனர்.
‘‘எவ்வாறு ஒரு மலையாளி தொழிற்சாலைக்குள் நுழைகிறான் என நாம் பல வழிகளில் அறிகிறோம். மலையாளிகள் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றி இலங்கையின் சிங்கள மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலையில் இருப்பதால் அவர்கள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.’’ என்று சிங்கள ஏடான ‘வீரயா’ இதழ் 1936&மார்ச் 31 &ஆம் தேதி தலையங்கம் எழுதியது. மேன்மை தாங்கிய ஆரிய இனத்தின் வழித்தோன்றல்களாகிய சிங்கள இனம் இனி இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களைச் சுரண்டப்படுவ அனுமதிக்காது என அறிவித்தார்கள் இந்த புதிய எஜமானர்கள். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் உருவான இனத் தூய்மைத் தத்துவத்தை கைக் கொண்ட டி.எஸ்.சேனநாயகாவும், ஏ.ஈ. குணசிங்காவும் இந்த பெரும்பான்மை தூய்மைவாதத்தை முன் வைத்து அதை ஒரு இயக்கமாக நடத்தினர். 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பௌத்த கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இவர்கள் தங்களுக்குத் தாங்களே கறிப்பித்துக் கொண்டனர். பெரும்பான்மை சிங்கள மக்களையும் அந்த கற்பிதத்தின் பால் நகர்த்தினர்.
ஆரியர் அல்லாதோரின் வீடுகளில் ஆரியப் பெண்கள் பணிசெய்வதை ஹிட்லர் எப்படி தடை செய்தாரோ அது போல சிங்களர் இல்லங்களில் மலையாளிகள் பணி செய்வதை தடை செய்ததோடு சிங்கள இளைஞர்கள் மலையாளப் பெண்களை மணம் முடிப்பதையும் மலையாள இளைஞர்கள் சிங்களப் பெண்களை மணம் முடிப்பதையும் தடைசெய்தார்கள் இவர்கள். ‘‘மலையாளிகளை பகிஷ்கரிப்போம்’’ என்ற கோஷத்தின் அடிப்படையில் கொச்சியருக்கு எதிரான சிந்தனைகள் சிங்கள மக்களிடம் வேகமாக பரப்பட்டது, தங்களின் துன்பமான வாழ்வுக்கு மலையாளிகளே காரணம் என்றும் வேலைவாய்ப்பும் வறுமையும் மலையாளிகள் கொடுத்த பரிசு என்றும் பெரும்பான்மை சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.
சிங்கள வலதுசாரிகள் ஒரு பக்கம் சிறுபான்மை மலையாளிகளை தனிமைப்படுத்தி பெரும்பான்மை இனத்திற்கு எதிராக நிறுத்திய போது. ‘வீரயா’ ஏடு தொடர்ந்து மலையாளிகளுக்கு எதிராக விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தது.‘‘அது மலையாளிகளை ‘‘கொள்ளை நோய்’’ என்று எழுதியது. ‘‘ கொச்சி சொய்சோ’’ என்ற கோஷம் வெகுவாக பறவிய போது மலையாளத் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் அடிமைகளைப் போல முடக்கப்பட்டார்கள்.
கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே கோபாலன் 1939&ல் இலங்கைக்கு பயணம் சென்றார் இலங்கை கம்யூனிஸ்களோடு தொடர்பை ஏற்படுத்தவும் இலங்கையில் வாழும் சிறுபான்மை மலையாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் ஏ.கே. கோபாலனின் பயணம் இருந்தது. கோபாலனின் வருகையை ஒட்டி சிங்கள இடதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களை அன்றைக்கு ஐக்கிய தேசிய கட்சி நடத்த அனுமதிக்கவில்லை. கோபாலனுக்கு சிங்கள பேரினவாதிகள் தங்களின் எதிர்ப்பைக் காட்டினார்கள்.விவாசாயிகள் இயக்கத்தின் தலைவரும் கம்யூனிஸ்டுமான ஏ.கே.கோபாலன் தான் எழுதிய சுயசரிதையில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘‘மிக மோசமானதும் ஆபத்துமான ஒரு காலக்கட்டத்தில் நான் இலங்கைகுச் சென்றேன். மலையாளிகளுக்கு எதிரான பகையுணர்வு சிங்களர்களிடம் கொழுந்து விட்டெரிந்தது. சிங்களர் மலையாளிகளின் பகை அதன் உச்சத்தை அடைந்திருந்தது’’ என்று தன் சுயசரிதையில் எழுதினார் ஏ.கே.கோபாலன்.
கடைசியில் பல்லாயிரம் மலையாளிகள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்தனர். மீதியிருந்த மலையாளிகள் சிங்கள இனத்தோடு கலந்து தங்களின் அடையாளத்தை இழந்தார்கள்.மேன்மைதாங்கிய ஆரிய இனம் என்கிற கருத்தாக்கமும், ஐய்ரோப்பிய இனத்தூய்மைத் தொடர்பும் பண்பாட்டுப்பாசிசமாக உருவான அதே வேளையில் சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற கருத்துருவையும் ஏற்படுத்தியது.
முதலில் மலையாளிகள், பின்னர் மலைத்தோட்டத் தொழிலாளர்கள், முஸ்லீம்கள், கடைசியில் தமிழ் மக்கள் என சிங்கள பேரினவாதம் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு அரசு பயங்கரமாக உருவானது இப்படித்தான்.
இந்துச சமுத்திர பிராந்தியத்தை ஆக்ரமிக்கும் நோக்கோடு வல்லரசுகளுக்கிடையில் நடந்த போட்டியும் நேரடியாக அல்லாமல் காலனி நாடுகளை தங்களின் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் மேற்குலக தந்திரமும்தான் இலங்கையில் பெரும்பான்மை வாதத்தை ஊதி விட்டது. உலகம் இரு துருவங்களாக பிளவுண்டிருந்த போது இந்தியாவால் இலங்கையை நினைத்தபடி ஆட்டுவிக்க முடியவில்லை. அமெரிக்காவின் அந்தப் புறமாக எப்போதும் இருந்து வரும் இலங்கை மீதான இந்திய அணுகுமுறை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேறு மாதிரியாக இருந்தது. தொண்ணூருகளுக்குப் பிறகு இன்று அமெரிக்காவின் அந்தப்புரமாக மாற்றப்பட்டிருக்கும் இந்தியா இன்று இலங்கையை அணுகிற விதமும் மாறுபட்டிருக்கிறது. நடந்து கொள்கிற விதம் மாறியிருக்கிறதே தவிற அப்போதும் இப்போதும் இந்தியா இலங்கையை தன் காலனிப்பகுதியாகவே வைத்திருக்க விரும்புவதை இன்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படி காத்திருந்த இந்தியா இலங்கைமீது தலையிடுவதற்கு ஒரு வாய்ப்பாக வந்து கிடைத்ததுதான் ஈழத் தமிழ் மக்கள் மீதா ஜூலைக்கலவரம். அதை சரியாக பயன் படுத்திக் கொண்ட இந்திரா இலங்கை அரசை பணிய வைக்க போராளிக்குழுக்களை பயன்படுத்திக் கொண்டார். பணியவும் வைத்தார், ராஜீவ்காந்தியின் ஆட்சியிலும் இதே விதமான அணுகுமுறைதான் ஆனால் ஒரு வித்தியாசம் ஆயுதப் பயிர்ச்சிகளைப் பெற்ற போராளிக் குழுக்கள் இந்தியாவின் சொற்படி கேட்டு நடக்கவில்லை. இங்குதான் இந்திராவிலிருந்து ராஜிவ்காந்தி இலங்கை இனப்பிரச்சனையில் வேறு படுகிறார். அதனால்தான் நிர்பந்தம் செய்து புலிகளை கொண்டு வந்து ஒப்பந்தமும் போட்டார். விடுதலைப்புலிகள் இந்தியாவுடன் முரண்பட்டதும் இந்தியப் படைகள் ஈழத்துக்குள் நுழைந்ததும் அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதும். அதைத் தொடர்ந்து ராஜீவ்கொலை நடந்ததும் . என அதற்குப்பிறகான இந்த பதினைந்து ஆண்டுகாலத்தில் இந்தியா இலங்கை விவாகரத்தில் இருந்து ஒதுங்கியிருந்தது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.ஆனால் அது பொய்.
விரைவில் வெளிவரவிருக்கும் ”அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை” என்ற எனது நூலின் ஆறாவது அத்தியாயம்
இந்தப் போர் எங்களோடு முடிவது இல்லை
டி. அருள் எழிலன் \
‘‘இந்த ஒப்பந்தம் எமது அரசியல் இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவத்தினர் ஏற்கிறார்கள். நாம் ஆயுதங்களை கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கே இடித்துக் கூற விரும்புகிறேன்.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்க வில்லை: சிங்கள: இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை’’ ‘‘தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலக்கட்டத்திலும் தேர்தலில் பங்கு பெறப் போவதில்லை முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். ’’
இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது 1987& ஆகஸ்ட் 4&ஆம் நாள் ஈழ மக்களிடம் ஒரு குழப்பம் நிலவியது அந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் திரண்டிருந்த ஈழ மக்களுக்கு மத்தியில் ‘‘நாம் இந்தியாவை நேசிக்கிறோம்’’ என்னும் தலைப்பில் பிரபாகரன் நிகழ்த்திய உரையின் சில வரிகள்தான் இவை. இருபதாண்டுகளைக் கடந்து விட்ட இந்த உரை இன்று காலத்தினால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இடையில் கழிந்த இருபதாண்டுகளில் ஈழத்தில் யார் யாரோ வந்து போய் விட்டார்கள். சமாதானப்பேச்சுக்கள், சண்டை நிறுத்தங்கள், இயற்கைப் பேரிடர்கள், இடம் கடந்து செல்லல் என்று காலம் ஈழ மக்களை கடத்தி வந்திருக்கிறது. ஆனால் ஈழத் தமிழர் மேல் பூசப்பட்டுள்ள இனவாத துன்பச் சேறு இன்னும் கரைந்த பாடில்லை. யாராலும் அதை கழுவித் துடைக்கவும் முடியவில்லை. ‘‘இலங்கை சிங்களர்களுக்கே சொந்தம்’’என்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்வதன் மூலம் இனவெறியின் கோர முகத்தை அறியலாம்.
ஆனாலும் கால் நூற்றாண்டை விழுங்கி விட்ட காலம் யதார்த்தத்தின் முன்னால் மெத்தனமாக அகங்காரத்துடன் நிற்கிறது கோரமான சிங்கள முகத்துடன். இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிட பத்து ஆண்டுகள் கூட காத்திருக்க தேவையில்லாமல் போய் விட்டது. புலிகள் என்கிற போராளிக் குழு இந்திய இலங்கை தரப்பிற்கு வழங்கிய சந்தர்ப்பம் இரண்டு தரப்பையுமே நகைத்திருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் அமெரிக்க காலனியத்தின் சந்தையாக மாறியிருக்கிறது இந்த இருபதாண்டுகளில். ஆனால் புலிகள்?
இந்தியா உண்மையாக ஈழ மக்களை இலங்கையை நேசித்திருந்தால் இந்தப் போர் எப்போதோ முடித்து வைக்கப்பட்டிருக்கும். தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமாதான, சகவாழ்வு, வாழாவிடினும் பாதுகாப்பான ஒரு வாழ்வை தங்களின் தாயங்களில் வாழ்ந்திருக்க முடியும். விமானப்படை உருவாக்கி இலங்கையின் மூல பொருளாதாரத்தை பலவீனமாக்கும் புலிகளின் போர்த்தந்திரத்தைப் பார்க்கும் போது போர் அடுத்த தலைமுறைக்கும் கைமாறியிருப்பதை அறிய முடிகிறது. அநீதியான இந்த போர் எத்தனை தலைமுறைகளைத்தான் கொன்று தீர்க்கப் போகிறது. இடையில் கழிந்த இருபதாண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்கள் இனவெறி வடிவத்தை இறுக்கமாக பின்னியிருக்கிறார்கள்.
புலிகளோ அதே தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையோடு எந்த மாற்றமும் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் போர் முறையை வளர்த்தெடுத்திருக்கிறார்களே தவிற கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை. சுதுமலையில் ஒலித்த அதே குரல் அதே கோரிக்கை இன்றும் ஒலிக்கிறது வன்னியிலிருந்து.
தமிழகம் மீண்டும் ஈழத்தை திரும்பிப் பார்க்கிறது. ஈழ மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்களை எண்பதுகளைப் போல இளைஞர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால் மழையில் நனைவதும், ஈழ மக்களுக்காக ஒப்பாரிப் பாடுவதும், கூடி உண்ணாவிரதம் இருப்பதும் அரசியல் தெளிவற்று இருப்பதால் அந்த போராட்டங்கள் நமது ஓட்டுச் சீட்டு சுகவாசிகளால் சூறையாடப்படுகின்றன. ஆனால் நம்மைப் போல அல்ல ஈழமக்கள். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வாழ்கிறார்கள். அன்றாடம் செத்து மடிகிறார்கள். நாமோ அறிக்கைகளுக்குள் வாழ்கிறோம்.
பதுங்கு குழிகளுக்குள் வாழ்வதைப் போலன்று அறிக்கைகளுக்குள் வாழ்வது. யுத்தம் அன்றாடம் உயிரை பலியெடுக்கிறது. பசியை பரிசளிக்கிறது. குழந்தமையைக் கொன்று விடுகிறது. அடுத்த தலைமுறையை வேரோடு அறுத்துச் சாய்த்து சவக்குழிகளாக்குகிறது. ஆனால் அறிக்கைகள் அப்படியானதல்ல. கோஷங்களுக்கு என்ன முக்கியத்துவமோ அதே முக்கியத்துவம்தான் அறிக்கைகளுக்கும். சில நேரங்களில் சிலேடையாகவும் பல நேரங்களில் நகைச்சுவையாகவும் அவை அமைந்து விடுவதால் சலிப்பைப் போக்கிக் கொள்ள அவைகள் உற்சாக பானமாக பயன்படக் கூடும். ஈழ விடுதலையின் சாரம் தமிழகத்தின் விழிப்பிலேயே தங்கியிருப்பதான ஒரு கருத்து பல்வேறு சிந்தனையாளர்களாலும் முன்வைக்கப்படும் சூழலில் ஈழப் போரில் தமிழகத்தின் பங்கில் ஒரு வரலாற்று ஓர்மை பொதிந்துள்ளது.
எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிடப்பட்ட கலவரத்தின் விளைவாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்ற காலம் அது. இன வெறி பாசிஸ்டுகளான சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதப் போரை தமிழகத்திலிருந்து முன்னெடுக்கும் விதமாக ஈழப் போராளிகள் தமிழகத்தை தங்களின் இயங்குதளமாக மாற்றியிருந்தனர். சொந்த நாட்டின் சூழலை எதிர் கொள்ள அண்டை நாட்டின் நிலப்பகுதியை இயங்குதளமாக மாற்றுவதும் கொரில்லா போருக்கான புறச் சூழலை வலுப்படுத்தும் தளமாக அண்டை எல்லையை பயன்படுத்துவதும் உலகெங்கிலும் உள்ள போராளிக் குழுக்களின் நடைமுறைதான். இன்று திபெத்தியர்களுக்கும் பாகிஸ்தான் பழங்குடிப் போராளிகளுக்கும் இந்தியா எதற்காக ஆதரவளித்ததோ அதை விட அதிகமாக ஈழப் போராளிகளை இந்தியா ஆதரித்தது. ஆனால் ஈழ அகதிகளை திபெத் அகதிகளைக் காட்டிலும் கேவலமாக பன்றித் தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பது போல் அடைத்து வைத்திருக்கிறது.
அதே நேரம் எண்பதுகளில் ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. திராவிட இயக்க அரசியலில் எம். ஜி. ஆர், கலைஞர் என இருவருமே போராளிகளை ஆதரித்தனர். எண்பதுகளில் திமுக மேடைகளில் மூன்று முழக்கங்கள் பிரதானமாக இருக்கும். (அதிமுக மேடைகளில் கவர்ச்சிக் கோஷம் மட்டும்தான்) மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், ஈழத்தமிழர் கண்ணீர் துடைப்போம் என்கிற மூன்று முழக்கங்களும் வலிமையாக சமூகத் தளத்தில் எடுத்து வைக்கப்பட்ட வரலாறு திமுகவிற்கு உண்டு. அதன் பின்னர் தொண்ணூறுகளில் வாக்குச் சீட்டு அரசியலில் வீழ்ச்சியும் உதிரிக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியும் தேசிய கட்சிகளின் முக்கியத்துவத்தை டில்லியில் குறைத்தது அல்லது உடைத்துப் போட்டது.
மத்தியில் யார் ஆட்சியமைத்தாலும் தென் மாநிலங்களின் உதவி இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது அதிலும் குறிப்பாக தமிழக கட்சிகளின் துணையில்லாமல் அதிலும் திமுக,அதிமுக என்கிற இரண்டு கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாத சூழல். மத்தியில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய திமுகவின் மேடைகளில் இன்று இந்த மூன்று கோஷங்களும் இல்லை. அப்படியானால் மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் வந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இந்தி திணிப்பு என்பதே ஒழிந்து போன ஒன்று என எடுத்துக் கொள்வதா? அல்லது ஈழத் தமிழனின் கண்ணீர்தான் துடைக்கப்பட்டு விட்டதா?
என்றால் இன்றைக்கு ஈழத்தில் கேட்கிற அதே அழுகுரல்தான் அன்றைக்கும் கேட்டது. முப்பதாண்டுகளைக் கடந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் விருப்பத்தையும் மீறி தமிழக முதல்வரின் விருப்பத்தையும் மீறி இந்தியா இலங்கை அரசின் போரை ஆதரிக்கிறது. இலங்கை அரசு ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட போரை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதே இல்லையா? இந்தியா ஏன் இந்தப் போர் தொடருவதை விரும்புகிறது. எப்போதெல்லாம் இந்தியா இலங்கை அரசை ஆதரித்ததோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான போரை இலங்கை தீவீரப்படுத்தியிருக்கிறது. எப்போதெல்லாம் இந்தியா இலங்கையை கண்டித்ததோ அப்போதெல்லாம் இலங்கை பலவீனமாகியிருக்கிறது.
யாழ்குடா நாட்டை கைப்பற்றும் நோக்கோடு ஊரடங்குச் சட்டத்தை அமல் படுத்தி 1987& மே மாதம் ‘ஆப்பரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கையை முடுக்கி விட்டது இலங்கை ராணுவம். இந்தப் படையெடுப்பை விரும்பாத இந்தியா ஜூலையில் போர் விமானங்கள் மூலம் வடமராட்சி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களைப் போட்டது. உணவுப் பொருட்களை அப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்தியா அனுப்பி வைக்காமல் ஒரு அண்டை நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி தன் விமானங்களை பறக்க விட்டு உணவுகளைப் போட்டது. ஜெயவர்த்தன வடமராட்சி மீதான படையெடுப்பை கைவிட்டார். இந்த கைவிடலும் பின்னர் வந்த இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் என்ற இரண்டுமே ஈழ விடுதலைப் போரில் கசப்பான பல நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றது இரு பக்கமும். வடமராட்சியின் மீதான போரை இந்தியாதான் நிறுத்தியது.
இலங்கை விவாகரத்தில் எப்போதும் இரட்டை அணுகுமுறையையே கடை பிடித்திருக்கிறது. இந்திராவின் காலத்தில் இருந்தே இதுதான் நிலை. அது ஒரு பக்கம் பார்த்தசாரதியை சாமாதானத் தூதராக இலங்கைக்கு அனுப்பும். இன்னொரு பக்கம் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஈழத்தில் இறக்கும். இரு தரப்பும் ஒன்றை ஒன்று மோதி வென்று விடாமல் போரை நீடிப்பதுதான் அன்றைய இந்தியாவின் அணுகுமுறை. இன்றைய இந்தியா பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு என்று ஒரு பக்கம் சொல்லும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கும். ஆயுதமும் வட்டியில்லாக் கடனும் கொடுக்கும். கூடவே இலங்கையில் வேறு குழுக்களை உருவாக்கவும் முயற்சிக்கும்.
ஆனால் இந்தியாவை தட்டிக் கழிப்பது என்பது இலங்கைக்கு கைவந்த கலை. இந்திராவின் தூதுவர் பார்த்தசாரதி உருவாக்கிய கிuஸீமீஜ்uக்ஷீமீ ‘நீ’ &யை நிராகரித்தது இலங்கை அரசு. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் பிரதான கூறுகளில் ஒன்றான வடக்கு கிழக்கு இணைப்பை உச்சநீதிமன்றத்தின் மூலம் உடைத்தெறிந்தது இலங்கை அரசு. வடக்கு கிழக்கை மூன்று அல்லது நான்கு கூறுகளாக்கி தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து அவர்களை சிதறடித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது இன்னும் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. (இதெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. வி. தங்கபாலுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெறுமனே இந்திய,இலங்கை அமைதி ஒப்பந்தம்தான் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு என்று கூவிக் கொண்டிருப்பதை விட்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை சரி பண்ண போதுமான கவனம் எடுப்பது நல்லது.)
அது போல இந்தியா முன்னெடுத்த திம்பு பேச்சுக்களில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகளும் அது தொடர்பாக ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் தயாரிக்கப்பட்ட மகஜர் இன்னும் இந்திய புலனாய்வு அலுவலகத்தில் இருக்கக் கூடும். அதை தேடி எடுத்துப் பார்த்தாலே தெரியும் அதில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எதுவும் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை. மாறாக தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான ஜனநாயக கோரிக்கையாகவே இருக்கும். திம்பு பேச்சுக்களின் தோல்விக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஈழப் போரின் தனிபெரும் சக்திகளாக வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும். இந்தியாவை யார் உதாசீனப்படுத்தினார்கள் தட்டிக் கழித்தார்கள் என்று பார்த்தால் பல உண்மைகள் நமக்குத் தெரிய வரும்.
ஒப்பந்தங்களை தொடர்ந்து சிதைத்து வந்தது. பேச்சுவார்த்தை மேஜைகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களைக் கூட அமுல் செய்யாமல் இழுத்தடித்தது. சுனாமி நிதியைக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் ஊழல் செய்தது என இந்தியாவை இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்ததை காலம் அறியும், ஆனால் போராளிகள் இந்தியாவை எப்போதும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கையில் தெரிகிறது. சகோதரக் குழுக்களுக்குள் எழுந்த மோதல் தமிழகத்திலும் சில விசும்பல்களை ஏற்படுத்த நமது தாய்நாட்டிலிருந்தே ஈழத்துக்காக போராடலாம் என்று யாழ்ப்பாணம் திரும்பிச் சென்ற பிரபாகரனையும் ஏனைய சில போராளித் தலைவர்களையும் வேண்டி விரும்பி அழைத்தது இந்தியாதான்.
அதனூடாகத்தான் விருந்தாளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது தமிழக மக்களிடம் போராளிகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழக தலைவர்கள் போராளிகள் மீது செலுத்திய செல்வாக்கு என இந்திய மத்திய அரசு இலங்கை மீதான தன் அயலுறவுக் கொள்கைக்கு போராளிகளையும் தமிழக தலைவர்களையும் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் பேச்சுவார்த்தைக்கு போராளிகள் சம்மதித்தது என்பது இந்தியாவின் நிர்பந்தத்தின் பேரிலேதான் நடந்தது. அது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தையும் ஈழ மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் மூன்றாம் தரப்பாக்கி இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக தலைவர்களையும் தமிழக மக்களையும் ஒரு காயாக பயன்படுத்திக் கொண்டது இந்தியத் தரப்பு.
பல நேரங்களில் இந்தியா போராளிகளை பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்க வைக்க எம். ஜி. ஆரை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் ஈழத் தமிழர் நலன் தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடும் தமிழக மக்கள் மற்றும் தமிழக தலைவர்களின் நிலைப்பாடும் ஒன்றாகவா இருந்தது? அன்றிலிருந்து இன்று வரை மத்திய அரசின் நிலைப்பாடும் தமிழக மக்களின்,தமிழக தலைவர்களின் நிலைப்பாடும் வேறு வேறானவை. இன்னும் சொல்லப்போனால் எதிரெதிரானவை. இந்தியா இலங்கை ஆட்சியாளர்களை மிரட்டியோ கெஞ்சியோ வலிந்த நட்பை உருவாக்கி ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்க்க முற்பட்டனர். தீர்க்க முற்பட்டதைக் காட்டிலும் இரு தரப்பும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் ஊடாக இனப் பிரச்சனை தீராமல் தொடர்ந்து அதை நீடிக்க விடுவது என்பதாய் கூட இந்தியாவின் அணுகுமுறை இன்று வரை இருந்து வருகிறது.
எண்பதுகளில் பிராந்திய நலன் நோக்கில் இலங்கையில் வேறு எந்த நாடும் கால்பதிப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் பிராந்திய நலனுக்கு தோதாக அன்று உலகம் ரஷ்யா,அமெரிக்கா என்னும் இரு பெரும் வல்லரசுகளின் கீழ் இருதுருவ அரசியலில் கீழ் அணிதிரண்டு பங்கிடப்பட்டிருந்த சூழலில் இந்தியாவின் தென் பிராந்திய நலன் என்பது இந்து மாகா சமுத்திரத்தின் மீதும் இலங்கையின் மீதும் இருந்தது. ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா அறிவிக்கப்படாத காலனியாக மூன்றாம் உலக நாடுகளை ஆக்ரமித்த போது இந்தியாவும் இன்று அமெரிக்காவின் அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாறியிருக்கிறது. இன்று இந்தியாவுக்கென்று என்ன பிராந்திய நலன் இருக்க முடியும்.
உண்மையில் அமெரிக்காவையும் மீறி திருகோணமலைத் துறைமுகத்தை தன் மேலாதிக்கத்தின் கீழ் இந்தியாவால் கொண்டு வர முடியுமா? இந்து மகாக் கடல் பகுதியை தன் ராணுவக் கட்டுக்குள்தான் வைக்க முடியுமா? என்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த தோல்வியிலிருந்தே பிராந்திய நலனைப் பேச முடியும். வடக்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் இந்தியாவின் பிராந்திய நலன் ஆட்டம் கண்டிருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைகளே இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்று மாறிப் போன பிறகு இலங்கையை ஒரு சந்தையாக மட்டுமே பார்க்கிறது இந்தியா. அமெரிக்காவுக்கு எப்படி இந்தியா ஒரு சந்தையோ அது போல இலங்கை இந்தியாவின் சந்தை. சந்தையில் அதுவும் போர் நடக்கும் சந்தையில் எதை எதை எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ அதை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறது இந்தியா.
ஆப்கானில், ஈராக்கில், லெபனானின் நடந்த நடந்து கொண்டிருக்கிற போர்கள் எல்லாம் அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் நலனில் பேரிலேயே நடந்து வருகிறது. இலங்கையில் நடந்து வரும் போரும் முடிவில்லா போராக நீள வேண்டும் என இந்தியா விரும்புகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது காரணம். ஈழ மக்களுக்கெதிரான போரில் இந்தியா இலங்கை அரசின் கையையும் ஓங்க விட்டதில்லை. புலிகளின் கைகைகளையும் ஓங்க விட்டதில்லை தன் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் ஏவல் பையன்களைப் போல இவர்கள் போராளிகளை நடத்தினார்கள். ஆனால் ஈழ விடுதலை என்னும் விஷயத்தில் போராளிகள் விடாப்பிடியாக இருந்த ஒரே காரணத்தாலேயே போராளிகள் இந்தியாவை பகைக்கும்படியாயிற்று.
ராஜீவ் ஜெயவர்த்தனாவால் செய்து கொள்ளப்பட்ட இந்திய&இலங்கை ஒப்பந்தம் என்பது நிர்பந்தத்தின் பேரில் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசும் விரும்ப வில்லை. போராளிகளும் விரும்பவில்லை. இந்தியாவை நட்புச் சக்தியாக பார்த்த போராளிகள் இந்தியாவின் பேச்சைக் கேட்டனர். எப்படி இந்திராவின் ஆலோசகர் பார்த்தசாரதி தயாரித்த Aunexure ‘நீ’ யை ஜெயவர்த்தனா சர்வகட்சி நாடகத்தின் மூலம் குலைத்தாரோ அது போல ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தமும் சிங்கள ஆட்சியாளர்களால் குலைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட தமிழர்களின் பாரம்பரிய தாயகப்பகுதியான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட இலங்கை தன் இனவாத நெருப்பில் எரித்துப் போட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாய் அன்று நடந்த ஆயுத கையளிப்பு சடங்கு நடந்த வேளையில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் புலிகள் தரப்பை நோக்கி ஒரூ கேள்வியை வீசினார்கள். ‘‘முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கப் போகிறீர்களா?’’ ‘‘ஒரு ஆயுதத்தைக் கூட வைத்துக் கொள்ள மாட்டீர்களா? என்பதுதான் அந்தக் கேள்விகள். யோகி ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக தன் ஜெர்மன் கைத்துப்பாக்கியை இந்தியத் தளபதிகளின் மேஜையில் யாரும் எதிர்பாராத வகையில் வெடுக்கென்று வைத்த போது அதை யாராலும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. யோகியின் இந்தச் செயல்பாடு மேலோட்டமாகப் பார்த்தால் சாரமில்லாமல் இருக்கும். ஆனால் ஒரு வேளை மொத்தமாக ஆயுதங்களை அன்று புலிகள் ஒப்படைத்திருந்தால் இந்த முப்பதாண்டுகளில் ஈழ மக்கள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.
சுதுமலயில் பிரபாகரன் சுட்டிக்காட்டிய இனவாத நெருப்பு தமிழ் மக்களை பொசுக்கியிருக்கும். இன்று இலங்கை அரசு ‘‘புலிகளுக்கு ராணுவத்தீர்வையும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும்’’ வழங்குவதாகக் கூறி ஈழ மக்கள் மீது போரைத் தீவீரமாக்கியிருக்கிறது. இதை புலிகளுக்கு எதிரான போரா? ஈழ மக்களுக்கு எதிரான போரா? என்கிற கேள்விகள் மிக மிக அற்பத்தனமான அபத்தமான கேள்விகள். யுத்தத்தை விரும்பாத எவரும் யுத்தத்தை எதிர்ப்பார்களே தவிர அதை வகை பிரித்து எதிர்க்க முடியாது.
நாளை வடக்கு மக்களுக்கு சிங்கள அரசாங்கம் வழங்கப் போவதாக சொல்லப்படும் ஜனநாயத்தை கிழக்கு மக்களுக்கு ஏற்கனவே வழங்கிவிட்டது சிங்கள அரசு. கிழக்கில் கருணா குழுவின் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ அமைப்பின் பிள்ளையானைக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது இலங்கை. ஒரு பக்கம் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் நடக்கும் உட்கட்சி மோதலில் ஏராளமானோர் கொல்லப்படும் சூழலில். ஒரு போலீஸ்காரரைக் கூட கிழக்கு மாகாண அரசால் நியமிக்க முடியாத அளவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு அரசையே எம்மிடம் வழங்கியிருக்கிறார்கள் என்று பிள்ளையான் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டுகிறார். போதாக்குறைக்கு பிள்ளையானின் ஆட்கள் ஒவ்வொருவராக இலங்கை அரசால் படுகொலை செய்யப்படுகிறார்கள். கிழக்கில் நாள்தோறும் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.
பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையே நடக்கும் கோஷ்டி மோதலில் இடையில் சிக்கிக் கொண்டதென்னவோ கிழக்கு மக்கள்தான். கிழக்கின் அதிகாரம் குறித்து கருணா சொல்கிறார். ‘‘ கிழக்கிற்கு எவ்விதமான போலீஸ் அதிகாரமும் தேவையில்லை’’ என்கிறார். மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் இலங்கை அரசின் லட்சணமும் இதுதான் கிழக்கு மக்களுக்கு தவணை முறையில் ஜனநாயகத்தை பரிசளிக்கும் கருணா கும்பலின் லட்சணமும் இதுதான். ஆக அரசியல் தீர்வு என்னும் மோசடிப் பேச்சின் மூலம் துப்பாக்கிகளாலே தீர்வுகளைக் காணலாம் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால் தான் போட்ட ஒப்பந்தத்தையே இல்லாதொழித்த இலங்கை அரசை கண்டும் காணாமல் இருக்கும் இந்தியா, ஒப்பந்தம் அமைதிப்படையினரின் அட்டூழியங்கள் இவைகளின் பின் விளைவாக நிகழ்ந்த ராஜீவ் கொலையில் ராஜீவ் கொலையை மட்டும் காரணமாக வைத்து புலிகளை தடை செய்து இந்தியாவில் முடக்கியிருக்கும் சூழலில் இலங்கை அரசுக்கு வட்டியில்லாக் கடனும் ஏராளமான ஆயுதங்களையும் கொடுக்கிறது.
ஒன்றிலோ இலங்கையையும் புலிகளையும் சம அளவில் விலக்கி வைக்க வேண்டும். ஆனால் இந்தியா தங்களுக்கு யார் துரோகம் இழைத்தார்களோ அவர்களை அணைத்துக் கொள்வதில் பொதிந்திருப்பது பிராந்திய நலன் என்பதெல்லாம் இல்லை. முதலில் நாம் சுட்டிக் காட்டிய புலித்தலைவரின் சுதுமலை பிரகடனத்தையும் இந்த ஆண்டு மாவீரர் நாள் உறையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். ’’ ‘‘உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். ’’
‘‘எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.” ‘‘பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். ’’ ‘‘இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம். ’’
‘‘சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.’’ ‘‘இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர். ’’ ‘‘இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. ’’
‘‘எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். ’’ ‘‘அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. ’’
ஈழத் தமிழரின் விடுதலைப் போரை விடுதலைப் புலிகளே இன்று முன்னெடுத்து வரும் சூழலில்,இந்தியாவின் துரோகத்தை தோலிருத்துக் காட்டும் அதே சமயம் இந்தியாவின் நட்பை புலிகள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் புலிகளை மோதி வென்று விடலாம் என்று இலங்கை அரசு நினைக்கும் என்றால் அதற்கும் இந்தியாவே மௌனசாட்சி. ஏனென்றால் வெல்ல முடியுமா? முடியாதா என்பதை இந்தியா அறியும். எண்பதுகளில் பிற்பகுதியில் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படை புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைகிறோம் என்று 1987&அக்டோபர் பத்தாம் தேதி ‘ஆப்பரேஷன் பவான்’ என்ற பெயரில் புலிகள் மீது போர் தொடுத்தது. மூன்றாண்டுகலாம் நீடித்த இந்தப் போரில் ஒரு சின்ன கொரில்லா போராளிக் குழுவிடம் மோதி இந்தியா இழந்த ராணுவ வீர்களின் எண்ணிக்கை 1,500. சீனவுடனும் பாகிஸ்தானுடனும் இந்தியா நடத்திய பெரும் போரில் கூட இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு இந்த எண்ணிக்கையில் இருந்ததில்லை.
புலிகளை அழிக்கிறோம் என்று அன்றைக்கு இந்தியா வீசிய குண்டுகளும் சரி இன்றைக்கு இலங்கை வீசுகிற குண்டுகளும் சரி ஈழ மக்கள் மீதல்லவா? விழுகிறது. இல்லை இல்லை அவர்கள் புலிகள்தான் என்றால். தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளையும் ஈழ மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக முதல்வர் சொன்ன மாதிரி ‘‘புலிகள் மீது வீசப்படும் குண்டும் ஈழத் தமிழன் மேல் வீசப்படும் குண்டும் ஒன்றுதான்’’ குண்டு ஒன்றுதான் என்றால் உயிர்கள் மட்டும் வேறு வேறா?
இத்தனைக்கும் பிறகும் சர்வதேச நெருக்கடிகள் இந்தியாவின் நெருக்கடிகளையும் கடந்து ஈழப்போர் அடுத்த தலைமுறைக்கு கைமாறியிருக்கிறது. அதைத்தான் புலிகளின் தலைவர் இப்படிச் சொல்கிறார். ‘‘எத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி அந்நிய சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
மாவீரர் தின உரையில் பிரபாகரன். . .
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள். இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.
சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
எனது அன்பான மக்களே!
என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.
தனித்து நின்று போராடுகிறோம்
இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.
நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.
எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
இந்த மண் எங்களின் சொந்த மண்
சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)

ஆதவன் தீட்சண்யா
அஞ்சலி என்ற பெயரில் 'இந்தியா டுடே' கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது
அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008
மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.
அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.
அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.
அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.
அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.
-எஸ். பி
இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.
இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.
பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.
என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.
( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.
மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.
எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.
ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.
எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?
மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.
இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.
ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.
மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்.... கொலைகள்... கொள்ளைகள்... பாலியல் வன்கொடுமைகள்.... காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.
மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.
இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.
Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.
- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை.-1
டி.அருள் எழிலன்
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு தொடுத்திருக்கும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கொட்டும் மழையில் நனைந்தபடி லட்சக்கணக்கான மக்கள் தமிழக மக்கள் மத்திய அரசிடம் குரல் கொடுக்கிறார்கள்.அறுபது கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட அந்த மனிதச் சங்கிலி இந்திய மத்திய அரசுக்கு எதிரான உணர்வுச் சங்கிலி. திரைத்துறையினர் நிபந்தனைகளுடன் போராடுகிறார்கள்.மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். என இருபதாண்டுகளுக்குப் பிறகு ஈழ மக்களுக்காக தமிழகம் மீண்டும் கொந்தளிக்கிறது. ஆனாலும் மத்திய அரசு ‘‘எந்த ஒரு அயல்நாட்டின் உள்விவாகரத்திலும் இந்தியா தலையிடாது’’ என்று கைவிரிக்கிறது இந்தியா.‘‘அப்படியானால் இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் பயிர்ச்சியும் மட்டும் கொடுக்கிறீர்களே?இதுதான் உங்கள் தலையிடாக் கொள்கையின் லட்சணமா? என்று கொதிக்கிறார்கள் தமிழக மக்கள்.கடைசியில் கோரிக்கைகள் நிபந்தனைகள் எல்லாம் கைவிடப்பட்டு வெறும் நிவாரணப் பொருட்களைத் திரட்டி ஈழ மக்களுக்காக இலங்கை அரசிடம் ஒப்படைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
உண்மையிலேயே இலங்கையின் உள்விவாகரத்தில் இந்தியா தலையிட்டதே இல்லையா? என்றால் இந்தக் கேள்வியின் சங்கிலி 1983-ஜுலைக் கலவரத்தில் இருந்து தொடங்குகிறது. கரிசனத்தின் பேரில் துவங்கப்பட்ட சமாதான முயர்ச்சி மாபெரும் சூதாட்டமாக மாறிய கதை இது,
சுற்றுலா, தேயிலை இந்த இரண்டையும் தவிர்த்த வேறெந்த முக்கியத்துவமும் இல்லாத இலங்கையையின் மீது இன்று உலக நாடுகள் கண் வைத்திருக்கிறன்றன.அமெரிக்காவுக்கு ஆசியாவின் பங்காளியான சீனாவும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது. இந்தியாவின் பகை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானும் ஆயுதக் கப்பலை அனுப்பி வைக்கிறது. ஈழத்தோடு அறுபடாத தொப்புள் கொடியாய் நீளும் தமிழகத்தைச் சுமந்திருக்கும் இந்தியாவும் ஆயுதம் கொடுக்கிறது என்றால்.இலங்கைத் தீவின் அமைவிடம் அப்படி. முப்பாதாண்டுகளைக் கடந்தும் தொடரும் யுத்தம் முடிவுக்கு வராமல் இழு பட இந்து மகா சமுத்திரம் சுமந்திருக்கும் சர்வதேச அரசியலும் ஒரு காரணம்.
இலங்கையில் அப்படி என்னதான் பிரச்சனை? இந்தியாவால் இதை தீர்த்து வைக்க முடியாதா என்றால். இலங்கை அரசின் இனவெறியின் கடந்த கால கருப்பு வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் காலுக்குக் கீழே விழுந்த கண்ணீர்த்துளி நாடான இலங்கையில் கடந்த ஐம்பதாண்டுகளாக எரிகிற நெருப்பு நம்மையும் சுடுகிறது. எட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல முடியாத படி உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது.
போர்த்துக்கீசியரின் பிடியில் கி.பி 1505 முதல் 1658 வரையும் பின்னர் டச்சுக்காரகளால் கி.பி 1658 முதல் 1796 வரையும் அவர்களிடமிருந்து பிர்ட்டீஷாரால் கைப்பற்றபட்டு 1796&முதல் கி.பி 1850 வரையிலும் இருந்த இலங்கை எனப்படும் ஸ்ரீலங்கா வின் இனப்பிளவு இவர்களில் இருந்தே துவங்குகிறது. அந்நிய ஆட்சி முறை ஆசிய மக்களிடையே குறிப்பாக இந்திய, இலங்கை மக்களிடையே ஏற்படுத்திய பிளவு என்பது இன,கலாசார, பொருளாதார, ஆன்மீக ரீதியிலானதும் கூட. அடிமை வணிகத்தின் தோற்றமும் மன்னராட்சிகளின் பிற்போக்குத்தனமும் மக்களிடையே நிலவிய சமூக முரணும் அந்நிய ஆக்ரமிப்பாளர்களுக்கு எப்போதும் போலவே வசதியாக இருந்தது. மக்களிடையே இருந்த கலாசார வேறுபாடுகளை தங்களின் ஆட்சியதிகாரத்தை பாதுகாப்பதற்காக ஊட்டி வளர்த்தது இவர்கள்தான். இன்று இத்தீவில் வதியும் இரு பெரும் தேசீய இனங்களான சிங்களப் பெருந்தேசீய இனமும் தமிழ்ச் சிறும்பான்மை தேசிய இனமும் முரண்பட்டு நிற்பதற்கான காரணிகளை வளர்த்தெடுத்து சிங்கள ஆட்சியாளர்களிடம் கையளித்து விட்டுப் போனவர்கள் இவர்களே...
பிரிட்டீஷாரால் கையளிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திரக் கொடியை வடிவமைப்பதில் இருந்து தொடங்குகிறது சுதந்திரத்துக்குப் பிந்தைய இன முரண்பாடு.
மாட்சி¬மைதாங்கிய பிரிட்டீஷ் ராஜ்ஜியத்தின் கொடி இறக்கப்பட்டு 1948&ல் முதல் இலங்கை சுதந்திர சமத்துவக் குடியர்சின் கொடி ஏற்றப்படும் போது அந்தக் கொடி சிங்கள பெரும்பான்மை தேசியத்தின் ஆண்மையையும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் மற்றெல்லா சமூகங்களைக் காட்டிலும் உள்ள உயர் அந்தஸ்த்தையும் காட்ட வேண்டும் என அதன் முதல் பிரதமராக பதவியேற்ற டி.எஸ் சேனநாயகாவும், ஜெயவர்த்தனாவும், ஏ.ஈ.குணசிங்க போன்ற சிங்களத் தலைவர்களும் திட்டமிட்டனர். ஆனால் சிறுபான்மை இனமும் தொன்மைச் சமூகமுமான தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரதிநித்துவம் செய்யும் படியான தேசியக் கொடியைத்தான் நாம் ஏற்ற வேண்டும் என தமிழ்த் தலைவர்களான் எஸ்.ஜே.வி செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம். சி.வன்னியசிங்கம், சி,சுந்தரலிங்கம் போன்ற தமிழ் தலைவர்கள் கோரினார்கள்.
இது பற்றி நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பேசிய தமிழர் தந்தை செல்வநாயகம்‘‘ இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவர்களின் சிங்கக் கொடியையும், தமிழரின் நந்திக் கொடியையும், முஸ்லீம்களின் பிறை நட்சத்திரக் கொடியையும் கொண்டதாக அமைய வேண்டும்’’ என்றார்.
ஜி.ஜி பொன்னம்பலம் வன்னியசிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களும் கொடியின் மீதான தமிழ் மக்களின் மனக் கசப்பை வெளிப்படுத்தினார்கள். கடைசியில் விவாதத்தின் மீது பேசிய டி.எஸ்.சேனநாயகா ‘‘நான் சிங்கக் கொடி ஏற்றப்பட வேண்டும் என விரும்புவதற்கான பிரதான காரணம் என்னவெனில், நாம் எமது தேசத்தைத் தோற்று,மக்கள் இங்கிலாந்தின் அரசரதைத் தமது அரசராக ஏற்றுக் கொண்ட சமயத்தில்,இறுதிக் கண்டியரசன் சிம்மாசனத்திலிருந்து அகற்றப்பட்டு, அவனது சிங்கக் கொடு கீழே இறக்கப்பட்டது. இப்போது நாட்டின் ஆட்சியதிகாரத்தை மீளளிக்கையில் அதனுடன் கூடவே அந்தக் கொடியையும் இங்கிலாந்து மீளளிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நாம் சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்ற எண்ணுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்’’ என்றவர். ‘‘இந்தக் கொடியை ஏற்றிய பின் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என விரும்புவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருத்தமானதொரு கொடியை ஏற்றலாம்’’
என்றும் சொல்ல அப்படியே சிங்கக் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்து மாற்றி அமைக்கப்பட்ட கொடி. பீதாம்பரச் சிவப்புப் பின்னணியில் பொன்னிறச் சிங்கம் கொடியில் அப்படியே இருக்க சிவப்புப் பின்னணியில் நான்கு மூலைகளிலும் இருந்த முனைகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக நான்கு பொன்னிற அரச இலைகள் இடம் பெறும்.ஒரே அளவிலான இரண்டு செங்குத்தான கோடுகள் ஒன்று செம்மஞ்சளாகவும் இன்னொன்று பச்சை நிறத்திலும், தமிழர் முஸ்லீம் ஆகிய இரண்டு சிறுபான்மை இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொடியின் அளவு 1:5 என்ற விகிதாசார அளவில் இடம் பெற்றது.
ஆண்மை மிக்க சிங்களத் தேசீயத்தின் பால் நின்று சிறுபான்மை மக்களை அந்த சிங்கள பரப்பிற்குள் அடங்கி நடக்கும்படியான ஒரு செய்தியை டி.எஸ். சேனநாயகாவும்,ஜெயவர்த்தனாவும், ஆ.டி.பண்டாரநாயகாவும் செய்தார்கள். பெரும்பான்மை என்னும் பாசிச கருத்தியல் இன்று உலகெங்குலும் பயங்கரவாத்தை கட்டவிழ்த்து விடுகிறது, செப்டம்பர் 11 &ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் பெரும்பான்மை என்னும் சொல்லுக்கு அதிகாரமானதும் பாசிசபூர்வமானதுமான விளக்கம் இன்று எழுதப்படுகிறது.உலகம் முழுக்க இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பயங்கரவாதம் கட்டி எழுப்பப்பட்டது. அது இந்தியாவில் இந்து பாசிசமாகவும் இலங்கையில் பௌத்த மேலாண்மைகொண்ட சிங்களப்பாசிசமாகவும் இருக்கிறது. துவக்ககாலத்தில் பயங்கரவாதிகள் என்ற சொல் உலக நாடுகளிடம் இல்லை இன்று உலகிற்கு எழுந்துள்ள புதிய சூழலில் பயங்கரவாதம் என்ற சொல்லை சிங்களப் பேரினவாதிகள் பயன்படுத்துவது கொடுமைதான் இல்லையா?
ஆனால் சிங்கள மேலாண்மை பெற்ற தேசீயக் கொடியை அவர்கள் ஏற்றும் போதே இலங்கைத் தீவில் வதியும் ஒட்டு மொத்த பூவீகத் தமிழருக்கு தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழருக்கும் ஒரு செய்தியை அவர்கள் சொன்னார்கள். அது இத்தீவில் ஆளப் பிறந்த இனம் சிங்களர்கள் என்றும் எல்லா காலத்திலும் சிங்களர்களின் நம்பிக்கையைப் பெற்ற சிங்கள இறைமையையின் மீது தீரா நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்ட ஒரு இனமாக மட்டுமே இத்தீவில் சிறுபான்மையோர் வாழ முடியும் என்பதை அந்தக் கொடியை ஏற்றி வைத்த போதே சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். துரோகமானதும் வஞ்சகமானதுமான இக்காரியம் சிங்கள தலைவர்களின் கைச் சாதுர்யத்தாலும் சில தமிழ்த் தலைவர்களின் துரோகத்தாலும் விளைந்தது என்றால் அதில் உண்மையும் யதார்த்தமும் இல்லாமல் இல்லை.
ஆனால் சுதந்திரத்துக்குப் பின் வரப்போகிற அடுத்தடுத்த சிங்கள இனவெறிச் சட்டங்களை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ள வில்லை. ஏனென்றால் டி.எஸ்.சேனநாயகா வம்சாவளிகள் தொடர்பான பிரஜாஉரிமைச் சட்டத்தை வெள்ளையர் வெளியேரும் வரை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. சகல தரப்ப்பு மக்களையும் சமாதானப்படுத்தும் ஒரு நாடகத்தோடு பிரிட்டீஷாரை திருப்திப்படுத்தி இலங்கையை விட்டு வெளியேற்றிய பின்பே சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை வேறோடு சாய்க்கும் கோரமுகங்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டது.ஆனால் மோசமாக துவங்கபட்ட அந்த நாட்கத்தின் போக்கு தமிழ் இளைஞர்களால் மாற்றி எழுதப்படும் என்பதை சிங்களர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
தொடரும்...
அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...
டி.அருள் எழிலன்
உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய சூழலில் இந்தியாவிலேயே மரபணு மாற்றச் சோதனையில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். கத்தரி நெல்லில் மரபணு மாற்றத்தை நடத்தியவர்கள் இப்போது கைவைத்திருப்பது நமது பாரம்பரீய மருந்துகளான சித்தா ஆயுர்வேதத்தில். சோதனைகள் முடிந்து விரைவில் நமது பாரம்பரீய வேம்பும், மஞ்சளும், இஞ்சியும் அமெரிக்க தனியார் முதலாளிகளின் கைகளுக்கு செல்லப் போகிறது. வேகமாக இவைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள், சிலர் மௌனமாக வேடிக்கை பார்த்து தாரைவார்ப்பை ஆதரிக்கிறார்கள்.
‘‘ மரபணு பொறியியல் அல்லது மரபணு மாற்றம் என்பது தாவரங்களில் பூச்சிக் கொல்லி சக்தியை அதிகரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்த நமது மரபான பயிர்களின் அணுக்களை மாற்றி உற்பத்தி செய்வதுதான் மரபணு மாற்றம் செய்வது.ஒரு விளை பொருளை எடுத்து அதில் செயர்க்கை கரு ஊட்டல் மூலம் பத்து விதமான புதிய ரக அதே விளை பொருளை உருவாக்குவதுதாம் மரபணு மாற்றம்.இந்த மரபணு மாற்றத்தின் அபாயங்களை அறிந்த அய்ரோப்பிய நாடுகள் இந்த ஆய்வுகளை தங்கள் நாட்டில் செய்ய தடைவித்திருக்கிறது.அது மட்டுமல்ல அமெரிக்காவில் கூட இந்த ஆய்வுகள் ஆய்வுக் கூடங்களில் வைத்து நடத்தப்படுகிறதே தவிற அவர்களின் விளை நிலங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.அவர்களின் மண்ணின் வளம் கெட்டு விடும் என்பதால் அமெரிக்க முதலாளிகள் பல்லுயிர் பெருக்கத்தின் இதய பூமிகளுள் ஒன்றான இந்தியாவை தேர்ந்தெடுத்து நமது மண்ணையும் மக்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமெரிக்க முதலாளிகளுக்கு பல்லக்குத் தூக்கும் இந்திய அரசியல்வாதிகளோ பணத்துக்காக நாட்டையும் இந்த மக்களையும் அமெரிக்க முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார்.சித்த வைத்தியர் டாக்டர் சிவராமன்.
‘‘ கத்தரி,வெண்டை,தக்காளி,நெல்,கம்பு,இராகி,சோளம்,உளுந்து,தட்டைப்பயறு,கொண்டைக்கடலை,உருளைக்கிழங்கு,குட்டிக்கிழங்கு,வாழை,பப்பாளி,ஏலம்,கரும்பு, என பல வகையான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.(நிமீஸீமீtவீநீ விஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ ஷீக்ஷீ நிமீஸீமீtவீநீ விணீஸீவீஜீuறீணீtவீஷீஸீ) இவைகளில் நெல்ரகங்கள்,காய்கரி ரகங்கள் என வயல்களில் சோதனை நிலையில் உள்ளன. தமிழ்நாடு வேளாண்பலகலைக் கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், சென்னையில் லயோலாக் கல்லூரியும் இத்தைகைய மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.மகிகோ மான்சான்டோ என்னும் அமெரிக்க நிறுவனத்திறகாக நடத்தப்படும் இந்த ஆய்வுகளுக்காக இந்திய விவசாயிகளும் விளை நிலங்களும் பலிகடாவாக்கப்படுகிறது.அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்லி மரபணு மாற்றப் பயிர்களை பயிர் செய்யச் சொல்கிறார்கள் பயிர் செய்யும் விளை பொருட்களில் இருந்து கண்டு பிடிக்கப்படும் புதிய ரக விளை பொருட்களுக்கான உரிமை அமெரிக்க மான்டான்டோவுக்கு போய் விடும். அப்படி நமது விளை பொருளுக்கான உரிமை அமெரிக்க முதலாளிகள் கையில் சென்ற பிறகு இந்திய விவாசாயிகள் விரும்பினால் கூட அதை விளைவிக்க முடியாது.காப்புரிமைச் சட்டத்தின் கீழ நெல் விவசாயம் செய்யும் விவசாயி கைது செய்யப்படுவார்.அது மட்டுமல்ல ஏன் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஆய்வை தடை செய்திருக்கின்றன? இந்த மரபணு மாற்றப்பயிர்களால் விளை நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன? அதை உண்ணுகிற மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் என்ன? என்பது போன்ற எளிய சந்தேகங்களுக்கு இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைகழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் பதில் சொல்ல வேண்டும்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் தமிழக பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.
இந்தியாவின் முதல் மரபணு மாற்ற பொருளான கத்தரிக்காயை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த மரபணு மாற்றப்பயிர்களை அங்கீகரிப்பதற்கும் சந்தைப் படுத்துவதற்குமான ‘தேசீய உயிர்த் தொழில் நுட்ப அங்கீகரிப்பு அமைப்புச் சட்டம்’ ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது இதில் விளைபொருட்கள், பாரம்பரீய மருந்துகள்,உணவுப் பொருட்களோடு தொடர்புடைய இந்த சோதனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய ஏழு அமைச்சகங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை வெறும் அறிவுரைகள் வழங்கும் கருத்துக் கருவூலங்களாகவே மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் பொறுப்பின் கீழ் வரும் பாரம்பரீய மருந்துகளான சித்தா,ஆயுர்வேத பரம்பரை மூலிகைகளை குறிவைத்திருக்கிறது மரபணு மாற்றச் சோதனைகள்.
‘‘உலகில் பல்லுயிர் விளை நிலம் என்ற வலையம் ஒன்று உண்டு. அதாவது மண்ணின் தன்மைக் கேற்ப வளருகிற தாவரங்கள்.இம்மாதிரி பல்லுயிர் வளம் உலகம் முழுக்க 14 இடங்களில்தான் உள்ளது அதில் பிரதான ஒன்பது இடங்கள் இந்தியாவில் உள்ளது. உலகெங்கிலும் ஆங்கில மருந்துகளின் பின் விளைவுகளினால் அதிலிருந்து மீள நினைக்கும் மக்கள் ஸிணீtவீஷீஸீணீறீ மிக்ஷ்மீபீ றிலீஹ்பீஷீ னீமீபீவீநீவீஸீமீ &க்கு மாற நினைக்கிறார்கள். இதனால் உலகெங்கிலும் இந்திய மூலிகை மருந்துகளுக்கும் பல்லுயிர் சூழலில் வளரும் மருத்துவ குணமுள்ள மருந்துகளுக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றம் மூலம் மாற்றி இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிமான மக்களை அதை நுகரும் சந்தைப் மனிதர்களாக மாற்ற முயர்ச்சிக்கிறது அமெரிக்க நிறுவனங்கள். அதற்கு துணை போகிறது மத்திய அரசு.சித்த வைத்தியத்தில் நில வேம்பு இருக்கிறது காலம் காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நில வேம்பு சிக்கன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் நில வேம்பில் உள்ள எந்த கெமிக்கல் சிக்கன் குன்யாவை கட்டுப்படுத்துகிறது என்றால் அதை பாரம்பரீய மருத்துவத்தில் தீர்மானமாக சொல்லிவிட முடியாது ஆனால் மரபணு மாற்றத்தில் நிலவேம்பில் உள்ள ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்துக் கொண்டு அது ஒரு நோய்க்கு மருந்தாகிறது என்பதை கண்டு பிடித்து உடனே நிலவேம்பில் அந்த கெமிக்கலைச் செலுத்தி அதை அதிக அளவில் உற்பத்தி செய்து. அதை சந்தைப் படுத்துவார்கள்.இதன் மூலம் ஒரு பக்கம் நில வேம்பின் காப்புரிமை கண்டு பிடித்த கம்பெனியின் கைகளில் போவதோடு. நில வேம்பின் வளர்ச்சியே பாதிக்கப்படும்.இதை எப்படி புரிந்து கொள்வதென்றால் பால் கலக்காத கடும் டீ யை நாம் அருந்தும் போது அது வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது, ஆனால் தேயிலையில் இருக்கும் எல்லா கெமிக்கலையும் எடுத்து தனித்தனியாக பிரித்து சோதித்தால் அதில் எந்த கெமிக்கலுக்கும் அப்படி வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடிய மலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இல்லை என்பது ஆய்வில் தெரிகிறது. இதுதான் நமது பாரம்பரீய மருந்துகள். அதன் மருத்துவ குணம் என்பது இந்த மண்ணின் உயிர்ச்சூழலோடும் வளத்தோடும் தொடர்புடையது.இந்த மூலைகைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுவதுதான் அதன் இயர்க்கைத் தத்துவம். ஆனால் இவர்கள் இதை வெறும் பணம் வசூலிக்கும் மருந்தாக மாற்றுவதோடு சாதாரண மக்களின் வீடுகளில் வளர்க்கும் இந்த தாவரங்களை காப்புரிமை என்ற பெயரில் ஏக போக உரிமையாளர்களாகப் பார்க்கிறார்கள்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இம்மாதிரி ஆய்வுகளை பாரம்பரீய மூலிகை தாவரங்களில் நடத்தப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என்கிற டாக்டர் சிவராமன்.
‘‘இந்தியாவில் உள்ள தாவரங்களில் சுமார் 1500 தாவரங்கள் மருத்துவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.அதில் 500 தாவரங்கள் நேரடியாக மருந்து தயாரிப்பில் ஈடு படுத்தப்படுகிறது. இது மருந்தின் வீரியம், மூலப்பொருட்களின் பயன்பாடு நோயாளிகளின் தேவை என இவைகளை கணக்கிட்டே உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் மரபணு மாற்றத்தை அனுமதித்தால் இந்த மூலிகைச் செடிகளின் தன்மை அதாவது மருத்துவ குணம் மாறுவதோடு இனி இந்த தாவரங்களுக்கு நாம் உரிமை கொண்டாட முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான்.அதனால் உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த மரபணு மாற்ற சோதனையை அடியோடு கைவிட வேண்டும் அதுதான் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது’’ என்கிறார் டாக்டர் சிவராமன்.-
‘‘உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் சந்தைக்கு வரும் போது அந்தப் பொருள் பற்றிய விபரங்களை குறிப்புகளாக அச்சிட்டு அதை அந்தப் பொருளின் உறை மீது லேபிளாக ஒட்டுவது வழக்கம். ஆனால் மரபணு மாற்ற பொருட்கள் சந்தைக்கும் வரும் போது அது இயர்க்கையாய் நமது விவசாயிகள் உற்பத்தி செய்ததா? அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? என்கிற விபரம் கூட அதில் இருக்காதாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்ப்ட்ட கத்தரிக்காயை வாங்கி உண்டு நமக்கு ஏதாவது விசித்திரமான நோர்கள் உருவானால் அது எதனால் உருவானது என்று கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியாத சூழலுக்கு மக்களை தள்ளி விட்டது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் சந்தைக்கு வரும் எந்தப் பொருளும் இது மரபணு மாற்றம் மூலம் தயாரிகக்ப்பட்டது என்கிற விபரம் இருக்கும். நுகர்வோருக்கு வாங்கும் பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தியாவில் நுகர்வோருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கூட் மறுக்கப்பட்டு அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதை வாங்க வேண்டும் என்ற மறைமுகமான நிர்பந்தத்துக்கு இது வழி வகுக்கிறது.அது மட்டுமல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிற ‘‘ஆயுஷ்’ நிறுவனம்தான் பாரம்பரீய மூலிகைகள் மருந்துகளை வளர்தெடுக்கிறது.ஒரு பக்கம் இப்படி வளர்த்தெடுப்பது போல் வளர்த்து விட்டு அதே பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றச் சோதனைகளுக்கு உட்படுத்துவதை வேடிக்கை பார்க்கிற அன்புமணி ராமதாஸ் இந்த ஆய்வுகளை தடை செய்ய முன் வரவேண்டும்.இந்திய மக்களுக்கு செய்கிற உண்மையான மக்கள் சேவை என்பது இதுதான்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.